Wednesday, October 22, 2008

தொடர்நாவல்: மனக்கண்

- அ.ந.கந்தசாமி -

24-ம் அத்தியாயம்: நாடகமே உலகம்!

"அமராவதி" இப்பொழுது ஒரு நாடக அரங்கமாகி விட்டது. ஓர் ஆள் மாறாட்ட நாடகம் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏதோ பிரச்சினையை உடனடியாகத் தீர்த்து வைப்பதற்காக நாடகத்தைத் தொடங்கியாகி விட்டது. ஆனால் கடைசி வரை இந்நாடகத்தை வெற்றிகரமாக நடத்துவது அவ்வளவு இலகுவாகத் தோன்றவில்லை. இந்நாடகத்தில் சிவநேசர் உட்பட எல்லோரும் வெறும் பார்வையாளர்களாகவும், மேடை நிர்வாகிகளாகவுமிருக்க, நடிகையாக இருந்து நாடகத்தின் முழுப் பாரத்தையும் தோளிலே சுமக்க வேண்டிய பொறுப்பு சுசீலாவைச் சார்ந்துவிட்டது. தான் ஏற்றுக் கொண்ட நாடக பாத்திரத்திற்கேற்ற குரற் பொருத்தம், வயது, படிப்பு என்பன அவளுக்கு அமைந்திருந்தமை இதற்கு உதவியாக இருந்தது உண்மைதான். என்றாலும் ஸ்ரீதரும் பத்மாவும் நீண்ட காலம் ஒருவருடன் ஒருவர் பழகியவர்களாததால் பழைய சம்பவங்கள் பலவற்றை அவன் சுசீலாவிடம் இடையிடையே ஞாபகமூட்டிய போது, அவனது வசனங்களுக்குப் பொருத்தமான பதில் வசனங்களைப் பேசுவது சுசீலாவுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. சில வேளைகளில் பொருத்தமான பதில்கள் அடியோடு தோன்றாது போகும். அவ்வேளைகளில் விஷயங்களைத் திறமையாகப் பூசி மெழுகி மழுப்ப வேண்டியிருந்தது. இயற்கையாகவே சுசீலா புத்திசாலியாகவும் கற்பனை வளம் வாய்க்கப் பெற்றவளாகவும் விளங்கியதால், இதை அவளால் ஓரளவாவது சாதிக்க முடிந்தது. இன்னும் பொதுவாகவே ஆண்களை விடப் பெண்களுக்குப் பொய் சொல்லும் ஆற்றல் அதிகம் என்று சொல்லுவார்கள். இதன் உணமை எப்படியிருந்த போதிலும், சுசீலாவைப் பொறுத்தவரையில் இந்த ஆற்றலை மிக விரைவில் அவள் தன்னிடம் வளர்ந்துக் கொண்டு ஸ்ரீதரின் வாழ்க்கைக்கு இன்பத்தை அளிக்கத் தன்னாலானதை எல்லாம் செய்து வந்தாள்.

இயற்கையாகவே இளகிய இதயம் படைத்த அவள், ஸ்ரீதரின் நிலையைப் பார்த்து ஏற்கனவே அவன் மீது அனுதாபம் கொண்டிருந்ததால், சிவநேசரும் பாக்கியமும் அவனது பெற்றோருடன் உள்ளத் தவிப்போடு பேசிய வார்த்தைகளைக் கேட்டதும் தன்னை மறந்து உணர்ச்சிப் பெருக்கில் ஒன்றையும் யோசியாமல் திடீர் முடிவுக்கு வந்து அந்தகனான ஸ்ரீதரின் ஆள் மாறாட்ட மனைவியாகி, இன்று அவனோடு இல்லறமென்னும் நுகத்தில் மாட்டிக் கொண்டுவிட்டாள். இந்தத் திருமணத்தில் இருந்த பிரச்சினை ஒரு குருடனை அவள் கட்டினாள் என்பதல்ல. இன்னொரு பெண்ணாக நடிக்க வேண்டியிருந்ததே, பெரிய தொல்லையாக இருந்தது. சாதாரணமாக மேடை நாடக நடிகர்களைப் போலவே நாடகம் உண்மையில் ஆரம்பிக்கும் வரை அதாவது அமராவதிக் கோவிலில் தாலி கட்டி ஸ்ரீதரோடு பள்ளியறை புகும் வரை தான் ஏற்றுக் கொண்ட பாத்திரம் எத்தகைய கஷ்டமான பாத்திரம் என்பதை அவள் உணரவில்லை.

உண்மையில் பத்மா என்ற பெயரை திடுதிடுப்பென்று ஏற்றுக் கொண்ட போதிலும், பத்மாவின் தந்தை பெயர் என்ன, தாயின் பெயரென்ன இருவரும் ஜீவந்தராயிருக்கிறார்களா, இவர்களில் எவராவது இறந்து போய் விட்டார்களா என்பது போன்ற சாதாரண விவரங்களைக் கூட அவள் போதிய அளவு சேகரித்து கொள்ளவில்லை. இதனால் ஒரு வேளை ஸ்ரீதர் சுசீலாவின் ஆள் மாறாட்டத்தைத் தெரிந்துக் கொண்டுவிட்டால் என்ன ஆவது? அவ்விதம் அவன் தெரிந்து கொண்டுவிட்டால் என்ன விபரீதம் நேரிடுமோ? இதை எண்ணியதும், சுசீலாவை நெஞ்சை நடுங்க வைக்கும் பேரச்சம் பீடித்தது. அதனால் ஸ்ரீதருடன் பேசும்போது மிகவும் சாவதானமாக யோசித்துப் பேச வேண்டியது தன் கடமை எனபதை உணர்ந்தாள் அவள். தவறான ஒரு சொல் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடலாம். ஆகவே எப்பொழுதும் மிக மிக எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிவிட்டது.

தனது திருமணத்தின் முதலிரவன்று படுக்கையறையில் நாணத் தெளிந்து ஸ்ரீதருடன் சாதாரணமாகப் பேசிப் பழக ஆரம்பித்த பிறகு அவனுக்கு உற்சாகமூட்டுவதற்காக அவன் கன்னத்தில் முத்தமிட்டு, ஒரு காதற்பாட்டைக் குரலெடுத்துப் பாடினாள் சுசீலா. ஸ்ரீதர் அதைக் கேட்டதும் மிகுந்த ஆச்சரியத்துடன் "பத்மா, நீ எப்போது பாடக் கற்றுக் கொண்டாய்? என்னுடன் எத்தனையோ மாதங்களாக ஊர் சுற்றித் திரிந்தும் ஒரு நாளும் நீ பாடியதில்லை" என்றான். சுசீலா திருதிரு என்று விழித்தாளாயினும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, "நான் என்னுடைய சங்கீதத் திறமையை எங்கள் முதலிரவுக்கென்றே ஒளித்து வைத்திருந்தேன். பெண்கள் ஆண்களைப் போல் தங்கள் திறமைகளை ஒரேயடியாகக் காட்டிவிட மாட்டார்கள்" என்றாள். ஸ்ரீதருக்கு அப்பதில் திருப்தியாகவே பட்டது. விடிவதற்கிடையில் "பத்மா இன்னும் பாடு, இன்னும் பாடு" என்று அவளைப் பலமுறை பாட வைத்துவிட்டான் அவன்.

இச்சம்பவம் அவள் மனப் பயத்தை மேலும் அதிகரித்துவிட்டது. மிகவும் கஷ்டமான பரீட்சையில் நான் சிக்கிக் கொண்டு விட்டதாகவும், அதில் தன்னால் சித்தி எய்துவது சாத்தியந்தானா என்றும் அவள் கலங்கலானாள். இவ்வாறு அவள் கலங்கியபோது சில காலத்துக்கு முன்னர் தான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற போது கண்டியில் சக மாணவிகள் சிலருடன் தான் பார்த்த ஹிந்தி படமொன்று அவளுக்கு ஞாபகம் வந்தது. இப்படத்தின் கதாநாயகன் தன்னைப் போன்ற உருவமைந்த இன்னொருவனாக நடித்துச் சில மோசடிகள் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதற்கு அவனுக்கு பெருந் துணையாக அமைகிறது மற்றவனின் தினக்குறிப்பு புத்தகம். விரிவாக எழுதப்பட்ட இத்தினக்குறிப்புப் புத்தகத்தில் அவனது முழு விவரங்களும் காணப்படுகின்றன. அவற்றை நன்கு உபயோகித்துத் தனது மோசடிகளை மிகவும் திறம்படச் செய்ய முடிகிறது கதாநாயகனால். உண்மையில் மற்றவரின் மனைவியைக் கூடத் தானே அவளது உண்மைக் காதலன் என்று நம்ப வைத்துவிடுகிறான் அவன். இக்கதை ஞாபகம் வந்ததும் சுசீலா ஸ்ரீதரிடம் தினக்குறிப்புப் புத்தகம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமென்றும், அவ்வாறு அவனெழுதிய தினக்குறிப்புப் புத்தகம் இருக்கும் பட்சத்தில் அது தனக்குப் பெருந் துணையாகலாம் என்பதால் அதனைத் தேடிப் பார்க்க வேண்டும் என்றும் முடிவு செய்தாள். அவளது இம்முயற்சி வீண் போகவில்லை. ஸ்ரீதரின் தினக்குறிப்புப் புத்தகம் அவளிடம் சிக்கவே செய்தது. ஆனால் சினிமாக் கதையில் காட்டப்பட்ட விரிவான தினக்குறிப்புப் புத்தகம் போல் அது அமையவில்லை. அப்படிப்பட்ட வசதியான நிலைமைகள் சினிமாவிலோ கதைகளிலோதான் காணப்படும். வாழ்க்கையில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது துர்லபம். இருந்தாலும் அவள் கைக்கு அகப்பட்ட ஸ்ரீதரின் தினக்குறிப்புப் புத்தகம் அவளுக்கு ஓரளவு உபயோகமாகவே அமைந்தது. ஸ்ரீதரின் அறையில் காணப்பட்ட பெரிய அலமாரியைத் துருவி ஆராய்ந்த போதே அது அவளுக்கு அகப்பட்டது.

தினக்குறிப்புப் புத்தகம் வைத்திருப்பது இப்பொழுது மிகவும் கர்நாடகமாகக் கருதப்பட்டு வருகிறது. தப்பித் தவறித் தினக்குறிப்புப் புத்தகம் வைத்திருப்பவர்களும் கூட அதை வேலைத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உதவியான கால சூசிகையாகப் பயன்படுத்துகின்றனரே அல்லாமல் விரிவான வாழ்க்கை வரலாற்றை அதில் எழுதுவதில்லை. முன்னரெல்லாம் அப்படியல்ல. படித்தவர்கள் தமது அன்றாட அனுபவங்களை மறவாது பதிய வைப்பதற்குத் தினக்குறிப்புப் புத்தகங்களை உபயோகித்தனர். இவ்வாறு அவர்கள் எழுதி வைத்த தினக்குறிப்புகள் பல, பின்னர் நூல்களாகக் கூட வெளியிடப்பட்டிருக்கின்ரான. பிரெஞ்சு எழுத்தாளர் அன்ட்ரே கிடேயின் தினக்குறிப்பு நூல் இவற்றில் பிரசித்தமான ஒன்று.

ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் அவன் தனது தினக்குறிப்புப் புத்தகத்தை விரிவான வாழ்க்கை வரலாறு போலவும் எழுதவில்லை. வெறும் கால சூசிகையாகவும் வைக்க வில்லை. இரண்டுங் கெட்ட ஒரு முறையில் அவன் அதை எழுதி வைத்திருந்தான்.இன்னும் அவன் அதை விடாது தொடர்ந்து எழுதவுமில்லை. சில சமயம் பல வாரங்களுக்கு ஒரு குறிப்புமே காணப்படவில்லை. இன்னும் சில சமயங்களில் தொடர்ந்தாற் போல் இரண்டு வாரங்களுக்கு ஒரே உற்சாகமாகக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தான்.

அவன் எழுதியிருந்த குறிப்பில் ஒன்று பின்வருமாறு:

"இன்று பத்மா பரமானந்தர் என்ற பெண்ணை நாடக மன்றக் கூட்டத்தில் சந்தித்தேன். அவள் என்னுடன் நாடக மன்றத்தின் கூட்டுச் செயலாளராகத் தெரியப்பட்டாள். அவளே இவ்வுலகின் பேரழகி. அவளுக்கு என்னைப் பிடித்திருந்தது. இருவரும் பல்கலைக்கழக நூல் நிலையத்துக்கு அருகாமையிலுள்ள நூல்களமைந்த நடைபாதையில் நீண்ட நேரம் உரையாடி நின்றோம். அவள் இளைப்பாறிய ஒரு வாத்தியாரின் மகள். என் தகப்பனார் என்ன தொழில் புரிகிறார் என்று அவள் கேட்டாள். அவரும் இளைப்பாறிய ஒரு வாத்தியாரே என்று புளுகொன்றை அவிழ்த்துவிட்டேன். நான், அவளிடம் இவ்வாறு பொய் சொல்லாமல் நான் கோடீஸ்வரர் சிவநேசரின் மகன் என்று கூறியிருந்தால், நிச்சயம் அவள் மிரண்டு போயிருப்பாள். என்னிடம் பேசவே அஞ்சியிருப்பாள். நான் பெரும் பணக்காரனாயிருப்பது பல்கலைக்கழகத்தில் எனக்கு எவ்வளவு தொல்லையை உண்டு பண்ணுகிறது. ஆண்களும் சரி, பெண்களும் சரி, என்னை மிகவும் கனம் பண்ணவே செய்கிறார்கள். ஆனால் எவருமே என்னிடம் அஞ்சாது மனந்திறந்து பேச வருகிறார்களில்லை. இதனால் நண்பர்களில்லாத காட்டு வாழ்க்கையாக என் வாழ்க்கை கழிகிறது. இந்நிலையைப் போக்கத்தான் நான் பத்மாவுக்குப் பொய் சொன்னேன். ஆனால் இவ்வாறு நான் பொய் சொன்னது சரிதானா?"

இன்னொரு குறிப்பு பல்கலைக்கழக நாடகத்தன்று பத்மா தனது தந்தை பரமானந்தரை ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைத்ததைக் கூறியது. ஆகஸ்ட் 14ந் திகதியன்று எழுதப்பட்ட குறிப்பில், "இன்று என் கண்மணி பத்மாவின் பிறந்த தினம்." என்று கூறப்பட்டிருந்தது.

இவ்வாறு பல தகவல்கள் குறிப்புகளில் காணப்பட்டமை, சுசீலாவுக்குத் தன் நாடகத்தைத் திருப்திகரமாக ஆடுவதற்கு உதவியதென்றாலும் அவற்றில் சில அவளது பெண்மையுணர்ச்சியைக் கிளறிப் பொறாமையையும் கோபத்தையும் அவளிடம் தோற்றுவிக்கவும் செய்தன. நீச்சல் ராணிப் போட்டியைப் பற்றி எழுதும் போது பத்மாவின் தொடைகளைச் சிற்றெறும்புகள் கடித்த விவரத்தையும் தான் அத்தழும்புகளைத் தடவிவிட்டதையும் வேடிக்கையாக எழுதியிருந்தான் ஸ்ரீதர். அதை வாசித்ததும் தினக்குறிப்புப் புத்தகத்தைக் கிழித்தெறிந்துவிடலாமா என்று கொதிப்படைந்தாள் அவள். தன் கண்களை அல்லது காதுகளை உண்மையில் நேசிக்கும் எந்தப் பெண்ணால்தான், அவளை இன்னொரு பெண் தீண்டுவதைப் பொறுக்க முடியும்? உண்மையில் அப்பொழுது பத்மா மட்டும் பக்கத்திலிருந்தால் அவளைக் கைகளால் பிறாண்டி விரட்டிவிட்டிருப்பாள் சுசீலா. அத்தகைய கொந்தளிப்பு அவளையறியாமலே சுசீலாவுக்கு ஏற்பட்டுவிட்டது. சிற்றெறும்புகள் அவளைக் கடித்தது போதாது, பூரானும் சிலந்திப் பூச்சியும் கூட பத்மாவுக்குக் கடித்திருக்க வேண்டுமென்று சிந்தித்தாள் அவள். "போயும் போயும் நல்ல பெண்ணிடம் போய் அவர் இவ்வளவு அன்பைக் காட்டுகிறார். கண் பார்வை குன்றியதும் குருடனுக்கு மனைவியாக மாட்டேன் என்று கூறிய கல் நெஞ்சுக்காரப் பெண்ணுக்கல்லவா அவர் இவ்வளவு அன்பைக் காட்டியிருக்கிறார். வேறு வேலையில்லாமல் தழும்பைத் தடவி விட்டாராம் அவர். கொள்ளிக்கட்டையால் சுட்டிருக்க வேண்டும் அவளை." என்று அர்த்தமில்லாமல் தன்னுள் தான் சீறிய அவள் திடீரெனக் கன்ணீர் கொட்ட ஆரம்பித்துவிட்டாள்.

சுசீலா ஸ்ரீதரைக் கல்யாணத்துக்கு முன் காதலிக்கவில்லை என்பது உண்மையேயாயினும், வெறும் இரக்க உணர்ச்சி , பெண்மையிடத்துலுள்ள தாய்மையிற் பிறந்த அனுதாப உணர்ச்சி மட்டுமே அப்பொழுது அவள் உள்ளத்தில் அலை மோதியது என்பது உண்மையேயாயினும், முதலிரவின் நெஞ்சுறவின் பின்னர் அவள் இதயம் முற்றாகத் திறந்து அவனை அங்கே சிறையிட்டு வைத்துவிட்டது. இனி அவனை யாரும் தொடவிடேன். அவன் என் சொத்து, அவன் சொன்னது போல் ஏழேழு ஜென்மத்துக்கும் அதற்கப்பாலும் ஊழிவரையும், ஊழிக்குப் பின்னாலும் கூட அவன் எனக்கே உரியவன். அவனை வேறு எவளாவது தொட வந்தால் உடனே அவளைச் சுட்டுச் சாம்பலாக்கி விட்டே மறு வேலை பார்ப்பேன் என்ற ரீதியில் அவள் எண்ணக்கோவை ஒரு சங்கிலித் தொடர் போல் வளர்ந்துவிட்டது. "ஸ்ரீதர், கண்தான் மயங்கியிருக்கிறதே தவிர, இனிமை கலந்த அன்புப் பேச்சிலேயும் இதர கவர்ச்சிப் பண்புகளிலேயும் இப்படிப்பட்ட ஆண் மகன் எங்கே இருக்கிறான்? இப்படிப்பட்டவன் என் கணவனாகக் கிடைக்க எங்கள் புண்ணியாக செய்தேன்?" என்பது போன்ற நினைவுகள் அவள் மனதை மயக்க வைத்தன.

இருந்தாலும் அவள் உள்ளத்தில் பெரும் ஏக்கம் ஒன்றும் ஏற்படவே செய்தது. "நான் தான் அவரைக் காதலிக்கிறேன். அவர் என்னைக் காதலிக்கவில்லை" என்பதே அது. "அவர் என்னை அதாவது சுசீலாவைக் கல்யாணம் செய்யவில்லை. பத்மாவைத்தான் திருமணம் செய்திருக்கிறார். என்ன அநியாயம்? அவரை வெறுத்தொதுக்கிய பெண்ணுக்காக அவருள்ளம் உருகுகிறது. எனக்காக அல்ல." என்று வெதும்பினாள் அவள். ஒவ்வொரு தடவையும் ஸ்ரீதர் சுசீலாவை நோக்கிப் பத்மா என்றழைத்தபோது அவள் இதயத்தை யாரோ சம்மட்டி கொண்டு சுக்கு நூறாகப் பிளப்பது போலிருந்தது அவளுக்கு. போதாதற்கு மோகனாவின் "பத்மா, பத்மா" என்ற கூச்சல் வேறு வீடு முழுவதையும் நிறைந்துக் கொண்டிருந்தது. அதைக் கேட்கும் போதெல்லாம் சுசீலாவுக்கு அதன் கழுத்தை நெரித்துக் கொன்று விடலாமா என்று கூடத் தோன்றும். ஆனால் இயற்கையிலேயே உயிரினங்கள் மீது அன்பும் இரக்கமும் கொண்ட அவள் அடுத்த விநாடியே மனதை மாற்றிக் கொண்டுவிடுவாள். "இந்த உலகத்தில் ஒருவனுக்குத் தன் பெயரை விட இனிமையான சொல் வேறில்லை." என்பார்கள். ஆனால் சுசீலாவைப் பொறுத்த வரையில் அவள் தன் பெயரை முற்றாக இழந்துவிட்டாள். ஒருவன் பெயர் இன்னொருவருக்கு வெறும் சொல்லாக மட்டும், ஓர் இடுகுறியாக மட்டும் காட்சியளிக்கலாம் ஆனால் அவனுக்கோ அது அவனது உள்ளுணர்வில் கலந்த உயிர்ப்பொருளுக்குச் சமானமாயிருக்கிறது. அந்த உயிரை இழந்து, ஒரு வேதனை நிறைந்த வெறுமை நிலையிலிருந்தாள் சுசீலா.

ஸ்ரீதரின் பொருள்களைத் துருவி ஆராய்ந்து சுசீலாவின் கைக்கு அகப்பட்ட இன்னொரு பொருள் பத்மாவின் நீச்சலுடைப் படம். "இது தான் பத்மாவாக இருக்க வேண்டும். நீச்சலுடையில் அவளைக் கடற்கரையில் படமெழுதியதாகத் தினக்குறிப்பிலே எழுதியிருக்கிறாரல்லவா? அப்படம் இதுவாகத் தானிருக்க வேண்டும்." என்று எண்ணிய அவள் அப்படத்தை ஒரு நிமிட நேரம் உற்றுப் பார்த்துவிட்டுத் தன்னை அறியாமலே அதன்மீது காறித் துப்பிவிட்டாள். "இந்தக் கொடியவளை நினைத்தல்லவா அவர் இன்னும் உருகிக் கொண்டிருக்கிறார்? அவள் பெயரைச் சொல்லியல்லவா என்னை அழைக்கிறார்?" என்ற நினைவு அவள் உள்ளத்தில் ஏற்படுத்திய எரிச்சலுக்கு அளவே இல்லை. "இந்தப் படத்தை என் கண்கள் இனி காணக் கூடாது" என்று எண்ணிய அவள் அப்படத்தை அமராவதி மாளிகையின் அதிக புழக்கமில்லாத ஓர் அறைக்குள் கொண்டு போய்ப் போட்டாள். "சனியன், நீ இனி இங்கேயே கிட" என்று படத்துடன் பேசினாள் அவள்.

இவ்வாறு அவள் இடையிடையே உணர்ச்சிவசப்பட்டாளாயினும் நாடகத்தை ஒழுங்காக நடிப்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாகவே இருந்தாள்.

நாடக நடிகை இவ்விதம் தன்னைப் பலவாற்றாலும் சிறப்பாகத் தயார் செய்து கொண்டிருக்க, நாடக அரங்க நிர்வாகத்தைத் திறம்பட நடத்தும் வேலையில் சிவநேசர் தன் புலனைச் செலுத்தி வந்தார்.

ஸ்ரீதர் - சுசீலா திருமணம் முடிந்ததும் சிவநேசருக்கு ஏற்பட்ட முதலாவது அச்சம் வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் எல்லோருக்கும் நன்னித்தம்பியின் மகள் சுசீலாவை ஏற்கனவே நன்கு தெரியுமாதலால், அவர்கள் மூலம் சில சமயம் ஸ்ரீதர், தங்கள் ஆள் மாறாட்ட நாடகத்தைத் தெரிந்து கொள்ளக் கூடும் என்பதாகும். இதனைத் தவிர்க்க, இரு வழிகளே இருந்தன. ஒன்று விஷயத்தை வெளிப்படையாகவே வேலைக்காரர்களிடம் பேசி அவர்களுக்கு அதைப் பற்றி மூச்சுவிடக் கூடாது என்று வாய்ப்பூட்டுப் போடுவது. மற்றது, வேலைக்காரர்களை வேலையிலிருந்து நீக்கிப் புதிய வேலைக்காரர்களை நியமித்துவிடுவது. இதில் இரண்டாவது வழியையே பின்பற்றுவது என்று சிவநேசர் முடிவு செய்தார்.

‘அமராவதி’ வளவில் வாசக் காவலாளி தொடக்கம், வீட்டு வேலைக்காரி தெய்வானை ஈறாக மொத்தம் பதினாறு வேலைக்காரர்கள் இருந்தார்கள். ஸ்ரீதரின் திருமணம் முடிந்த அடுத்த நாளே அவர்கள் எல்லோரையும் வெவ்வேறு இடங்களுக்கு வேலை மாற்றம் செய்தார் சிவநேசர். ஒரு சிலர் கிளி நொச்சியிலிருந்த அவரது விவசாயப் பண்ணைக்கும், மற்றும் சிலர் களுத்துறையிலிருந்த ரப்பர்த் தோட்டத்துக்கும் அனுப்பப்பட்டனர். சிலர் சிவாபத்திலும் நீர்கொழும்பிலுமிருந்த அவரது தென்னந்தோட்டங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். தெய்வானை சுந்தரேஸ்வரர் கோவில் கணக்கப்பிள்ளை வீட்டில் தங்கியிருந்து கோவில் வளவைச் சுத்தம் செய்யும் வேலைக்கு அனுப்பப்பட்டாள்.

இவ்வாறு இவர்கள் அனுப்பப்பட்டதால் ஏற்பட்ட காலி ஸ்தானங்களை நிரப்ப, களுத்துறை ரப்பர்த் தோட்டத்திலிருந்தும், சிங்களத் தொழிலாளர் பலர் அமராவதிக்குக் கொண்டு வரப்பட்டனர். தெய்வானைக்குப் பதிலாக குசுமா என்னும் சிங்களப் பெண் வீட்டு வேலைக்காரியாக நியமிக்கப்பட்டாள். இந்த ஏற்பாடுகள் யாவும் சேர்ந்து ஆள் மாறாட்ட நாடகம் திறம்பட நடப்பதை உறுதி செய்தன. போதாதற்கு மாளிகை வாசலின் காவலும் முன்னிலும் அதிகமாகப் பலப்படுத்தப்பட்டது. மிகவும் அவசியமானவர்கள் மட்டுமே வீட்டுக்கு வர அனுமதிக்கப்பட்டார்கள். சின்னைய பாரதியாரைப் பொறுத்தவரையில் அவர் மட்டும் மாளிகைக்கு வர அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மனைவி, பிள்ளைகள் அடிக்கடி அமராவதிக்கு வருவது நிறுத்தப்பட்டது.

பாவம், ஸ்ரீதரோ தன்னை ஏமாற்ற நடந்த இந்த முயற்சிகள் எதையும் அறியமாட்டான். அவனைப் பொறுத்த வரையில் கபோதியாய் இருந்தாலும் தன்னை போன்ற அதிர்ஷ்டசாலி இவ்வுலகில் வேறு யாரும் இல்லை என்றே அவன் நம்பினான். என்றும் எப்பொழுதும் ஒரு கனவுலகிலே, எல்லையற்ற இன்பத்தின் மடியிலே அவன் புரண்டு கொண்டிருந்தான். இரவு பகல் என்று பாராது தன் அன்புப் ‘பத்மா’வைத் தன் அருகில் உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருப்பதே அவன் பொழுது போக்காயிற்று. பத்மா இருக்கும் போது எனக்கு வேறென்ன குறை என்று அடிக்கடி சொல்லிக் கொள்வான் அவன்.

சுசீலாவைப் பொறுத்த வரையில் தனது பாகத்தை மிகவும் கவனமாக நடித்து வந்தாள். அவனுக்குத் தன் கையால் முட்டைக் கோப்பி தயாரித்துக் கொடுப்பாள். பின்னர் ஸ்நான அறைக்கு அவனை அழைத்துச் சென்று அவனைக் குளிப்பாட்டுவாள். முன்பெல்லாம், சிவநேசருக்கு முகச் சவரம் செய்பவரும் சவரத் தொழிலாளி ஒருவன் ஸ்ரீதருக்கும் சவரம் செய்துவிடுவது வழக்கம். சுசீலா வந்த பிறகு இதை அவள் நிறுத்தி விட்டாள். ‘சேப்டி ரேசரா’ல் தானே தன் கையால் ஸ்ரீதருக்குச் சவரம் செய்துவிடப் பழகிக் கொண்டாள் அவள். இவ்விதம் அவள் சவரம் செய்ய ஆரம்பித்தது இருவருக்கும் நல்ல வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருந்தது. இவை முடிந்ததும் அவனுக்கு நல்ல ஆடைகளை உடுக்கத் தருவாள். பக்கத்திலிருந்து அவனுக்குப் பிரியமான உணவுகளை உண்ணக் கொடுப்பாள். பின் காலைப் பத்திரிகைகளை வாசித்துக் காட்டுவாள். அவன் விரும்பினால் ‘ரேடியோ’ வைப்பாள். ரேடியோகிராமில் இசைத் தட்டுகளைப் போடுவாள். வளவில் அவனை அங்குமிங்கும் அழைத்துச் சென்று பொழுது போக உதவுவாள். புத்தகங்களை வாசித்துக் காட்டுவாள். வேடிக்கைக் கதைகள் சொல்லுவாள். சில சமயங்களில் பாட்டுகள் பாடி அவனை மகிழ்விப்பாள். இவற்றை எல்லாம் அவள் உற்சாகமாகவே செய்த போதிலும், சுசீலா என்பதற்குப் பதிலாக ஸ்ரீதர் அவளை பத்மா என்றழைத்தபோது மட்டும் அவள் உள்ளம் பெரிதும் வேதனைப்பட்டது. ஆனால் அந்த வேதனையை எவ்விதமும் வெளிக் காட்டாமல் ஸ்ரீதருக்கு மகிழ்ச்சி தருவதிலேயே அக்கறையாக இருந்தாள் அவள்.

ஸ்ரீதர் சுசீலாவைப் பத்மாவென்று பொதுவாக அழைத்த போதிலும் இடையிடையே டார்லிங், இராசாத்தி, என் கண்ணே, கிளியே என்றெல்லாம் அழைப்பான். இவ்விதம் அவள் அழைக்கும் போது சுசீலாவின் மனம் மகிழும். ஒரு நாள் அவள் ஸ்ரீதரிடம் " நீங்கள் என்னைப் பத்மா என்றழைக்க வேண்டாம். வேறு பெயர் சொல்லி அழையுங்கள்." என்றாள்.

"ஏன்? பத்மா என்ற பெயர் அழகாயில்லையா? எவ்வளவு அழகான பெயர் அது?" என்றாள் ஸ்ரீதர்.

"ஆனால் அதைவிட அழகான பெயர்கள் எத்தனையோ இருக்கின்றனவே உலகில்" என்றாள் சுசீலா.

"ஒன்றைச் சொல்லு" என்றான் ஸ்ரீதர்.

சுசீலா சிறிது நேரம் பேசாதிருந்துவிட்டு, " நான் உங்களை இராசா என்றழைக்கிறேன். நீங்கள் என்னை இராசாத்தி என்று அழையுங்கள்" என்றாள். "சரி இராசாத்தி, அப்படியே அழைக்கிறேன்." என்றான் ஸ்ரீதர் சிரித்துக் கொண்டு. தன் அன்புக் கணவனின் இதயத்துக்குத் தன்னோடு போட்டியிட்ட சக்களத்தியான பத்மா என்ற சொல் தன் காதில் அடிக்கடி விழாது போனால் அது போதும் என்பதே அவள் கருத்து. ஆனாலும் ஸ்ரீதர் இரண்டு முறை அவளை இராசாத்தி என்று அழைத்தால் மூன்றாம் முறை அவளைப் பத்மா என்றழைக்கவே செய்தான்.

ஆள் மாறாட்ட நாடகத்தை எவ்வித பிடியுமின்றி முற்றும் வெற்றிகரமான ஒரு நாடகமாக நடத்திவிட வேண்டுமென்பதே சிவநேசரின் திட்டம். ஆகவே அதற்குத் தடையாக இருந்த சகல விஷயங்களையும் வெட்டிச் சாய்த்து வந்தார் அவர்.

ஸ்ரீதர் சில சமயங்களில் பரமானந்தரின் சுகத்தைப் பற்றி விசாரிப்பாள். "பத்மா, அவரை அமராவதியில் வந்திருக்கும்படி சொல்வதுதானே." என்று அவன் இடையிடையே சுசீலாவிடம் கூறுவது வழக்கம். அவள் இது பற்றிப் பாக்கியத்திடம் சொன்னாள். பாக்கியம் அதைச் சிவநேசரிடம் எடுத்துக் கூறவே, சிவநேசர் இப்பிரச்சினையை ஒரே திரியாக முடித்துக் கட்டிவிட ஒரு திட்டம் தீட்டிவிட்டார்.

ஒரு நாள் அவர் ஸ்ரீதரிடம் "கொழும்பிலிருந்து டெலிபோன் செய்தி வந்திருக்கிறது. பரமானந்தர் திடீரென மாரடைப்பால் செத்துவிட்டாராம். பத்மாவும் நாங்களும் போய் வருகிறோம். நன்னித்தம்பியும் மனைவியும் இங்கு உன் தேவைகளைக் கவனித்துக் கொள்வார்கள்" என்று கூறிப் ‘பத்மா’வையும் பாக்கியத்தையும் அழைத்துக் கொண்டு கொழும்பு ‘கிஷ்கிந்தா’வுக்குப் புறப்பட்டுவிட்டார். இரண்டு நாட் கழித்து அவர் ‘அமராவதி’ மீண்ட போது பரமானந்தர் பிரச்சினை மீண்டும் தலை எடுக்காதபடி முற்றாகத் தீர்ந்துவிட்டது.

கொழும்பிலிருந்து மீண்ட சுசீலாவிடம் ஸ்ரீதர், "பத்மா, அப்பா இறந்தது உனக்குப் பெரிய கவலையாயிருக்குமே, என் செய்வது. நாடகக் கலையில் அவர் போல் ஆர்வம் கொண்ட வேறு கிழவர் எவரையும் நான் பார்த்ததில்லை." என்றான்.

சுசீலா உண்மையில் அப்பாவை இழந்தவள் போலவே நடிக்க வேண்டியதாயிற்று. கண்ணுக்கு முன்பே தந்தை நன்னித்தம்பியர் சுறுசுறுப்போடு நடமாடிக் கொண்டிருக்க, தந்தையை இழந்தவள் போல நடிப்பது அவளுக்கு இலேசாக இருக்கவில்லை. "அப்பா இறந்துவிட்டார்" என்று சொல்லும் ஒவ்வொரு தடவையும் அப்பா "நீண்ட நாள் வாழ வேண்டும்" என்று தனக்குள் தானே தெய்வங்களை வேண்டிக் கொண்டாள் அவள்.

பாக்கியத்தைப் பொறுத்தவரையில் தன் மகனைப் பல்வேறு பொய்களால் ஏமாற்ற வேண்டியிருக்கிறது என்பது அவளுக்கு அதிக துக்கத்தைத் தரவே செய்ததாயினும் இது சம்பந்தமாக வள்ளுவரின் குறளொன்று அவள் துக்கத்தை ஓரளவு குறைத்தது. வள்ளுவர் "பொய்மையும் வாய்மை உடைத்தே புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்" (குற்றமற்ற நன்மையைத் தருமாயின் பொய்யும் சத்தியத் தன்மை கொண்டதேயாகும்) என்று கூறியிருப்பதை அவள் இடையிடையே நினைவுபடுத்திக் கொண்டாள். சிவநேசரும் தானும் சுசீலாவுமாகச் சேர்ந்து அவ்வீட்டில் நடத்திக் கொண்டிருந்த நாடகம் பொய்மை நிறைந்ததேயாயினும், அபாக்கியவானான ஓர் இளைஞனுக்கு அதனால் இன்ப வாழ்வு சித்தித்தது சிறப்பல்லவா என்று அவள் தன்னைத் தானே தேற்றிக் கொள்வது வழக்கம்.

இந்த ஆள் மாறாட்ட நாடகத்தால் சுசீலாவுக்கு ஏற்பட்ட சோதனைகளோ பல. உதாரணமாக ஸ்ரீதரும் சுசீலாவும் மேல் மாடியில் ஊஞ்சற் பலகையில் ஒரு நாள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது, தந்தை நன்னித்தம்பியரும் தாய் செல்லம்மாவும் அங்கு வந்தனர். ஆளரவம் கேட்ட ஸ்ரீதர் "இராசாத்தி, அது யார்?" என்று கேட்டான்.

சுசீலா திடுக்கிட்டு விட்டாள். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. வாய் தவறி "அப்பாவும் அம்மாவும்" என்று சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? "அப்பாவா? அப்பா பரமானந்தர் தான் செத்துவிட்டாரே? அம்மாதான் உனக்கில்லையே?" என்று ஸ்ரீதர் கூறியிருப்பானல்லவா? அதன் பயனாக நாடகமே முற்றாக வெளிப்பட்டிருக்கவும் கூடும். ஆகவே எப்படியோ தன் வாயை அடக்கிக் கொண்டு, "நன்னித்தம்பியரும் பெண்சாதியும்" என்று கூறினாள் அவள். பெற்ற தாயையும் தந்தையையும் கூடத் தாய் தந்தையர் என்று கூற முடியாத நிலை. சொந்த அப்பாவையும் அம்மாவையும் கூட பிறத்தியாரைப் போல் பேர் சொல்லி அழைக்க வேண்டியிருக்கிறதே என்றெண்ணியதும் அவள் நெஞ்சம் பட்ட வேதனையைக் கூற முடியாது.

தன் கணவனின் சுகத்துக்காகத் தன்னைத் தானே இவ்வாறு அழித்துக் கொண்டு வாழ்ந்தாள் சுசீலா. அவள் தன் பெயரை மட்டுமா இழந்தாள். பெற்றோரையுமல்லவா இழந்து விட்டாள்.

ஸ்ரீதருக்குத் தனது திருமணத்தை விமரிசையாகச் செய்ய முடியாது போய் விட்டதே என்பதும், ‘கிஷ்கிந்தா’வில் கனவு கண்ட மாதிரித் தனது நண்பன் சுரேஷ் தனது கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியாது போய் விட்டதே என்பதும் பெரும் கவலையைத் தந்து வந்த விஷயங்களாகும். இருந்தாலும் என்ன செய்வது, சற்றும் நினையாத மாதிரிச் சந்தர்ப்ப சூழல்கள் மாறிப் போய் விட்டதால் ஏற்பட்ட விளைவுகள் இவையென்று அவன் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான்.

இருந்தாலும் திடீரெனச் சுரேஷின் நினைவு வந்ததும் ஒரு வேலைக்காரனின் துணையோடு யாருமறியாமல் சுரேசுக்கு ஒரு கடிதத்தை எழுதிப் போட்டுவிட்டான் ஸ்ரீதர். பெரிய காகிதங்களில் கொட்டை எழுத்துகளில் எழுதிய அக்கடிதத்தை அவன் தன் ‘பத்மா’வுக்குக் காட்ட விரும்பவில்லை. கடிதத்தில் பத்மாவை வானளாவப் புகழ்ந்திருந்ததால் நிச்சயம் ‘பத்மா’ அதை வெட்கத்தின் காரணமாகத் தபாலில் சேர்க்க மறுத்திருப்பாள் என்று அவன் அஞ்சியதே அதற்குக் காரணம்.

இக்கடிதத்தில் ஸ்ரீதர் தானே இவ்வுலகின் பெரிய அதிர்ஷ்டசாலி என்று குறிப்பிட்டிருந்தான். "இல்லா விட்டால் நான் குருடனாகிய பிறகும் பத்மா என்னை மணமுடிக்கச் சம்மதித்திருப்பாளா?" என்று அவன் கேட்டிருந்தான். ‘பத்மா’ போன்ற ஒரு பெண் இப்படி ஒரு குருடனைத் திருமணம் செய்த வரலாற்றை நான் கதைகளில் கூடப் படித்ததில்லை. ஆகவே அவளை ஓர் உத்தமி என்றும், தெய்வப் பெண்ணென்றும் நான் கொண்டாடுவதில் தப்பில்லையல்லவா? சுரேஷ், நீ ‘அமராவதி’க்கு வந்தால் பத்மாவின் பெருமையை நேரே காண்பாய். கண்ணற்ற எனக்குக் கண்ணக விளங்குகிறாள் அவள்." என்று அவன் எழுதியிருந்தான்.

இதற்குச் சுரேஷ் விமானத் தபால் மூலம் அனுப்பிய பதில் பத்து நாட்களில் வந்து சேர்ந்துவிட்டது. அதைச் சுசீலாவிடம் கொடுத்து வாசிக்கும் படி சொன்னான் ஸ்ரீதர். சுசீலா வாசித்தான்:

என் அன்பு நண்பா ஸ்ரீதர்,

உண்மைதான். நீ அதிர்ஷ்டசாலியே. உன் கண்கள் பார்வை இழந்ததை அறிந்தும் உன்னைத் திருமணம் செய்த பத்மாவை எவ்வளவும் பாராட்டலாம். அவளை நீ உன் வாழ்வின் தெய்வமென்கிறாய். நான் அதை மறுக்கமாட்டேன். நீ சகல சம்பத்தும் பெற்று வாழ வேண்டுமென்பதே என் நினைவு. நான் இலங்கை வந்ததும் உன்னைக் காண அமராவதிக்கு ஓடி வருவேன். பிற பின்.

இப்படிக்கு, சுரேஷ்.

இக்கடிதத்தை வாசித்துக் காட்டிய சுசீலாவுக்குத் தாங்கொணாத கொந்தளிப்பு உள்ளத்தில் ஏற்பட்டது. பத்மா, பத்மா, பத்மா - தன்னை உயிரிலும் மேலாக நேசித்த காதலனை, கண் பார்வை குன்றியதென்பதற்காக ஒரேயடியாகக் கைவிட்டுவிட்ட கேடு கெட்ட பெண் தெய்வப் பெண்ணாகப் போற்றப்படும் இவ்விசித்திரத்தை என்னென்பது? இதை யாருக்குச் சொல்வது? கொடுமை செய்த பத்மா போற்றப்படுகிறாள். ஆனால் சுசீலாவோ? அவள் பெயரே உலகிலிருந்து மறைந்து விட்டது. ஆம், ஸ்ரீதருடைய உள்ளக் கோவிலின் மூலஸ்தானத்தில் பத்மா வீற்றிருக்க, சுசீலாவுக்கோ அக்கோவிலின் பிரகாரங்களில் கூட இடமில்லாது போய்விட்டது.

பல்லைக் கடித்துக் கொண்டு நாத் தளு தளுக்கக் கடிதத்தை வாசித்த சுசீலாவிடம் ஸ்ரீதர் "பார்த்தாயா சுரேஷின் கடிதத்தை. அவனும் என்னைப் போலவே உன்னை ஒரு தெய்வ மகளாகக் கொண்டாடுகிறான்" என்றான். சுசீலா என்ன சொல்லுவாள்?

ஒரு நாள் சுசீலா ஸ்ரீதரிடம் ஏதோ ஒரு திடீர் நினைப்பிலே "உங்களுக்கு நன்னித்தம்பியர் மகள் சுசீலாவைத் தெரியுமா?" என்று கேட்டான்.

"ஆம் தெரியும்" என்று தலையை ஆட்டிய ஸ்ரீதர் "ஏன் நீ அவளைச் சந்தித்தாயா?" என்று ஒரு கேள்வியையும் கேட்டு வைத்தான்.

பேதையான சுசீலா "ஆம், நேற்றுச் சந்தித்தேன். அவளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்." என்று கேட்டாள். ஸ்ரீதர் சுசீலாவைப் பாராட்டி ஒரு வார்த்தை சொல்ல மாட்டானா என்ற உள்ளத்தின் ஏக்கத்திலேயே அவள் அக்கேள்வியைக் கேட்டாள்.

ஆனால் ஸ்ரீதரோ "சுசீலாவைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது? நான் என் பத்மாவைத் தவிர வேறு பெண்களைப் பற்றி எப்பொழுதுமே எண்ணுவதில்லை இராசாத்தி" என்றான்.

பத்மா! அவள் என்ன சொக்குப் பொடி போட்டாளோ ஸ்ரீதரின் உள்ளத்தை இவ்வளவு தூரம் கவர்ந்துவிடுவதற்கு.

சுசீலாவின் வாழ்க்கையில் இடையிடையே இப்படிப்பட்ட எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்த போதிலும், அவற்றைத் தனது திட சங்கல்பத்துக்கு விடப்பட்ட சவாலாகக் கருதி எதிர்த்துப் போராடி வெற்றி கண்டு கொண்டிருந்தாள் அவள். "நான் ஸ்ரீதரைத் திருமணம் செய்வதற்குத் திடீர் முடிவு செய்தது எனது சொந்த இன்பத்தைக் கருதியல்லவே. பட்டுப் போன அவரது வாழ்க்கையைத் தளிர்க்க வைப்பதற்குத்தானே. அதில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். அவ்வெற்றியை மேலும் பேணுவதற்கு நான் செய்ய வேண்டிய தியாகங்கள் பல. அவற்றைப் பெரிதுபடுத்தி ஒருபோதும் நான் என் சிந்தையைக் கலங்க விட மாட்டேன்." என்று தீர்மானித்த அவள் நாளடைவில் எதையும் தாங்கும் நெஞ்சுரத்தைப் பெற்றுவிட்டாள்.

சில சமயங்களில் விசித்திரமான எண்ணங்கள் சிலவும் அவள் உள்ளத்தில் வரும். "பத்மாவோடு பழகுவதற்கு முன் அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கேற்பட்டிருந்தால் நிச்சயம் அவர் இன்று பத்மாவை நேசிப்பது போல் என்னை நேசித்திருப்பார். என் பேச்சு அவருக்குப் பிடித்திருக்கிறது. என் பாட்டு அவருக்குப் பிடித்திருக்கிறது. நான் தினசரி அவருக்குச் செய்யும்ப் பணிவிடைகள் அவருக்குப் பிடித்திருக்கின்றன. என் கைகளின் திரட்சி, தோளின் வளைவு, ஏன் பொதுவாக என் அங்க அமைப்பு முழுவதும் அவருக்குப் பிடித்திருக்கிறது. அடிக்கடி அவர் அவற்றை வர்ணிக்கத் தானே செய்கிறார். ஏன் அன்றொரு நாள் "பத்மா, முன்னர் நீ இவ்வளவு மொளு மொளு என்றிருக்க மாட்டயே. திருமணத்திற்குப் பின் கொழுத்து விட்டாய். நிச்சயம் அது உன் அழகைக் கூட்டியிருக்கும். ஆனால் என்னால்தான் உன்னழகைப் பார்க்க முடியாதே" என்றாரல்லவா? இது எதைக் காட்டுகிறது? தன் நினைவிலுள்ள பத்மாவின் மனச் சித்திரத்தையும் என்னையும் ஒப்பிட்டு நானே பத்மாவிலும் பார்க்க அழகி என்று அவர் கருதுவதைத் தானே? அப்படியானால் இருவரையும் ஒரு சேரக் கண்டிருந்தால் நிச்சயம் என்னைத்தான் அவர் விரும்பியிருப்பார்?" - இத்தகைய எண்ணங்கள் சுசீலாவின் இதயத்தில் ஒருவித திருப்தியைக் கொண்டு வரும்; உள்ளத்தின் சோகம் விஸ்வரூபம் எடுத்து வாழ்க்கையைக் கெடுக்காது தடுக்கும்.

ஸ்ரீதர் - சுசீலா திருமணம் நடந்து பத்து மாதங்கள் கழித்து ஒரு நாள் ‘அமராவதி’ வளவில் பெரிய கொண்டாட்டம். குலத்தை விளங்க வைக்கச் சின்ன ஸ்ரீதரன் ஒருவன் அங்கு வந்துவிட்டதே அதற்குக் காரணம். வீடு ஓரே ஒளிமயமாயிற்று. எல்லோருக்கும் கற்கண்டு வழங்கப்பட்டது. பிள்ளை பிறப்பதற்கு முன் ஸ்ரீதரை ஓர் அச்சம் மிகுந்திருந்தது. ஆகவே தாய் பாக்கியம் சுசீலாவின் அறையிலிருந்து ஓடி வந்து அவனை உச்சி மோந்து "அடே உனக்கு ஆண் பிள்ளை பிறந்திருக்கிறான்" என்ற போது "அம்மா, அவன் கண்கள் எப்படியிருக்கின்றன? நன்றாயிருக்கின்றன அல்லவா?" என்று கேட்டான் ஸ்ரீதர்.

"இது என்னடா கேள்வி. அவன் கண்கள் மிகவும் நன்றாயிருக்கின்றன. நீ பிறந்த போது எவ்வளவு அழகாயிருந்தாயோ அதை விட அழகாயிருக்கிறான் அவன்" என்றாள் தாய்.

"ஆனால் அதைத்தான் என்னால் பார்க்க முடியாதே" என்றான் ஸ்ரீதர்.

அதைக் கேட்ட பாக்கியத்தின் கண்கள் கலங்கின.

ஸ்ரீதரின் குருட்டுக் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. அது ஆனந்தக் கண்ணீரா? அவன் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கியது உண்மையேயாயினும், தன் அழகு மகனைத் தான் பார்க்க முடியாதே என்ற ஏக்கமும் அவன் இதயத்தைப் பிய்க்கவே செய்தது.


[தொடரும்]

No comments: