Wednesday, October 22, 2008

தொடர்நாவல்: மனக்கண்

- அ.ந.கந்தசாமி -

28-ம் அத்தியாயம் மனக்கண்!

டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்களை விட்டு சிவநேசரிடம் “இரண்டு கண்களும் மிகவும் பழுதடைந்துவிட்டன. அதிலும் ஒரு கண் முற்றாகவே சின்னாபின்னப்பட்டுவிட்டது. மற்றக் கண்ணை வேண்டுமானால் சந்திர சிகிச்சைகளினால் மீண்டும் குணப்படுத்திப் பார்வையைப் பெற முடியும். ஆனால் ஸ்ரீதர் தான் கண் பார்வையை விரும்பவில்லையே. அதனால் தானே தன் கண்களைத் தானே குத்திக் கொண்டான் அவன்” என்றார். அதற்குச் சிவநேசர் “இப்பொழுது ஸ்ரீதருக்கு வேண்டியது கண் பார்வையல்ல. அவன் கண்ணில் ஏற்பட்டுள்ள புண்ணை முதலில் ஆற்றுங்கள்.” என்றார்.

சிவநேசரது வேண்டுகோளின் படி டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்ணிலே பட்ட புண்ணுக்கே வைத்தியம் செய்தார். ஒரு சில தினங்களில் புண்ணாறிப் போய்விட்டது. இதன் பயனாக ஸ்ரீதர் மீண்டும் பழையபடி ஆனான். அதாவது மீண்டும் பழைய குருடனாகி விட்டான் ஸ்ரீதர். இருண்ட வாழ்க்கை - ஆனால் அமைதி நிறைந்த இருண்ட வாழ்க்கை மீண்டும் ஆரம்பித்தது. ஆனால் ஒன்று. அந்த அமைதி பூரண அமைதி என்று சொல்ல முடியாது.

ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் முன்னர் அவன் குருடனாயிருந்த போதிலும் அப்பழுக்கற்ற இன்பத்தை அனுபவித்து வந்தான். ஆனால் இப்பொழுதோ அவனது இன்பத்தில் சிறிது அழுக்கு விழுந்து விட்டதென்றே சொல்ல வேண்டும். முன்னர் அவனது இருளிலே ஒளிக் கற்றையாக ஒயிலாக உலவி, உள்ளத்துக்கு இன்பமூட்டி வந்தாள் அவனது மனத்தின் மோகினியாகிய பத்மா. அப்பொழுதெல்லாம் அவனோடு இரவும் பகலும் ஆடியும் பாடியும் ஊடியும் கூடியும் வாழ்ந்த சுசீலாவைப் பற்றி இவள் பத்மாவல்ல. வேறு யாரோ என்ற சந்தேகம் ஒரு சிறிதும் இருக்கவில்லையல்லவா? அதன் காரணமாக அப்பொழுது அவன், அனுபவித்த இன்பம் உண்மையில் குறைபாடற்றதாக விளங்கியது. ஆனல் இன்று இருளிலே அவன் கேட்டது பத்மாவின் குரலேயானாலும், சுசீலாவின் முகம் கண்ணுக்கு முன்னே தெட்டந் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்ததால் தனக்கு அவள் மீது ஆத்திரம் உண்டாகிக் கொண்டிருக்கும் என்பதற்காக அவளை இருள் திரையிட்டு முற்றாக அவன் மறந்துவிட்டிருந்தாலும், அவள் பத்மா அல்ல என்ற ஞாபகம் அவன் உள்ளத்திலே அடிக்கடி தலை தூக்கத்தான் செய்தது. அதனால் முன் போல் முழு இன்பம் அவனுக்கு இல்லாது போயிற்று. இருந்தாலும் இருளாலும் ஓரளவு இன்பம் அவனுக்குக் கிட்டத்தான் செய்தது.

ஸ்ரீதருக்கு இப்பொழுது தன்னோடு வாழும் பெண் தன் கல்லூரிக் காதலி பத்மாவல்ல, சுசீலா என்பது நன்கு தெரிந்திருந்தாலும் அவளைப் பத்மா என்றே இன்னும் தொடர்ந்து அழைத்து வந்தான். புண்ணாறிய பிறகு ஒரு நாள் இரவில் படுக்கையில் சுசீலா இதைப் பற்றி அவனிடம் வெளிப்படையாகவே கேட்டுவிட்டாள்.

“நான் பத்மா அல்ல என்பது உங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தும், ஏன் என்னைப் பத்மா என்றே இன்னும் அழைத்து வருகிறீர்கள்? சுசீலா என்று அழைத்தாலென்ன?” அதற்கு ஸ்ரீதர் சிறிதும் யோசியாமல் அளித்த பதில் சுசீலாவைத் திடுக்கிட வைத்து விட்டது.

“சுசீலா - அந்தப் பெயரை நான் வெறுக்கிறேன். அது நான் காதலிக்காத பெண்ணின் பெயர். என்னை ஏமாற்றிய மோசக்காரியின் பெயர். அவள் பெயர் நினைவில் வரக் கூடாது. முகம் கண்ணில் தெரியக் கூடாது என்பதற்காகத்தானே என் கண்களை நான் குத்தினேன்? அப்படியிருக்க அந்தப் பெயரை நான் எப்படி ஆசையோடு உச்சரிக்க முடியும்? அந்தப் பெயரைக் கேட்டாலே எனக்கு அருவருப்பேற்படுகிறது.”

“மோசக்காரி. சுசீலாவா மோசக்காரி. யார் மோசக்காரி என்பதை உடனே சொல்லி விடுவோமா?” என்று ஆத்திரம் பொங்கியது சுசீலாவுக்கு. ஆசைக் காட்டி மோசம் செய்த பத்மாதான் மோசக்காரி. உண்மைக் காதலி போல நீண்ட காலம் நடித்துவிட்டுக் கண்ணிழந்ததும் குருடனைக் கட்ட மாட்டேன் என்று கூறிய அந்த நயவஞ்சகி பத்மாவல்லவா மோசக்காரி - இது பற்றிய முழுக் கதையையும் ஸ்ரீதருக்குக் கூறிப் பத்மாவே மோசக்காரி என்று காட்டிவிட்டாலென்ன? என்று துடிதுடித்த அவளை வேறு சில எண்ணங்கள் உடனே கட்டுப்படுத்தின.

“சிவநேசர் மாமா தன் அந்தஸ்து வெறியின் காரணமாகவே பத்மாவைத் தனக்கு மணம் செய்து வைக்கவில்லை என்று ஸ்ரீதர் நம்புகிறார். அதனால்தான் பத்மாவென்று ஏமாற்றி என்னை அவருக்குத் திருமணம் செய்து வைத்ததாக அவர் எண்ணுகிறார். இந் நிலையில் “இல்லை, இல்லை. பத்மா உங்களைக் கல்யாணம் செய்ய மறுத்தாள்.” என்று நான் கூறினால் அதை அவர் ஒரு போதும் நம்பப் போவதில்லை. மோசடியையும் செய்து விட்டு உத்தமியான பத்மா மீது பொய்ப் பழியையும் போடுகிறீர்களா என்று தான் அவர் சொல்லுவார். ஆகவே அந்தக் கதையைப் பேசிப் பயனில்லை” என்று தீர்மானித்தாள் அவள்.

சுசீலா இவ்வாறு தீர்மானித்துக் கொண்டாளாயினும் தன்னை மோசக்காரி என்று ஸ்ரீதர் நம்புவதை எண்ணியதும் அவள் உள்ளம் வெம்பவே செய்தது. தன்னை ஸ்ரீதர் அன்போடழைப்பதும் முத்தங்கள் சொரிவதும் தன்னைப் பத்மாவாகக் கருதியல்லவா என்றெண்ணியதும், அவள் கண்கள் அவளை அறியாமலே நீரைப் பெருக்கின. சுசீலா வாழவில்லை. அவள் வெறுக்கப்படுகிறாள். அவள் கணவனே அவள் பெயரைக் கேட்டதும் அருவருப்படைகிறான். பத்மாதான் நேசிக்கப்படுகிறான் என்றெண்ணும் போதெல்லாம் அவளுக்கு வாழ்க்கையிலேயே வெறுப்பேற்படும்,. முன்னர் திட்டமிட்ட பிரகாரம் நஞ்சருந்தி மாண்டு விடுவோமா என்ற எண்ணங் கூட அவளுக்கு இடையிடையே ஏற்படும். ஆனால் கண்ணற்ற ஸ்ரீதரைத் தனியே விட்டுச் சாவதற்கு அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. கண் பார்வை பெற்ற ஸ்ரீதரை அவள் தனியே விட்டுச் செல்லத் தயாராயிருந்தாள். ஆனால், கண்ணற்றவனுக்குத் தன் துணை வேண்டும் என்பதை எண்ணியதும் நஞ்சருந்தும் எண்ணத்தைக் கைவிட்டாள் அவள்.

ஒரு நாள் தாய் பாக்கியம் ஸ்ரீதரிடம் பேசும் போது, “நீ எவ்வளவு அபாக்கியசாலி. கிடைத்த கண் பார்வையை மீண்டும் இழந்துவிட்டாயே?” என்றாள். அதற்கு அவன் “அம்மா நீ இவ்வாறு கவலைப்படக் கூடாது. கண்ணில்லாவிட்டாலென்ன? எனக்கு என்ன குறை? நல்ல அம்மா இருக்கிறாள்; அன்புள்ள தந்தை இருக்கிறார். கண்ணுக்குச் சமமான மனைவி இருக்கிறாள்; மழலை பேசும் குழந்தை இருக்கிறான்; வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா வசதிகளும் இருக்கின்றன. இந் நிலையில் கண் பார்வைதானா பெரிது? நான் மிகச் சந்தோஷமாயிருக்கிறேன். எனக்காக யாரும் கவலைப்படக் கூடாது” என்றான். சில சமயங்களில் ஸ்ரீதரின் மனதில் தன் கண்ணைத் தானே அழித்துக் கொண்ட ஈடிப்பஸின் நினைவு வந்தது போல, சிந்தாமணி என்னும் தாசியின் தொடர்பால் தன் கன்ணைத் தானே குத்திக் கொண்ட வைஷ்ணவ பக்தன் பில்வமங்கனின் நினைவும் வரும். ஊனக் கண்ணை இழந்து ஞானக் கண் பெற்ற பில்வமங்கன் பற்றி எண்ணும்போதும் தன்னைப் பற்றியும் அவனோடு சேர்த்து எண்ணுவான் அவன்.

“நானும் என் ஊனக்கண்ணை இழந்துவிட்டேன். அந்த ஊனக் கண்ணின் முன்னால் மோசக்காரி சுசீலா வந்து நின்றாள். ஆனால் அதை நான் இழந்ததும் பழைமை போல மனக் கண்ணிலே பத்மா காட்சியளிக்கிறாள் - என் அன்புக்குரிய பத்மா, ஆசைக்குரிய பத்மா,” என்று தனக்குள் எதை எதையோ கூறிக் கொண்டான் அவன்.

காலம் இவ்வாறு போகப் போக வாழ்க்கை பழையபடியும் தனது ஆறுதலைப் பெற ஆரம்பித்தது. குருட்டு வாழ்க்கை கூட ஸ்திரமுற்ற வாழ்க்கையாகியதும், அதில் ஓர் அமைதி ஏற்படவே செய்தது. கண்ணைக் குத்திய பயங்கர சம்பவம் கூட மெல்ல நினைவிலிருந்து அகன்று கொண்டிருந்தது.

ஸ்ரீதரின் நண்பன் டாக்டர் சுரேஷ் ‘அமராவதி’ வளவுக்கு எப்போதாவது வருவதுண்டு. முரளி இப்பொழுது தட்டுத் தடுமாறி நடக்கத் தொடங்கிவிட்டான். மோகனா பத்மாவுக்குப் பதிலாக இப்பொழுது அதிகமாக முரளியைக் கூப்பிட்டது. முரளிக்கும் மோகனாவுக்குமிருந்த சிநேகம் தினசரி வளர்ந்து கொண்டேயிருந்தது. மோகனாவுக்குப் பழங்களை உண்ணக் கொடுப்பதில் முரளிக்கு அதிக பிரியம். தாய் சுசீலாவோ, பாட்டியார் பாக்கியமோ ஆயாவோ அவனைக் கூட்டுக்குச் சமீபமாகத் தூக்கிச் சென்று மோகனாவுக்குப் பழங்களை ஊட்ட அவனுகு உதவி செய்வார்கள். மோகனா பழத்தை உண்ணுவதைப் பார்த்து முரளி பெரிய ரகளை பண்ணுவான்; ஆர்ப்பாட்டம் செய்வான்.

இவ்வாறு சலனமற்றுச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீர்ச் சலனமேற்படுத்தும் செய்தியொன்றை ஒரு நாள் ‘அமராவதி’க்குக் கொண்டு வந்தான் சுரேஷ்.

ஸ்ரீதர் அன்று சுசீலாவுடனும் முரளியுடனும் தோட்டத்தில் உட்கார்ந்து பொழுது போக்கிக் கொண்டிருந்தான். சுசீலா பாட்டுப் பாடிச் சிரிப்புக் கதைகள் கூறிக் கொண்டிருந்தாள்.

அப்போது சுரேஷ் தனது காரில் அங்கே வந்தான். சுசீலா எழுந்து சுரேஷிற்கு வணக்கம் செலுத்தி விட்டு “நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருங்கள்” என்று கூறி உள்ளே போய் விட்டாள்.

தனியே இருந்த ஸ்ரீதரிடம் சுரேஷ், “ஸ்ரீதர் நான் உன் பத்மாவைக் கொழும்பில் சந்தித்தேன். நீண்ட நேரம் அவளுடன் பேசவும் செய்தேன்,” என்றான்.

ஸ்ரீதர் அதற்கு “அப்படியா? அவள் கல்யாணம் செய்துவிட்டாளா? இப்பொழுது எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டான்.

“கல்யாணம் செய்து ஒரு பிள்ளையும் பெற்றுவிட்டாள். அது போக, நீ உன் பத்மாவை மணக்க முடியாது போனது எதனால்? உண்மைக் காரணம் உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான் சுரேஷ்.

“இதென்ன புதிய கேள்வி? தெரியாதது போல் பேசுகிறாயே. எல்லாம் அப்பாவின் அந்தஸ்து வெறி. ஏழை வீட்டில் திருமணம் செய்வது எனது அந்தஸ்துக்குப் பொருந்தாதென்று அவர் நினைத்தார்.”

“அதுதான் இல்லை. பத்மாவே எனக்கு உண்மைக் காரணத்தைக் கூறிவிட்டாள்,” என்றான் சுரேஷ்.

\“என்ன காரணம்?”

“ நீ கண் பார்வையை இழந்த பின்னர் பத்மாவைப் பெண் கேட்க உன் அப்பாவும் அம்மாவும் பரமானந்தர் வீட்டுக்குப் போனார்கள்.”
“உண்மையாகவா? அப்படித்தான் அவர்கள் சொன்னார்கள். அதை நான் நம்பவும் செய்தேன். ஆனால் பின்னால் அது முற்றிலும் பொய் என்பதை நான் கண்டு கொண்டேன். அப்பாவும் அம்மாவும் என்னை ஏமாற்றுவதற்காகக் கொழும்புக்குப் போனது போல் நடித்தார்கள். பின் அங்கிருந்து பத்மாவை அழைத்து வந்து விட்டதாகச் சொல்லிச் சுசீலாவை எனக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள்.”

“இல்லை, ஸ்ரீதர். உன் அப்பாவும் அம்மாவும் உண்மையிலேயே கொழும்புக்குப் போகத்தான் செய்தார்கள். ஆனால் உன் பத்மாதான் உன்னை மணக்க முடியாதென்று கூறிவிட்டாள்.”

இதைக் கேட்ட ஸ்ரீதர் அதிர்ச்சியடைந்து “சுரேஷ். நீ உண்மையைத்தான் கூறுகிறாயா? அப்படிப் பத்மா என்னை மண முடிக்க மறுத்திருந்தால் அதற்குக் காரணமென்ன சுரேஷ்?” என்றான்.

“ஆம். உண்மையைத்தான் கூறுகிறேன். குருடனைக் கலயாணம் செய்யத் தன்னால் முடியாது என்று கூறிவிட்டாள் பத்மா. இதை அவளே தன் வாயால் எனக்குக் கூறினாள் ஸ்ரீதர் - குருடனைக் கல்யாணம் செய்து என்னால் என்ன சுகத்தைக் கண்டிருக்க முடியும் என்று கேட்டாள் அவள்.”

இதைக் கேட்ட ஸ்ரீதர், தாயார் பாக்கியத்தை “அம்மா, அம்மா இங்கே வா” என்று கூவி அழைத்தான்.

பாக்கியம் வந்ததும் சுரேஷ் சொன்ன கதையை அவளிடம் கூறி, “அம்மா, சுரேஷ் சொல்வது உண்மைதானா? பத்மா என்னைத் திருமணம் செய்ய மறுத்தது உண்மைதானா?” என்று கேட்டான்.

அதற்குப் பாக்கியம், “ஆம் ஸ்ரீதர். அவன் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் நீ அன்றிருந்த நிலையில் நாங்கள் இதனை உனக்கு எப்படிச் சொல்லியிருக்க முடியும்? “கண் பார்வையற்ற ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கை பூராவும் கஷ்டப்பட நான் தயாரில்லை, மன்னிக்கவும்” என்று மிக மரியாதையாகக் கூறி விட்டாள் பத்மா. இதனா உன் அப்பா அடைந்த கோபத்தைச் சொல்ல முடியாது. முதலில் நீ பத்மாவைக் கல்யாணம் செய்வதை அவர் முழு மூச்சாக ஆட்சேபித்த போதிலும், பின்னாக்ட்ல் முற்றிலும் மனம் மாறியிருந்த அவர், அவளைப் பலாத்காரமாகத் தூக்கி வந்தேனும் உனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அதற்காக ஒரு பயங்கரத் திட்டமும் தீட்டினார். நான் தான் அதனைத் தடுத்தேன். அது மட்டுமல்ல, சுசீலா இடையில் புகுந்து அதை அநாவசியமாக்கிவிட்டாள். ஆம் ஸ்ரீதர், உண்மை இதுதான். பத்மாவின் மீது முழு ஆசையையும் சொரிந்து அவளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த நீ, அவள் உன்னைக் காதலிக்கவில்லை, உன்னை வேண்டாமென்று சொல்லி விட்டாள் என்ற செய்தியை அறிந்தால், எப்படி வேதனைப்படுவாயோ என்று நாங்கள் அஞ்சினோம். நெஞ்சம் வெடித்து இறந்து விடுவாயோ என்று நடுங்கினோம். ஆகவே அதை உனக்கு ஒரு போதும் சொல்வதில்லை என்று முடிவு செய்து விட்டோம். பொய் சொல்லியேனும் உன்னை இன்பமாக வைத்திருக்க வேண்டும், உன் உள்ளத்தில் துன்பக் காற்று வீச இடமளிக்கக் கூடாது என்பது தான் அப்பாவின் எண்ணம். இந்தச் சூழ்நிலையில் கொழும்பிலிருந்து வரும் வழியில் நன்னித்தம்பி வீட்டில் நாங்கள் சிறிது தங்கினோம். அங்கே எங்கள் கஷ்டத்தை நாங்கள் எங்களிடை பேசிக் கொண்டிருந்தைச் சுசீலா ஒற்றுக் கேட்டு விட்டாள். “பத்மா ஸ்ரீதரின் காதலை மறுத்துவிட்டதை அவனுக்குச் சொல்லக் கூடாது; வேறு பெண் யாராவது இவள் தான் பத்மா என்று சொல்லி ஸ்ரீதருக்குக் கட்டி வைக்க முடியுமானால் எவ்வளவு நல்லது. ஆனால் இது முடியக் கூடிய காரியமா?” என்று அப்பா கவலைப்பட்டார். அவ்வேளையில் நாமெல்லாம் திடுக்கிடும்படியாகச் சுசீலா வெளியே வந்து, “நான் ஸ்ரீதரை மணப்பேன். கண்னில்லாதது ஒன்று தானே அவரது குறை. மற்ற வகைகளில் அவர் மீது என்ன குறையைச் சொல்ல முடியும்” என்றாள். இதுதான் இந்த ஆள் மாறாட்ட நாடகத்தின் வரலாறு. நீ சந்தோஷமாக வாழ வேண்டுமென்பதற்காக நாங்கள் எடுத்த நடவடிககை இது. உண்மையில் சுசீலா மட்டும் அன்றைக்கு அவ்வாறு முன் வந்திருக்காவிட்டால் உன் நிலை எப்படி முடிந்திருக்குமோ, யார் கண்டது? இன்னும் உன் அப்பா என்னென்ன பயங்கரமான காரியங்களைச் செய்திருப்பாரோ? மேலும் இதோ உன் மடியிலே தவழும் முரளி இந்த ‘அமராவதி’யில் வந்து பிறந்திருப்பானா? இவற்றை யாரால் தான் சொல்ல முடியும்?” என்றாள்.

ஸ்ரீதரின் மடியில் உட்கார்ந்து பாட்டியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த முரளி அதை ஆமோதிப்பது போல் மழலைக் கூச்சலிட்டான்.

சுசீலாவின் தியாகத்தைப் பற்றித் தாய் பாக்கியம் சொன்ன விவரங்கள் ஸ்ரீதரின் நெஞ்சை உருக்கிவிட்டன. கண்கள் கலங்கி விட்டன. உண்மை இவ்வாறிருக்க, சுசீலாவுக்கு எவ்வளவு அநியாயம் செய்து விட்டேன் என்று மனம் வருந்தினான் அவன்.

பத்மா தன்னை மணமுடிக்க மறுத்தாள் என்ற செய்தியை ஸ்ரீதரால் முதலில் நம்ப முடியவில்லை என்றாலும், பின்னர் அது உண்மை என்பது அவனுக்குத் தெரியவே செய்தது. அது அவனுக்கு ஓரளவு வேதனையை உண்டு பண்ணியதென்றாலும், பத்மா இல்லாத வாழ்க்கை தான் தனது வாழ்க்கை என்பது இப்பொழுது பழக்கப்பட்டுவிட்டதால் அதைத் தாங்கிக் கொள்வது அவனுக்கு கஷ்டமாயிருக்கவில்லை. ஆனால் பத்மா மீது அவன் முழு மனதையும் பறி கொடுத்திருந்த காலத்தில், பத்மா தன்னை உண்மையாக நேசிக்கிறாள், தனக்காக அவள் எதையும் செய்வாள் என்று அவன் நம்பியிருந்த காலத்தில், யாராவது பத்மா செய்த மோசத்தை அவனுக்குச் சொல்லியிருந்தால் நிச்சயம் அவனால் அதைத் தாங்கியிருக்க முடியாது. அதனால் அவன் தற்கொலை கூடச் செய்து கொண்டிருக்கலாம்..

[தொடரும்]

No comments: