Wednesday, October 22, 2008

தொடர்நாவல்: மனக்கண்

- அ.ந.கந்தசாமி -


15-ம் அத்தியாயம்: மழை நீராட்டு!

அடுத்த வாரம் டாக்டர் சுரேஷ் சீமைக்குப் பயணமானான். ஸ்ரீதர் அவனுக்குத் தான் வாக்களித்த பிரகாரம் விலை உயர்ந்த உடைகளைப் பரிசளித்தான். கொழும்புத் துறைமுகத்தில் அவனை வழியனுப்பப் பத்மாவுடன் அவன் போயிருந்தான். அவர்களைத் தவிர சுரேஷின் சொந்தக்காரரான வெள்ளவத்தைக் கடைகாரர், அவனது மாமனார், மற்றும் நண்பர்கள் பலரும் துறைமுகத்துக்கு வந்திருந்தார்கள். எல்லோரும் அவனை வாழ்த்தி வழியனுப்பினார்கள்.

ஆனால் சுரேஷைப் பிரிவதற்கு மற்றவர்கள் எல்லோரிலும் பார்க்க ஸ்ரீதரே கஷ்டப்படான். சுமார் ஐந்து வருடங்களாக அவனது வாழ்க்கையில் முற்றாக ஒட்டிக் கொண்டு இரவும் பகலும் கூடி வாழ்ந்த அறிவு நிறைந்த அருமை நண்பனல்லவா? ஆகவே அவனது பிரிவு ஸ்ரீதரை அப்படியே ஆட்டிவிடும் போலிருந்தது. இனித் தொட்டதற்கெல்லாம் ஆலோசனைகள் கேட்பதற்கும், மனதிலுள்ளவற்றையெல்லாம் கொட்டிப் பேசுவதற்கும் எங்கு போவது? அதை நினைத்ததும் கப்பல் புறப்படும் நேரம் வந்த போது ஸ்ரீதரின் கண்கள் கலங்கிவிட்டன. சுரேஷ் சிரித்துக் கொண்டு அவன் கலங்கிய கண்களைத் துடைத்து விட்டான். "ஸ்ரீதர்! நான் இங்கிலாந்திலிருந்து மீள இரண்டு வருடங்களாகும். அதற்கிடயில் உன்னுடைய கல்யாணம் நடந்து முடிந்து விடுமல்லவா? நான் மீண்டு வரும்பொழுது ஒரு சின்ன ஸ்ரீதர் உன் கையைப் பற்றிக் கொண்டு ஓடித் திரிவான்! நான் இலங்கை வந்ததும் முதலில் உன்னைத்தான் சந்திப்பேன். அதன் பின் எனது திருமணமும் நடைபெறும். நீ அதற்குக் கட்டாயம் வர வேண்டும். அது தவிர உனது சுகம் பற்றி எனக்கு அடிக்கடி கடிதங்கள் எழுத மறக்காதே. நானும் உடனுக்குடன் பதில் போடுவேன்." என்று கூறினான் சுரேஷ்.

பின்னர், பத்மாவிடம் "ஸ்ரீதரைக் கவனமாக ப் பார்த்துக் கொள். நீங்கள் இருவரும் இன்பமாக வாழ வேண்டுமாறு இப்பொழுதே எனது திருமண வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன்." என்றான். பத்மா நாணத்தோடு "உங்கள் அன்புக்கு எனது நன்றி" என்று பதிலளித்தாள்.

சுரேஷை வழியனுப்பி விட்டுப் பத்மாவுடன் துறைமுகத்துக்கு வெளியே வந்த ஸ்ரீதர் "பத்மா! சிறிது நேரம் கால்பேஸ் கடற்கரைக்குப் போய் விட்டு வரலாமா?" என்றாள். பத்மாவும் "ஆம்" என்று பதிலளிக்கவே கார் கால்பேஸ் மைதானத்தை நோக்கிச் சென்றது.

நேரம் இரவு எட்டு மணியாயிருந்தது. கால்பேஸ் கடற்கரையில் மின்சார விளக்குகள் சுடர் விட்டுக் கொண்டிருந்தன. ஏராளமான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் ஒருவரை ஒருவர் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் இருந்தார்கள். ஒரு சில காதலர்கள் இருள் மண்டிய இடங்களில் மோனத்தில் மூழ்கி ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இன்ப மோகத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். காற்றோடு போராடிக் கொண்டிருந்த பெரிய திரிகளுடன் கூடிய மண்ணென்ணெய் விளக்குகள் பொருத்திய தட்டுகளில் கடலை விற்றுக் கொண்டிருந்த கடலைக்காரர்களிடம் கடலை வாங்கி உண்டு கொண்டு இக்காதல் ஜோடிகளில் சிருங்கார சேஷ்டைகளைக் கடைக் கண்ணாற் பார்த்துக் கொண்டிருந்தனர் ஒரு சிலர். காதல் விஷயங்களில் அனுபவமில்லாத இளம் வாலிபர்கள்தான் இதில் ஈடுபட்டனர் எனபதற்கில்லை. நன்கு வழுக்கையாகிவிட்ட நடுத்தர வயதினர் பலரும் தமது பளபளக்கும் மண்டையோடுகளைத் தடவிக் கொண்டு இவற்றைக் கள்ளத் தனமாகப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரச் சுற்றுப் பயணிகள் சிலர் இலங்கையின் வெள்ளிப் பூவிட்ட கரு நீல இரவை அண்ணாந்து பார்த்து இரசித்த வண்ணம் கடலோர நடைபாதையில் சென்று கொண்டிருந்தார்கள். ஐஸ்கிறீம் வான்கள் குழல்களை முறுக்கிக் கொண்டு ஐஸ்கிறீம் விற்றுக் கொண்டிருந்தன. சிறுவர் சிறுமியர் அவற்றை மொய்த்துக் கொண்டு அட்டகாசம் செய்தார்கள். எத்தகைய கஷ்டங்களுக்கிடையேயும் வாழ்க்கை வாழத் தக்கது என்ற நம்பிக்கை மனிதனின் இதயத்தில் எவ்வளவு தூரம் ஊறியிருக்கிறது என்பதற்கு இக் கடற்கரைக் காட்சிகள் சான்று பகர்ந்தன. இருந்தாலும், கடற்கரைக்கு வந்திருந்த எல்லோருமே இன்பப் பொழுது போக்குகளிலேயே ஈடுபட்டிருந்தனர் என்பதற்கில்லை. நீலக் கடலின் பூப்பொன்ற வெள்ளலைகளில் ஏறி வந்த குளிர் காற்று உடலைத் தழுவ, தம் எதிர்காலத்துக்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தவர்களும், நிகழ்காலப் பிரச்சினைகளுக்கு முடிவு காண முயன்றுகொண்டிருந்தவர்களும் பலர் துன்பத்தால் அலைந்து தனித்த மனதிற்கு அமைதியைக் கொணர்வதற்கு "இராம ஜெயம்" என்றும் " நமசிவாய" என்றும் மந்திரங்கள் சொல்லி மனதை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள் சிலர். வேறு சிலர் தேகாப்பியாசம் செய்தார்கள். சிலர் பிராணாயாமம் செய்தார்கள். முஸ்லிம்கள் சிலர் மெக்காவை நோக்கி வணக்கம் செலுத்தினார்கள். இன்னும் சிலர் புல்லிலே படுத்துக் கொண்டு வானத்தின் அழகை வியந்துக் கொண்டிருக்க, வேறு சிலர் கண்களை மூடிக் காட்சிப் புலனை வெட்டி விட்டு, கால்பேஸ் கடல் எவருடனோ "உஸ்" என்று பெரிய இரகசிய வார்த்தைகளைத் தாமும் மெல்லச் செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒலிகளுக்கெல்லாம் மூல ஒலி என்று சொல்லப்படும் ஓங்கார நாதம் இது தானோ என்ற எண்ணத்துடன் இயற்கையன்னையின் நாப் போல இரவு பகலாகத் தூங்காது ஒலித்த அலைகயோசையில் மந்திரத்தில் கட்டுண்டவர் போல மயங்கிக் கிடந்தனர் சிலர். பலர் பாட்டிசைத்தனர். கடற் காற்றில் சப்தத்தில் தம் குரல் கேட்காதென்ற துணிவில் மனதிலுள்ள ஆசா பாசங்களைப் பைத்தியகாரர் போல் சப்தமிட்டே பேசித் தீர்த்தவர்கள் சிலர். இவ்வாறு பேசியவர்களில் சிலர், நல்ல வார்த்தைகள் பேச, மற்றும் சிலர் அருவருக்கும் ஆபாச வார்த்தைகளைக் கூடப் பேசினர்.

இரவில் இருளிலே வானத்திலே கார் முகில்கள் திரண்டு கொண்டிருந்ததை இவர்களில் பலர் கவனிக்கவில்லை. ஆனால் மழை நீரால் நிறைந்த மேகப் பொதிகள் ஆகாயத்தில் கட்டவிழத் தயாராகிக் கொண்டிருந்தன.

ஸ்ரீதர் இச் சூழ் நிலைகளில் தனது காரை முடிந்த அளவில் இருள் படிந்த ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். பத்மாவோடு நெருங்கி உட்கார்ந்து கொண்டு "கண்ணே! என் கருமணியே!" என்றான் அவன். பத்மா அவன் நெஞ்சில் சாய்ந்த வண்ணமே "உங்கள் சுரேஷ் போய் விட்டார். இனி எங்கள் விஷயத்தைப் பற்றிப் பேசுவோமா?" என்று கூறிக் கொண்டே, அவனது கன்னங்களை இலேசாக முத்தமிட்டு விட்டுச் சிரித்தாள்.

ஸ்ரீதர் அவளது மென்மையான தோள்களைத் தன் கரங்களால் தடவிய வண்ணமே "பத்மா நாளை நான் வீட்டுக்குப் புறப்படுகிறேன். அடுத்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் எங்கள் நாடகம். அது முடிந்த பிறகு அம்மாவிடம் எல்லா விஷயங்களையும் பேசி முடித்துக் கொண்டு இன்பமான செய்தியுடன் இன்னும் இரு வாரங்களுக்குள் கொழும்பு வந்து விடுவேன். சரிதானே?" என்றான்.

ஸ்ரீதர் வாய் தான் அப்படிப் பேசியதே ஒழிய, உள்ளத்தில் அவனுக்குத் தன் திருமண விஷயமாகச் சிறிது அச்சம் இருக்கவே செய்தது. கந்தப்பர் மகள் அமுதா நினைவால் வந்த அச்சமே அது. அமுதாவின் நினைவு வந்ததும் பத்மாவிடம் உடனே அது பற்றிக் கூறி விடலாமா என்ற எண்ணம் அவனுக்கேற்பட்டதாயினும், அது அவளுக்கு அநாவசியமான கவலையையும் திகிலையும் தரக் கூடும் என்பதைக் கருதி, அந்த எண்ணத்தை அவன் மெள்ளக் கை விட்டான். இன்னும் அமுதா விஷயம் வெறும் சலசலப்பாக முடியுமேயல்லாமல் அதனால் பாரதூரமான விளைவுகள் வந்தே தீரும் என்ற திட்டவட்டமான எண்னமும் அவனுக்கில்லை. ஆகவே அதைப் பற்றிச் சிந்திப்பதையோ பேசுவதையோ விட்டு, பத்மாவிடம் வேறு விஷயங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தான்.

"பத்மா! யாழ்ப்பாணம் போகும் போது கல்கிசையில் நான் வரைந்த உன் படத்தையும் எடுத்துக் கொண்டு போகப் போகிறேன். அதை நான் இன்னும் பூர்த்தியாக்கவில்லை அல்லவா? யாழ்ப்பாணத்திலிருக்கும் போது அதை நான் பூர்த்தியாக்க உத்தேசித்திருக்கிறேன். அன்று நீச்சலுடையில் நீ அந்தப் படத்துக்குப் ‘போஸ்’ கொடுத்த போது, உன்னை எறும்பு கடித்ததல்லவா? அந்த எறும்புகளில் ஒன்றிரண்டு உன் காலில் ஊர்வதையும் நான் படத்தில் வரையப் போகிறேன் பார்" என்று சிரித்தான் ஸ்ரீதர்.

பத்மா பதிலுக்கு "உங்கள் படம் மிகப் பெரியது. எறும்பு மிகச் சிறியது. ஆகவே அதை நீங்கள் வரைந்தாலும் அது பார்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியப் போவதில்லை." என்றாள்.

ஸ்ரீதர் சிறிது யோசித்து விட்டு, " நீ சொல்வது உண்மைதான். ஆனால் எனக்கு வேறொரு யோசனை வருகிறது. ஒரு நண்டு உன் தொடையில் ஏறுவது போல் எழுதி விடப் போகிறேன். பார்ப்பதற்கு மிக வேடிக்கையாயிருக்கும்! படத்துக்கு " நண்டும் நங்கையும்" என்று பேரும் போட்டு விடப் போகிறேன். எறும்பைப் போலன்றி வர்ணங்களில் எழுதப்படும் பல கால்களையுடைய நண்டு மிக விழிப்பாகத் தெரியுமல்லவா? அது உன் காலுக்கு ஓர் அணிகலன் போல் விளங்கும்" என்றான்.

பத்மா சிரித்துவிட்டு, "ஆனால் படத்தில் அந்த நண்டை விட ஒரு கழுகின் படத்தையும் நீங்கள் வரைய வேண்டும்." என்றாள்.

"கழுகா? இது என்ன புதுக் குழப்பம்?" என்றான் ஸ்ரீதர். ஓரிரு மாதங்களின் முன்னர் வெளியாகிச் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த ஒரு சினிமா படத்தில் அடிக்கடி உபயோகிக்கப்பட்ட "புதுக் குழப்பம்" என்ற சொற்றொடர் ஊரெல்லாம் பரவியிருந்ததாலேயே ஸ்ரீதரும் அச்சொற்றொடரை உபயோகித்தான். பத்மா கழுகென்று எதைப் பற்றிக் குறிப்பிடுகிறாளென்று முதலில் ஸ்ரீதருக்குக் குழப்பமாகத் தானிருந்தது. ஆனால் அவள் சீக்கிரமே ஐயத்தைத் தீர்த்து வைத்தாள்.

"அந்தத் தலைப்பாகைக்கார அதிகாரைத் தான் நான் குறிப்பிடுகிறேன். அவர் என்னை முன்னும் பின்னும் பக்கமுமாகப் பார்த்த வார்வை அசல் கழுகுப் பார்வையேதான். ஒரு டாக்டர் கூடத் தனது நோயாளியை அவ்வாறு உற்றுப் பார்க்க மாட்டார். என்னைப் பின்னாலிருந்து பார்ப்பதைப் போல் படம் போட்டு விடுங்கள். வேண்டுமானால் அவரது வால் முளைத்த மனைவியையும் வரைந்து விடுங்கள்."

ஸ்ரீதர் விழுந்து விழுந்து சிரித்தான். "அப்படி எல்லாம் வரையக் கூடாது. அவ்வாறு வரைந்தால் படத்தின் மதிப்பே போய் விடும். ஒரு ஹாஸ்யச் சித்திரம் போலாகிவிடும்" என்றாள்.

பத்மா "நண்டை வரைந்தாலும் அப்படித்தானே? என்றாள்.

ஸ்ரீதர் அதற்கு "இல்லை. நண்டு ஹாஸ்யத்தை உண்டாக்காது, பயங்கரத்தை உண்டாக்கும். இப் பேரழகியை நண்டு கடித்து விடுமோ என்று அச்சத்தை உண்டாக்கும்." என்றான். பத்மாவுக்கும் அது சரி போலவே பட்டது. என்றாலும் விட்டுக் கொடுக்காமல், "சீ, நீஙகள் சொல்லுவது பிழை." என்று கூறிக் கொண்டு மேலும் ஸ்ரீதருடன் நெருங்கி உட்கார்ந்து கொண்டாள்.

இவ்வாறு காதலர்கள் பொழுது போக்கிக் கொண்டிருக்க, வானத்தில் திரண்டிருந்த கரு மேகங்கள் முதலில் மெல்லிய நீர்த் திவலைகளைப் பன்னீர் தெளிப்பது போல் நெளிந்து, பின்னர், பெருந் தாக்குதலைத் தொடங்கிவிட்டன. ஹோவென்று மழை கொட்ட ஆரம்பிக்க, மைதானத்து மக்கள் மந்தைகள் போல் சிதறியோட ஆரம்பிட்ததார்கள். கடலைக்காரர்கள் கடலையை மூடிக் கொண்டு கிளம்ப, ஐஸ்கிறீம் வான்களும் இதர மோட்டார் வாகனங்களும் கூட மைதானத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் மைதானமே வெறிச்சென்று விட்டது. கடலின் ஓசையும் காற்றோசையும் மழையோசையுமே எஞ்சின. மின்சாரக் கம்பங்களுக்குச் சமீபமாக ஒளிக் கதிர்களில் சிக்கிய மழைத் தாரைகள் வெள்ளி விறீசுகள் போல நிலத்தை நோக்கி விழுந்து கொண்டிருந்தன. சாம்பல் வர்ணமாயிருந்த இரவில் இருள், மேகக் குப்பாயம் கவிந்ததால் இருண்ட கரிய வெல்வெட் போன்ற கடும் இருளாகியிருந்ததால் மழைத் தாரை என்னும், வெள்ளி விறீசுகள் அங்கு வீழ்ந்து கொண்டிருந்த காட்சி, பகைப்புலத்தின் எதிர் நிலையின் காரணமாக மனதை மயக்கும் மோகனக் காட்சியாக இருந்தது.

அதைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த ஸ்ரீதர் திடீரென மைதானத்தில் மழையின் தாக்குதலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கும்போது கூட ஒருவரை ஒருவர் இறுக அணைத்த வண்ணமே போய்க் கொண்டிருந்த ஒரு காதற் ஜோடியைப் பத்மாவுக்குச் சுட்டிக் காட்டினான்.

"பார்த்தாயா அவர்களை? அதைப் பார்த்ததும் எனக்குத் திருக்குறளில் ஒரு செய்தி ஞாபகம் வருகிறது" என்றான் ஸ்ரீதர்.

"ஓகோ, சுரேஷின் வியாதி உங்களையும் தொற்றி விட்டதா? அல்லது சீமை செல்லும்போது கொழும்பில் தனது வியாதியை அவன் விட்டு விட்டுச் சென்று விட்டானா? அது எப்படி என்றாலும் பரவாயில்லை. எடுத்ததெற்கெல்லாம் மேற்கோள் காட்டுவதும், கதைகளும் சொல்வதும் குட்டிப் பிரசங்கங்கள் அடிப்பதும் அவன் வழக்கம். ஐயாவுக்கோ இது புதுக் குழப்பம். என்றாலும் பரவாயில்லை. கால்பேஸ் கடற்கரையில் மழையிலே கட்டிப் பிடித்துக் கொண்டு ஓடும் இக்காதலர்களைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார்? சொல்லுங்களேன்" என்றாள்.

ஸ்ரீதர் விளக்க ஆரம்பித்தான். "காதலர் இருவர் இறுக அணைத்து கொண்டிருக்கும் போது இடையிலே காற்றுப் புகுந்தாலும் அவ்வணைப்பின் இறுக்கம் குறைந்து இன்பம் குன்றிவிடுமாம். நம் இருவருக்குமிடையே காற்றுக் கூட வரக் கூடாது என்பது காதலர் எண்ணம். அப்படிக் காற்றாலும் பிரிக்கப்படாத தழுவலன்றோ தழுவல் என்கிறார் வள்ளுவர்.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைப்
போழப் படாஅ முயக்கு.

(ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதல்ர்களுக்கு இன்பளிப்பது காற்று இடயே புகுந்து ஊடறுக்காத தழுவலாகும்.)

அதோ மழையில் ஓடுகிற அத்தலைவனும் தலைவியும் அப்படிப்பட்டவர்கள் தாம். மழையால் கூடப் பிரிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அதனாலேதான் ஒட்டிக் கொண்டு ஓடுகிறார்கள் அவர்கள். அவர்களை இனிப் பிரிப்பதென்றால் கத்தியால் வெட்டித்தான் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது"

"அப்படியானால் நீங்கள் ஏன் அப்படித் தள்ளியிருக்கிறீர்கள்? மழைக் குளிருக்கும் நல்லது. இன்னும் நெருங்கி உட்காருங்கள்" என்று கூறிக் கொண்டு ஸ்ரீதருடன் மேலும் நெருங்கி உட்கார்ந்தாள் பத்மா.

மைதானத்தில் இப்பொழுது யாருமே இல்லை. காரில் காற்று வாங்கியவர்கள் கூடப் போய் விட்டார்கள். ஸ்ரீதர் மட்டும் தான் பத்மாவுடன் அங்கே காரில் இன்னும் உட்கார்ந்து கொண்டிருந்தான். பத்மா பேச்சுக்குக் குளிரைப் பற்றிப் பிரஸ்தாபித்திருந்தாலும் உண்மையில் கார் கண்ணாடி ஜன்னல்கள் நன்கு பூட்டப்பட்டிருந்ததால் வெளியே குளிர் மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் காரின் உள்ளே மிகவும் வெதுவெதுப்பாகத்தான் இருந்தது.

மழையால் வீதிப் பார்வை மறைவதைத் தடுப்பதற்காகக் காரின் முன் கண்ணாடியை மேலும் கீழுமிறங்கித் துடத்துக் கொண்டிருந்த மின் துடைப்பம் தங்களுடைய பேச்சுக்குத் தடையாயிருப்பதைக் கண்ட ஸ்ரீதர் அதை நிறுத்தி விட்டான். அதனால் கடலோடு சேர்ந்தொலித்த மழையின் மெத்தென்ற ஓசையை தவிர வேறு எவ்வித ஓசையுமே அங்கிருக்கவில்லை. ஆனாலும் அங்கியிருந்தாலும் காலி வீதியில் இடையிடையேனும் ஒரு கார் தனது முன் லைட்டுகளால் ஒளிக் கதிர்களைக் கொட்டி இருளைப் பிளந்து சென்று கொண்டிருந்தது.

பத்மா சிறிது நேரம் ஒன்றும் பேசாதிருந்துவிட்டு, "மழை கொட்டுகிறது. நேரமும் போய்க் கொண்டிருக்கிறது. வீட்டுக்குப் போவோமா?" என்றாள். ஸ்ரீதர் "மழை கடுமையாகக் கொட்டுவது எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தாயா? மைதானத்தில் யாருமில்லை. நாங்கள் புல்லில் போயுட்கார்ந்து மழையை அனுபவிப்போமா? என்றான். பத்மா "உங்களுக்கென்ன பைத்தியமா? யாராவது அப்படிச் செல்வதுண்டா?" என்று கேட்டாள்.

ஸ்ரீதர் "எனக்குச் சின்ன வயதிலிருந்தே மழையில் கும்மாளம் போட ஆசை. எங்களூரில் இருந்த ஏழைச் சிறுவர்கள் மழை காலத்தில் வாய்க்கால்களிலும் வெள்ளத்திலும் குதித்துக் குதித்துக் கும்மாளமடிப்பார்கள். எனக்கும் அவர்க்ளோடு சேர்ந்து சேறில் புரண்டு குதூகலிக்க ஆசை. ஆனால் அப்பா விட மாட்டார். பணக்காரப் பிள்ளை ஏழைகளோடு சேர முடியுமா? இன்னும் சேறில் விளையாடுவது அசுத்தமான பழக்கமென்றும் அப்பா கூறிவிட்டார். ஆகவே அது நிறைவேறாத ஓர் ஆசையாக இன்றும் என் மனதில் மூலையில் இருந்து வருகிறது. கடந்த வாரங் கூட கும்பனித் தெருப் பகுதியில் ஏழைச் சிறுவர் சிலர் மழையில் குதித்து விளையாடுவதைப் பார்த்தேன். எனக்கு மட்டும் அப்படி விளையாடக் கொடுத்து வைக்க வில்லையே என்று நான் கவலைப்பட்டேன் பத்மா! நீயும் என்னோடு சேர்ந்து கொள்வதாயிருந்தால் இப்பொழுது இம்மழையில் நாம் ஆசை தீர விளையாடலாமல்லவா?" என்றான் ஸ்ரீதர்.

தண்ணீரில் விளையாட அழைத்த ஸ்ரீதரின் ஆலோசனை பத்மாவுக்கும் பிடிக்கவே செய்தது. ஆனால் சேலை சட்டை பழுதாகிவிடுமே என்ற எண்னத்தினால் முதலில் மழையில் விளையாட அவள் மறுத்தாள். "சேலையைப் பற்றிக் கவலைப்படாதே. ‘கிஷ்கிந்தா’வில் அம்மாவின் நல்ல சேலைகள் சில இருக்கின்றன. இங்கிருந்த நேரே அங்கு போய் அந்தச் சேலையிலொன்றை அணிந்து கொண்டு நீ வீடு போய் விடலாம்." என்றான் ஸ்ரீதர். அவ்வாறு சொல்லிக் கொண்டே ஸ்ரீதர் கார்க் கதவைத் திறந்து வெளியே இறங்கி விட்டான். பத்மாவும் வெளியே குதித்தாள்.

வெதுவெதுப்பான சூழ் நிலையிலிருந்து கொட்டும் மழைக்கு வந்ததும் பத்மாவுக்கு குளிரினால் உடல் நடுங்க ஆரம்பித்தது. ஆனல் சில விநாடிகளில் அது குறைந்து போய் விட்டது. ஒரு வித உயிர்த்துடிப்பு அங்கங்களெல்லாம் பாவ, இருவரும் கொட்டும் மழையில் இறங்கிப் புல் தரையில் ஓடினார்கள். பெரியவர்களாகி விட்டவர்களுக்குக் கூடக் குழந்தைகள் போல் நடப்பதில் எவ்வளவு ஆசை. சமுதாய வழக்கங்களும், மற்றவர்கள் பரிகசிப்பார்கள் என்ற எண்ணமுமே பலரை அவ்வாறு செய்யமல் தடுக்கின்றன. ஸ்ரீதர் - பத்மாவைப் பொறுத்த வரையில் இன்னும் அவர்களைப் பெரியவர்கள் என்றும் சொல்ல முடியாதல்லவா? விளையாட்டுக்களில் ஆசையுள்ள வாலிபக் காதலர்களான அவர்கள் ஒருவரை ஒருவர் ஓடிப் பிடித்தார்கள். சிரித்தார்கள். பத்மா கீச்சிட்டாள். யாருக்கும் தங்கள் சப்தம் கேட்காதென்பதும் தாங்கள் புரியும் அட்டகாசங்கள் தெரியாதென்பதும் அவர்களை அவர்கள் மனதின் இச்சைக்கு ஏற்றவாறு ஓடவும் ஆடவும் கூச்சலிடவும் செய்தன. இரு சிறு பூனைக்குட்டிகளோ, நாய்க் குட்டிகளோ சேர்ந்து விளையாடுவது போல் தம்மை மறந்து மழை நீராடினார்கள் அவர்கள். கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு மனிதனே காணப்படாததால் அவர்கள் இம்முழு உலகமுமே தம்முடையது என்று எண்ணியவர்கள் போல் இறுமாந்து குதித்தார்கள். சிறிது துரம் சென்றதும் ஸ்ரீதர் நிலத்தில் உட்கார்ந்தான். பத்மாவும் உட்கார்ந்தாள். இருவரும் புல்லிலே சாய்ந்து படுத்தார்கள். உடம்பும் உடையும் சேறாகச் சேறாக ஒருவித இன்ப வெறி தலைக்கேறியது. ஸ்ரீதருக்குத்தான் சின்ன வயதில் கண்ட தனது கிராமத்து வாய்க்கால்களில் குதித்துக் குதித்துக் கூத்தாடிய சிறுவர்களின் நினைவு வந்தது. குழந்தைப் பருவ ஆசை இன்றுதான் இரவின் இருட்டிலே கொழும்பில் தன் கிராமத்துக்கு எத்தனையோ மைல்களுக்கு அப்பால் நிறைவேறிக் கொண்டிருந்தது. நிறைவேறாத ஆசைகளே மனக் கிலேசங்கங்ளுக்கும், ஏன் சில சமயங்களில் மனக் கோளாறுக்கும் கூடக் காரணம் என்று உளவியலாளர் கூறுவார்கள். அதனால் தான் போலும் ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் சினன் வயதில் இப்பெரிய ஆசையின் நிறைவேற்றம் மனதிற்கு ஒருவித சாந்தி நிலையைக் கொண்டு வந்திருந்தது. அதில் இலயித்துச் சிறிது நேரம் புல்லில் எவ்வித ஆட்டமும் அசைவுமின்றி பத்மாவை அணைத்தவாறு உட்கார்ந்திருந்தாள் அவன்.

பத்மாவுக்கு ஏற்பட்ட அனுபவமோ இது போன்றதல்ல. அவளுக்கு மழையில் ஆடியதும், சேற்றில் புரண்டதும் நிறைவேறாத ஆசைகளின் நிறைவேற்றமல்ல; அதனால் பிறந்தது ஸ்ரீதருக்கு ஏற்பட்டது போன்ற மனச்சாந்தியுமல்ல. இவை எல்லாம் ஒரு வகைக் காதல் லீலைகள் போலவே அவளுக்குத் தோன்றின. சினிமாக்களில் காதலர் தண்ணீரில் கும்மாளமடிக்கும் காட்சிகளை அவள் கண்டிருக்கிறாள். அவைதான் அப்பொழுது அவளுக்கு நினைவு வந்து கொண்டிருந்தன. இப்படிப்பட்ட காட்சிகளைச் சினிமாக்களில் சினிமா மண்டபத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட அவளது உடலுணர்ச்சிகள் ஓரளவு தூண்டப்படுவது வழக்கம். இன்றோ அவை அதிகமாகத் தூண்டப்பட்டிருந்தன. அவள் மனதில் ஒரு புயல் தோன்றியிருந்தது. ஸ்ரீதரையும் அப்புயலில் மாட்டிவிட நினைத்தாள் அவள். ஆனால் ஸ்ரீதரோ அதில் அற்ப ஈடுபாடு கூடக் காட்டவில்லை. அவன் உலகு வேறாக இருந்தது.

ஆனால் பத்மாவுக்கோ உலகே மறந்து போயிருந்தது. தந்தையார் நினைவும் மறந்து போயிற்று. சமுதாயக் கட்டுப்பாடுகளும் மறந்து போயின. எங்கோ ஓரிடத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தது அவள் மனம். ஸ்ரீதரும் அதே இடத்தை நோக்கி வர மாட்டானா என்று ஏங்கியது நெஞ்சம். கவிஞரும் கதாசிரியரும் வர்ணித்த அந்த உலகுள் விரைந்து இப்பொழுதே புக வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஓர் ஆணும் பெண்ணும் சிநேகிப்பது அதற்காகத்தானே என்று கூட எண்ணினாள் அவள். சகுந்தலையை வனத்தில் சந்தித்து, துஷ்யந்தன் எவ்வளவு விரைவாகவும் இலகுவாகவும் அவளை அவ்வுலகுக்கு அழைத்துச் சென்று விட்டான். அவனது ஆண்மையல்லவோ ஆண்மை என்று கூட நினைத்தாள் அவள். ஆனால் துஷயந்தனின் அந்த அவசர ஆண்மையால் சகுந்தலை பின்னல் பட்ட துன்பமும் துயரும் கொட்டிய கண்ணீரும் அடைந்த இன்னல்களும் அவளுக்கு ஞாபகம் வர வில்லை. கணநேர இன்பத்துக்கு யுகத்தையே பரிசளிக்கும் நிலையில் அவள் இருந்தாள். இன்னும் "ஸ்ரீதர் என்னைத் திருமணம் செய்யப் போவது நிசமென்றால் - இவற்றில் எல்லாம் இனிக் கட்டுப்பாடு என்ற பெயரில் எம் மனதோடு நாமே போராடிக் கொண்டிருப்பது ஏன்? களவொழுக்கம் என்று முன்னோர் சொன்ன பிரகாராம் நடந்து கொள்ள வேண்டியதுதானே?" என்று சிந்தித்த அவள் பெண்மைக்கு இயற்கையாயிருக்கும் நாணத்தால் மட்டுமே தன் எண்ணத்தை வெளிப்படையாகக் கூறாதிருந்தாள். இன்னும் வெளிப்படையான செயலாலோ சொல்லாலோ ஒரு பெண் தன் உள்ளத்தின் இத்தகைய அந்தரங்க ஆசைகளை ஓர் ஆணிடம் வெளியிட்டால், அவ்வாண் கூட அவளை மதிக்க மாட்டான் என்பது அவள் அறியாததல்ல. இவ்விவகாரங்களில் ஆணே முன் கை எடுக்க வேண்டுமென்ற உலக நியதியே அவள் செயல்களை அன்று கட்டுப்படுத்தின. உண்மையில் ஸ்ரீதர் போக்கு அவளுக்கு அடியோடு பிடிக்க வில்லை. என்றாலும் அவளால் என்ன செய்ய முடியும்? அவள் இதுவரை அடுத்த வீட்டு அன்னம்மா அக்காவிடமிருந்தும், கெட்டுப்போன குசுமாவிடமிருந்தும் ஆண்களைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்த விவரங்களின் படி அவர்கள் பெரிய அவசரக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்புவது தான் கஷ்டமென்று நினத்திருந்தாள். உண்மையும் அதுவாகத்தானிருக்க வேண்டும். ஆனால் ஸ்ரீதரோ எவ்வளவு வேடிக்கையாகப் பேசினாலும் என்னதான் தன்னோடு உராய்ந்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும் ஓர் எல்லைக்கு அப்பால் போகாதவனாக அல்லவா இருக்கிறான்? - இது பத்மாவுக்குப் பெரியதோர் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் ஒரு பெண் நினைத்தால், ஆணைக் கொண்டு எதையுமே செய்வித்து விடலாம். ஆனால் அதற்கு அப்பெண் தன் பெண்மையின் கர்வத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். பத்மாவோ அதற்குத் தயாராகவில்லை. ஆகவே ஸ்ரீதரிடம் சலிப்போடு "போதும் மழை விளையாட்டு. குளிரும் அதிகமாயிருக்கிறது. தடிமன் பிடித்தாலும் பிடித்து விடும். போவோமா?" என்றாள்.

இவ்வாறு அவள் சொல்வதற்கும் வானம் மின்னச் சிரிப்பொன்று சிரிப்பதற்கும் சரியாயிருந்தது. மின்னைலைத் தொடர்ந்து இடி நகை கேட்டது. காற்றும் கடுமையாக வீச ஆரம்பித்தது. ஆம், இயற்கை புயற் கோலம் காட்டத் தொடங்கியது. மழையும் அடித்தோங்கிப் பொழிய ஆரம்பித்தது. ஸ்ரீதரும் எழுந்தான். "சரி போவோம்." என்று காரை நோக்கி நடந்தான். திருப்தியற்ற உள்ளத்தோடு அவனைப் பின் தொடர்ந்தாள் பத்மா.

ஸ்ரீதர் பத்மாவை கொலீஜ் ரோட்டில் கொண்டு போய் விட்ட பொழுது, இரவு 9 மணியாகி விட்டது. "கிஷ்கிந்தா’விலிருந்து அன்னை பாக்கியத்தின் அழகான பெங்களூர்ச் சேலையொன்றைப் பத்மாவுக்கு அணியக் கொடுத்திருந்தான். இருவரும் மழையில் நீராடி வந்திருந்தமை அவர்களுக்கு ஒரு பரிசுத்தமான அழகுத் தோற்றத்தைக் கொடுத்தது. பத்மாவின் தந்தை பரமானந்தர் ஸ்ரீதரை வீட்டுள் வரச் செய்து சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் "ஈடிப்பஸ் நாடகத்தைத்தான் அடுத்த வாரம் இரண்டாம் முறையும். அரங்கேற்றம் செய்யவிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டான் ஸ்ரீதர். அனுபவஸ்தரான பரமானந்தர் நாடகத்தை முன்னிலும் பார்க்கச் சிறப்பாக அரங்கேற்றம் செய்வதற்கேற்ற சில நல்ல ஆலோசனைகளைக் கூறினார்.

அங்கிருந்து அவன் வீட்டுக்குக் கிளம்பும் போது பத்து மணியாகிவிட்டது. ஸ்ரீதர் பரமானந்தரிடம் "நான் யாழ்ப்பாணத்திலிருந்து வரும்போது கல்யாணத்துக்கு நாள் குறித்துக் கொண்டு தான் வருவேன். கல்யாணத்துக்கு முன் நீங்கள் அப்பாவைக் கண்டு பேசுவதற்கும் ஏற்பாடு செய்வேன்." என்று கூறினான். பரமானந்தர் "எல்லாம் சுபமாக நடக்க வேண்டும்" என்று வாழ்த்தினார்.

இதற்கிடயில் கூரையில் நடமாடிக் கொண்டிருந்த ஒரு பல்லி ‘டிக் டிக்’ என்று ஓசை கிளப்பியது. "பல்லி சொல்லுகிறது" என்றான் ஸ்ரீதர். "உனக்கு பல்லி சொல்வதில் நம்பிக்கை உண்டா?" என்றார் பரமானந்தர். "ஆம்" என்றான் ஸ்ரீதர். பரமானந்தர் தன்னிடமிருந்த ஒரு பழைய பஞ்சாங்கத்தை எடுத்துத் தமது மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்த்தார். "சுப செய்தி -வெற்றி நிச்சயம்" என்று மகிழ்ச்சியோடு கூறினார் அவர்.

ஸ்ரீதர் சந்தோஷத்தோடு புறப்பட்டாள். பத்மா வாசலுக்கு வந்து தனது கையை உயர்த்தி வளைக்கரம் குலுங்க "செரியோ" கூறினாள்.

ஸ்ரீதர் கண்ணுக்கு மறைந்ததும் பரமானந்தர் பத்மாவை நோக்கி "இன்று கமலநாதன் வந்திருந்தான். அவர்கள் விளையாட்டுச் சங்கத்தின் ஆண்டு விழா இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெறுகிறதென்று கூறி, ஓர் அழைப்புக் கடிதத்தையும் உனக்குக் கொடுத்து விட்டுப் போனான். உள்ளே மேசையில் வைத்திருக்கிறேன். எடுத்துப் பார்" என்றார்.

பத்மா அறையுள் சென்று கடிதத்தை எடுத்த பொழுது, "இன்று கால்பேஸ் கடற்கரையில் ஸ்ரீதருக்குக் கிடைத்த வாய்ப்பு போல் கமலநாதனுக்குக் கிடைத்திருக்குமானால் அவன் எவ்வாறு நடந்திருப்பான்? மீசைக்காரனான அவன் ஆண்மையுடன் நடந்திருக்கலாமல்லவா?" என்ற எண்ணம் தன்னை அறியாமலே அவளுக்கேற்பட்டது.

"ஆனால் அதை எப்படிச் சொல்ல முடியும்? அங்கே வாய்ப்பை அளித்தல்லவோ பார்க்க வேண்டும்?" என்ற பதிலும் உடனடியாகவே அவள் மனதில் எழுந்தது.

அன்றிரவு பத்மா நீண்ட நேரம் நித்திரை கொள்ள வில்லை. கட்டிலிலே வெறுமனே புரண்டு கொண்டிருந்தாள் அவள். யெளவனத்தின் துடிதுடிப்பு அவள் நெஞ்சையும் உடலையும் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. காதலென்பது உள்ளத்தின் உணர்ச்சி மட்டுமல்ல. உடலுணர்ச்சியும் தானே?" என்று தனக்குத் தானே வினவிக் கொண்டவள் தன் உடம்பெல்லாம் ஒரு நெருப்புப் பாவி வருவது போன்று உணர்ச்சியைப் பெற்றாள். "இதைத் தான் பண்டைக்காலத்துப் புலவர்கள் விரக தாபம் என்று வர்ணித்தார்கள் போலும்" என்றும் நினைத்துக் கொண்டாள் அவள்.

நித்திரையின்றி படுக்கையில் புரண்ட அவள் ஜன்னலூடாக வானைப் பார்த்த போது, பாதி மதி ஒன்று அங்கே தன்னையே நட்சத்திரப் பரிவாரங்களுடன் உற்றுப் பார்த்துக் கொண்டு நிறபது தெரிந்தது. "நட்சத்திரங்கள் எனபன விரக தாபத்தால் வானத்தேவியில் உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள்’ என்று தான் எங்கோ ஒரு பழைய கவிதை படித்தது அவளுக்கு அப்பொழுது ஞாபகம் வந்தது. ஆம். நளவெண்பாவில் புகழேந்தி பாடிய பாட்டில் அப்படி வருகிறது - என்ற நினைவு கூர்ந்த அவள், தனது உடலிலும் அப்படிக் கொப்புளங்கள் குமிழியிட்டிருக்கின்றனவா என்று தடவிப் பார்த்தாள். "இல்லை, கவியின் கற்பனை நடைமுறைக்கு ஒத்து வராது. என்றாலும் என்னுடலில் அனல் வீசுவது மட்டும் என்னவோ உண்மைதான்" என்ற எண்ணிய அவள் மனதிலே கமலநாதன் மீண்டும் மீண்டும் காட்சியளித்தான்.

வீடு சென்ற ஸ்ரீதருக்கோ இவ்வித அனுபவங்கள் ஏற்படவில்லை. சேற்றில் விளையாடியதால் ஏற்பட்ட ஆயாசத்துடன் சுப்பையா தயாரித்திருந்த சாப்பாட்டை ஊறுகாயுடன் இரசித்துச் சாப்பிட்ட அவனுக்கு நல்ல நித்திரை கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. படுக்கையில் படுத்து ஒரு வார சஞ்சிகையை எடுத்து இரண்டு மூன்று பக்கங்களைத் தட்டியதும், துயில் அவன் கண்களைத் தழுவிக் கொண்டது.

இப்படிப்பட்ட நேரங்களில் வழக்கத்தில் அவன் நண்பன் சுரேஷ் ‘லைட்’டை நிறுத்துவான். அன்று சுரேஷில்லாததால், வேலைக்காரச் சுப்பையா ‘லைட்’டை நிறுத்தினான். சுரேஷோ நடுக் கடலில் ஸ்ரீதர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பானோ என்ற சிந்தனையில் இலயித்திருந்தான்.

[தொடரும்]

No comments: