Wednesday, October 22, 2008

தொடர்நாவல்: மனக்கண்

- அ.ந.கந்தசாமி -

கடைசி அத்தியாயமும், கதாசிரியரின் முடிவுரையும்!

32-ம் அத்தியாயம்: புயலுக்குப் பின் அமைதி!

சிவநேசரிடமிருந்து கடிதம் எதுவும் வராதது பற்றி ‘அமராவதி’யில் அடிக்கடி பேச்சடிப்பட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் தாய் பாக்கியத்துடன் செங்கழுநீர்த் தொட்டியின் கரையிலே உட்கார்ந்து சிவநேசரின் புள்ளி மானுக்கு உண்பதற்குப் புல் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீதர், “அம்மா, எனக்குக் கண் கிடைத்து எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்ட போதிலும் மனதிலே பெரிய குறை ஒன்றிருக்கவே செய்கிறது. எனது கண்ணின் சந்திர சிகிச்சைக்கு அப்பா பக்கத்திலே இல்லாததொன்று. என் கண்களால் அப்பா இப்பொழுது எப்படி இருக்கிறார் என்று இது வரை பார்க்க முடியவில்லையே என்பது மற்றொன்று” என்றான்.

பாக்கியம் அவன் வார்த்தைகளை ஆமோதித்தபடியே “எனக்கும் பெரும் கவலையாய்த் தானிருக்கிறது. உனக்குச் சந்திர சிகிச்சை செய்து இப்பொழுது என் பார்வை திரும்பிவிட்டது என்று நான் சென்ற வாரம் சென்னைக்கு விமானக் கடிதமொன்று அனுப்பினேன். நன்னித்தம்பியும் அது பற்றி ஒரு விவரமான கடிதம் எழுதினார். ஆனால் எதற்குமே அவர் பதிலெழுதவில்லை. இது எனக்குப் பயத்தை உண்டாக்குகிறது. ஏனென்றால் அவரால் எப்பொழுதுமே என்னையும் உன்னையும் பிரிந்திருக்க முடியாது. அவர் கடிதம் எழுதாதற்கு என்ன காரணமோ தெரியவில்லை” என்று பெருமூச்சுவிட்டாள்.

சிவநேசர் கடிதம் எழுதாது ஸ்ரீதருக்கும் பாக்கியத்துக்கும் மட்டுமல்ல சுசீலா, நன்னித்தம்பியர், சுசீலாவின் தாய் செல்லம்மா எல்லோருக்குமே கவலையாகத்தானிருந்தது. சின்னைய பாரதி கூடப் பாக்கியத்தைக் காணும் போதெல்லாம், “ஐயா எப்பொழுது வருகிறார்?” என்று கேட்கத் தவறுவதில்லை. ஆனால் இந்தக் கவலையுள்ளும் ஒரு பெரிய இன்பமும் ‘அமராவதி’யில் நிலவியது. அது ஸ்ரீதர் கண் பார்வை பெற்றதாகும். நேற்று வரை கல்லுப் பிள்ளையார் போல அங்குமிங்கும் ஆசனங்களில் வீற்றிருப்பதும், தட்டுத் தடுமாறி நடப்பதுமாகப் பரிதாபக் கோலத்தில் காட்சியளித்த ஸ்ரீதர் இன்று முரளியோடு தோட்டத்தில் விளையாடுவதும் அவன் ஓட அவனைத் துரத்திப் பிடிப்பதும் அவனோடு பந்தாடுவதுமாகப் பலவித புதுக் கோலங்களில் காணப்பட்டான். இவ்வித விளையாட்டு நேரங்களில் முரளி தனது முரளி தனது கீச்சுக் குரலில் சப்தம் செய்து மழலைச் சிரிப்பொலி உதிர்ப்பது அந்த மளிகைக்கே ஒரு பொலிவைக் கொடுத்தது.

ஸ்ரீதர் இப்பொழுது தன் எதிர்காலத்தைப் பற்றி மனக் கோட்டைகள் கட்ட ஆரம்பித்திருந்தான். தன் மேற்படிப்பை விரைவில் முடித்துக் கொண்டு சித்திரம், சிற்பம், நாடகம் என்று தனது பொழுதுபோக்குக் கலைகளில் மும்முரமாக ஈடுபட வேண்டுமென்பதும், அத்துறைகளில் பெரிய வெற்றிகளை நிலை நாட்ட வேண்டுமென்பதும் அவனது பேராசையாக விளங்கின. ஆனால் அவற்றிற்கு அவன் முதலில் கொழும்பு செல்ல வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் தந்தை சிவநேசரை ‘அமராவதி’யில் சந்தித்துச் சில நாட்களேனும் அவரோடு காலம் கழித்து பின்னர் தான் வீட்டை விட்டுப் புறப்பட வேண்டுமென்பது அவனது திட்டம். ஆனால் அவர் தான் இப்படி எங்கோ போய் ஒளிந்து கொண்டு வர மாட்டேன் என்கிறாரே என்று எரிச்சலுற்றான் அவன். பொதுவாக ஒரு காலமுமே வீட்டையும் குடும்பத்தையும் வீட்டு நீண்ட பயணம் போக விரும்பாத அவர் இந்த நேரத்தில் இப்படிப் போயிருக்கலாமா?” என்று அவன் குறைப்பட்டான்.

சில சமயங்களில் ஸ்ரீதர், பாக்கியம், சுசீலா எல்லோருமே சுரேஷிடம் சிவநேசரைப் பற்றிப் பேசுவார்கள். அந்த நேரங்களில் அவன் நிலைமை மிக எக்கச்சக்கமாயிருக்கும். அவர்களது வார்த்தைகளுக்குச் சரியான பதில் கூற முடியாது திண்டாடுவான். இவ்விஷயத்தில் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத நிலையில் அவன் இருந்தான். இதன் காரணமாகத் தனக்கும் கையிலே அதிக வேலைகள் இருப்பதாகக் கூறி ‘அமராவதி’க்கு வருவதையே அவன் குறைத்துக் கொண்டான். அவன் இவ்வாறு நடந்து கொண்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. சிவநேசரைப் பற்றி அவர்கள் பேசும் போது அவரது மரணமும் அவருக்குத் தான் கொள்ளியிட்ட சம்பவமும் அவனுக்கு ஞாபகம் வரும். அந்த ஞாபகம் அவனது நெஞ்சையும் கண்ணையும் ஒரே சமயத்தில் கலங்க வைக்கும். நெஞ்சின் கலக்கத்தை மறைக்கலாம். கண்ணின் கலக்கத்தை எப்படி மறைப்பது? இதற்காக அவன் பல தடவைகளில் பெரும்பாடுபட வேண்டியதாகிவிட்டது. இவற்றின் காரணமாக, ஸ்ரீதரின் கடிதத்துக்கும், அஸ்திகளை ‘அமராவதி’க்குக் கொடுப்பதற்கும் சிவநேசர் விதித்திருந்த இரண்டு மாத கெடு அணுகும் வரை ஸ்ரீதரையும் பாக்கியத்தையும் அடிக்கடி பார்க்காமலிருப்பதே நன்று என்று முடிவு செய்தான்
அவன்.

ஓரோர் நேரத்தில் வல்வெட்டித்துறையில் வீட்டு விறாந்தையில் தனியே இருக்கும் போது சிவநேசரின் நினைவு அவனுக்கு வரும். சிவநேசர் உயிரோடிருக்கும் போது அவருக்கு முன் அவன் நேரிலே நின்று பேசியது வெகு சில தருணங்களில் மட்டும்தான், அவையும் பேராசிரியர் நோர்த்லி ஸ்ரீதருக்கு வைத்தியம் செய்ய ‘அமராவதி’க்கு வந்திருந்த போதாகும். ஆனால் அப்போது கூட அவர் முகத்தை நன்கு அவதானித்துப் பார்த்து, அவன் பேசியது மிக மிகக் குறைவேயாகும். உண்மையில், சிவநேசருடைய முகத்தில் முழு விலாசத்தையும் அவன் அவதானித்தது ஸ்ரீதரால் வரையப்பட்ட அவரது சித்திரத்திலும் ‘அமராவதி’ மாளிகையில் அங்குமிங்கும் காணப்பட்ட சில புகைப்படங்களிலும் தான். இவை தவிர அவன் சிவநேசர் முகத்தை நன்கு அவதானித்தது சென்னையில் அவர் மருந்தூட்டிப் பிணமாக வைக்கப்பட்டிருந்தபோது தான், பீர் மேடு குமரப்பா நர்சிங் ஹோமில் அவர் அவரது அந்தஸ்துக்கேற்ற விலை உயர்ந்த சவப் பெட்டியில் வெண்பட்டுத் துணியின் மத்தியில் நிம்மதியாகப் பள்ளிக் கொண்டிருந்த காட்சி அவன் மனதில் இடையிடையே தோன்றிய போது அவர் முகமும் அவனோடு சேர்ந்து அவன் மனதில் தோன்றியது. பிணம் பழுதாகி விடாமல் மருந்தூட்டியவர்கள் அவர் முகத்தை மிகவும் சீரான முறையில் தயார் செய்திருந்ததோடு அவரது தலைமயிரையும் மாப்பிள்ளை போல் ஒழுங்காகச் சீவி விட்டிருந்தார்கள். இவற்றின் காரணமாகச் சிவநேசரின் முகத்தில் பிரேதக் களையே காணப்படவில்லை. எவ்விதக் கவலையுமற்ற ஒருவர் தூங்குவது போன்ற் ஒரு பாவனை மட்டுமே அவர் முகத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. சிவநேசர் அத்தோற்றத்திலேயே அவன்
முன்னே வந்து கொண்டிருந்தார்.

சில சமயங்களில் சென்னை மயானக் காட்சியும் அவன் நினைவுத் திரையில் வந்தது. ஆஜானுபாகுவான அவர் நீண்டு நிமிர்ந்து சிதையில் படுத்திருந்த தோற்றத்தையும் அவனால் மறக்க முடியவில்லை. மரணத்தில் கூட என்ன கம்பீரம் என்று பாராட்டும்படி அல்லவா அவர் அன்று விளங்கினார்?

இப்படிச் சிவநேசரின் நினைவு வரும்போதெல்லாம் சுரேஷ அவர் தனக்குக் கடித மூலம் பணிந்த கடமைகள் கடமைகள் யாவற்றையும் தான் திறமையாக நிறைவேற்ற வேண்டுமே என்ற கவலையால் பீடிக்கப்பட்டான். அத்துடன் அவர் குறித்த இரண்டு மாதத் தவணை முடித்து ‘அமராவதி’யின் தலைவரது மரணத்தைத் தான் பிரகடனம் செய்வதைக் கேட்டு, பாக்கியமும் ஸ்ரீதரும் அதிர்ந்து விடக் கூடாதே என்றும் கலங்கலானான் அவன்.

“இந்தப் பயங்கரமான செய்தியைக் கேட்டு அவர்கள் இடிந்து விடாதிருப்பதற்கு அவர்கள் மனதை முன் கூட்டியே ஓரளவு தயார் செய்ய முடியாதா?” என்றெண்ணிய அவனுக்கு அதற்குரிய சந்தர்ப்பம் எதுவுமே கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் கெடுவுக்கு முதல் நாள் அவன் ‘அமராவதி’க்குச் சென்ற போது இதைப் பற்றிக் குறிப்பாக உணர்த்துவதற்கு ஒரு சிறிய சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கவே செய்தது.

அன்று அவன் ‘அமராவதி’க்குப் போயிருந்தபோது ஸ்ரீதரும் பாக்கியமும் அவனோடு சிவநேசரைப் பற்றிப் பேசினார்கள்.

“சுரேஷ், சென்னை விலாசத்துக்கு எத்தனையோ கடிதம் எழுதியும் பதில் கிடைக்காததால் சென்ற வாரம் ஸ்ரீதரைக் கொண்டு நான் மைசூர் மாஜி திவான் சூரியப் பிரசாத்துக்கு அவர் சுகமாயிருக்கிறாரா என்று விசாரித்துக் கடிதம் எழுதும்படி சொன்னேன். ஸ்ரீதரும் அவ்வாறே எழுதினான். ஆனால் அதற்கு அவர் எழுதிய பதிலோ ஆச்சரியமாயிருக்கிறது. அவர் பெங்களுருக்கே வர வில்லை என்று சூரியப் பிரசாத் எழுதியிருக்கிறார். இன்னும் அவர் மகள் கல்யாணத்தைப் பற்றி நாங்கள் எழுதியதற்கும் அவர் தமது மகளின் கல்யாணம் அடுத்த வருஷம்தான் நடக்கும் என்று எழுதியிருக்கிறார். எல்லாம் விசித்திரமாயல்லவா இருக்கிறது? நான் குழம்பிப் போயிருக்கிறேன்.” என்றாள் பாக்கியம்.

ஸ்ரீதரும் “அப்பா கொழும்புக்குப் போனால் கூட நாளொன்றுக்கு இரண்டு தடவை ட்ரங்கோல் போட்டுப் பேசுவார். அப்படிப்பட்டவர் இந்தியாவுக்குப் போய் இப்படி மெளனமாயிருப்பது எனக்கும் ஒரே குழப்பமாகத்தான் இருக்கிறது” என்றான்.

சுரேஷ் சந்தர்ப்பத்தை உபயோகித்து “ஸ்ரீதர், நான் ஒன்றை உனக்குச் சொல்ல மறந்துவிட்டேன். உன் அப்பா உன்னிடம் கொடுக்கும்படி எனக்கொரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அக் கடிதத்தை நாளை இங்கு வரும்போது நான் உன்னிடம் கொண்டு வந்து தருகிறேன்.” என்றான்.

“என்ன, எனக்கெழுதிய கடிதத்தை உனக்கனுப்பியிருக்கிறாரா? இன்னும் அக் கடிதத்தைப் பார்க்க நாம் ஏன் நாளை வரை பொறுக்க வேண்டும்? இப்பொழுதே நாங்களிருவரும் வல்வெட்டித்துறைக்குப் போய் வருவோமே?” என்றான் ஸ்ரீதர்.

“போய் வரலாம். ஆனால் கடிதத்தை நாளைக்குத்தான் உன்னிடம் கொடுக்க வேண்டுமென்று எனக்கு ஆணையிட்டிருக்கிறார் அவர். ஆகவே அதை வாசிக்க நாளை வரை பொறுக்கத்தான் வேண்டும்.” என்றான் சுரேஷ்.

சுரேஷின் இம்மொழிகளைக் கேட்டு, ஸ்ரீதரும் பாக்கியமும் கலவரமடைந்தார்கள். “இதென்ன விநோதமான நிபந்தனைகள். இந்நிபந்தனைகளைப் பார்த்தால் இதில் ஏதோ மர்மம் இருப்பது போல்
தோன்றுகிறது. சுரேஷ், ஸ்ரீதருக்கு எழுதிய கடிதத்துடன் அவர் உனக்கும் ஏதாவது எழுதியிருப்பாரல்லவா? அதில் அவர் என்ன சொல்லியிருக்கிறார்? அவர் உடற் சுகம் எப்படி? அவர் எப்பொழுது இலங்கை வருகிறார்?” என்று கேட்டாள் பாக்கியம்.

இக் கேள்விகளுக்குச் சுரேஷால் என்ன பதில் சொல்ல முடியும்? முதலில் இக் கேள்விகளுக்கு எவ்வித விடையுமளிக்காமலே தட்டிக் கழிக்கப் பார்த்தான். ஆனால், பாக்கியமும் ஸ்ரீதரும் அதற்கு இடம் அளிப்பவர்களாயில்லை. ஆகவே அவன் வேறு வழியின்றி “இந்தக் கேள்விகள் எதற்குமே என்னால் பதிலளிக்க முடியாது. ஸ்ரீதரின் அப்பா இவ்விஷயங்கள் எல்லாவற்றிலும் எனக்கு வாய்ப் பூட்டுப் போட்டிருக்கிறார். நாளைக்கு ஸ்ரீதரின் கடிதத்தைத் தரும் போது தான் இவ்விஷயங்களில் என் வாய்ப் பூட்டு அவிழும். அப்பொழுது தான் பல விஷயங்களை உங்களுக்குச் சொல்லுவேன். இன்னும் கடிதத்தை மட்டுமல்ல, கடிதத்தை விட முக்கியமான பொருளொன்றையும் என்னிடம் அவர் ஒப்படைத்துள்ளார். அதையும் நாளைக்கு நான் எடுத்து வருவேன். தயவு செய்து அதுவரை நீங்கள் இவ்விஷயமாகப் பொறுத்திருக்கவே வேண்டும்,” என்றான்.

அடுத்த நாட் காலை பத்து மணிக்கு ‘அமராவதி’ மாளிகையில் இடி இடித்தது; மின்னல் மின்னியது; புயல் வீசியது. சுரேஷ் ஸ்ரீதர் கையில் சிவநேசரின் கடிதத்தை, ஒப்படைத்தான். ஒப்படைக்கு முன் பாக்கியம், ஸ்ரீதர் சுசீலா ஆகியவர்களை நோக்கி “கடந்த இரண்டு மாதங்களாக என் மனதுள் வைத்துக் காத்த துக்ககரமான இரகசியங்களை இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.” என்று கூறித் தனக்குச் சென்னையிலிருந்து சிவநேசர் எழுதிய கடிதத்திலிருந்து தான் தனது வீட்டிலுள் உள்ளவர்களுக்குக் கூடத் தெரியாது இந்தியாவுக்குப் போனதையும் அங்கு நடந்த சம்பவங்களையும் ஒன்றொன்றாய் எடுத்து விவரித்தான். தனக்கு சிவநேசர் எழுதிய கடிதத்தையும் அவள் அவர்களிடம் காட்டினான். பின்னர் சென்னை மயானமொன்றில் தான் அவருக்குக் கொள்ளி வைத்த வரலாற்றையும் கண்ணீர் வரக் கூறினான் அவன்.

சிவநேசரின் தற்கொலையைப் பற்றிக் கேள்வியுற்றதும் ஸ்ரீதர் ‘ஓ’வென்று அலறிவிட்டான். பாக்கியம் தாலி களைந்து “ஐயோ” என்று எழுப்பிய கூக்குரல் அந்த ‘அமராவதி’ மாளிகையின் அஸ்திவாரத்தையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது. சுசீலாவோ தன்னிலை இழந்து தவித்து ஸ்ரீதரின் தோள்களைத் தன் கைகளால் கட்டிக் கொண்டு “ஐயோ நான் என்ன செய்வோம்” எனக் கதறினாள்.

அவர்களின் பரிதாப நிலையைக் கண்ட சுரேஷ் தன்னாலியன்ற வரை ஆறுதல் மொழிகள் கூறினான். “அழுது கூக்குரலிடுவதால் என்ன பயனுமில்லை. கடிதத்தை வாசி” என்று அவன் ஸ்ரீதரை வற்புறுத்தினான்.

இறந்து போன சிவநேசர் கடிதத்தின் மூலம் தன் மகனோடும், மனைவியோடும் ஆசை மருமகளோடும் பேசினார்.

'என் அன்புள்ள மகன் ஸ்ரீதருக்கும், பிரிய மனைவி பாக்கியத்துக்கும் ஆசை மருமகள் சுசீலாவுக்கும் சிவநேசர் எழுதும் கடிதம். இக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கும் போது நான் இறந்து இரண்டு மாதம் பூர்த்தியாயிருக்கும். சுசீலாவைப் பார்க்கத் தனக்குக் கண்ணில்லையே என்று ஸ்ரீதர் கவலைப்பட்டான். அக் கவலையைப் போக்க அவனுக்குக் கண்ணளிக்க நான் சாகிறேன். நான் வயதானவன். இன்றில்லாவிட்டால், என்றோ நான் சாகத் தானே வேண்டும்? இன்று இவ்வாறு இறப்பதில் எனக்கென்னவோ திருப்தி. ஆகவே ஸ்ரீதர், பாக்கியம், சுசீலா - நீங்கள் யாருமே என் மரணத்தைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. உங்கள் அலுவல்களை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியோடிருக்க வேண்டும்.

ஸ்ரீதர், நீ இக் கடிதத்தை உன் கண்ணாலே தானே வாசிக்கிறாய்? அது எனக்கு மிகவும் இன்பளிக்கும் செய்தி. ஆனால் உண்மையில் அக்கண் என்னுடையது - இது எனக்கு அதிக பெருமையளிக்கும் விஷயமாகும். இன்னொன்று, தற்கொலை செய்து கொண்ட பின்னும் கூட நான் முற்றிலும் செத்துவிடவில்லை. என் கண் இன்னும் வாழ்கிறது. அது இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதே என் ஆசை. தற்கொலை செய்வது பெரிய துன்பமாயிருந்திருக்கும் என்று நீங்கள் எண்ணக் கூடும். அது தான் இல்லை, தற்கொலைக்கும் எத்தனையோ மார்க்கங்களுண்டு. அதில் மிகவும் சுலபமான ஒன்றைத்தான் நான் தெரிவு செய்திருக்கிறேன். உரோமர் இம்முறையை அனுஷ்டித்ததாக நான் சில நூல்களில் படித்திருக்கிறேன். இரத்த நாளமொன்றைத் தெரிந்தெடுத்து ஒரு கூரிய சவரக் கத்தியால் வெட்டி விடுவதே அது. இதனால் உண்டாகும் நோவு மிகவும் குறைவாம். எதுவும் இன்னும் சில நேரத்தில் எனக்குத் தெரிந்துவிடும்.

ஸ்ரீதர், உன் நண்பன் சுரேஷைத் தான் எனக்குக் கொள்ளி வைக்க நான் தெரிந்தெடுத்திருக்கிறேன். அதன் மூலம் அவன் எனது மகனாகிவிட்டான். அவனை இனிமேல் உன் அண்ணனாக நீ நடத்த வேண்டும். எனது சொத்துகள் பற்றி நீ எவ்வித கவலையும் பட வேண்டாம். நியாயதுரந்தார் குமாரகுரியரும் ஹரிசன் கம்பெனியாரும் அவற்றை கவனித்து கொள்வார்கள். ஒழுங்கான மரண சாதனம் முடித்திருக்கிறேன். பாக்கியம், சுசீலா, ஸ்ரீதர், உங்களையும் சின்ன முரளியையும் விட்டுப்பிரிவது எனக்கு மிகவும் கஷ்டமாகத்தானிருக்கிறது. ஆனால் என்ன செய்வது? இதை விட நல்ல வழி
வேறில்லை. உங்கள் எல்லோருக்கும் என் அன்பு.

‘அமராவதி’ வாழ்க!
சிவநேசர்
டாக்டர் குமரப்பா நர்சிங்
ஹோம், சென்னை.'

சிவநேசரின் அஸ்திக் கலசமும் அன்று பிற்பகல் சுரேஷால் ஸ்ரீதரிடம் ஒப்படைக்கப்பட்டது. மூன்று மாதங்களின் முன்னர் ‘அமராவதி’ வளவிலிருந்து தனது இந்திய நண்பர் சூரியப்பிரசாதின் மகளின் திருமணத்துக்குச் செல்வதாகப் பொய் கூறிப் புறப்பட்ட சிவநேசர் இந்தியாவில் தாம் வாங்கிய பரிசுப் பொருள்களுடன் தம் மாளிகைக்கு வந்திறங்குவதற்குப் பதிலாகப் பிடி சாம்பலாக வெள்ளிக் கலசமொன்றில் வந்திறங்கியதைக் கண்ட பாக்கியம் தன்னை மீறிக் கதற, ஸ்ரீதர் கலசத்தைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு, அதனைத் தன் கண்ணீரால் கழுவினான்.

“அப்பா, நீ உன் கம்பீர உருவத்தில் மீளவும் வருவாய், நீ இப்போ எப்படி இருக்கிறாய் என்பதை என் புதிய கண்ணால் பார்க்க வேண்டுமென்று ஆசையோடு எதிர்பார்த்திருந்த என் முன் நீ இந்த உருவிலா வரவேண்டும்? இலங்கையை விட்டுப் புறப்பட்டு மூன்று மாதங்களின் பின் பிடி சாம்பலாக உன் மாளிகைக்கு வரும் நீ இரண்டு மாதங்களின் முன் என் கண்ணின் ஒளியாக இங்கு வந்தாயே - இது போன்ற ஓர் அற்புதமான தியாகக் கதையை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லையே. அப்பா, நீ இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம்? முரளி “தாத்தா எங்கே?” என்று என்னைக் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்?” என்றழுதான் அவன்.

பாக்கியம் அன்றே வெள்ளை உடுத்து விதவைக் கோலம் பூண்டுவிட்டாள். தகவல் தெரிந்ததும் நன்னித்தம்பியர், அவர் மனைவி செல்லம்மா, சின்னைய பாரதி ஆகிய யாவருமே கவலையால் பீடிக்கப்பட்டார்கள். இரக்கமே உருவான சுசீலா, எவர் என்ன சொல்லியும் இரண்டு நாட்கள் அன்னாகாரம் அருந்த மறுத்துவிட்டாள். பெரியவரின் ஈமக் கடன்கள் கீரிமலையில் அன்றிலிருந்து மூன்றாம் நாள் செய்யப்பட்டன. அவர் மரணச் செய்தி பத்திரிகைகளிலும் சுருக்கமாக வெளியிடப்பட்டது. ஆனால் எந்தக் கவலையும் இவ்வுலகில் ஒரு சில நாட்களுக்குத்தானே? அதன் பின் சீக்கிரமே சிவநேசரின் பிரிவால் ஏற்பட்ட வேதனை மனதை விட்டகல வாழ்க்கை பழைமை போல் ஓட ஆரம்பித்தது. ‘அமராவதி’யில் மீண்டும் பழைய அமைதி குடி கொண்டது.

இருந்தாலும் பழைய ‘அமராவதி’யில் இப்பொழுது பல புதுமைகள், சிவநேசரின் மரண சாதனத்தில் கூறப்பட்ட பிரகாரம் சுரேஷ் ஸ்ரீதருடன் சம பங்காளியாகிவிட்டான். அத்துடன், சிவநேசர் அவனிடம் கேட்டுக் கொண்ட பிரகாரம் ஸ்ரீதருக்குத் துணையாக அவன் ‘அமராவதி’யில் வந்து குடியேறினான். பாக்கியம் ஸ்ரீதர், சுசீலா எல்லாருக்குமே இது மிகவும் திருப்தியைத் தந்தது. சிவநேசர் வீட்டில் இல்லாத குறையை அது ஓரளவு ஈடு செய்தது.

இவை நடந்து சில மாதங்களின் பின்னர், சுரேஷின் திருமணமும் நடை பெற்றது. அவன் கிஷ்கிந்தாவில் ஒரு நாள் கூறியபடி, பல ஆயிரம் வருடங்களின் முன் தமிழ்ச் சமுதாயம் செய்த முடிவின்படி தன் மாமன் மகள் செல்வமலரை அவன் திருமணம் செய்து, அதன் மூலம் மேற்படிப்புக்காகத் தன் மாமனாரிடம் அவன் பட்ட பணக் கடனையும் தீர்த்துக் கொண்டான் அவன். செல்வமலரும் சுசீலாவும் சீக்கிரமே உயிருக்குயிரான தோழிகளாகி விட்டார்கள்.

‘அமராவதி’யில் ஏற்பட்ட இன்னொரு மாற்றம் அதன் பெரிய மதில்கள் சிறிய கைப்பிடிச் சுவர்களாகிவிட்டதாகும். வீதியில், செல்லும் பாதசாரிகளுக்குக் கூட ‘அமராவதி’யின் அகன்ற விறாந்தைகள் இப்பொழுது நன்கு தெரிந்தன. வாசலின் பெரிய இரும்பு ‘கேட்டு’களுகுப் பதிலாக சிறிய மர ‘கேட்டு’கள் போடப்பட்டன. மாறி வரும் சமுதாயத்தின் புதிய எண்ணங்களின் சின்னமாக அவை காட்சியளித்தன. இன்னும் வாசலிலே காக்கி உடையோடு காணப்பட்ட அந்த வாசல் காவலாளியையும் இப்பொழுது அங்கே காணோம்.

ஸ்ரீதர் தன் படிப்பை முடிக்க, சுசீலாவோடும், முரளியோடும் சீக்கிரமே கொழும்பு போனான். சுரேஷோ பாக்கியத்துக்குத் துணையாக ‘அமராவதி’யில் தங்கி வைத்தியத்தோடு சமுதாய சேவையையும் மேற்கொண்டான். ஸ்ரீதரும் தன் படிப்பை முடித்துக் கொண்டதும் சமுதாய அரசியல் சேவைகளில் ஈடுபடப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறான். இதை எல்லோரும் வரவேற்றார்களென்றாலும் சுரேஷே மிக அதிகமாக வரவேற்றான் என்பதைக் கூறவேண்டியதில்லையவா?

முற்றும்.


தொடர் நவீனம்: மனக்கண்

அறிஞர் அ.ந.கந்தசாமி

கடைசி அத்தியாயம்: கதாசிரியரின் முடிவுரை
!

நாவல் இவ்வாறு வர வேண்டியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நாவலின் முக்கிய நேரங்களில் ஒன்று பாத்திரப் படைப்பாக இருப்பது. இரண்டு, கதை நிகழும் சூழலை வர்ணனைகள் மூலம் மனக் கண்ணின் முன்னர் கொண்டு வந்து நிறுத்த வேண்டியிருப்பது. சிறுகதைக்கு இந்நோக்கங்களில்லை - ஒரு சிலர் தமது சிறுகதைகளில் இவற்றைச் செய்ய முயன்றாலும் கூட நானிங்கே நாவலின் இரண்டு முக்கிய நோக்கங்களையே சொன்னேனாயினும், டால்ஸ்டாய் போன்ற பெரு நாவலாசிரியர்களில் சிலர் அறிவூட்டலும் நாவலின் பணி என்று கருதினார்கள். அதனால் தான் யுத்த விவரங்களையும், சரித்திர விவரங்களையும் மிகவும் அதிகமாக விளக்கும் அத்தியாயங்களை “யுத்தமும் சமாதானமும்” என்னும் நூலில் டால்ஸ்டாய் சேர்த்திருக்கிறார். விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாட்டி”ல் பாரிஸ் சாக்கடை பற்றிய செய்திகள் விரிவாகச் சேர்க்கப்பட்டுப்பதும் இக் காரணத்தினாலே தான். சுருங்கச் சொன்னால் பார காவியம் செய்யும் கவிஞனும் காத்திரமான நாவலை எழுதும் நாவலாசிரியனும் கதை சொல்லிச் செல்கையில் வழியில் தென்படும் எந்த விஷயத்தையும் பற்றிப் பூரணமான விளக்கம் கொடுக்காமல் மேலே செல்வதில்லை. ஆனால் இவ்வித விளக்கம் கொடுக்க ஒருவன் கதை கட்டும் ஆற்றல் பெற்றவனாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. பல விஷயங்களையும் தெரிந்து ஓர் அறிஞனாகவும் விளங்க வேண்டியிருக்கிறது. ஒருவனுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு நூலறிவும், அனுபவ அறிவும் சமுதாய அறிவும், இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த விளக்கங்களை அவன் திறம்படச் செய்து கொண்டு போகலாம். சிறு கதாசிரியனுக்கோ இத் தொல்லை இல்லை. ஆனால் இங்கே நாம் மறக்கவொண்னாத ஒரு விஷயமென்னவென்றால், என்ன தான் அழகான விளக்கம் கொடுத்தாலும் அவ்விளக்கம் கதைக்கும் குறுக்கே வந்து விழக் கூடாது என்பதாகும். இதற்கு மிகவும் நுட்பமான ஓர் அளவுணர்ச்சி நாவலாசிரியனுக்குத் தேவை. கதை தன் வழக்கமான ஓட்டத்தில் போய்க் கொண்டிருக்க, அதனோடு கை கோத்துக் கதாசிரியனின் விளக்கங்களும் போய்க் கொண்டிருக்க வேண்டும். இது விஷயமாக சாதாரணமாக உரையாடும்போது நாம் நம் நண்பர்களுக்குப் பிரெஞ்சு புரட்சி போன்ற ஒரு பொருள் பற்றிக் கொடுக்கும் ஒரு விளக்கத்துக்கும், ஒருமேடையில் அது பற்றிச் செய்யும் சொற்பொழிவுக்கும் உள்ள வித்தியாசத்தை நினைவு கூர்வது நன்று. நாவல்களில் வரும் விளக்கம் நண்பரோடு பேசும் போது நாம் கொடுக்கும் விளக்கம் போல் அமைய வேண்டும். இல்லாவிட்டால் அவை சரித்திர நூல்களாகவோ, சமூக இயற் பனுவல்களாகவோ, பொருளாதாரக் கட்டட நிர்மாண விவாத நூல்களாகவோ மாறிவிடும். உலகப் பெரும் நாவலாசிரியர்கள் பலரும் தம் விளக்கங்களை அளவறிந்து கையாண்டிருப்பதே அவர்களது படைப்புகளின் கலையழகு சிதைவுறாதிருப்பதற்குக் காரணம். உதாரணமாக விக்டர் ஹியூகோவின் பாரிஸ் நகரத்தின் சாக்கடை வர்ணனைகள் நீண்டவையாயிருந்தாலும் பரபரப்பான சம்பவங்களை மிகுதியாகக் கொண்ட அக்கதையின் ஓட்டத்தை அவை எவ்விதத்திலும் தடுக்கவில்லை. இந்தத் தன்மை இருப்பதால்தான் இன்றும் உலகெங்கும் விரும்பி வாசிக்கும் கதையாக இது இருந்து வருகிறது.

நாவலியக்கத்தின் தன்மைகள் பற்றி நான் இங்கு இவ்வாறு விவரித்ததன் காரணம் நாவல் தமிழுக்குப் புதியதோர் இலக்கிய உருவமாயிருப்பதுனாலேயேயாகும். புதிய இலக்கிய உருவமொன்று உருப்பெற்று வரும்போது அதை எவ்வாறு சுவைப்பது - எவ்வாறு விமர்சிப்பது என்பது சொல்லிக் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றுதானே? இது வாசகர்களின் சுவைக்கும் திறனை உயர்த்துவதோடு, எழுத்தாளர்களுக்கும் கூட அவர்களின் எழுத்துக்கு வழிகாட்டியாக அமையும். என்னைப் பொறுத்த வரையில் ஆரம்பத்திலிருந்தே நான் ஆக்க எழுத்தாளனாக மட்டுமல்ல, கலை இலக்கிய விமர்சகனாகவும் பயின்று விட்டதால் இவ்வித பிரச்சினைகளை என்னால் தட்டிக் கழிக்க முடியாமலிருக்கிறது.

நாவலிலே நாம் எதிர்பார்ப்பது சுழல்கள் நிறைந்த ஒரு கதை; உயிருள்ள பாத்திரங்கள்; கண் முன்னே காட்சிகளை எழுப்பும் வர்ணனைகள் என்பனவாம். கதை இயற்கையாக நடப்பது போல் இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் அந்த இயற்கை சட்டமிடப்பட்ட ஒரு படம் போல் ஓர் எல்லைக் கோடும் அழுத்தமும் பெற்றிருக்க வேண்டும். இன்னும் எந்தக் கதையுமே மனிதனிடத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஓர் இரக்க உணர்ச்சியைத் தூண்டல் வேண்டும். இதில்தான் ஒரு நாவலின் வெற்றியே தங்கியிருக்கிறதென்று சொல்லலாம். உண்மையில் மனித உணர்ச்சிகளில் இரக்கமே மிகவும் சிறந்ததென்றும் அதுவே ஒருவனது உள்ளத்தைப் பயன்படுத்தி அவளை நாகரிகனாக்குகிறதென்றும் கூறலாம். டேனிஸ் சேனாரட் (Denis Sanarat) என்ற அறிஞர் நாவலின் இத்தன்மையைப் பற்றிப் பேசுகையில் “காதலர்களின் நெஞ்சுடைவைப் பற்றி வாசிக்கும் வாசகன் தன் கண்ணில் நீர் பெருக்கிறானே, அது தான் நாவலாசிரியன் தன் உழைப்புக்குப் பெறும் பெரும் பரிசாகும்” என்று கூறுகிறார். ஷேக்ஸ்பியருக்குப் பின்னால் பாத்திர சிருஷ்டியின் பரப்பிலே ஆங்கில மொழி கண்ட மகாமேதை என்று கருதப்படும் சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens) பெற்ற வெற்றிக்கு, அவர் கதைகளில் இவ்வித இரக்க உணர்ச்சி விஞ்சியிருப்பதே காரணம், டிக்கென்ஸின் கதைகளில் இரண்டு பண்புகள் தலை தூக்கி நிற்கின்றன. ஒன்று அனுதாப உணர்ச்சி, மற்றது உற்சாகமூட்டும் நகைச்சுவை. உண்மையில் மனித வாழ்க்கைக்கே மதிப்பும் இன்பமும் நல்குவன இவ்விரு பண்புகளுமே. விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாடு”ம் இவ்விரு பேருணர்ச்சிகளையுமே பிரதிபலிக்கிறது.

“மனக்கண்”ணைப் பொறுத்த வரையில் நாவல் பற்றிய மேற்கூறிய பிரக்ஞையுடனேயே நான் அதனை எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்குச் சுவையான ஒரு கதையைச் சொல்ல வேண்டும்; அது அவர்கள் அனுதாபத்தையும் இரக்க உணர்ச்சியையும் தூண்ட வேண்டும்; அதே நேரத்தில் முடிந்த இடங்களில் வாழ்க்கையில் பிடிப்பைத் தரும் நகைச்சுவை, வேடிக்கை போன்ற உணர்ச்சிகளுக்கும் இடமிருக்க வேண்டும்; சூழ்நிலை வர்ணனையையும் பாத்திர அமைப்பும் சிறந்து விளங்க வேண்டும்; கதைக்கு இடக்கரில்லாது வரும் அறிவுக்கு விருந்தான விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்பன போன்ற நோக்கங்கள் இந்நாவலை எழுதும்போது என்னை உந்திக் கொண்டேயிருந்தன. இன்னும் உலகப் பெரும் நாவலாசிரியர்களான டிக்கென்ஸ், டால்ஸ்டாய், சோலா, டொஸ்டோவ்ஸ்கி, கல்கி, தாகூர், விகடர் ஹியூகோ போலத் தெட்டத் தெளிந்து ஒரு வசன நடையில் அதைக் கூற வேண்டுமென்றும் நான் ஆசைப்பட்டேன். இன்று தமிழில் ஒரு சிலர் - முக்கியமாகக் கதாசிரியர் சிலர் இயற்கைக்கு மாறான சிக்கலான ஒரு தமிழ் நடையை வலிந்து மேற்கொண்டு எழுதுவதை நாம் பார்க்கிறோம். இப்படி யாராவது எழுத முயலும்போது அவர்கள் வசன நடை முன்னுக்கு வந்து பொருள் பின்னுக்குப் போய்விடுகிறது.

நடை என்பது ஒருவனின் உடையைப் போல. சாமுவேல் பட்லர் என்ற ஆங்கில எழுத்தாளர் எந்தக் கலையிலுமே “ஸ்டைல்” (Style) அல்லது “நடை” என்பது நாகரிகமான உடையைப் போல இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். அது பார்ப்பவர்களின் கவனத்தை மிக மிகக் குறைவாக ஈர்க்க வேண்டுமென்பது அவரது கருத்து. அநாவசியமான “ஜிகினா” வேலைப்பாடுகள் உள்ள உடை கூத்து மேடைக்கோ, வீதியில் வெற்றிலை விற்பனை செய்பவனுக்கோ தான் பொருத்தம். ஸ்டீபன் ஸ்பெண்டர் இதனை இன்னும் அழுத்தமாகக் கூறியிருக்கிறார். ஆகச் சிறந்த எழுத்தாளர்களுக்கு நடையே இல்லையாம். எடுத்த இவ்விஷயத்தை எவ்விதம் சொன்னால் தெளிவும் விளக்கமும் ஏற்படுகிறதோ அவ்விதம் சொல்லிச் செல்வதை விட்டு செயற்கையான மேனிமினுக்கு வேலைகளை மேற்கொள்வதைப் பண்பும் முதிர்ச்சியும் பெற்ற எழுத்தாளர்கள் இன்று முற்றாக ஒதுக்கி வருகிறார்கள்.

இயற்கைக்கு மாறான செயற்கை நடைகளை வருவித்துக் கொண்டு எழுதுபவர்கள் சொந்த மயிருக்குப் பதிலாக டோப்பா கட்டிக் கொண்டவர்களை ஞாபகமூட்டுகிறார்கள். சிரில் சொனோலி (Cyril Chonolly) என்ற ஆங்கில விமர்சகர் இயற்கையான நடையில் எழுதுபவர்களை “அவர்கள் சொந்த மயிருடன் விளங்குபவர்” என்று பாராட்டுகிறார். வீதியில் யாராவது இயற்கைக்கு மாறாக ராஜ நடை போட்டு நடந்தால் நாம் அதைப் பார்த்துச் சிரிக்கிறோமல்லவா? இலக்கியத்திலும் இதே நிலைதான்.

“மனக்கண்”ணை நேரிய ஒரு நடையிலேயே நான் எழுதியிருக்கிறேன். நான் வாசகர்களுக்குக் கூற வந்த பொருளின் தெளிவே என் குறிக்கோள். அதனால் தான் பாத்திரங்களின் பேச்சிற் கூட ஒவ்வொரு பிரதேசத்தினருக்கே விளங்கக் கூடிய பிரதேச வழக்குகளை மிகவும் குறைத்து பொதுவாகத் தமிழர் எல்லோருக்குமே விளங்கக் கூடிய சரளமான ஒரு செந்தமிழ் நடையை நான் கையாள முயன்றிருக்கிறேன். இதனால் தான் இக்கதை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் மலை நாட்டிலும் ஏக காலத்தில் வாசகர்களின் பேராதரவைப் பெற்றது.

ஆனால் நடையில் மட்டுமல்ல. “மனக்கண்” வேறு பல எழுத்தாளர்களின் நாவல்களுடன் மாறுபடுவது கதை அமைப்பிலும் தான். நாவலில் பாத்திர அமைப்பும் சூழ்நிலையும் மிக முக்கியமானவை என்றாலும் கூட இறுக்கமான நாடகத்தன்மை கொண்ட கதை அமைப்பும் அவசியமாகும். இவ்வித கதை அமைப்பில்லாத பாத்திர சிருஷ்டி நாவலாகாது. வெறும் வியாசமாகத்தான் விளங்கும். அடிசன் என்ற ஆங்கில எழுத்தாளர் இப்படிப்பட்ட பாத்திர சிருஷ்டியில் வல்லவர். சர் ரோஜர் டிகவுர்லி, கறுப்புடை மனிதன் போன்ற பாத்திரங்களை அவர் சிருஷ்டித்தார். ஆனால் அவர் தம் எழுத்தை நாவல் என்று கூறவில்லை. வியாசங்கள் என்றே வர்ணித்தார். இன்று நாவலைப் பற்றிய ஒரு புதிய கருத்தைச் சில விமர்சகர்கள் உலகின் பல பகுதிகலிலும் பரப்ப முயன்று வருகிறார்கள். நாவலில் கதை பின்னல் அவ்வளவு முக்கியமல்ல என்பது இவர்களின் கருத்து. இவர்களைப் பற்றி சோமர்சேட் மோம், “இந்த அளவுகோவலின்படி பார்த்தால் வியாசமெழுதுபவர்களே சிறந்த நாவலாசிரியர்கள். சார்லஸ் லாம்பும், ஹல்லீட்டுமே நல்ல நாவலாசிரியர்கள்” என்று கேலி செய்திருக்கிறார்.

கதை அமைப்பற்ற சப்பட்டை நாவல்களை எழுதுபவர்களைப் பற்றி அவர் இன்னோரிடத்தில் பின் வருமாறு கூறுகிறார்: “உயிருள்ள மனிதர்களைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் படைத்த கெட்டிக்கார எழுத்தாளர் பலர், அவ்வாறு அவர்களைச் சிருஷ்டித்த பின்னர் அவர்களை வைத்து என்ன செய்வதென்றறியாது மயங்குகின்றார்கள். அவர்களை வைத்து பொருத்தமான கதையை உண்டாக்கும் ஆற்றல் இவர்களிடம் இல்லை. ஆகவே எல்லா எழுத்தாளர்களையும் போல (எல்லா எழுத்தாளரிடமும் ஓரளவு பொய்மை (Humburg) இருக்கிறது) இவர்களும் தமது குறைபாட்டை ஒரு நிறைபாடாகக் காட்ட முயல்கின்றனர். என்ன நடக்கிறது என்பதை வாசகர்களே யூகித்துக் கொள்ளட்டுமென்றோ, வாசகர்கள் இந்த விஷயத்தை அறிய முயல்வதே தவறென்றோ கூறி விடுகின்றனர். வாழ்க்கைக் கதைக்கு முடிவு இல்லையென்றும், சம்பவங்கள் செதுக்கப்பட்ட ஒரு முடிவை அடைவதில்லை என்றும், நிகழ்ச்சிகள் தொங்கிக்கொண்டுதான் கிடக்கும் என்றும் கூறி விடுகின்றனர். அவர்களின் இக்கூற்று எப்பொழுதும் உண்மையல்ல. ஏனென்றால் எல்லோர் கதைக்கும் சாவென்ற முடிவாவது இருக்கத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் சொல்வது உண்மையாயிருந்தாலும் கூட அது நல்ல வாதமாகாது. ஒரு சிறந்த கதையைப் படைப்பது கஷ்டமான ஒரு வேலைதான். ஆனால் அதற்காக அதை வெறுப்பது நல்ல நியாயமல்ல. துன்பியல் நாடகங்கள் பற்றி அரிஸ்டாட்டில் கூறியது போல் ஒரு கதைக்கு ஒரு தொடக்கமும் நடுவும் முடிவும் இருக்கவே வேண்டும்.

கதை அமைப்புப் பற்றி இக் கருத்தைக் கொண்ட சோமர்செட் மோம் நடையைப் பற்றி, “தெளிவும் இனிமையும் எளிமையும் கொண்டதே நல்ல நடை” என்ற கருத்தைப் பல இடங்களில் வெளியிட்டிருக்கிறார். கதை, நடை என்ற இரண்டிலும் மோமுடன் எனக்கு உடன்பாடு. ஏன், இவற்றில் டிக்கென்ஸ் தொடக்கம் தாகூர் வரைக்கும் உலகின் நல்ல நாவலாசிரியர்கள் எல்லோருமே இவ்வப்பிப்பிராயத்தையே கொண்டிருந்திருக்கின்றனர். “மனக்கண்”ணில் நான் பின்பற்றியிருப்பதும் இக்கொள்கைகளைத்தான்.

நாவலே இன்று வழக்கிலுள்ள இலக்கிய உருவங்களில் மிகவும் பிந்தியது. இருந்த போதிலும் அது மிகவும் வலிமை கொண்டதாக வளர்ந்து விட்டது. இன்னும் உலகின் எதிர்கால இலக்கியம் பெரிதும் நாவலாகவே இருக்கப் போகிறதென்பதிலும் சந்தேகமில்லை. நாவல் இவ்வாறு வெற்றி கட்டி வருவதற்குக் காரணம் மனிதரில் பெரும்பாலோருக்கு நாவல்தான் வாழ்க்கை அனுபவத்துக்கே வாயிலாவது இருக்கிறது என்பதாகும். தன்னந்தனியாகத் தூரக் கிராமத்தில் வாழ்பவள் நகரத்து அனுபவங்களை நேரடியாக அனுபவிக்காமலே நான் அனுபவிக்கக் கூடியதாயிருப்பது நாவல்களின் மூலம்தான். காதலை, நேரில் அனுபவியாதவள் காதலையும், தாய்மையின் அன்பை அறியாதவள் தாய்மையையும், பிள்ளைப் பாசத்தை நேரில் காணாதவள் பிள்ளைப் பாசத்தையும் , யுத்தத்தை நேரில் காணாதவன் யுத்தத்தையும், தான் நேரில் துய்த்தது போல் இன்று அனுபவிக்கக் கூடியதாயிருப்பது நாவல்கள் மூலமேயாகும். நாவல்கள் முழு உலக அனுபவத்தையுமே நமக்குத் திறந்து காட்டி நம் உளப்பண்பை விருத்தி செய்கின்றன.

ஆனால் நாவலென்பது புற நிகழ்ச்சிகளை மட்டும் கூறும் ஓர் இலக்கிய உருவமல்ல. அது மனதின் உட்புற நிகழ்ச்சிகளையும் காட்டுகிறது. அதனால்தான் சர் ஐவர் எவன்சன்ஸ் என்ற இலக்கிய விமர்சகர் “நாவல் இன்று ஓர் உட்புறத் தனி மொழியாகவும் வளர்ச்சியடைந்து வருகிறது” என்று கூறியுள்ளளார். “மனக்கண்”ணில் பல இடங்களில் சிந்தனையோட்டங்கள் நீள வர்ணிக்கப்படுவதைக் காணலாம். பாத்திரங்களின் குணா குணங்களை விளக்கிக் கொண்டு அவர்களின் அக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அவை நமக்குப் பெரிதும் உதவுகின்றன.

கதாசிரியனாகிய என்னைப் பொறுத்தவரையில் “மனக்கண்”ணை எழுதியது எனக்கு ஒரு பெரிய அனுபவம். இதற்கு முன் சிறுகதைகளையும் , கவிதைகளையும், சிறுவர் நெடுங் கதை ஒன்றையும், நாடகங்களையும் எழுதியுள்ள நான் எமிலி சோலாவின் “நானா” என்ற நாவலைத் தமிழ்ப்படுத்தியிருந்த போதிலும் “மனக்கண்”ணை எழுதிய போது புதியதோர் உலகில் சஞ்சரிப்பது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. பாத்திரங்களைச் சிருஷ்டித்து அவர்களைச் சமுதாயப் பின்னணியிலே உலவ விடும்போது அவர்கள் முன்னில்லாத ஒரு சக்தியையும் வலிவையும் பெற்று ஆசிரியனையே மலைக்க வைத்து விடக் கூடும் என்பதை நான் அனுபவத்தில் கண்டேன். நாவலை வாசிப்பவர்கள் மட்டுமல்ல அதை எழுதும் ஆசிரியனும் உணர்ச்சிப் பொங்கலில் அகப்பட்டுக் கொள்ளவே செய்கிறான். இந்தக் கதையை உருவாக்கிய கடந்த ஒரு வருட காலமும் நான் “அமராவதி வளவில்” ஓர் அங்கத்தினனாகவே ஆகிவிட்டேன். ஸ்ரீதர், சிவநேசர், பாக்கியம், சுசீலா, சுரேஷ், முரளி ஆகிய யாவரும் இரவும் பகலும் என்னோடிருந்தார்கள். அவர்களின் இன்பத் துன்பங்களை நானும் அனுபவித்தேன். இப்படிப்பட்ட அனுபவமேற்பட்டு அதனை எழுத்தில் வடிப்பதற்கு எழுத்தாளன் தன் உடல் சக்தி, மனச் சக்தி, நரம்பின் சக்தி ஆகியவற்றை மிகவும் அதிகமாக ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது. அதனாற்றான் ஆர்னால்ட் பெனட் என்ற ஆங்கில நாவலாசிரியர் “நாவல் எழுதுவதற்கு நாடகம் எழுதுவதிலும் பார்க்க அதிக நரம்புச் சக்தி தேவைப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.

“மனக்கண்”ணின் பாத்திரங்களைப் பற்றிப் பேசுகையிலே, என்னைப் பெரிதும் மலைக்க வைத்தவர் சிவநேசரே. அவர் எவ்விதம் நடந்து கொள்வார் என்பது எனக்கு முன் கூட்டியே தெரியாது. பெரிய மனிதரான அவர் தன்னிஷ்டம் போல் நடந்து கொள்வார். அவரை நினைத்தால் வாசகர்களுக்கு எப்படியோ. என்னைப் பொறுத்தவரையில் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் போன்ற உணர்ச்சி அவர் முன்னால் எனக்கு ஏற்படுகிறது.

முன்னர் கூறிய பாத்திரங்களைத் தவிர பத்மா தொடக்கம் வேலாயுதக் கிழவன் வரை, அதிகார் அம்பலவாணர் தொடக்கம் அடுத்த வீட்டு அன்னம்மாக்கா, அவளது மகன் திராவிடதாசன், வாத்தியார் பரமானந்தர், கமலநாதன், தங்கமணி, அவள் தோழி ரெஜீனா, சின்னைய பாரதி, நன்னித்தம்பி, பேராசிரியர் நோர்த்லி போல் ஏராளமான பாத்திரங்கள் மனக்கண்ணில் வந்து சென்ற போதிலும் ’மோகனா’ என்னும் கிளியும் ‘ஸ்ரீதர்’ ‘சுரேஷ்’ என்ற மீன்களும் என் மனதை விட்டு ஒரு போதும் அகலா. இதில் ‘மோகனா’ என்னும் கிளி மனிதரால் மாற்ற முடியாத சிவநேசரின் உள்ளத்தைத் தன் கிளிப் பேச்சால் மாற்றித் தனிப் பெருமை கொண்டதல்லவா? கருங்கல்லில் ஈரத்தைப் பெய்த கல்லுருக்கு வேலையை அது செய்திருக்கிறது.

“மனக்கண்” முடிவோடு நாம் ஸ்ரீதர் தொடக்கம் ‘மோகனா’ வரை எல்லாப் பாத்திரங்களிடமிருந்தும் விடை பெறுகிறோம். அத்துடன் பல்கலைகழகத்து நாடக மேடை தொடக்கம், தேர்ஸ்டன் வீதி, கொட்டாஞ்சேனை, மவுண்ட் வவீனியாக் கடற்கரை, நொச்சிக்கடை சுந்தரேஸ்வரர் கோவில், ‘அமராவதி வளவு, 'கிஷ்கிந்தா' இல்லம்,, பம்பலப்பிட்டி ‘எஸ்கிமோ’ ஐஸ்கிறீம் பார்லர் ஆகிய இடங்களில் நாம் ஸ்ரீதருடன் சுற்றித் திரிந்ததற்கும் முடிவு வந்துவிட்டது. ஸ்ரீதரின் செயல்களில் என்னால் மறக்க முடியாத ஒன்று அவன் கால்பேஸ் கடற்கரையில் பத்மாவுடன் மழை நீராடியமை. காவிய நாயகர்கள் கடல் நீராடியமையையும் புனல் நீராடியமையையும் நாம் முன்னர் பல நூல்களில் படித்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீதர் தான் முதன் முதலாக மழை நீராடிய கதாநாயகனென்று நான் நினைக்கிறேன். “மனக்கண்” ஒரு விரிந்த நாவல். அதில் ஓர் இதிகாசத் தன்மை இருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன். அதில் நான் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை நான் அறியேன். பெரிய படாங்கில் எழுதப்பட்ட பரந்த சித்திரம் அது. ஆனால் சித்திரம் குறைவற்றதா? கலை இலக்கியத் துறைகளைப் பொறுத்தவரையில் குறைவற்ற படைப்பு எதுவுமே இவ்வுலகில்
எவராலும் படைக்கப்பட்டு விடவில்லை. விக்டர் ஹியூகோ பற்றியும் டால்ஸ்டாய் பற்றியும் கூட அப்படித்தான் சொல்கிறார்கள்.

இலக்கிய விமர்சனப் பிரச்சினையான இது பற்றி இங்கே விரிவாக எழுத இடமில்லை. இன்னும் நூலாசிரியரே தந்து நூலின் சிறப்புகளையும் குறைகளையும் பற்றி எழுதலாமா என்ற இன்னொரு கேள்வியும் பிறக்கிறது. அவ்வாறு அவன் எழுத முற்படும்போது, பொய்யான அடக்கமும், தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற மனப்பாங்கும் சரியான விமர்சனத்துக்குப் பாதகமாக அமையலாம். ஆகவே “மனக்கண்”ணை எவ்விதத்திலும் இங்கே விமர்சிப்பது என் நோக்கமல்ல.

நான் இத்தொடர்கதையை எழுத ஆரம்பித்ததும் எனது சக எழுத்தாளரும் நாவலாசிரியருமான செ.கணேசலிங்கனின் இந்திய விஜயத்தின் பயனாக, சென்னை இலக்கிய வட்டாரங்களில் எழுந்த ஒரு கேள்வியைப் பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு தொடர் நவீனம் நல்ல இலக்கியமாக அமைய முடியுமா என்பதே அது. பத்திரிகையின் கொள்கை நாவலின் போக்கை அமுக்கலாமென்பதும், வாராந்த வாசகனின் ஆவலைத் தூண்டுவதற்காக ஓர் எழுத்தாளன் நாடகத் தன்மையற்ற இடங்களையும் நாடகமாகக் காட்ட முயலாமென்றும், இவ்விதம் விட்டுக் கொடுப்பது அவனது பண்பாகிவிட்டால் அவன் கலையில் பொய்மை புகுந்து விடுமென்றும் கனேசலிங்கன் சுட்டிக்காட்டினார். இதில் ஓரளவு உண்மை அடங்கியிருக்கிறது என்பதை நான் மறுக்க வில்லையாயினும், முழு உண்மையின் சொரூபமும் அதில் இல்லை என்றே நான் எண்ணுகிறேன். ஏனெனில் இன்று உலகப் பேரிலக்கியங்களாகக் கொண்டாடப்படும் பல நாவல்கள் தொடர் கதைகளாக எழுதப்பட்டனவே. டொஸ்டோவ்ஸ்கியின் “காம்சோவ் சகோதரர்கள்” நெக்ரசோவ் ரிவ்யூ என்னும் சஞ்சிகையில் வெளிவந்த தொடர் கதைதான். எமினி சோலாவின் ‘ நானா’வும் முதலில் தொடர்கதையாகவே வெளியிடப்படது. டிக்கென்ஸின் ‘ஒலிவர் டுவிஸ்ட்,’ ‘நிக்கலஸ் நிக்கல்பி,’ ‘இரு நகரக் கதைகள்’ என்பனவும் ‘பென்ட்லீஸ் வீக்லி’ போன்ற சஞ்சிகைகளில் தொடர்கதைகளாக வெளியிடப்பட்டவை தாம். ஏன், தமிழகத்தின் சிறந்த நாவலாசிரியர் என்று கருதப்படும் ‘கல்கி’யின் எல்லா நாவல்களுமே ‘ஆனந்த விகடனி’லும் ‘கல்கி’யிலும் தொடர் கதைகளாக வெளிவந்தவை தாமே? ஆகவே ஒரு நாவல்
நல்ல இலக்கியமாக அமைகிறதா அல்லவா என்பதை, அது தொடர்கதையாக எழுதப்படுகிறதா அல்லது நேரடியாகவே புத்தகமாக வெளியிடப்படுகிறதா என்பது ஒருபோதும் நிர்ணயித்து விடாது என்பதே எனது கருத்து. சிறந்த இலக்கியப் புலன்வாய்ந்த எழுத்தாளனால் சிரமமான சூழலிலும் நல்ல இலக்கியத்தைப் படைக்க முடியும்.

இவை போக முடிவுரையின் ஓர் அம்சம் நன்றி நவிலலாகும். ‘மனக்கண்’ நாவலை நான் உருவாக்கித் தொடர் கதையாக வெளியிடுவதற்குத் ‘தினகரன்’ வார மஞ்சரி எனக்களித்த வாய்ப்பை நான் ஒரு போதும் மறக்க முடியாது. இதற்காக எனது மனப்பூர்வமான நன்றியைத் ‘தினகரன்’ வார மஞ்சரிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

[ அறிஞர் அ.ந.கந்தசாமி ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கவிதை, விமரிசனம், மொழிபெயர்ப்பு, நாடகம், உளவியல் மற்றும் சிறுவர் இலக்கியமெனப் பல்வேறு துறைகளிலும் கோலோச்சியவர். ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளிலொருவரான இவரொரு செயல்வீரரும் கூட. இவரது வெளிவந்த ஒரே நாவல் 'மனக்கண்'. இந்நாவல் ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்த நவீனம். இந்நாவலின் பிரதியினைப் பெறுவதற்காக நாம் பெற்ற சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதன் பிரதியினை வைத்திருந்த திருமதி கமலினி செல்வராஜனுடன் தொடர்பு கொண்டபொழுது அவர் அப்பொழுது கேட்ட பணத்தொகையினை எம்மால் கொடுக்க முடியாது போனதால் அம்முயற்சி தடைபட்டுப் போனது. மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர் அதனைக் கிழக்கிலங்கையின் பல்கலைக்கழகத்துக்குக் கொடுத்து விட்டதாக அறியத்தந்தார். பின்னர் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் இணையத்தின் வாயிலாகத் தொடர்பு கொண்டு மனக்கண் நாவலின் பிரதியினைப் பெற்றுக் கொண்டோம். அதனைத் தேடுவதற்கும், அத்தியாயங்களைப் பிரதியெடுப்பதற்கும் மட்டுமே மிகவும் நியாயமான கட்டணம் அறவிட்டார்கள். ஆனால் அவர்கள் அனுப்பிய நாவற் பிரதி சாதாரண A1 பக்க அளவிலமைந்தருந்ததனால் வாசிக்க முடியாத அளவுக்குச் சிறியதாகவிருந்தது. இதனால் அப்பிரதியினை ததமிழகத்திலுள்ள சிநேகா பதிப்பக பாலாஜி அவர்களுக்கு அனுப்பி, அவர் மூலம் அங்குள்ள ஒருவர் மூலம் மீண்டும் கட்டண அடிப்படையில் தட்டச்சு செய்து வரவழைத்தோம். அதே சமயம் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்திடமிருந்து எமக்குக் கிடைத்த பிரதியில் அத்தியாயம் 30 விடுபட்டுப் போயிருந்தது. இதற்காக மீண்டும் பலமுறை இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் இணையம் வாயிலாக எடுத்த முயற்சிகள் பலனற்றுப் போகவே கொழும்பிலுள்ள சில பதிப்பகங்களுடன் தொடர்பு கொண்டோம். அவர்களும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பின்னர் 'பதிவுகள்' இணைய இதழில் இதுபற்றி அறிவித்தல் கொடுத்து அ.ந.க.வின் ப்டைப்புகளையும் மேற்படி அத்தியாயத்தையும் எமக்குப் பெற்றுத்தர உதவுவோருக்கு செலவிடும் மணித்தியால அடிப்படையில் வேதனம் தருவோமென்று அறிவித்தோம். அதனடிப்படையில் கொழும்பிலிருந்து பேரின்பநாயகம் மயூரன் என்னும் தமிழ் இலக்கிய ஆர்வலர் தொடர்பு கொண்டு அ.ந.கவின் ஆங்கிலக் கட்டுரைகள் சில, அ.ந.க.மொழிபெயர்த்த நாவலான எமிலி சோலாவின் 'நானா' , மேலும் சில கவிதைகளையும் எமக்குப் பெற்றுத் தந்தார். நண்பர் பலதடவைகள் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்தில் மனக்கண் நாவலின் முப்பதாவது அத்தியாயத்தைத் தேடிப்பார்த்தும் அதற்கான தடயமெதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பதிவுகளில் அ.ந.க.வின் மனக்கண் நாவலை அந்த அத்தியாயம் இல்லாமலே வெளியிட முடிவு செய்தோம். யாராவது அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் 30இனை வைத்திருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளவும். எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com



தொடர்நாவல்: மனக்கண்

- அ.ந.கந்தசாமி -

31-ம் அத்தியாயம்: சுரேஷின் சங்கட நிலை!

யாழ்ப்பாணம் சேர்ந்ததும் சுரேஷ் டாக்டர் நெல்சனைச் சந்தித்து, சிவநேசரின் கண்ணை அங்கு தகுந்த பாதுகாப்போடு வைக்க ஏற்பாடு செய்துவிட்டு, ‘அமராவதி’க்கு ஸ்ரீதரைச் சந்திக்கச் சென்றான். கண் எவ்வாறு கிடைத்தது என்ற டாக்டர் நெல்சனின் கேள்விக்கு பம்பாயில் புதிதாக ஒரு கண் வங்கி ஆரம்பித்திருப்பதாகவும் அங்குள்ள தனது நண்பன் ஒருவனின் உதவியால் ஸ்ரீதருக்குத் தன்னால் அக் கண்களைப் பெற முடிந்ததென்றும் கூறினான் அவன். அடுத்து இரண்டு மாதங்களுக்கும் இந்தப் பொய்யையே எல்லோருக்கும் திரும்பத் திரும்பச் சொல்லுவதென்று முடிவு கட்டி விட்டான் அவன்.

‘அமராவதி’ வளவில் ஸ்ரீதர் குரல் கண்டதும் சுரேஷ், “ஸ்ரீதர் நீ அதிர்ஷ்டசாலி. பம்பாயிலுள்ள ஒரு கண் வங்கியிலிருந்து உனக்கு ஒரு கண் கிடைத்திருக்கிறது. சீக்கிரமே உனக்கு சந்திர சிகிச்சை நடைபெறும். டாக்டர் நெல்சன் எல்லாவற்றையும் கவனித்து கொள்வார். உன் சுசீலாவை, நீ இப்பொழுது உன் கண்களால் பார்க்கலாம்” என்றான்.

இச் செய்தியைக் கேட்ட ஸ்ரீதரும் சுசீலாவும் அடைந்த இன்பத்துக்கு அளவேயில்லை. பாக்கியமும் மெருமகிழ்வெய்தினாள். ஆனால் சந்திர சிகிச்சையின் போது தந்தை சிவநேசர் பக்கத்தில் இல்லையே என்ற கவலை ஸ்ரீதரைப் பிடுங்கித் தின்னவே செய்தது.

இது நடந்த மூன்று தினங்களில் டாக்டர் நெல்சன் சந்திர சிகிச்சையை நடத்திவிட்டார். சுசீலா இரவும் பகலும் ஸ்ரீதருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பணிவிடைகள் செய்து வந்தாள்.

“இந்த முறை கட்டவிழ்த்ததும் என்னைக் காண்பீர்கள். ஆனால், என்னைக் கண்டதும் சென்ற முறை செய்தது போல் பழையபடி கண்ணைப் பிய்த்துக் கொள்ள மாட்டீர்களல்லவா” என்று சந்திரசிகிச்சை முடிந்ததும் சுசீலா ஸ்ரீதரிடம் கேட்டான்.

“சீ, சீ நீ என்ன பேசுகிறாய்? எனக்கேன் இக் கண்? உன்னைப் பார்ப்பதற்காகத் தானே சந்திர சிகிச்சை என்றும் இச்சித்திரவதையை நான் மேற் கொண்டிருக்கிறேன்.” என்றான் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் சுரேஷிடம் பேசும் போது “சுரேஷ், என் கண்ணின் கட்டவிழ்த்ததும் நான் சுசீலாவைப் பார்ப்பேன். முரளியைப் பார்ப்பேன், உன்னையும் பார்ப்பேன். ஆனால் அப்பாவைப் பார்க்க முடியாதே. அப்பாவும் பக்கத்திலிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். அவர் இந்த நேரம் பார்த்து இந்தியச் சுற்றுப் பிரயணத்துக்குப் போயிருக்கிறாரே. என்னுடைய துரதிர்ஷ்டந்தான் அது. அப்பா எப்போது வருவார்?” என்று
கேட்டான்.

இக் கேள்விக்கு என்ன பதிலளிப்பதென்று சுரேசுக்குத் தெரியவில்லை. “அப்பா வந்து விட்டார். இதோ உன் கண்களில் வீற்றிருக்கிறார். சீக்கிரமே அவர் உன் பார்வையாக கலந்து விடுவார்” என்று சொல்ல வேண்டும் போயிருந்தது அவனுக்கு. ஆனால் அந்த ஆசையை அடக்கிக் கொண்டு முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டான் அவன். “அப்பா கல்வெட்டித் துறையில் என் வீட்டில் இருக்கிறார். தன் புதிய மைந்தன் வீட்டில் இருக்கிறார். வெள்ளி கலசத்துள் அஸ்தியாக வீற்றிருக்கிறார். இன்னும் ஸ்ரீதர், அவர் இப்போது அப்பா
மட்டுமல்ல, சிறு வயதிலேயே தந்தையை இழந்த எனக்கும் அப்பாவாகிவிட்டார் அவர். என் முதல் தந்தையை அவரது சாவின் மூலம் நானிழந்தேன். ஆனால் எனது இரண்டாவது தந்தையை அவர் செத்த பிறகு நான் பெற்றேன். ஆம் சிவநேசருக்குக் கொள்ளி போட்ட மகன் நான்” என்றும் சொல்ல விரும்பினான் அவன். ஆனால் சொல்வதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்பதை நினைத்ததும் அவ்வாறு சொல்லாமல் தன் நாவை அடக்கிக் கொண்டான் அவன்.

ஸ்ரீதரின் கேள்விக்குத் தாய் பாக்கியம் பதிலளித்தாள். “அப்பா கடைசியாக எழுதிய கடிதத்தில் தான் இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் இந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்யப் போவதாக எழுதியிருந்தார். அடிக்கடி கடிதங்களை எதிர்பார்க்க வேண்டாமென்றும் எழுதியிருக்கிறார்.” என்றாள்.

டாக்டர் நெல்சனின் சந்திரசிகிச்சை நல்ல பலனையளித்தது. சீக்கிரமே பார்வையை பெற்று உலகைப் பரவசத்தோடு நோக்கினான் ஸ்ரீதர். அவனது காதற் கண்ணுக்கு இப்பொழுது சுசீலா அப்சரஸ் போல தோன்றினாள். முரளியோ, அவன் மனதை முற்றாகக் கவர்ந்துவிட்டான். முழு உலகமும் அழகின் கோவிலாக, வண்ணக் காவியமாகக் காட்சியளித்தது அவனுக்கு. கண் பார்வை தெரியத் தொடங்கிய அடுத்த நாளே அவன் ஓவியன் தீட்டும் தன் பொழுது போக்கை மீண்டும் ஆரம்பித்துவிட்டான். அவன் தீட்ட ஆரம்பித்த
முதலாவது படம் சுசீலாவும் முரளியுமாகும். ஆனால் முரளியை ஓவியம் தீட்டுவதற்கும் போதும் போதுமென்றாகிவிட்டது. அவன் ஓரிடத்தில் அமைதியாக இருந்து ஓவியனுடன் ஒத்துழைத்தால் தானே.

கண் தெரிய ஆரம்பித்த ஸ்ரீதருக்கு இப்பொழுது ‘அமராவதி’யில் ஒதுங்கிக் கிடக்க முடியவில்லை. முதலில் ‘அமராவதி’ முழுவதையும் பல தடவை சுற்றிப் பார்த்தான். மானையும் மயிலையும் காடுகளையும், தோட்டத்துப் பூக்களையும் தடாகத்தில் பூத்த தாமரைகளையும் நீலோற்பலத்தையும் கண்டு களித்தான். குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடுவதையும் ஆமைகள் தண்ணீருள் மெல்ல ஊர்வதையும் கண்டு குதூகலித்தான். தாயையும் மனைவியையும் முரளியையும் காரில் கூட்டிக் கொண்டு கோவில்களுக்குச் சென்றான். அடிக்கடி கீரிமலைக்குப் போய் நீராடினான். அங்கே கதிரின் மறைவையும் மதியின் குளிர்ச்சியையும் பார்த்து மகிழ்வதற்காக இருட்டும்
நேரம் எல்லோருமாக மேல் மாடியில் வீற்றிருப்பார்கள். ஓரிரவு மழை கொட்டுவதையும், மின்னல் வெட்டுவதையும் பார்த்தபோது அவன் அந்தப் புதுமையைச் சொல்லி முடியாது. “சுசீலா, மழையைப் பார், மழையைப் பார்” என்று குழந்தை போல் கூச்சலிட்டான். அதைக் கண்ட பாக்கியம் சிரித்துக் கொண்டு “இந்த வீட்டின் குழந்தை முரளியல்ல, ஸ்ரீதர் தான்.” என்று கூறினாள். அதற்கு “போ அம்மா,” என்று
கோவித்துக் கொண்டான் ஸ்ரீதர். ஸ்ரீதரை வியப்பிலாழ்த்திய இன்னொரு பொருள் நிலைக் கண்ணாடி. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாகப் பார்க்காத தன் முகத்தை நிலைக் கண்ணாடியில் அவன் பார்த்த போது அவனடைந்த அதிசயத்தைச் சொல்ல முடியாது. “நான் அப்பா
போலல்லவா இருக்கிறேன்” என்று கூறினான் அவன். இன்னும் அடிக்கடி குடும்பத்துடன் சினிமா, நாடகம், நாட்டியம் முதலியவற்றைப் பார்க்கப் போவதும் அவனது வழக்கமாயிற்று. பழையபடி அழகழகான உடைகளைத் தெரிந்தெடுத்து உடுத்திக் கொள்ளும் பழக்கத்தையும்
அவள் மீண்டும் மேற்கொண்டான். தனக்கும், சுசீலாவுக்கும், முரளிக்கும் துணி வாங்க அடிக்கடி துணிக் கடைகளுக்கும் போக ஆரம்பித்தாள்.

ஆனால் இந்த இன்ப அனுபவங்களிடையேயும் தன் நண்பன் சுரேசும் அவள் ஒரு நிமிஷமும் பிறக்கவில்லை. அடிக்கடி சுசீலாவிடமும் தாயாரிடமும் “அம்மா சுரேஷின் ஊக்கத்தாலல்லவா நான் மீண்டும் கண் பார்வையைப் பெற்றேன். அவன் செய்த நன்றிக்குப் பதிலாக நான் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறதே.” என்று கவலையோடு கூறுவான். அவன் பேச்சை அவர்கள் எல்லோரும் ஆமோதிப்பார்கள். உண்மையில் சுரேஷ் ‘அமராவதி’ வளவிலுள்ள எல்லோராலும் ஒரு தெய்வம் போலவே
கொண்டாடப்படலானான். சுசீலா அவனை இப்பொழுது சுரேஷ் அண்ணா என்று அழைக்க ஆரம்பித்திருந்தாள். பாக்கியம் அவனைத் தனது மற்றொரு மகனாகக் கருதத் தொடங்கிவிட்டாள்.

ஒரு நாள் சுரேஷ் ‘அமராவதி’க்கு வந்திருந்த பொழுது ஸ்ரீதர் அவனது கல்யாணத்தைப் பற்றி விசாரித்தான். அதற்கு அவன் “அதுதான் உனக்குத் தெரியுமே. என் மாமன் மகளை நான் கட்டவிருக்கிறேன். இன்னும் இரண்டு மாதங்களின் பின்னால் கல்யாணம் நடைபெறவிருக்கிறது. நீயும் சுசீலாவும் தவறாது வர வேண்டும்.” என்றான்.

“வருவதா? நானும் சுசீலாவும் அம்மாவும் தான் உனது கல்யாணத்தை முன்னின்று நடத்துவோம்.” என்று கூறினான்.

அதன் பின் நண்பர்கள் இருவரும் கிஷ்கிந்தா நினைவுகள் பற்றிப் பேசினார்கள். “நீ கிஷ்கிந்தாவில் இருக்கும் போது சமுதாய விஷயங்கள் பற்றி அடிக்கடி பேசுவாயல்லவா? ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்தால் உலகில் எத்தனையோ இன்னல்கள் விளைகின்றனவென்று சொல்வாயே. அதன் உண்மை எனக்குப் போகப் போகத்தான் தெரிந்தது. என் வாழ்க்கையையே எடுத்துப் பார். சிறு
வயதில் என்னால் எல்லாருடனும் கலந்து சாதாரணமான பிள்ளையாக வளர முடியவில்லை. பல்கலைக்கழகத்தில் கூட நான் பணக்காரனென்பதனால் மாணவர்கள் என்னுடன் நெருங்கிப் பழகக் கூசினார்கள். இதனால் ஏற்பட்ட தனிமை தான் எடுத்த எடுப்பிலேயே பத்மா மீது எனக்கு மோகம் ஏற்படும்படி செய்திருக்க வேண்டும். இன்றைக்கு யோசித்துப் பார்த்தால், பத்மா என்னை நிராகரிப்பாள் என்பதற்கான பண்புகள் அப்பொழுதே அவளிடம் இருந்தன என்பது எனக்குத் தெரியவே செய்கிறது. இருந்தும் நான் அவள் காதலைப் பெரிதாக மதித்தேன். இதற்கெல்லாம் காரணம், பணக்காரனென்பதால் பலருடனும் பழகி மனித இயல்புகளை அளவிட நான் அறிந்திராததல்லவா? அப்பா என்னை அந்தஸ்து என்றும் கூட்டுள் அடைந்து வைத்து விட்டார்.”

சுரேஷ் புன்னகையுடன், “என்ன என்ன, நீ கண்களை மூடிக் கொண்டிருந்த காலத்தில் சும்மா இருக்கவில்லை போல்தெரிகிறதே, அந்தக் காலம் முழுவதும் நீ ஆழ்ந்த சிந்தனையில் அல்லவா ஈடுபட்டிருக்கிறாய் போலிருக்கிறது. இது விஷயங்களில் இப்பொழுது நீ எனக்கே பாடம் படிப்பிப்பாய் போலிருக்கிறதே” என்றான்.

ஸ்ரீதர் சுரேஷிடம், “ஏன் நானும் உன் போல ஒரு பெரியவன் மாதிரிப் பேசுவது உனக்குப் பிடிக்கவில்லையா? இன்னும் நான் பணக்காரனாதலால், எனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைப்பதற்கு வழியில்லாமல் எவ்வாறு திண்டாடினேன்? நீ இன்று எனக்கு உயிருக்குயிரான நண்பன். உன்னைக் கூட அப்பா தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தல்லவா பிடித்துக் கொடுத்தார். என்னைப் பொறுத்தவரையில் அப்பா என் மீது அளவற்ற அன்பு கொண்டவர் என்பது உண்மைதான் என்றாலும் நிச்சயம் கொள்கை அளவில் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. பணத்தின் சக்தி மீது, பரம்பரை அந்தஸ்து நாமே ஆளப் பிறந்தோம் போன்ற கொள்கைகள் மீதும் அவருக்கு நம்பிக்கை. அதன் பயனாகப் பெரும் திறமையும் அறிவும் படைத்த அவர் சமுதாயத்துக்கு உதவாதவராகிவிட்டார். அவரைக் கண்ட
எல்லோரும் அவரைக் கும்பிடுகிறார். ஆனால் எவரும் அவரிடம் மனம் விட்டு பேசுவதை நான் இதுவரை கண்டதில்லை. இதனால் சமுதாயத் தொடர்பினால் ஏற்படும் மனித உறவுகளின் இனிமை அவருக்குக் கிடைக்கவில்லை. இன்னும் பணம் என்ன அவ்வளவு சிறந்ததா? நான் பணக்காரனாயிருந்தும் காதலிழப்பாலும் கண்ணிழப்பாலும் பட்ட இன்னல் எவ்வளவு? பணத்தை விட மனித உறவுதான் பெரிது. என் கண்கள் மீளக் கிடைப்பதற்குப் பணம் ஓரளவு உதவியிருந்தாலும் உன் நட்புத்தானே பெரிதும் உதவியது? நான் பணக்காரனாயிருந்ததோடு பணக்கார மிடுக்குக் காட்டியிருந்தால் நிச்சயம் நீ என் நண்பனாகி இவ்வளவு உதவி செய்திருக்க மாட்டாய்.
உன்மையில் சிறு விஷயங்களில் நான் சற்றுப் மிடுக்காக நடந்து கொண்டிருந்தாலும் கூட “ஆ, பணக்காரனல்லவா? அது தான் இப்படி என்னைத் துச்சமாக நடத்துகிறான்” என்று கூட நீ எண்ணியிருப்பாய். ஆம், சுரேஷ். பணக்காரனை மற்றவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் பார்ப்பார்கள். பணம் மனிதர்களின் உறவைக் கெடுக்கிறது. ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமை இல்லாவிட்டால், இவ்விதப்
பிரச்சினைகளுக்கே இவ்வுலகில் இடமில்லையல்லவா? அப்பொழுது மனிதனும் மனிதனும் நம் உண்மை இயல்புகளோடு பழகி வாழ்க்கையின் மென்மையான இனிமைகளைச் சுவைக்க முடியும்” என்றான்.

ஸ்ரீதரின் பிரசங்கத்தை வியப்போடு கேட்ட சுரேஷ் - அவன் எவ்வளவு தூரம் வளர்ந்து விட்டான் என்று ஆச்சரியப்பட்டான்.

ஸ்ரீதர் மேலும் தொடர்ந்தான்: “நிச்சயம் இந்த வேலியடைத்த வாழ்க்கையை நான் விரும்பவில்லை. அப்பா என்னை வளர்த்தது போல் என் முரளியை நான் வளர்க்கப் போவதில்லை. ‘அமராவதி’யைக் கண்டு மக்கள் அஞ்சக் கூடாது. அன்பு செலுத்த வேண்டும். முரளியை மூலையில் நின்று விளையாடு என்று நான் வற்புறுத்த மாட்டேன். முற்றத்தில் விளையாட இடமளிக்கப் போகிறேன். இன்னும்
இப்பொழுது என் கண்கள் சுகமாகிவிட்டதால் என் பட்டப்படிப்பை விரைவில் முடித்துக் கொண்டு சமுதாய பணிகளில் ஈடுபடப் போகிறேன். அதற்கு முதற் படியாக என்ன செய்ய எண்ணியிருக்கிறேன் தெரியுமா?” என்றான்.

அதற்குப் பதிலாக சுரேஷ் ஒரு கேள்வியைத் தனது முகத்தில் படர விட்டான்.

ஸ்ரீதர் “முதலில் இந்த ‘அமராவதி’யைச் சுற்றியிருக்கும் கண்ணாடித் துண்டுகள் குத்திய பெரிய மதிலை இடித்துவிட்டுச் சிறு கைப்பிடிச் சுவராக அதை அமைக்கப் போகிறேன்.” என்றான்.

அதைக் கேட்ட சுரேஷ் சிரித்தான். “பெரிய மதிலை சிறிய சுவராக்கிவிட்டால் போதுமா? நிலையல்லவா மாற வேண்டும்.” என்றான்.

“அதுதான் மாறி விட்டதே. இது அக்கால நிலையின் வெளியுருவம்” என்றான் ஸ்ரீதர்.

சுரேஷ், “ஆனால் இது பற்றி உன் அப்பா என்ன நினைப்பார் என்று நீ யோசிக்கவில்லையே” என்றான்.

அதற்கு ஸ்ரீதர் “அப்பா இப்பொழுது பெரிதும் மாறிவிட்ட மனிதர். இல்லாவிட்டால் பத்மாவை எனக்குக் கட்டி வைப்பதற்கு இவ்வளவு முயன்றிருப்பாரா என்ன? இன்னும் நான் கண்ணிழந்த பிறகு அவருக்கு என் மீதுள்ள அன்பு மிக மிக அதிகரித்து விட்டது. இப்போது நான் செய்வது எதையுமே அவர் ஆட்சேபிக்க மாட்டார். இன்னும் நான் என்ன கெடுதியா செய்ய எண்ணுகிறேன்” என்றான்
ஸ்ரீதர்.

அதன் பின் ஸ்ரீதர் சிவநேசர் இந்தியாவிலிருந்து வந்ததும் நான் கண் பெற்று விளங்குவதைக் கண்டு எவ்வளவு மகிழ்ச்சியடைவார் என்பது பற்றி விவரித்தான்.

“எல்லாம் நீ செய்த செயல் என்று தெரிந்ததும் அவர் ஆனந்தப் பரவசமடைவார். தன் சொத்து முழுவதையும் உனக்குத் தந்தாலும் தந்து விடுவார்” என்றான்.

“சிவநேசர் தன் சொத்தை எனக்களிப்பார். கண்களையோ அவர் உனக்களித்துவிட்டாரே” என்று இரகசியம் பேசியது சுரேஷின் உள்ளம். ஆனால் அதை வெளியே சொல்ல இது தருணமல்ல. அவர் இறந்த திகதியிலிருந்து இரண்டு மாதம் கழிய வேண்டும். ஆனால் இரண்டு மாதம் கழிய, அவன் சொல்லவிருந்த விஷயம். அதைச் சொல்வது மட்டுமல்ல அந்தச் சிவநேசரைச் சிமிழில் அடைந்த பிடி
சாம்பலாக ஸ்ரீதர் கையில் நான் ஒப்படைக்க வேண்டியிருந்ததை நினைத்தும், சுரேஷின் உள்ளம் நடுங்கியது. ‘அமராவதி’ இச் செய்தியை எப்படி ஏற்கப் போகிறது என்றெண்ணியதும் எத்தனை பெரிய பொறுப்பைச் செத்துப் போன சிவநேசர் தன் தோளிலே வைத்துவிட்டுச் சென்று விட்டார் என்பது அவனுக்கு விளங்கியது.

“அன்போடு எதிர்பார்க்கப்படும் அப்பாவுக்குப் பதில் இதோ அவரது எலும்புத் துண்டுகள்.” என்று ஸ்ரீதரிடம் சிவநேசரின் அஸ்திக் கலசத்தை ஒப்படைக்க வேண்டும். அது இலேசான காரியமல்ல.” என்று எண்ணிய சுரேஷ் மேலும் அங்கே நிற்காது விடை பெற்றுக் கொண்டு வல்வெட்டித் துறையிலிருந்த தன்னில்லத்தை நோக்கி காரை ஓட்டினான்.


[அடுத்த இதழில் முடியும்)
தொடர்நாவல்: மனக்கண்

- அ.ந.கந்தசாமி

29-ம் அத்தியாயம் மர்மக் கடிதம்!

சுரேசும் தாயும் சொன்ன விவரங்களால் ஸ்ரீதரின் உள்ளம் இப்பொழுது சுசீலாவைச் சுற்றிப் படர்ந்தது. "என்னே அவள் தியாகம், அவள் அன்பு. முறிந்து சரிந்த என் வாழ்க்கைக்கு அன்று அவள் மட்டும் துணிந்து முட்டுக் கொடுக்க முன் வந்திருக்காவிட்டால், நான் இன்று உயிருடன் இருப்பேனா? அப்பா நினைத்தது போல் பத்மாவைப் பலாத்காரமாகத் தூக்கி வந்து எனக்கு மனைவியாக்கியிருந்தால்... சீ அதுவும் ஒரு கல்யாணமா? அதை விட எனக்கு வேறு நரகம் வேண்டியிருந்திருக்குமா?" என்று பல விதமான சிந்தனைகள் சங்கிலித் தொடர் ஒன்றின் பின்னொன்றாக நகர்த்து வந்தன.

அன்னையின் பேச்சுகளைக் கேட்ட ஸ்ரீதர் "அம்மா நான் சுசீலாவுக்கு எவ்வளவு அநியாயம் செய்துவிட்டேன். மோசக்காரி - உன்னை நான் வெறுக்கிறேன் என்று அவளைப் பார்த்து நான் எத்தனை தரம் வாய் கூசாது கூறியிருக்கிறேன். பொறுமைக்குப் பூமாதேவியை உதாரணம் சொல்வார்கள். ஆனால் அம்மா சுசீலாவைப் போல் பொறுமைக்காரியை நீ கண்டதுண்டா?" என்றான்.

பாக்கியம், "ஆம், ஸ்ரீதர். சுசீலா சாதாரண பெண்ணல்ல. அன்பின் உருவம். தியாகமே உருவானவள். இந்த ‘அமராவதி’யின் அதிர்ஷ்டத்தினால் இங்கு வந்து சேர்ந்தவள். ஆனாலும் உன்னைப் பொறுத்தவரையில் உனக்குப் பத்மா மீது தானே இன்றும் உண்மை ஆசை? அதனால்தானே இன்னும் சுசீலாவைப் பத்மா என்று அழைக்கிறாய்" என்றாள்.

ஸ்ரீதர் "இல்லை அம்மா, நான் என்ன செய்வேன்? பத்மாவின் மோசடி முன்னரே எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவளைத் தொடர்ந்து நேசித்திருப்பேனா? இனி மேல் பத்மா என்ற பேச்சையே எடுக்க வேண்டாம். அந்தச் சொல்லே என் காதில் விழ வேண்டாம். நான் அவளை வெறுக்கிறேன். இனி மேல் சுசீலாவே எனக்கு எல்லாம். பேராசிரியர் நோர்த்லி எனக்குக் கண்களைத் தந்ததும் என் ஊனக் கண்களுக்கு முன்னால் சுசீலா வந்தாள். அவளை அந்த உருவில் நேசிக்க முடியாததால் என் கண்களை நான் அன்று குத்திக் கொண்டேன். பார்வையை இழந்த என் மனக்கண்ணில் அவள் பத்மாவானாள். ஆனால், அந்தோ, நான் எத்தகைய மடையன்? என்னை ஆசை காட்டி மோசம் செய்தவளுக்கு என் மனக் கண்ணிலே இடம் கிடைத்ததே. ஆனால் அந்த மனக்கண்ணுக்கு அப்பாலும் ஒரு மூன்றாவது கண் இருப்பது போலல்லவா இப்பொழுது தோன்றுகிறது. அந்தக் கண்ணிலே இன்று சுசீலாவை நான் காண்கிறேன். அங்கு அவள் ஓர் ஒளிப்பிழம்பாகக் காட்சியளிக்கிறாள். சீதை, சாவித்திரி, நளாயினி, கண்ணகி போல அவள் அங்கே நடமாடுகிறாள்..."

பாக்கியம் மகனின் மன மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாளாயினும், சுசீலாவின் மீது அவள் கொண்ட பச்சாத்தாபத்தினால் அவன் உள்ளம் கவலையுற்றுக் கலங்குவதைக் கண்டு மனம் வருந்தினாள். சுரேஷைப் பார்த்து "வா சுரேஷ். இப்பொழுது ஸ்ரீதருக்கு எல்லாம் தெரிந்து விட்டது. நாங்கள் உள்ளே போய்ச் சுசீலாவை அனுப்புவோம். இருவரும் பேசிக் கொள்ளட்டும்." என்று கிளப்பினாள். பாக்கியம் முரளியைத் தூக்கிக் கொண்டு முன்னே நடக்க, சுரேஷ் அவளைப் பின் தொடர்ந்தாள்.

சுசீலா ஸ்ரீதருக்குச் சமீபமாக வந்து உட்கார்ந்தாள். "என்ன என்னை அழைத்தீர்களா?" என்றாள் அவள்.

"ஆம், சுசீலா உன்னை அழைத்தேன். உன்னுடன் பேச வேண்டும்." என்றான் ஸ்ரீதர்.

"என்ன, சுசீலாவா? புதுமையாயிருக்கிறதே. ஏன் என்னை வழக்கம் போல் பத்மா என்றழைக்காமல் சுசீலாவென்றழைக்கிறீர்கள்?" என்றாள் அவள் ஆச்சரியத்துடன்.

"சுசீலா, இனிமேல் நான் உன்னைப் பத்மா என்றழைக்க மாட்டேன். பத்மா என் இதயத்திலிருந்து அஸ்தமித்துவிட்டாள். சுசீலாதான் இனி எனக்கெல்லாம். சுரேசும் அம்மாவும் எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டார்கள். சுசீலா நீ அல்ல மோசக்காரி, பத்மா தான் மோசக்காரி. நீ என் அன்பின் தெய்வம். ஆசைக் கொழுந்து, வாழ்க்கையின் விளக்கு"

அதற்கு மேலும் ஸ்ரீதரின் வார்த்தைகளை அவளால் கேட்டுக் கொண்டு நிற்கமுடியவில்லை. உணர்ச்சிப் பெருக்கிலே அவள் மனம் உடைந்தது. விழிகள் ஆனந்தக் கண்ணீர் பெருக்கின. வாழ்க்கையின் பேற்றை அடைந்துவிட்டது போல, பரம ஏழை ஒருவன் பெரும் பொக்கிஷத்தைப் பெற்றுவிட்டது போல இன்பத்தின் உச்சக் கட்டத்தை அடைந்தாள் அவள்.

"சுசீலா..." அவர் அந்த வார்த்தைகளைச் சொல்லும் போது எவ்வளவு இனிமையாயிருக்கிறது. இது போன்ற இன்பம் இவ்வுலகில் வேறு யாருக்குக் கிடைக்கும்" என்று இன்பத் திகைப்பிலே மயங்கி நின்றாள் அவள்.

ஏறக்குறைய இரண்டு நீண்ட வருடங்களாகச் சுசீலா இவ்வுலகில் இறந்து போயிருந்தாள். அப்பெயரே மறக்கப்பட்டுப் போயிருந்தது. உண்மையில் அது தன்னை நிலத்துள் உயிருடன் புதைந்தது போன்ற உணர்ச்சியைச் சுசீலாவுக்கு அளித்து வந்து கொண்டிருந்தது. சகிக்க முடியாத அந்தத் துன்பத்தை அவள் சகித்து வந்தது ஒரே ஒரு காரணத்தை முன்னிட்டுத் தான். ஸ்ரீதர் வாழ்க்கைக்கு இன்பம் அளித்து வந்தால் போதும் என்பதே அது. அதற்காகவே எவராலும் செயற்கரிய அந்தத் தியாகத்தைச் செய்து வந்தாள் அவள். அதனால் ஏற்பட்ட வேதனையைத்தான் பற்களைக் கடித்துக் கொண்டு பொறுத்து வந்தாள். ஆனால் இன்று மறுபடியும் அவளது சொந்தப் பெயர் அவளிடம் மீண்ட போது எல்லையற்ற இன்ப உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. நிலத்தில் புதையுண்டு கிடந்த அவள் பழையபடி வெளியே வந்து விட்டாள். வந்ததும் நெஞ்சை அகல விரித்து, பிராண வாயுவை முழு மூச்சாக இழுத்து எல்லையற்ற பூரிப்படைந்தாள் அவள்.

சுசீலா ஸ்ரீதரை நோக்கி "இப்பொழுதாவது உங்களுக்கு உண்மை தெரிந்ததே, அது போதும். எங்கே உங்கள் வாழ்க்கை முழுவதுமே இது தெரியாமலே போய்விடுமோ என்று அஞ்சினேன். ஆனால் நான் அதிர்ஷ்டக்காரி. எந்த அனுபவத்துக்காக நான் ஏங்கித் தவங் கிடைந்தேனோ, அதை நான் பெற்றுவிட்டேன். என்னைச் சுசீலா என்று இன்று உங்கள் வாயால் அழைத்தீர்களே, அதை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். இந்த அனுபவத்தைப் பெற்ற நான் இப்போதே இறந்துவிட்டாற் கூடப் பரவாயில்லை. என் வாழ்க்கை மலர்ந்து விட்டது." என்றாள்.

ஸ்ரீதர் சுசீலாவைத் தன் கரங்களால் அணைத்துக் கொண்டான். தன் காதலியை அன்று தான் வாழ்க்கையில் முதல் முதலாகச் சந்தித்து அவளது அன்பு மொழியைப் பெற்ற ஒரு காதலன் என்ன நிலையில் இருப்பானோ, அந்த நிலையில் ஸ்ரீதர் இருந்தான் அப்பொழுது. "சுசீலா, நீயே என் உயிர். உன்னை நான் ஒரு போதும் பிரியேன்." என்று ஆயிரம் தடவை கூறிவிட்டான் அவன்.

சுசீலாவைப் பொறுத்தவரையில் ஸ்ரீதரின் அணைப்பையும் ஆலிங்கனங்களையும் அவள் தினசரி அனுபவித்து வந்தாளாயினும், இது வரை பத்மா என்ற எண்ணத்திலும் பாவனையிலுமே அவை அவளுக்குக் கிடைத்தனவே அல்லாமல், சுசீலா என்பதற்காக ஒரு முத்தம் கூட ஸ்ரீதர் அவளுக்கு அளித்ததில்லை. உண்மையில் இன்று தான் சுசீலா முதன் முதலாக ஸ்ரீதரின் அன்புக்கும் அணைப்புக்கும் ஆளானாள். பார்க்கப் போனால் இன்று தான் அவளது முதலாவது காதலனுபவம் என்று கூடச் சொல்லலாம்.

ஸ்ரீதரும், சுசீலாவும் தம்மை மறந்து இவ்வாறு வீற்றிருந்ததைப் பாக்கியம் முரளியுடன் வீட்டு விறாந்தையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்ரீதர் வாழ்க்கையின் பெரிய புதிரொன்று விடுபட்டுச் சுசீலாவும் ஸ்ரீதரும் முன்னிலும் நெருங்கிய அன்பு கொண்டவர்களாகியதைக் கண்டு அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

ஸ்ரீதர் "சுசீலா, இன்று உலகிலேயே என்னைப் போல் சந்தோஷமானவன் யாரும் கிடைக்கமட்டார்கள். ஆனால் ஒரே ஒரு வேதனை. எந்தச் சுசீலாவைப் பார்க்க மாட்டேன் என்று என் கண்களை நான் அன்று குத்திக் கொண்டேனோ அந்தச் சுசீலாவை மீண்டும் காணத் துடியாய்த் துடிக்கிறேன் நான். ஆனால் அது முடியக் கூடிய காரியமா, என்ன? எனக்குக் கண் வேண்டும். சுசீலா, கண் வேண்டும். உன்னைக் காணக் கண் வேண்டும்" என்று கதறினான்.

சுசீலா சுரேஷிடம் பேசினாள். "சுரேஷ், ஸ்ரீதருக்கு மீண்டும் கண் பார்வை வேண்டுமாம். அவருக்கு மறுபடியும் கண் பார்வையைத் தருவது சாத்தியமா? சாத்தியமானால் அதற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள்" என்றாள்.

சுரேஷ் "அது விஷயமாக நாளை கண் டாக்டர் நெல்சனுடன் கலந்தாலோசிப்போம்" என்றான்.

ஸ்ரீதரின் வாழ்க்கையனுபவங்களைக் கண்டு அவனுக்காக இரங்கிய உள்ளங்கள் இவ்வுலகில் பலவாயினும், அவற்றில் ஓர் உள்ளம் உண்மையில் அவனுக்காக மற்றெல்லா இதயங்களிலும் பார்க்க அதிகமாகத் துடித்துக் கதறிக் கொண்டிருந்தது. அது தான் அவனது தந்தை சிவநேசரின் இதயம். ஒரே மகன். அதிலும் சகல சிறப்புப் பண்புகளும் வாய்க்கப் பெற்ற உத்தம புத்திரன், எப்படியெல்லாமோ வாழ்க்கையைச் சுவைத்து ஆடம்பரமாக வாழ வேண்டியவன், நாடெல்லாம் போற்றச் சமுதாயத்தின் நடு நாயகமாய் நிற்க வேண்டியவன், இன்று அந்நிலையை எய்தாதது மட்டுமலல், மனிதனின் பஞ்ச புலன்களில் மிகச் சிறந்ததெனக் கருதப்படும் கண் பார்வையை இழந்து, அதன் பயனாக மூலையில் வைக்கப்பட்ட முத்தாகிவிட்டான். சிலம்புள் இடப்பட்ட இரத்தினக் கல் சப்தத்தின் மூலம் உலகத்தால் அறியப்பட்டாலும் அதன் ஒளியை யாரும் அறிய முடிவதில்லையல்லவா? ஸ்ரீதரின் நிலையும் அப்படியே ஆகிவிட்டது. வையத்துக்கு ஒளி வீசி ‘அமராவதி’க்கு அழியாது சிறப்புத் தர வேண்டிய அந்த வைரமணி துணையின்றி வீதியில் நடக்க முடியாத அந்த வாழ்வுக்கு ஆளாகிவிட்டான். இதை நினைத்தால் எவருக்கும் துயர் ஏற்படுமாயினும், சிவநேசருக்கு ஏற்பட்ட துன்பமோ அத்துடன் அமையவில்லை.

ஸ்ரீதரின் துயரம் கண் பார்வை இழப்பு மட்டுமல்ல - காதலின் தோல்வியுமல்லவா? இன்னும் மீண்ட கண் பார்வையைக் கூட அவன் இரண்டாவது தடவையும் அழித்துக் கொண்டான். இச்சம்பவங்கள் யாவற்றிலும் தன் பங்கு மிகப் பெரியது என்று சிவநேசர் நினைத்ததே அவரது துயருக்கு ஓர் எல்லைக் கோடே இல்லாமல் செய்துவிட்டது. அவர் துயரம் எல்லை தெரியும் குளம் போல அமையவில்லை. கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு முடிவற்றுத் தெரியும் அலை கடல் போன்ற பெரும் துன்பம் அவர் உள்ளத்தைக் கெளவியிருந்தது.

"ஸ்ரீதர்! அவன் பத்மாவை மணக்க விரும்பிய அந்த நேரத்தில் நான் அதற்கு எதிர்ப்பேச்சுப் பேசாமல் சம்மதித்திருந்தால் நிச்சயம் ஸ்ரீதர் - பத்மா திருமணம் சிறப்பாக நடந்திருக்குமல்லவா? ‘அமராவதி’யிலும் கொழும்பிலுமாக ஊரே வியக்கும்படி எட்டு நாள் திருமண விழா நடத்தியிருக்கலாம். ஆனால் நான் அதை அப்பொழுது எதிர்த்தேன். இதற்கிடையில் அவனும் கண் பார்வையை இழந்தான். பத்மாவும் அவளைக் கை விட்டாள். இதனால் அந்தப் பெண் மீது எனக்கு ஏற்பட்ட சினம் கொஞ்சமல்ல. ஆனால் யோசித்துப் பார்த்தால் அவள் நினைத்ததும் சரி தானே? குருடனுக்கு மனைவியாக யார்தான் விரும்புவார்கள்? இருந்தாலும் நான் மட்டும் ஸ்ரீதர் - பத்மா திருமணத்திற்கு எனது சம்மதத்தைத் தருவதில் தாமதம் செய்திருக்காவிட்டால், அத்திருமணம் நிறைவேறியே இருக்கும். கல்யாணத்துக்குப் பின் அவன் கண்களை இழந்திருந்தால் அந்தப் பெண் நிச்சயம் அதனைப் பொறுத்து வாழ்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

"எனது தாமதம் அந்தோ, ஸ்ரீதர் வாழ்க்கையைச் சீர்குலைத்தது. அதனால்தான் சுசீலாவின் ஆள் மாறாட்ட நாடகத்தை நாம் நடத்த வேண்டி ஏற்பட்டது. பார்க்கப் போனால் ஸ்ரீதர் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலி என்றே கூற வேண்டும். இல்லாவிட்டால் சுசீலா போன்ற அன்பும் பண்பும் அறிவும் அழகும் கொண்ட ஒரு பெண் குருடனான அவனைத் திருமணம் செய்ய முன் வந்திருப்பாளா? ஆனால் இந்த ஆள் மாறாட்டத்தை நாம் நடத்தியதால் அல்லவா அவன் இரண்டாவது தடவையும் குருடனானான்? தன் கண்ணைத் தானே குத்திக் கொண்டான்? இதற்கெல்லாம் மூலக் காரணம் பத்மாவைத் திருமணம் செய்ய வேண்டுமென்று அவன் கேட்டபோது நான் அதற்கு இசையாததலல்லவா? இல்லாவிட்டால், நோயினால் அவன் முதலில் கண் பார்வையை இழப்பதை யாராலும் தடுத்திருக்க முடியாவிட்டாலும் இரண்டாவது முறை அவன் கண் பார்வையை இழந்திருக்கும் நிலை ஒரு போதும் ஏற்பட்டிருக்காது. ஆகவே, இன்று அவன் கண் பார்வையற்றுக் கபோதியாய் இருப்பதற்கு நானே பொறுப்பாளி, நானே பொறுப்பாளி"

இவ்வாறு சிந்தித்து வாடிய சிவநேசர் எந்நேரமும் ஸ்ரீதரின் நிலையைப் பற்றியே எண்ணி எண்ணிக் கவலைப்பட்டதில் ஒருவித வியப்புமில்லை. ஆனால் சிவநேசர் இவ்வாறு பெருங்கவலைக்காளாகியிருந்தார் என்பதற்காக மற்றவர்களின் துயரை நாம் குறைவாகக் கருதிவிடக் கூடாது. தாய் பாக்கியம், மனைவி சுசீலா, நண்பன் சுரேஷ் ஆகியோரும் கவலைப்படவே செய்தனர். ஆனால் ஸ்ரீதரின் துயருக்கே காரணமானவர் தான் என்பதால் சிவநேசர் அனுபவித்து வந்த துன்பம் சற்று அதிகமாகத் தானிருந்தது.

புத்திர பாசத்தால் ஏற்பட்ட இத்துயரம் சிவநேசரின் போக்கிலேயே பெரிய மாற்றத்தை ஏற்பட்டுவிட்டது. அவரது அகம்பாவமும் மிடுக்கும் அதி மனித மனோபாவமும் இப்பொழுது தம் வலுவை இழந்துவிட்டன. தன் மகன் இராமச்சந்திரன் காடேகுகிறான் என்று கேள்வியுற்ற அயோத்தி மன்னன் தசரதன் போல் தன் சகல சக்திகளையும் முற்றாக இழந்து நின்றார் சிவநேசர். ஒன்றே ஒன்று தான் அவர் மனதில், இன்று தலை தூக்கி நின்றது. ஸ்ரீதர் மீது அவர் கொண்ட அளப்பறும் அன்புதான் அது. அந்த அன்பிலே உதித்து பச்சாத்தாபம் அவர் உள்ளத்தை ஒரு நிலையில் நிற்கவிடாது அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ஸ்ரீதருக்குத் தான் செய்த கொடுமைகளுக்குப் பிராயசித்தம்முண்டா என்று ஆராய்வதிலே அவர் தமது முழு நேரத்தையும் செலவிடலானார்.

இந்த மனோ நிலையில் அவர் இருக்கும்போதுதான் பத்மா செய்த மோசடியை ஸ்ரீதர் உணர்ந்து கொண்டமையையும் அதனால் சுசீலாவின் மகிமையை அவள் முற்றாக உணர்ந்து அவளை அவள் பெயராலே அழைக்கத் தொடங்கி இருந்தமையையும் பாக்கியம் அன்றிரவு அவருக்கு எடுத்துச் சொன்னாள். அதைக் கேட்ட சிவநேசர் அடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் அளவே இல்லை. இதற்குக் காரணம் தம் மருமகள் மீது அவர் கொண்டிருந்த பெரு மதிப்பும் அன்புமேயாகும்.

பத்மா போன்ற பெண்களே அதிகமாக வாழும் இவ்வுலகிலே சுசீலா போன்ற பெண் தோன்றியிருப்பது எவ்வளவு அதிசயம் என்று அவர் அடிக்கடி ஆச்சரியப்படுவதுண்டு. நீண்ட காலமாக ஸ்ரீதரைக் காதலித்த பத்மா அவன் குருடாகிவிட்டதை அறிந்ததும் தன் காதலையே மறந்துவிடத் தயாராயிருக்க, இதோ ஒரு பெண் அவன் குருடனாகிவிட்டான் என்பதற்காகவே அவன்மீது அனுதாபம் கொண்டு அவனைக் கல்யாணம் செய்ய முன் வந்திருக்கிறாள் என்றால், அது வியப்புக்கு உரிய விஷயம் தானே? இந்த வியப்பின் காரணமாகத்தான் வாழ வகையற்றுப் போன தன் அன்பு மகனுக்கு வாழ்க்கைத் துணைவியாக்கி ‘அமராவதி’ வளவுக்கு ஒரு வாரிசையும் பெற்றுத் தந்த சுசீலாவை ஒரு தந்தை தன் சொந்த மகளை நேசிப்பது போல நேசித்து வந்தார். ஆனால் இவ்வளவு அரும் பெரும் குணவதியாகிய சுசீலா, ஐயோ இன்னொருத்தியாக நடித்த அநாமதேயமாக வாழும் நிலை ஏற்பட்டதே. அவளால் தன் கணவனின் அன்புக்குப் பாத்திரமாக முடியவில்லையே என்று அவர் அடிக்கடி கவலைப்படுவதுண்டு. அதனால்தான் பாக்கியம் சொல்லிய செய்தி அவருக்குத் தேனாக இனித்தது. "சுசீலா தன் வாழ்வின் வெற்றியை அடைந்து விட்டாள். பழையபடியும் சுசீலாவாகிக் கணவனின் அன்புக்கும் பாத்திரமாகிவிட்டாள். இது எத்தகைய அற்புதமான செய்தி." என்று தனக்குள் தானே களித்தார் அவர்.

பாக்கியம் சிவநேசருடன் தன் பேச்சைத் தொடர்கையில் சுசீலாவைக் காண்பதற்குத் தனக்குக் கண்ணில்லையே என்று கவலைக்காளாகி ஸ்ரீதர் வாட்டமடைந்திருப்பதைப் பற்றியும் கூறினாள். இது சிவநேசருக்கும் பெரும் கவலையையே தந்தது. "பாவம், ஸ்ரீதர் கண் பார்வை பெறுவதற்கு ஏதாவது வழியில்லையா என்று சுரேசுடனும் டாக்டர் நெல்சனுடனும் நாளையே நாம் பேசிப் பார்க்க வேண்டும்" என்று பாக்கியத்திடம் கூறினார் அவர்.

அடுத்த நாள் சுரேஷ் டாக்டர் நெல்சனுடன் ‘அமராவதி’ வளவுக்கு வந்தான். சிவநேசர் அவர்களை வரவேற்றுபசரித்து, "ஸ்ரீதரின் கண் நிலைமை பற்றிப் பேச வேண்டும். ஸ்ரீதரின் கண்களை நன்கு ஆராய்ந்து உங்களாலானதைச் செய்ய வேண்டும். உங்களால் செய்ய முடியாவிட்டால், நாங்கள் எல்லோருமாகப் பேராசிரியர் நோர்த்லியைக் காண இங்கிலாந்துக்குப் போய் வருவோம். ஸ்ரீதர், நான், பாக்கியம், சுசீலா, நீங்கள், சுரேஷ் எல்லோருமே போய் வரலாம்! எதற்கும் ஸ்ரீதரின் கண்களை நன்கு பரிசீலியுங்கள். சென்ற தடவை அவன் கண் பார்வை

பெறுவதை நான் அடியோடு விரும்பவில்லை. அதனால் தீமைகள் தான் விளையுமென்று நான் நினைத்தேன். அது அப்படியே ஆயிற்று. ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது. அவன் கண் பார்வை பெறுவதால் யாருக்கும் தீமையில்லை. மேலும் எனக்குப் பின்னால் இந்த ‘அமராவதி’யின் பொறுப்பை ஏற்கப் போகும் அவன் கண் பார்வையற்ற அரை மனிதனாக இல்லாமல் முழு மனிதனாக விளங்க வேண்டும் என்பதே எனது ஆசையும். அவன் தனது பாட்டன் சேர் நமசிவாயம் போல் பெரும் புகழும் பெற்று இலங்க, கண் பார்வை அவனுக்குப் பெரிதும் உதவும். எங்களால் முடிந்தால் அதனை நாம் அவனுக்கு அளித்தே ஆக வேண்டும்" என்றார்.

டாக்டர் நெல்சன் அதை ஆமோதித்தபடியே ஸ்ரீதரின் கண்களை வெகு கவனமாக நீண்ட நேரம் பரிசோதித்து விட்டுப் பின் வரும் தீர்ப்பைக் கூறினார்.

"ஸ்ரீதரின் இரு கண்களில் ஒரு கண் ஒன்றுக்கும் உதவாது. அதை என்ன செய்தும் பார்வை பெறச் செய்ய முடியாது. ஆனால் மற்றதைச் சுகப்படுத்த முடியும். எனினும் அதற்கு இன்னொருவனின் ‘கோர்னியா’ என்னும் கண்ணின் ஒரு பகுதியை எடுத்து அவன் கண்களில் ஒட்ட வைக்க வேண்டும். ஆனால் இது ஒரு சிக்கலான விஷயம். இதற்கு முதலாவதாக இன்னொருவன் தனது கண்ணின் ‘கோர்னியா’வை ஸ்ரீதருக்குத் தருவதற்கு முன் வர வேண்டும். புதிதாக வழக்கத்துக்கு வந்துள்ள இந்தச் சந்திர சிகிச்சை இலங்கையில் இது வரை வேறெவருக்கும் செய்யபட்டதில்லை. ஆறு மாதங்களின் முன்னர் நான் சென்னை சென்றிருந்த போது இச் சத்திர சிகிச்சை சென்னை மோகன் ராவ் கண்ணாஸ்பத்திரியில் ஒரு நோயாளிக்கு நடை பெற்றது. இச் சிகிச்சை முறை மட்டும் தான் ஸ்ரீதருகுப் பலனளிக்கும். வேறெவ்வகையிலும் அவன் கண்ணைத் தெரிய வைக்க முடியாது." என்றார்.

அதைக் கேட்ட சிவ நேசர் "இந்தச் சிகிச்சையை ஸ்ரீதருக்குச் செய்ய நாம் யாது செய்ய வேண்டும்." என்றார்.

முதலில் இதற்கு இன்னொருவரின் கண் வேண்டும். அது இருந்தால் சந்திர சிகிச்சையை நானே செய்து முடித்துவிடுவேன். சென்னைச் சிகிச்சையை இத்துறையில் அனுபவம் பெறுவதற்காக உண்மையில் நானே தான் செய்து முடித்தேன். மோகன் ராவும் நானும் ஒன்றாகக் கல்கத்தாவில் வைத்தியம் படித்தவர்கள். இது விஷயத்தில் அவன் எனக்கு மிகவும் ஒத்தாசை புரிந்தான்." என்றார்.

இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த சுசீலாவுக்குத் திடீரென ஓர் எண்ணம் உதயமாயிற்று. டாக்டர் சுரேஷைச் சைகை செய்து தனியான ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றாள். "சுரேஷ்! எனக்கு ஓர் ஆலோசனை தோன்றுகிறது. ஸ்ரீதருக்குக் கண் நான் கொடுக்கிறேன். டாக்டர் நெல்சனிடம் சொல்லி இன்றோ நாளையோ ஆப்பரேஷனைச் செய்து விடுங்கள். இந்த உதவியை நீங்கள் தாமதமின்றிச் செய்ய வேண்டும். ஸ்ரீதர் உடனே கண் பார்வை பெற வேண்டும். என்னைப் பார்க்க அவர் ஆசைப்படுகிறார். சில நாட்களுக்கு முன் எந்த சுசீலாவைப் பார்க்க வெறுத்துத் தன் கண்களைத் தாமே குத்திக் கொண்டாரோ, அதே சுசீலாவை அவர் இன்று அன்போடு பார்ப்பதற்குத் துடிதுடிக்கிறார். இது எனக்குப் பெரிய வெற்றியல்லவா? அதற்குப் பதிலாக என் கண்ணைக் கொடுத்தாலென்ன? உடனே இதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள்" என்றாள்.

சுரேஷ் தலையை அசைத்தான். "சுசீலா, நீ ஸ்ரீதருக்காக இது வரை செய்த தியாகங்கள் பெரியன. ஆனால் இப்போது நீ கூறும் ஆலோசனை அவற்றுக்குச் சிகரம் வைத்தது போல் இருக்கிறது. என்றாலும் இது நடவாத காரியம். நாட்டின் சட்டங்கள் அவற்றுக்கு இடம் கொடா" என்றாள்.

"ஏன்? நான் வயது வந்தவள். எனக்கு இப்பொழுது வயது இருபத்தைந்து. என் சுய சம்மதத்தோடு நானே இதைச் செய்கிறேன். வேண்டுமனால் என் சம்மதத்தை என் கையாலேயே ஒரு கடிதமாக எழுதிக் கொடுத்து விடுகிறேன்." என்றாள் சுசீலா.

அதற்குச் சுரேஷ் "இது விஷயத்தில் சட்டம் வேறுவிதமாக இருக்கிறது. ஒருவர் கண்ணை இன்னொருவருக்குப் பொருத்துவதற்கு முன் அந்த மனிதர் முதலில் இறந்திருக்க வேண்டும். இறந்து மிக சொற்ப வேளைக்குள் கண்ணை எடுத்துச் சீர் கெடாது பாதுகாத்து மற்றவருக்கு ஒட்ட வைக்க வேண்டும். ஆனால் அதற்குக் கூட இறப்பவர் தாம் இறப்பதற்கு முன்னர் தம் கண்ணை எடுத்து இன்னொருவருக்கு உபயோகிக்கலாம் அல்லது இன்னாருக்கு உபயோகிக்கலாமென்று தம் சம்மதத்தை எழுத்தில் கொடுத்திருக்க வேண்டும்" என்றான்.

"சுரேஷ்! அப்படியானால் நான் அவ்வாறு எழுதி வைத்து விட்டு என்னை நானே கொலை செய்து கொள்ளுகிறேன். ஸ்ரீதருக்குக் கண்ணைக் கொடுங்கள்." என்றாள் சுசீலா.

இதைக் கேட்ட சுரேஷ் திகைத்துவிட்டான். ஒன்றும் பேசாது சுசீலாவை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான் அவன். தன் முன் நிற்பது ஒரு மானிடப் பெண்ணா, தெய்வமா என்று அவனால் முடிவு செய்ய முடியவில்லை. அதைக் கண்ட சுசீலா, "என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? நான் உண்மையைத் தான் சொல்கிறேன். நீங்கள் விரும்பினாலென்ன? விரும்பாவிட்டாலென்ன? நான் அப்படித்தான் செய்யப் போகிறேன். எப்படியும் என் ஸ்ரீதர் கண் பெற வேண்டும்." என்றான்.

சுரேஷ், "சுசீலா, நீ என்ன பேசுகிறாய். ஸ்ரீதர் இன்று தன் பார்வையைப் பெற விரும்புவது எதற்காக? சுசீலாவைப் பார்ப்பதற்கு. சுசீலாவின் பிணத்தைப் பார்ப்பதற்கல்ல. ஆனால் சுசீலாவுக்குப் பதில் சுசீலாவின் பிணமே அவனுக்குத் தென்பட்டால் மீண்டும் தன் கண்ணைப் பிய்த்தெறிந்து விடுவான் அவன். அதை நீ யோசிக்கவில்லையே" என்றான்.

சுரேஷின் வார்த்தைகள் சுசீலாவை அதிர வைத்தன. "அது உண்மைதான். ஆனால் நாம் இப்போது என்ன செய்வது? எப்படிக் கண்களைப் பெறுவது" என்றாள் கவலையோடு.

சுரேஷ், "எடுத்த எடுப்பில் இக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது" என்று மட்டும் கூறினான்.

டாக்டர் நெல்சன் சிவநேசரிடம் "இன்று கண் தான இயக்கமொன்று உலகத்தில் தோன்றியிருக்கிறது. சிலர் தாம் சாகுமுன்னர் தம் கண்களைப் பிறருக்குப் பார்வையளிக்க உபயோகிக்கும்படி மரண சாசனம் எழுதி வைத்துச் செல்லுகின்றனர். ஆனால் இது வெகு அபூர்வமாகத்தான் நடைபெறுகிறது. அப்படி எவராவது தானம் செய்யும் கண் எங்காவது கிடைத்தால் தான் ஸ்ரீதருக்கு நம்மால் கண் பார்வையை அளிக்க முடியும். ஆனால் அதற்கு நீங்கள் சிறிது பொறுத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை." என்றார்.

உயிருள்ளவர்களிடமிருந்து கண்ணைத் தானமாகப் பெற முடியாதிருப்பதற்குரிய சட்டங்களைப் பற்றியும் அவர் விளக்கினார். அத்துடன் உயிருள்ளவர்களிடமிருந்து கண்ணை எடுக்கும் போது அவ்விதம் கண் கொடுப்பவர்களின் நரம்புகள் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு வேறு பல சிரமங்கள் ஏற்படுதற்கு இடமிருக்கிறதென்றும், அதனால் தான் சட்டம் இவ்வாறு கண்டிப்பாக வகுக்கப்பட்டிருக்கிறதென்றும் குறிப்பிட்டார் அவர்.

முடிவாக, டாக்டர் நெல்சன், "ஸ்ரீதரின் நிலை பற்றி நான் உடனேயே என் சென்னை நண்பர் மோகனராவுக்கும் அறிவிக்கிறேன். எங்காவது கண் கிடைத்தால் உடனே எங்களுக்கு அது பற்றி அறிவிக்கும்படி நான் அவருக்கு எழுதுகிறேன். ஸ்ரீதர் அதிர்ஷ்டசாலியாய் இருந்தால் சீக்கிரமே கண் கிடைத்துவிடும்" என்று கூறி விடை பெற்றுச் சென்றார்.

அன்று பிற்பகல் சுசீலா ஸ்ரீதருடன் தோட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது கண் தானம் சம்பந்தமான சட்டப் பிரச்சினைகளைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள். முடிவில், "நான் என் கண்களை உங்களுக்கு எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து விடுகிறேன். அவ்விதம் நான் செய்தால் நீங்கள் கண் பார்வை பெற முடியுமல்லவா?" என்றாள்.

ஸ்ரீதர் கோபமும் கொதிப்பும் அடைந்தான். "என்ன சொன்னாய் சுசீலா? நீ அவ்விதம் செய்தால் நானும் தற்கொலை செய்து கொள்வேன். இன்னும் நான் பார்வையை விரும்புவதே உன்னைப் பார்த்து மகிழ்வதற்குத் தானே? ஆகவே நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை எதற்கு? நீ இவ்வாறு பேச என்னைப் பற்றி என்ன நினைத்தாய்?" என்றான்.

சுசீலாவால் அவ்வார்த்தைகளை எதிர்த்து ஒன்றும் பேச முடியவில்லை. ஆகவே இது விஷயத்தில் டாக்டர் நெல்சனின் முயற்சிகளையே நம்பியிருக்க வேண்டும் வேறு வழி இல்லை என்று முடிவு செய்தாள் அவள்.

‘அமராவதி’யில் வாழ்க்கை மீண்டும் தனது மந்த கதியில் நடக்க ஆரம்பித்தது. ஸ்ரீதரின் கண் பார்வை பற்றிய கவலையைத் தவிர வேறு கவலைகள் எதுவும் அங்கு யாருக்கும் இருக்கவில்லை. வாழ்க்கை பொதுவாக இன்பம் நிறைந்ததாகவே இருந்தது. வேறெந்தக் கவலைகள் இருந்தாலும் அன்பு தோய்ந்த வாழ்க்கை மனதுக்குச் சாந்தியையும் இன்பத்தையும் அளிப்பதற்குக் கேட்கவா வேண்டும்?

இந்தக் காலத்தில் அங்கே நடந்த ஒரே ஒரு முக்கிய சம்பவம். ‘மோகனா’வைப் பற்றியது. அது தனது பழைய வழக்கத்தின் படி வீடதிரக் கூவிக் கொண்டே இருந்தது. இது ஸ்ரீதருக்கு இப்பொழுது சினத்தை மூட்ட ஆரம்பித்தது. "பத்மா" என்ற அந்த மூன்று எழுத்துகள் முன் எவ்வளவு இனிமையாக அவன் காதுகளில் ஒளித்தனவோ அவ்வளவுக்குக் கர்ண கடூரமாக ஒலித்தன இப்போது. பத்மா என்ற அப்பெயர் இன்று அவனுக்குத் தாங்கொணாத அருவருப்பையே ஊட்டியது. அதனால் அவன் பாக்கியத்திடம் ஒரு நாள் "அம்மா மோகனாவை வாயை மூடச் சொல்லு. அந்தப் பெயர் என் காதில் விழுவதை என்னால் சகிக்க முடியவில்லை. உடனே அதை எங்காவது அனுப்பி விடு" என்று சப்தமிட்டான். "நீ தானே அதற்கு அந்த வார்த்தையைச் சொல்லிக் கொடுத்தாய்" என்று கூறிய அவள் சீக்கிரமே ‘மோகனா’வைக் குடும்ப நண்பர் ஒருவருக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்து விட்டாள்.

இது போக, ‘அமராவதி’யில் காணப்பட்ட ஒரு முக்கிய மாற்றம் சிவநேசரின் போக்காகும். முன்னிருந்த கர்வமான படாடோபப் போக்குகளெல்லாம் பெரிதும் மாறப் பெற்ற அவர் இப்பொழுது ஒரு புது மனிதர் போல் நடந்து வந்தார். ஸ்ரீதர் வாழ்க்கையின் துயரத் திருப்பங்களின் பின்னால் அவர் முன் போல் புத்தகங்களைக் கருத்தூன்றிப் படிப்பதையும் மேலை நாட்டுத் தரிசர்களின் நூல்களை ஆராய்வதையும் முற்றாக நிறுத்திக் கொண்டுவிட்டார். அவர் ‘அமராவதி’ வளவில் அங்குமிங்கும் தனிமையாக நடப்பதும், தோட்டத்திலிருந்த செங்கழு நீர்த் தொட்டியின் விளிம்பில், சிந்தனையில் முழ்கி உட்கார்ந்திருப்பதும் இப்பொழுது வழக்கமாகிவிட்டன. தன்னத்தனியாக, சிறகுகள் என்ற மேலைத் தேயச் சிற்பத்தில் காணப்பட்ட உருவத்திற் போல், அவர் சிந்தனையில் இலயித்திருந்த தோற்றத்தைக் கண்டு பாக்கியமும் சுசீலாவும் புதுமையடைந்தார்கள். எதைப் பற்றி அவர் இவ்வளவு ஆழமாக்ச் சிந்திக்கிறார் என்பது எவராலும் விடுவிக்க முடியாத புதிராயிருந்தது. சின்னைய பாரதியும் நன்னித்தம்பியரும் கூட அவரது போக்கைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.

ஆனால் சிவநேசரின் மனம் இப்பொழுது ஒன்றே ஒன்றைப் பற்றித் தான் சிந்தித்தது. ஸ்ரீதரைப் பற்றிய பிரச்சினைதான் அது. சில சமயம் அவர் முரளியைத் தனியே விறாந்தையில் கண்டால் அவன் தலையைத் தடவிக் கன்னத்தைக் கிள்ளி விளையாடுவார். "நீ உன் அப்பாவை விட அதிர்ஷ்டசாலி. ஏனென்றால் அவன் அப்பா போல் உன் அப்பா முரட்டுப் பேர்வழியல்ல. ஸ்ரீதர் அன்பே உருவானவன்" என்று கூறுவார். ஆனால் இவ்வார்த்தைகளைப் பாக்கியத்துக்கோ சுசீலாவுக்கோ கேட்கும்படி அவர் கூற மாட்டார். இந்த வகையில் எதையும் தன்னுள் தானே வைத்துத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற அவரது பழைய கர்வமென்னவோ இன்னும் அடங்கிவிடவில்லை.

சில சமயம் எவ்வித முன்னறிவிப்புமில்லாமல் திடீரெனத் தமது காரிலேறிக் கிளிநொச்சியிலுள்ள தமது வயலுக்குப் போய்விடும் பழக்கமும் இப்பொழுது அவருக்கு ஏற்பட்டிருந்தது. அங்கே தமது பங்களாவில் கார்ச் சாரதியோடு ஓரிரண்டு நாள் தனியாகத் தங்கியிருந்துவிட்டு மீளுவார். பங்களாவில் நிரந்தரமாக இருக்கும் பணியாட்கள் அப்பொழுது அவருக்கு வேண்டிய உணவு படுக்கை வசதிகளைக் கவனித்துக் கொள்வார்கள்.

இந்தப் புதிய பழக்கங்களைச் சிவநேசர் மேற்கொண்டு ஓரிரண்டு மாதங்களின் பின் அவர் திடீரெனப் பாக்கியத்திடம், "எனது பழைய நண்பர் மாஜி மைசூர் திவான் சேர் சூரியப் பிரசாத் இன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். தன் மகளுக்கு அடுத்த வாரம் கல்யாணமாம் - கட்டாயம் வர வேண்டுமென்று. நான் தவறாமல் அதற்குப் போக வேண்டும். உண்மையில் சூரியப் பிரசாத் என் கல்யாணத்துக்குக் கூட வந்திருந்தவன். அப்பொழுது அவன் ஒரு வெறும் வக்கீல் மட்டும்தான். உனக்கு அவனை அவ்வளவு ஞாபகமிருக்காது. உண்மையில் இக் கல்யாணத்துக்கு உன்னைக் கூட அழைத்துப் போகலாம். ஆனால் இங்கே பிள்ளைகளுக்கு யார் துணை? ஆகவே நான் மைசூர் போய் விட்டு மூன்று வாரங்களுள் திரும்ப இருக்கிறேன். இன்னொன்று. சூரியப் பிரசாத் இன்னொரு வகையிலும் முக்கியமானவர். நான் சென்ற வருடம் ஆயிரம் பங்குகள் வாங்கிய "சிநேட் இந்தியன் இன்சுரன்ஸ் கம்பெனி"யின் சேர்மனும் அவன் தான்." என்றார்.

இவ்வாறு சொல்லிய அவர் அந்த வாரமே மைசூர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். வழக்கத்தில் இப்படிப்பட்ட பிரயாணங்களிற் செல்லும்போது சிவநேசர் குறைந்தபட்சம் இரண்டு வேலைக்காரர்களையும் நன்னித்தம்பியையும் தம்முடன் அழைத்துச் செல்லத் தவறுவதில்லை. ஆனால், இம்முறை அவர் தன்னந்தனியாகவே சென்றார். அது பற்றிப் பாக்கியம் அவரிடம் கேட்டபோது "தனியாகப் போவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் இருக்கிறது. இன்னும் வழியிலே மிக நல்ல ஹோட்டல்களில் தானே தங்கப் போகிறேன்? இன்னும் மைசூர் சேர்ந்ததும் அங்கு சூரியப் பிரசாத் வீட்டில் எனக்கு என்ன குறை இருக்கப் போகிறது?" என்று கூறிவிட்டார்.

சிவநேசர் மைசூர் போய்ச் சேர்ந்தவுடன் ஒரே ஒரு கடிதம் ‘அமராவதி’க்கு அதாவது பாக்கியத்துக்கு எழுதினார். அதில் அவர் தமது சுக சேதியைக் கூறியிருந்ததோடு, தமது நண்பர் சேர் சூரியப் பிரசாதும் தானும் சில காலத்துக்கு இந்தியச் சுற்றுப் பிரயாணம் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதால் குறிப்பிட்ட ஒரு விலாசத்தில் தானிருக்க மாட்டாரென்று எழுதியிருந்தார். ஏதாவது அவசரமான செய்திகளிருந்தால் சென்னையிலுள்ள இலங்கைக் காரியலயத்துக்குக் கடிதம் எழுதினால், அது தனக்குக் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

‘அமராவதி’ வளவில் அதன் மாமன்னர் போல் விளங்கிய சிவநேசர் இல்லாது போனது அந்த வீட்டின் களையைப் பெரிதும் குறைக்கத்தான் செய்தது. அவர் அவ்வில்லத்தின் பெரிய தோட்டத்தில் மாலை வேளைகளில் தன்னந்தனியாக உலவும் போது அவரது நெடிய கம்பீரமான உருவம் அவருக்கு அந்த இல்லத்தின் காவல் தெய்வம் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுத்தது. அவர் தன் பக்கத்தில் இல்லாது பாக்கியம் மிக வாடிப் போனாள் என்றாலும், பேரன் முரளியின் விளையாட்டுகளில் ஈடுபட்டதால் ஓரளவு தாங்கிக் கொள்ள முடிந்தது. உண்மையில் பாக்கியத்தைப் பொறுத்த வரையில் அவளது முப்பது வருட இல்லற வாழ்வில் சிவநேசரை அவள் பிரிந்திருந்தது மிகச் சொற்ப நாட்களேயாகும். அதனால் எப்பொழுதுமே சிவநேசரைப் பிரிந்திருப்பதென்பது அவளால் தாங்க முடியாத ஒன்றுதான். அத்னால் இரவு படுக்கைக்குப் போகு முன் ஒவ்வொரு நாளும் மேல் மாடிச் சுவரில் ஸ்ரீதரால் எழுதி மாட்டப்பட்டிருந்த சிவநேசரின் படத்தைச் சிறிது நேரமாவது சமீபத்தில் சென்று பார்க்கத் தவறுவதில்லை. அப்பொழுது அவரது பாதங்களைத் தன் கையால் தொட்டுத் தன் கண்ணிலே ஒற்றிக் கொள்ளுவாள் அவள்.

சிவநேசரின் பிரிவை அவ் வீட்டில் எல்லோருக்கும் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருந்தவன் புரளிக்கார முரளிதான். அவன் சிவநேசர் வழக்கமாய் உட்கார்ந்து பத்திரிகை வாசிக்கும் நாற்காலிக்கு ஓடிப் போய் அதன் கைப்பிடியைப் பிடித்து நின்று கொண்டு "தாத்தா" "தாத்தா" என்று கூச்சலிடுவான். இன்னும் மேல் மாடிக்குத் தாயோடோ, ஸ்ரீதரோடோ, பாக்கியத்தோடோ, ஆயாவோடோ போய் விட்டால் போதும், அங்குள்ள படத்தைப் பார்த்து "தாத்தா" "தாத்தா" என்று கும்மாளமடிக்கத் தொடங்கிவிடுவான் அவன்.

இவை ‘அமராவதி’யில் நடந்து கொண்டிருக்க, சிவநேசர் வீட்டை விட்டுச் சென்ற மூன்று வாரங்கள் கழித்து டாக்டர் சுரேசுக்கு அவனது கல்வெட்டித்துறை இல்லத்துக்கு ஒரு கடிதம் வந்தது. தபாலுறையின் வெளிப்பக்கத்தில் சென்னை முத்திரையும் சிவநேசர் பெயருமிருக்கவே அவன் அதைப் பரபரப்போடு பிரித்தான். அதில் சிறிய ஒரு காகிதத்தில் சிவநேசரின் கைஎழுத்தில் ஒரு கடிதமும் ரூபா 2000- திற்கு ஒரு ‘செக்’கும் காணப்பட்டன. சுரேஷ் கடிதத்தை மிக ஆவலோடு வாசித்தான். அதை வாசித்த போது அவன் ஏதோ ஒரு மர்மக் கதையில் மத்திய பாத்திரமாகிவிட்டது போல் தோன்றியது சுரேசுக்கு. அவன் உள்ளத்தில் அந்த உணர்ச்சியை ஊட்டிய அக்கடித்ததின் வாசகம் பின் வருமாறு -

"அன்புள்ள சுரேஷ்! இக்கடிதத்தின் செய்தியை வேறு யாருக்கும் சொல்லக் கூடாது. இதை நீ மிகவும் இரகசியமாகப் பெறுவாய் என்ற துணிவிலும் நம்பிக்கையிலும் நான் இதை எழுதுகிறேன். நிச்சயமாக இதிலுள்ள செய்தி, ஸ்ரீதருக்கோ ‘அமராவதி’யிலுள்ள வேறு யாருக்குமோ தெரியக் கூடாது. இக்கடிதத்தை நீ பெற்றுக் கொண்டதும் சென்னை மோகனராவ் கண்ணாஸ்பத்திரிக்கு வந்து டாக்டர் மோகனராவைச் சந்திக்கவும். கைச் செலவுக்கு ரூபா 2000 செக் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. உடனே நீ இதனைச் செய்ய வேண்டும். நீ சென்னை வருவதைப் பற்றிக் கூட யாருமே அறியக் கூடது. நீ செய்யும் இவ்வுதவியை நான் என்றும் மறவேன். இது மிகவும் முக்கியமான விஷயம்.

இப்படிக்கு,
சிவநேசர்

சுரேஷ் இக் கடிதத்தைக் கண்டு அடைந்த குழப்பத்தை வார்த்தைகளில் சொல்லி முடியாது. இருந்தாலும் கடிதத்திலுள்ள செய்தியின் போக்கைப் பார்த்தால் அது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதற்கு நேரமில்லை. சிந்தனையல்ல செயலே வேண்டியது என்று எண்ணிய அவன் அடுத்த நாட் காலையே சென்னைக்குப் புறப்பட்டுவிட்டான். இவ்வளவு அவசரமாகப் பிரயாணத்தை மேற்கொளவதில் அவனுக்கு அதிக சிரமங்கள் ஏற்படத்தான் செய்தன. ஆனால் உத்தியோக வட்டாரங்களிலும் பெரிய காரியாலயங்களிலும் போதிய செல்வாக்குப் படைத்த அவன் அவற்றை இலகுவில் சமாளித்துக் கொண்டான்.

சுரேஷ் அடுத்த நாள் விமான மூலம் சென்னை சேர்ந்த பொது, அந்த விஷயம் அவன் தாயாருக்குக் கூட தெரியாது. அவர்கள் அவன் கொழும்பு போயிருப்பதாகவே எண்ணினார்கள். இந்த விஷயத்தில் அவன் சிவநேசரின் ஆக்ஞையை வரிக்கு வரி நிறைவேற்றி விட்டான். யாவற்றையும் அவர் கேட்டுக் கொண்டது போல் மூடுமந்திரமாக வைத்திருப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டான் அவன்.

[தொடரும்]
தொடர்நாவல்: மனக்கண்

- அ.ந.கந்தசாமி -

28-ம் அத்தியாயம் மனக்கண்!

டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்களை விட்டு சிவநேசரிடம் “இரண்டு கண்களும் மிகவும் பழுதடைந்துவிட்டன. அதிலும் ஒரு கண் முற்றாகவே சின்னாபின்னப்பட்டுவிட்டது. மற்றக் கண்ணை வேண்டுமானால் சந்திர சிகிச்சைகளினால் மீண்டும் குணப்படுத்திப் பார்வையைப் பெற முடியும். ஆனால் ஸ்ரீதர் தான் கண் பார்வையை விரும்பவில்லையே. அதனால் தானே தன் கண்களைத் தானே குத்திக் கொண்டான் அவன்” என்றார். அதற்குச் சிவநேசர் “இப்பொழுது ஸ்ரீதருக்கு வேண்டியது கண் பார்வையல்ல. அவன் கண்ணில் ஏற்பட்டுள்ள புண்ணை முதலில் ஆற்றுங்கள்.” என்றார்.

சிவநேசரது வேண்டுகோளின் படி டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்ணிலே பட்ட புண்ணுக்கே வைத்தியம் செய்தார். ஒரு சில தினங்களில் புண்ணாறிப் போய்விட்டது. இதன் பயனாக ஸ்ரீதர் மீண்டும் பழையபடி ஆனான். அதாவது மீண்டும் பழைய குருடனாகி விட்டான் ஸ்ரீதர். இருண்ட வாழ்க்கை - ஆனால் அமைதி நிறைந்த இருண்ட வாழ்க்கை மீண்டும் ஆரம்பித்தது. ஆனால் ஒன்று. அந்த அமைதி பூரண அமைதி என்று சொல்ல முடியாது.

ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் முன்னர் அவன் குருடனாயிருந்த போதிலும் அப்பழுக்கற்ற இன்பத்தை அனுபவித்து வந்தான். ஆனால் இப்பொழுதோ அவனது இன்பத்தில் சிறிது அழுக்கு விழுந்து விட்டதென்றே சொல்ல வேண்டும். முன்னர் அவனது இருளிலே ஒளிக் கற்றையாக ஒயிலாக உலவி, உள்ளத்துக்கு இன்பமூட்டி வந்தாள் அவனது மனத்தின் மோகினியாகிய பத்மா. அப்பொழுதெல்லாம் அவனோடு இரவும் பகலும் ஆடியும் பாடியும் ஊடியும் கூடியும் வாழ்ந்த சுசீலாவைப் பற்றி இவள் பத்மாவல்ல. வேறு யாரோ என்ற சந்தேகம் ஒரு சிறிதும் இருக்கவில்லையல்லவா? அதன் காரணமாக அப்பொழுது அவன், அனுபவித்த இன்பம் உண்மையில் குறைபாடற்றதாக விளங்கியது. ஆனல் இன்று இருளிலே அவன் கேட்டது பத்மாவின் குரலேயானாலும், சுசீலாவின் முகம் கண்ணுக்கு முன்னே தெட்டந் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்ததால் தனக்கு அவள் மீது ஆத்திரம் உண்டாகிக் கொண்டிருக்கும் என்பதற்காக அவளை இருள் திரையிட்டு முற்றாக அவன் மறந்துவிட்டிருந்தாலும், அவள் பத்மா அல்ல என்ற ஞாபகம் அவன் உள்ளத்திலே அடிக்கடி தலை தூக்கத்தான் செய்தது. அதனால் முன் போல் முழு இன்பம் அவனுக்கு இல்லாது போயிற்று. இருந்தாலும் இருளாலும் ஓரளவு இன்பம் அவனுக்குக் கிட்டத்தான் செய்தது.

ஸ்ரீதருக்கு இப்பொழுது தன்னோடு வாழும் பெண் தன் கல்லூரிக் காதலி பத்மாவல்ல, சுசீலா என்பது நன்கு தெரிந்திருந்தாலும் அவளைப் பத்மா என்றே இன்னும் தொடர்ந்து அழைத்து வந்தான். புண்ணாறிய பிறகு ஒரு நாள் இரவில் படுக்கையில் சுசீலா இதைப் பற்றி அவனிடம் வெளிப்படையாகவே கேட்டுவிட்டாள்.

“நான் பத்மா அல்ல என்பது உங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தும், ஏன் என்னைப் பத்மா என்றே இன்னும் அழைத்து வருகிறீர்கள்? சுசீலா என்று அழைத்தாலென்ன?” அதற்கு ஸ்ரீதர் சிறிதும் யோசியாமல் அளித்த பதில் சுசீலாவைத் திடுக்கிட வைத்து விட்டது.

“சுசீலா - அந்தப் பெயரை நான் வெறுக்கிறேன். அது நான் காதலிக்காத பெண்ணின் பெயர். என்னை ஏமாற்றிய மோசக்காரியின் பெயர். அவள் பெயர் நினைவில் வரக் கூடாது. முகம் கண்ணில் தெரியக் கூடாது என்பதற்காகத்தானே என் கண்களை நான் குத்தினேன்? அப்படியிருக்க அந்தப் பெயரை நான் எப்படி ஆசையோடு உச்சரிக்க முடியும்? அந்தப் பெயரைக் கேட்டாலே எனக்கு அருவருப்பேற்படுகிறது.”

“மோசக்காரி. சுசீலாவா மோசக்காரி. யார் மோசக்காரி என்பதை உடனே சொல்லி விடுவோமா?” என்று ஆத்திரம் பொங்கியது சுசீலாவுக்கு. ஆசைக் காட்டி மோசம் செய்த பத்மாதான் மோசக்காரி. உண்மைக் காதலி போல நீண்ட காலம் நடித்துவிட்டுக் கண்ணிழந்ததும் குருடனைக் கட்ட மாட்டேன் என்று கூறிய அந்த நயவஞ்சகி பத்மாவல்லவா மோசக்காரி - இது பற்றிய முழுக் கதையையும் ஸ்ரீதருக்குக் கூறிப் பத்மாவே மோசக்காரி என்று காட்டிவிட்டாலென்ன? என்று துடிதுடித்த அவளை வேறு சில எண்ணங்கள் உடனே கட்டுப்படுத்தின.

“சிவநேசர் மாமா தன் அந்தஸ்து வெறியின் காரணமாகவே பத்மாவைத் தனக்கு மணம் செய்து வைக்கவில்லை என்று ஸ்ரீதர் நம்புகிறார். அதனால்தான் பத்மாவென்று ஏமாற்றி என்னை அவருக்குத் திருமணம் செய்து வைத்ததாக அவர் எண்ணுகிறார். இந் நிலையில் “இல்லை, இல்லை. பத்மா உங்களைக் கல்யாணம் செய்ய மறுத்தாள்.” என்று நான் கூறினால் அதை அவர் ஒரு போதும் நம்பப் போவதில்லை. மோசடியையும் செய்து விட்டு உத்தமியான பத்மா மீது பொய்ப் பழியையும் போடுகிறீர்களா என்று தான் அவர் சொல்லுவார். ஆகவே அந்தக் கதையைப் பேசிப் பயனில்லை” என்று தீர்மானித்தாள் அவள்.

சுசீலா இவ்வாறு தீர்மானித்துக் கொண்டாளாயினும் தன்னை மோசக்காரி என்று ஸ்ரீதர் நம்புவதை எண்ணியதும் அவள் உள்ளம் வெம்பவே செய்தது. தன்னை ஸ்ரீதர் அன்போடழைப்பதும் முத்தங்கள் சொரிவதும் தன்னைப் பத்மாவாகக் கருதியல்லவா என்றெண்ணியதும், அவள் கண்கள் அவளை அறியாமலே நீரைப் பெருக்கின. சுசீலா வாழவில்லை. அவள் வெறுக்கப்படுகிறாள். அவள் கணவனே அவள் பெயரைக் கேட்டதும் அருவருப்படைகிறான். பத்மாதான் நேசிக்கப்படுகிறான் என்றெண்ணும் போதெல்லாம் அவளுக்கு வாழ்க்கையிலேயே வெறுப்பேற்படும்,. முன்னர் திட்டமிட்ட பிரகாரம் நஞ்சருந்தி மாண்டு விடுவோமா என்ற எண்ணங் கூட அவளுக்கு இடையிடையே ஏற்படும். ஆனால் கண்ணற்ற ஸ்ரீதரைத் தனியே விட்டுச் சாவதற்கு அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. கண் பார்வை பெற்ற ஸ்ரீதரை அவள் தனியே விட்டுச் செல்லத் தயாராயிருந்தாள். ஆனால், கண்ணற்றவனுக்குத் தன் துணை வேண்டும் என்பதை எண்ணியதும் நஞ்சருந்தும் எண்ணத்தைக் கைவிட்டாள் அவள்.

ஒரு நாள் தாய் பாக்கியம் ஸ்ரீதரிடம் பேசும் போது, “நீ எவ்வளவு அபாக்கியசாலி. கிடைத்த கண் பார்வையை மீண்டும் இழந்துவிட்டாயே?” என்றாள். அதற்கு அவன் “அம்மா நீ இவ்வாறு கவலைப்படக் கூடாது. கண்ணில்லாவிட்டாலென்ன? எனக்கு என்ன குறை? நல்ல அம்மா இருக்கிறாள்; அன்புள்ள தந்தை இருக்கிறார். கண்ணுக்குச் சமமான மனைவி இருக்கிறாள்; மழலை பேசும் குழந்தை இருக்கிறான்; வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா வசதிகளும் இருக்கின்றன. இந் நிலையில் கண் பார்வைதானா பெரிது? நான் மிகச் சந்தோஷமாயிருக்கிறேன். எனக்காக யாரும் கவலைப்படக் கூடாது” என்றான். சில சமயங்களில் ஸ்ரீதரின் மனதில் தன் கண்ணைத் தானே அழித்துக் கொண்ட ஈடிப்பஸின் நினைவு வந்தது போல, சிந்தாமணி என்னும் தாசியின் தொடர்பால் தன் கன்ணைத் தானே குத்திக் கொண்ட வைஷ்ணவ பக்தன் பில்வமங்கனின் நினைவும் வரும். ஊனக் கண்ணை இழந்து ஞானக் கண் பெற்ற பில்வமங்கன் பற்றி எண்ணும்போதும் தன்னைப் பற்றியும் அவனோடு சேர்த்து எண்ணுவான் அவன்.

“நானும் என் ஊனக்கண்ணை இழந்துவிட்டேன். அந்த ஊனக் கண்ணின் முன்னால் மோசக்காரி சுசீலா வந்து நின்றாள். ஆனால் அதை நான் இழந்ததும் பழைமை போல மனக் கண்ணிலே பத்மா காட்சியளிக்கிறாள் - என் அன்புக்குரிய பத்மா, ஆசைக்குரிய பத்மா,” என்று தனக்குள் எதை எதையோ கூறிக் கொண்டான் அவன்.

காலம் இவ்வாறு போகப் போக வாழ்க்கை பழையபடியும் தனது ஆறுதலைப் பெற ஆரம்பித்தது. குருட்டு வாழ்க்கை கூட ஸ்திரமுற்ற வாழ்க்கையாகியதும், அதில் ஓர் அமைதி ஏற்படவே செய்தது. கண்ணைக் குத்திய பயங்கர சம்பவம் கூட மெல்ல நினைவிலிருந்து அகன்று கொண்டிருந்தது.

ஸ்ரீதரின் நண்பன் டாக்டர் சுரேஷ் ‘அமராவதி’ வளவுக்கு எப்போதாவது வருவதுண்டு. முரளி இப்பொழுது தட்டுத் தடுமாறி நடக்கத் தொடங்கிவிட்டான். மோகனா பத்மாவுக்குப் பதிலாக இப்பொழுது அதிகமாக முரளியைக் கூப்பிட்டது. முரளிக்கும் மோகனாவுக்குமிருந்த சிநேகம் தினசரி வளர்ந்து கொண்டேயிருந்தது. மோகனாவுக்குப் பழங்களை உண்ணக் கொடுப்பதில் முரளிக்கு அதிக பிரியம். தாய் சுசீலாவோ, பாட்டியார் பாக்கியமோ ஆயாவோ அவனைக் கூட்டுக்குச் சமீபமாகத் தூக்கிச் சென்று மோகனாவுக்குப் பழங்களை ஊட்ட அவனுகு உதவி செய்வார்கள். மோகனா பழத்தை உண்ணுவதைப் பார்த்து முரளி பெரிய ரகளை பண்ணுவான்; ஆர்ப்பாட்டம் செய்வான்.

இவ்வாறு சலனமற்றுச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீர்ச் சலனமேற்படுத்தும் செய்தியொன்றை ஒரு நாள் ‘அமராவதி’க்குக் கொண்டு வந்தான் சுரேஷ்.

ஸ்ரீதர் அன்று சுசீலாவுடனும் முரளியுடனும் தோட்டத்தில் உட்கார்ந்து பொழுது போக்கிக் கொண்டிருந்தான். சுசீலா பாட்டுப் பாடிச் சிரிப்புக் கதைகள் கூறிக் கொண்டிருந்தாள்.

அப்போது சுரேஷ் தனது காரில் அங்கே வந்தான். சுசீலா எழுந்து சுரேஷிற்கு வணக்கம் செலுத்தி விட்டு “நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருங்கள்” என்று கூறி உள்ளே போய் விட்டாள்.

தனியே இருந்த ஸ்ரீதரிடம் சுரேஷ், “ஸ்ரீதர் நான் உன் பத்மாவைக் கொழும்பில் சந்தித்தேன். நீண்ட நேரம் அவளுடன் பேசவும் செய்தேன்,” என்றான்.

ஸ்ரீதர் அதற்கு “அப்படியா? அவள் கல்யாணம் செய்துவிட்டாளா? இப்பொழுது எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டான்.

“கல்யாணம் செய்து ஒரு பிள்ளையும் பெற்றுவிட்டாள். அது போக, நீ உன் பத்மாவை மணக்க முடியாது போனது எதனால்? உண்மைக் காரணம் உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான் சுரேஷ்.

“இதென்ன புதிய கேள்வி? தெரியாதது போல் பேசுகிறாயே. எல்லாம் அப்பாவின் அந்தஸ்து வெறி. ஏழை வீட்டில் திருமணம் செய்வது எனது அந்தஸ்துக்குப் பொருந்தாதென்று அவர் நினைத்தார்.”

“அதுதான் இல்லை. பத்மாவே எனக்கு உண்மைக் காரணத்தைக் கூறிவிட்டாள்,” என்றான் சுரேஷ்.

\“என்ன காரணம்?”

“ நீ கண் பார்வையை இழந்த பின்னர் பத்மாவைப் பெண் கேட்க உன் அப்பாவும் அம்மாவும் பரமானந்தர் வீட்டுக்குப் போனார்கள்.”
“உண்மையாகவா? அப்படித்தான் அவர்கள் சொன்னார்கள். அதை நான் நம்பவும் செய்தேன். ஆனால் பின்னால் அது முற்றிலும் பொய் என்பதை நான் கண்டு கொண்டேன். அப்பாவும் அம்மாவும் என்னை ஏமாற்றுவதற்காகக் கொழும்புக்குப் போனது போல் நடித்தார்கள். பின் அங்கிருந்து பத்மாவை அழைத்து வந்து விட்டதாகச் சொல்லிச் சுசீலாவை எனக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள்.”

“இல்லை, ஸ்ரீதர். உன் அப்பாவும் அம்மாவும் உண்மையிலேயே கொழும்புக்குப் போகத்தான் செய்தார்கள். ஆனால் உன் பத்மாதான் உன்னை மணக்க முடியாதென்று கூறிவிட்டாள்.”

இதைக் கேட்ட ஸ்ரீதர் அதிர்ச்சியடைந்து “சுரேஷ். நீ உண்மையைத்தான் கூறுகிறாயா? அப்படிப் பத்மா என்னை மண முடிக்க மறுத்திருந்தால் அதற்குக் காரணமென்ன சுரேஷ்?” என்றான்.

“ஆம். உண்மையைத்தான் கூறுகிறேன். குருடனைக் கலயாணம் செய்யத் தன்னால் முடியாது என்று கூறிவிட்டாள் பத்மா. இதை அவளே தன் வாயால் எனக்குக் கூறினாள் ஸ்ரீதர் - குருடனைக் கல்யாணம் செய்து என்னால் என்ன சுகத்தைக் கண்டிருக்க முடியும் என்று கேட்டாள் அவள்.”

இதைக் கேட்ட ஸ்ரீதர், தாயார் பாக்கியத்தை “அம்மா, அம்மா இங்கே வா” என்று கூவி அழைத்தான்.

பாக்கியம் வந்ததும் சுரேஷ் சொன்ன கதையை அவளிடம் கூறி, “அம்மா, சுரேஷ் சொல்வது உண்மைதானா? பத்மா என்னைத் திருமணம் செய்ய மறுத்தது உண்மைதானா?” என்று கேட்டான்.

அதற்குப் பாக்கியம், “ஆம் ஸ்ரீதர். அவன் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் நீ அன்றிருந்த நிலையில் நாங்கள் இதனை உனக்கு எப்படிச் சொல்லியிருக்க முடியும்? “கண் பார்வையற்ற ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கை பூராவும் கஷ்டப்பட நான் தயாரில்லை, மன்னிக்கவும்” என்று மிக மரியாதையாகக் கூறி விட்டாள் பத்மா. இதனா உன் அப்பா அடைந்த கோபத்தைச் சொல்ல முடியாது. முதலில் நீ பத்மாவைக் கல்யாணம் செய்வதை அவர் முழு மூச்சாக ஆட்சேபித்த போதிலும், பின்னாக்ட்ல் முற்றிலும் மனம் மாறியிருந்த அவர், அவளைப் பலாத்காரமாகத் தூக்கி வந்தேனும் உனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அதற்காக ஒரு பயங்கரத் திட்டமும் தீட்டினார். நான் தான் அதனைத் தடுத்தேன். அது மட்டுமல்ல, சுசீலா இடையில் புகுந்து அதை அநாவசியமாக்கிவிட்டாள். ஆம் ஸ்ரீதர், உண்மை இதுதான். பத்மாவின் மீது முழு ஆசையையும் சொரிந்து அவளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த நீ, அவள் உன்னைக் காதலிக்கவில்லை, உன்னை வேண்டாமென்று சொல்லி விட்டாள் என்ற செய்தியை அறிந்தால், எப்படி வேதனைப்படுவாயோ என்று நாங்கள் அஞ்சினோம். நெஞ்சம் வெடித்து இறந்து விடுவாயோ என்று நடுங்கினோம். ஆகவே அதை உனக்கு ஒரு போதும் சொல்வதில்லை என்று முடிவு செய்து விட்டோம். பொய் சொல்லியேனும் உன்னை இன்பமாக வைத்திருக்க வேண்டும், உன் உள்ளத்தில் துன்பக் காற்று வீச இடமளிக்கக் கூடாது என்பது தான் அப்பாவின் எண்ணம். இந்தச் சூழ்நிலையில் கொழும்பிலிருந்து வரும் வழியில் நன்னித்தம்பி வீட்டில் நாங்கள் சிறிது தங்கினோம். அங்கே எங்கள் கஷ்டத்தை நாங்கள் எங்களிடை பேசிக் கொண்டிருந்தைச் சுசீலா ஒற்றுக் கேட்டு விட்டாள். “பத்மா ஸ்ரீதரின் காதலை மறுத்துவிட்டதை அவனுக்குச் சொல்லக் கூடாது; வேறு பெண் யாராவது இவள் தான் பத்மா என்று சொல்லி ஸ்ரீதருக்குக் கட்டி வைக்க முடியுமானால் எவ்வளவு நல்லது. ஆனால் இது முடியக் கூடிய காரியமா?” என்று அப்பா கவலைப்பட்டார். அவ்வேளையில் நாமெல்லாம் திடுக்கிடும்படியாகச் சுசீலா வெளியே வந்து, “நான் ஸ்ரீதரை மணப்பேன். கண்னில்லாதது ஒன்று தானே அவரது குறை. மற்ற வகைகளில் அவர் மீது என்ன குறையைச் சொல்ல முடியும்” என்றாள். இதுதான் இந்த ஆள் மாறாட்ட நாடகத்தின் வரலாறு. நீ சந்தோஷமாக வாழ வேண்டுமென்பதற்காக நாங்கள் எடுத்த நடவடிககை இது. உண்மையில் சுசீலா மட்டும் அன்றைக்கு அவ்வாறு முன் வந்திருக்காவிட்டால் உன் நிலை எப்படி முடிந்திருக்குமோ, யார் கண்டது? இன்னும் உன் அப்பா என்னென்ன பயங்கரமான காரியங்களைச் செய்திருப்பாரோ? மேலும் இதோ உன் மடியிலே தவழும் முரளி இந்த ‘அமராவதி’யில் வந்து பிறந்திருப்பானா? இவற்றை யாரால் தான் சொல்ல முடியும்?” என்றாள்.

ஸ்ரீதரின் மடியில் உட்கார்ந்து பாட்டியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த முரளி அதை ஆமோதிப்பது போல் மழலைக் கூச்சலிட்டான்.

சுசீலாவின் தியாகத்தைப் பற்றித் தாய் பாக்கியம் சொன்ன விவரங்கள் ஸ்ரீதரின் நெஞ்சை உருக்கிவிட்டன. கண்கள் கலங்கி விட்டன. உண்மை இவ்வாறிருக்க, சுசீலாவுக்கு எவ்வளவு அநியாயம் செய்து விட்டேன் என்று மனம் வருந்தினான் அவன்.

பத்மா தன்னை மணமுடிக்க மறுத்தாள் என்ற செய்தியை ஸ்ரீதரால் முதலில் நம்ப முடியவில்லை என்றாலும், பின்னர் அது உண்மை என்பது அவனுக்குத் தெரியவே செய்தது. அது அவனுக்கு ஓரளவு வேதனையை உண்டு பண்ணியதென்றாலும், பத்மா இல்லாத வாழ்க்கை தான் தனது வாழ்க்கை என்பது இப்பொழுது பழக்கப்பட்டுவிட்டதால் அதைத் தாங்கிக் கொள்வது அவனுக்கு கஷ்டமாயிருக்கவில்லை. ஆனால் பத்மா மீது அவன் முழு மனதையும் பறி கொடுத்திருந்த காலத்தில், பத்மா தன்னை உண்மையாக நேசிக்கிறாள், தனக்காக அவள் எதையும் செய்வாள் என்று அவன் நம்பியிருந்த காலத்தில், யாராவது பத்மா செய்த மோசத்தை அவனுக்குச் சொல்லியிருந்தால் நிச்சயம் அவனால் அதைத் தாங்கியிருக்க முடியாது. அதனால் அவன் தற்கொலை கூடச் செய்து கொண்டிருக்கலாம்..

[தொடரும்]
தொடர்நாவல்: மனக்கண்

- அ.ந.கந்தசாமி -

27-ம் அத்தியாயம்: ஈடிப்பஸ் நாடகம்

ஸ்ரீதரின் சந்திர சிகிச்சை நாளை நிர்ணயிப்பதில் பேராசிரியர் நோர்த்லிக்குப் பலத்த சிரமம் ஏற்பட்டது. முதலாவதாக அவருக்கிருந்த பிரச்சினை காலப் பிரச்சினை. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அவரால் இலங்கையில் தங்கியிருக்க முடியாதிருந்தது. அவரது தாய்நாட்டில் அவருக்காக எப்பொழுதும் குவிந்திருக்கும் வேலைகள் பல. ஆகவே எவ்வளவு விரைவில் ஸ்ரீதரின் சந்திர சிகிச்சையை முடித்துக் கொண்டு இங்கிலாந்து புறப்பட முடியுமோ அவ்வளவு விரைவில் புறப்பட வேண்டும். அத்துடன், இந்தியாவிலும் ஓரிரு தினங்கள் தங்க வேண்டும். அதுவும் அவருடைய கால அட்டவணையில் இடம் பெற்றிருந்தது. இவை தவிர, ஸ்ரீதரை இன்னொரு தடவை நன்கு பரிசீலித்து, சந்திர சிகிச்சைக்கு அவனைத் தயார் செய்ய வேண்டும். அதற்கும் இரண்டு மூன்று நாள் பிடிக்கும். மேலும் சந்திர சிகிச்சைக்குப் பின்னர் கூட சில குறிப்பிட்ட தினங்கள் கண்ணில் ஏற்பட்ட புண் ஆறும் வரை ஸ்ரீதர் கண் கட்டோடு விளங்க வேண்டும். அக்காலவெல்லையின் முடிவில் கண்களைக் கட்டவிழ்த்துப் பார்த்துத் தமக்குத் திருப்தி ஏற்பட்ட பின்னர் தான் அவரால் இலங்கையை விட்டுப் புறப்பட முடியும். ஆனால் இவற்றுடன் பிரச்சினை தீரவில்லை. ‘அமராவதி’ வளவில் எப்பொழுதும் சோதிடத்துக்கு மிகவும் மதிப்புண்டு. சிவநேசருக்கு, அவற்றில் நம்பிக்கை இல்லையென்றாலும், பாக்கியம் நாளும் கோளும் பார்க்காமல் ஒன்றுமே செய்வதில்லை. அதிலும் சோதிடத்தில் மிக வல்லவரான சின்னைய பாரதி எப்பொழுதும் பக்கத்திலிருக்கும் போது அவரைக் கலக்காமல் எதையும் செய்ய யாருக்குத்தான் மனம் வரும்? ஆகவே, சந்திர சிகிச்சை ஸ்ரீதருக்கேற்ற நல்ல நாளிலும் நடை பெற வேண்டும். எனவே, இவற்றை எல்லாம் பார்த்து இரண்டு மூன்று நாட்களை வீணாக்கியே ஸ்ரீதரின் சந்திர சிகிச்சை நாள் நியமிக்கப்பட்டது.

பேராசிரியர் நோர்த்லியைப் பொறுத்த வரையில் நல்ல நாள் பெரிய நாள் என்ற சோதிடப் பேச்செழுந்ததும், அதை அவர் எதிர்த்துப் பரிகசிக்கவே செய்தார். இவற்றை எல்லாம் மூட நம்பிக்கைகள் என்று கருதுபவர் அவர். உண்மையில் இங்கிலாந்திலிருந்து பகுத்தறிவு அச்சகச் சங்கத்தில் அவர் ஒரு முக்கிய உறுப்பினர். இருந்தாலும் பண்பே உருவான அவர், ஒரு தாய் தன் மகனின் மிகவும் முக்கியமான ஒரு வாழ்க்கை நிகழ்ச்சி சம்பந்தமாக நாள் பார்க்கும் போது, அதை எதிர்த்து வேறு நாளை நியமித்தல் மனோதத்துவ ரீதியில் அவ்வளவு நல்லதல்ல என்பதால் வெறும் பரிகாசத்துடன் நிறுத்திக் கொண்டு சந்திர சிகிச்சையை சின்னைய பாரதி கூறிய நல்ல நாளன்றே நியமித்துவிட்டார்.

“சந்திர சிகிச்சைக்காகச் சிவநேசர் குடும்பமே டாக்டர் நெல்சனின் ஆஸ்பத்திரியில் நான்கு நாட்களுக்கு முன்னரே குடியேறிவிட்டது. ஸ்ரீதருக்கு ஒரு தனியறையும் அதற்குப் பக்கத்தில் அவனுக்குத் துணையாக இருப்பவர்களுக்கென வேறு ஓர் அறையும் ஒதுக்கிவிடப் பட்டன. ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும்போது, ஸ்ரீதர் பொழுது போகாமல் இடர்ப்படக் கூடாது என்பதற்காக ‘ரேடியோ கிராம்’ இசைத்தட்டுகள், ‘பிரெயில்’ எழுத்தில் தயாரிக்கப்பட்ட சில புதிய கதைப் புத்தகங்கள் என்பனவும் ஸ்ரீதர் கட்டிலுக்கருகே வைக்கப்பட்டன.

ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவன் உள்ளத்தில் விநோதமான எண்ணங்கள் பல இடையிடையே எழும். அவன் வண்ணங்களைப் பார்த்து ஏறக்குறைய இரண்டு வருடங்களாகி இருந்தன. இருந்தாலும் வண்ண வித்தியாசங்களை இன்னும் அவனது மனத்திரையிலே அவனால் ஞாபகம் செய்து பார்க்க முடிந்தது. ஆனால் அவற்றின் பெயர்கள் தன் மனதில் குழம்பிப் போய்விட்டது போன்ற ஓர் எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. உதாரணமாக, நீலமென்றால் எது, பச்சை என்றால் எது என்று யாராவது கேட்டால் ஒன்றின் பெயரை மற்றதற்குத்தான் மாற்றிக் கூறிவிடக் கூடும் என்றா அச்சம் அவனுக்கு உண்டாயிற்று. ஆனால் அதற்கென்ன செய்வது? மீண்டும் வண்ணங்களையும் அவற்றின் பெயரையும் ஒன்றோடொன்று தொடர்புறுத்திக் கற்றுக் கொண்டால் போகிறது என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான் அவன்.



ஸ்ரீதர் கண் பார்வை பெற்றால் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி அதிகமாகச் சிந்திக்க வேண்டிய யாராவது இவ்வுலகில் இருந்தால் அது சுசீலாவாகத்தானே இருக்க முடியும்? ஆனால் உண்மை அவ்வாறிருக்கவில்லை. சுசீலா இப்பொழுது சிந்திப்பதையே நிறுத்திவிட்டாள். அவள் மூளை சிறிதும் வேலை செய்யாது ஓய்ந்து விட்டது போல் தோன்றியது. எந்த விஷயத்தையும் அந்த விஷயம் எழும்பும் அந்நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து, கையிலிருக்கும் வேலையைச் செய்வதில் மட்டும் கண்ணும் கருத்துமாயிருந்தாள் அவள். இருந்த போதிலும் அவள் கல கலப்பான பேச்சும், நகைச்சுவையும், பிள்ளைப் பாட்டுகளும் ஓரளவு அடங்கி விடத் தான் செய்தன. இடையிடையே அவள் முரளியை மடியில் தூக்கி வைத்திருந்தாலும், முக்கால் வாசி நேரம் பாட்டி பாக்கியத்தின் மடியிலேயே அவனை போட்டு விட்டாள் அவள். ஆனால் அவன் பாட்டியின் மடியில் இருந்தால் தானே? சிவநேசர், பேராசிரியர் நோர்த்லி உட்பட எல்லோரிடமும் தவழ்ந்து சென்று விளையாடினான் முரளி. முரளி அந்த ஆஸ்பத்திரிக்கே ஓர் அலங்காரப் பொருளாகிவிட்டான். டாக்டர் நெல்சன், டாக்டர் சுரேஷ், தாதியார் - யாவருமே அவனால் கவரப் பட்டுவிட்டவர்கள். ஒரு நாள் பேராசிரியர் நோர்த்லி அவனைத் தூக்கி விளையாட்டுக் காட்ட அவன் அவரது சட்டையில் சல மோசனம் செய்து அசுத்தப்படுத்திவிட்டான். “அடே பயலே, என் சட்டையை அசுத்தம் செய்ததற்கு உனக்கு எதிராகப் பொலீசில் வழக்குத் தொடர்கிறேன். பார்” என்றார் பேராசிரியர். முரளி அதற்கு “சரி போடுங்கள் வழக்கை. யார் வெல்கிறார் பார்ப்போம்.” என்று கூறுவது போல மழலைக் கூச்சலிட்டுக் கை தட்டினான்.

ஸ்ரீதர் கண் பார்வை பெறுவதால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றிச் சுரேஷ், சிவநேசர், பாக்கியம் ஆகியோரும் கவலைப் படவே செய்தனர். உண்மையில் இது பற்றி அவர்கள் தம்மிடையே பேசிக் கொள்ளவும் செய்தனர். இவ்வுரையாடலின் பயனாகப் பாக்கியம் சுசீலாவிடம், “ஸ்ரீதர் கண் பார்வை வந்ததும் நீ பத்மா அல்ல என்று கண்டு கொள்வானே, அதை நீ எப்படிச் சமாளிக்கப் போகிறாய்” என்று கேட்டாள். அதற்குச் சுசீலா “அது எனக்குத் தெரியும். நான் பார்த்துக் கொள்வேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்.” என்று மட்டும் சொன்னாள். பாக்கியமும் தீர்க்க முடியாத பிரச்சினையை, புண்ணைக் கிளறுவது போல் கிளறிக் கொண்டிருக்க விரும்பாததால் அப்படியே விட்டுவிட்டாள்.

ஸ்ரீதர் சந்திர சிகிச்சைக்குத் தயார் செய்யப்பட்டு வந்த மூன்று நாட்களும் சுசீலா அவன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள். அத்துடன் அவனுக்கு வேண்டிய தினசரிப் பணிகளையும் புரிந்து கொண்டிருந்தாள் அவள்.

சில சமயங்களில் தான் கண் பார்வையை இழந்தது பற்றிச் சிந்தித்தபோது, பல்கலைக்கழகத்தில் தான் நடித்த ஈடிப்பஸ் நாடகம் ஸ்ரீதருக்கு ஞாபகம் வந்தது. அதில் அவள் மிகவும் நல்ல பெயர் எடுத்திருந்ததால், மன்னன் ஈடிப்பஸ் அவன் மனதில் அடிக்கடி தோன்றுவது வழக்கமாயிருந்தது. இப்பொழுது ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருந்த போது தேபேஸ் மன்னனின் இந்நினைவு முன்னிலும் பார்க்க மிகவும் அதிகமாயிருந்தது. புகழ்பெற்ற கிரேக்க நாடகாசிரியரின் சொபாக்கிளினின் உணர்ச்சிகரமான அந்நாடகம் இப்பொழுது அவன் மனத்திரையைப் பீறிப் பீறி வந்து கொண்டிருந்தது.

அவனைப் பொறுத்த வரையில் அவன் அறிந்த நாடகங்களில் அதுவே ஆகச் சிறந்தது. அதனால்தான் அதனை மொழி பெயர்த்து அரங்கேற்றியதோடு அதில் தானே கதாநாயகனாகவும் நடித்தான் அவன். அது தவிர, ஈடிப்பஸ் நாடகம் அவன் வாழ்க்கையில் இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்நாடகத்தின் பயனாகத் தானே அவனது காதலி பத்மா அவனுக்குக் கிடைத்தாள்? பரமானந்தர் அறிமுகமானதும் இந்நாடகத்தின் பின்னர் தானே? ஆகவே “இன்று என்னுடன் என் பத்மா இங்கு வாழ்வதற்கே ஈடிப்பஸ் நாடகந்தானே அடிகோலியது?” என்று கூட யோசித்தான் அவன். ஈடிப்பஸ் நாடகம் நினைவுக்கு வந்ததும் அவன் மனதில் பளிச்சிட்ட முக்கியக் காட்சி ஈடிப்பஸ் தன் கண்களைத் தானே குத்திக் கொள்ளும் காட்சியாகும். “இந்நாடகத்தில் ஈடிப்பஸ் தன் கண்களை இழுக்கிறான். ஆனால் நான் அவனை விட அதிர்ஷ்டசாலி. நான் இழந்த பார்வையை மீண்டும் பெறக் கூடியதாயிருக்கிறதல்லவா?...” என்று பலவாறாகத் தன்னையும் ஈடிப்பஸையும் சமப்படுத்தி யோசித்தான் அவன்.

கொழும்புப் பல்கலைக்கழகத்திலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் அவன் இந்நாடகத்தில் நடித்த போது பார்த்தவரெல்லாம் நடுங்கிய காட்சி ஈடிப்பஸ் தன் கண்களைக் குத்திக் கொள்ளும் அந்தக் காட்சிதான். சில தினசரிப் பத்திரிகைகளின் கலா விமர்சகர்கள் இக்காட்சியை அளவு மீறிப் புகழ்ந்திருந்தார்கள். அது ஞாபகம் வந்ததும் கண்கள் சுகமாகிப் பழையபடி மற்றவர்கள் போல் நடமாடத் தொடங்கியதும் மீண்டும் ஈடிப்பஸ் நாடகத்தை ஒரு தரமேனும் அரங்கேற்ற வேண்டுமென்ற ஆசை அவனுக்கு. இது பற்றிச் சிந்தித்து போது தனது இலக்கியப் பேராசிரியர் ஈடிப்பஸ் நாடகத்தின் இக் காட்சியைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசியதும் அவனுக்கு ஞாபகம் வந்தது. உலக நாடக வரலாற்றிலே இக் காட்சி ஆகச் சிறந்த காட்சி என்று அவர் கூறியதும், அதன் பின்னர் மாணவர்கள் வகுப்பு முடிந்து இது பற்றிய நடத்திய வாதப் பிரதிவாதங்களும் அவனுக்கு நினைவு வந்தன. சிலர் “இரத்த வெறி பிடித்த இந்தச் சுய நோவுக் காட்சியைப் பேராசிரியர் இவ்வாறு மெச்சுகிறாரே” என்று குறைப்பட்டதும், தன்னைப் பொறுத்த வரையில் கூற்றே முற்றிலும் சரி என்று தான் தீர்ப்புக் கூறியதும் அவனுக்கு நினைவு வந்தன.

அப்பொழுது விகடப் பேச்சில் நிபுணனான ஒரு மாணவன் “ஈடிப்பஸின் சுய நோவை மெச்சும் பேராசிரியர் தாமும் சுய நோவில் ஆசை கொண்ட ஒருவராகவே இருக்க வேண்டும். நாமெல்லாரும் ஒன்று சேர்ந்து அவரை ஒரு நாள் மொத்துவோமா? அவர் அதற்காக மகிழ்ச்சிதானே அடைவார்?” என்று கூறியதும், மற்ற மாணவர்கள் எல்லோரும் அதைக் கேட்டுக் கொல்லென்று சிரித்தமையும் கூட அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தன.

“உண்மையில் ஈடிப்பஸ் நிலையில் இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன்? தன்னையறியாமல் தாயைப் பெண்டாக்கிப் பிள்ளைகளையும் பெற்றுவிட்டேன் என்ற செய்தி வாளைப் பிழந்து ஒரு மின்னல் போல் ஒருவன் முன் வந்து நிற்குமானால், அவன் என்ன செய்திருப்பான்? அநேகமாக நான் கூட தேபேஸ் மன்னனைப் போலவே என்னிரு கண்களையும் குத்திக் கொண்டிருக்கக் கூடும்.” என்றும் சிந்தித்தான் அவன்.

நான்கு தினங்கள் கழித்து டாக்டர் நோர்த்லி சந்திர சிகிச்சையைச் செய்து முடித்தார். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. டாக்டர் நெல்சனும் டாக்டர் சுரேசும் டாக்டர் நோர்த்லிக்குப் பக்கபலமாக இருந்து உதவினார்கள்.

சந்திர சிகிச்சை முடிந்து ஒரு நாள் மட்டும் ஸ்ரீதர் தனது கட்டிலில் ஓய்ந்து போய்க் கிடந்தான். அதன் பின் மிகவும் கல கலப்பாகப் பேச ஆரம்பித்துவிட்டான் அவன். சுசீலாவையும் முரளியையும் அருகே உட்கார வைத்து எதை எதையோ கூறினான் அவன். “பத்மா, இன்னும் சில நாட்களில் பேராசிரியர் நோர்த்லி என் கண்ணை அவிழ்த்துவிடுவார். என் கண்ணை அவிழ்த்ததும் நீ முரளியைத் தூக்கிக் கொண்டு என் முன்னே வர வேண்டும்” அது தான் நான் விழி பெற்றதும் முதலில் காண விரும்பும் காட்சி. தெரிகிறதா?” என்று ஒன்றுக்குப் பல தடவை கூறிவிட்டான் அவன்.

இவை எல்லாம் சுசீலாவின் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கிக் கொண்டிருந்தன. சுசீலா மட்டுமல்ல, பாக்கியம், சிவநேசர், நன்னித்தம்பியர் எல்லோருமே உள்ளூர நடுங்க ஆரம்பித்தார்கள். வானமிடிந்து தலையில் விழுவதை எதிர்பார்ப்பதுபோல பயங்கரமான விளைவுகளை எதிர்பார்த்து இருந்தார்கள் அவர்கள். கண்ணுக்குத் தெரியும் தொலைவில் ஒரு பூகம்பம் வந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது அவர்களுக்கு.

கடைசியில் பூகம்பமும் வரத் தான் செய்தது.

பேராசிரியர் நோர்த்லி தாம் நியமித்த நாளில் ஸ்ரீதர் கன்களின் கட்டுகளை அவிழ்த்தார். அவ்வாறு அவர் கட்டுகளை அவிழ்த்த போது ஸ்ரீதரின் அறையில் டாக்டர்களையும் ஒரு தாதியையும் தவிர வேறு யாரையும் அவர் அனுமதிக்கவில்லை.

கட்டுகளை அவிழ்த்துத் தமது விரல்களினால் பேராசிரியர் நோர்த்லி ஸ்ரீதரின் விழிகளை மலர்வித்தார்.

ஸ்ரீதர் கண் விழித்தான். உலகமே ஒளிக் கடலில் நீந்திக் கொண்டிருப்பது போல் இருந்தது அவனுக்கு. அப்பொழுது தான் இவ்வுலகில் பிறந்தது போன்ற ஓர் உணர்வு அவளை ஆட்கொண்டது. திக்பிரமை பிடித்தவன் போல் தன் முன்னே நின்ற பேராசிரியரையும் மற்ற டாக்டர்களையும் சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள். பின்னர் “கண் தெரிகிறது. கண் தெரிகிறது.” என்று பலமாகச் சப்தமிட்டாள் அவன்.

பேராசிரியர் நோர்த்லி சிரித்தார். டாக்டர் சுரேஷ் அவர் கால்களைப் பற்றிக் கொண்டு “தாங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள். நீங்கள் ஸ்ரீதருக்குச் செய்த இந்த உதவியை எவ்வாறு பாராட்டுவேன்” என்றான். டாக்டர் நெல்சன், “பேராசிரியரே, நீங்கள் மிகவும் பெரிய சாதனையைச் செய்துவிட்டீர்கள். என்னைப் பொறுத்த வரையில் ஸ்ரீதர் இவ்வளவு இலகுவில் கண் பார்வையை மீண்டும் பெறுவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை.” என்றார்.

பேராசிரியர் இப் பாராட்டுரைகளுக்குப் பதிலாக அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்து விட்டு ஸ்ரீதருடன் பேச ஆரம்பித்தார். “ஸ்ரீதர், இது என்ன வர்ணம்?” என்று ஒரு பச்சை வர்ணப் புத்தகத்தை அவனிடம் காட்டிக் கேட்டார் “நீலம்” என்று பதிலளித்தான் ஸ்ரீதர். பின்னர் ஒரு நீல வர்ணக் கடற்காட்சியை அவனிடம் காட்டி “இதன் வர்ணம் என்ன?” என்று அவர் கேட்டார். “பச்சை” என்று பதிலளித்தான் ஸ்ரீதர். அதைக் கேட்ட பேராசிரியர் சுரேஷைப் பார்த்து “உன் நண்பன் மறந்துவிட்டது வர்ணங்களை அல்ல. அவற்றின் பெயர்களை. நீ அவற்றை அவனுக்குத் திருப்பிக் கற்றுக் கொடுக்க வேண்டும்.” என்றார்.

ஸ்ரீதர் கட்டிலில் எழுந்துட்கார்ந்து பேராசிரியரின் கைகளைத் தன் கைகளால் பற்றி, “பேராசிரியரே தாங்கள் எனக்கு விழிகளைத் தந்துவிட்டீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்” என்றான். பேராசிரியர் அவன் கன்னங்களைத் தன் கரங்களால் தட்டிவிட்டு, “ஸ்ரீதர் இன்னும் இரண்டு மணி நேரத்தில் என் விமானம் இந்தியா புறப்படுகிறது. நான் போகிறேன். இனி உனக்கு ஒரு குறைவுமில்லை. ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டால் டாக்டர் நெல்சன் அவற்றைப் பார்த்துக் கொள்வார்,” என்று கூறி விடை பெற்றார்.

இதற்கிடையில் சுரேஷை உற்றுப்பார்த்த ஸ்ரீதர், “அடே நீ சுரேஷல்லவா?... நீதானே எனக்கும் கண் தர ஏற்பாடு செய்தாய். உன் உதவியை நான் ஒரு போதும் மறவேன்.” என்றான்.

அதற்குச் சுரேஷ், “இந்தச் சம்பிரதாயமான நன்றியுரைகளை எல்லாம் அப்புறம் பேசிக் கொள்வோம். இப்பொழுது பேராசிரியரை விமான நிலையைத்துக்குப் போய் வழியனுப்பி விட்டு வருகிறேன்.” என்று புறப்பட்டான்.

ஸ்ரீதரிடம் விடை பெற்று வந்த பேராசிரியர் நோர்த்லி வெளியிலே சிவநேசர் முதலியவர்களுடன் சில வார்த்தைகளைப் பரிமாறிவிட்டு சுரேசுடன் காரிலேறிப் புறப்பட்டுவிட்டார். புறப்படுமுன் முரளியில் அப்பின கன்னங்களைக் கிள்ளிவிட்டு “முரளி, அப்பா உனக்காகக் காத்திருக்கிறார். போய் பார்” என்று கூறத் தவறவில்லை.

அதன் பின் பாக்கியம், சிவநேசர் நன்னித்தம்பியர், செல்லாச்சி ஆகியோர் குழந்தை முரளியுடன் ஸ்ரீதரின் அறையுள் நுழைந்தார்கள். அவர்களைக் கண்டதும் ஸ்ரீதர் ஆனந்தத்தால் கூத்தாடினான். முரளியைக் கண்டதும் கட்டிலில் எழுந்துட்கார்ந்து அவனைத் தன் கரங்களில் வாங்கிக் கொண்டு “இவன் தானே முரளி. புரளிக்காரப் பயல். நல்ல அழகாயிருக்கிறானே.” என்று கூறிவிட்டு “பத்மா எங்கே?” என்று கேட்டான்.

பாக்கியம் அதற்கு உடனே பதிலளிக்க வில்லையென்றாலும் இரண்டு மூன்று தடவை திருப்பித் திருப்பிக் கேட்கவே ஏதாவது பதிலளிக்கும் நிர்ப்பந்தம் அவளுக்கேற்பட்டது. “பத்மாவுக்கு சிறிது சுகமில்லை. வீட்டுக்குப் போய்விட்டாள்” என்றாள்.

ஸ்ரீதர் அதைக் கேட்டதும் பதைபதைத்துவிட்டாள். “அப்படியா? அபடியானால் உடனே வீடு போவோம். பத்மாவைக் காண வேண்டும்.” என்றான். தான் முன் கூட்டித் திட்டமிட்டது போல் கண் விழித்ததும் முரளியையும் பத்மாவையும் ஒன்றாகப் பார்க்கவேண்டுமென்ற தன் ஆசைக் கனவு நிறைவேறாது போனதில் ஸ்ரீதருக்குப் பெரிய ஏமாற்றம்.

இவை நடந்து ஒரு மணி நேரம் கழித்து ‘அமராவதி’ மாளிகையில் ஸ்ரீதரின் “பத்மா, பத்மா” என்ற அழைப்பு, பேரொலியாகக் கேட்டது. அந்தப் பெரிய மாளிகையின் பெரிய விறாந்தையிலும் மண்டபங்களிலும் பத்மா, பத்மா என்ற சொல் ஒளியும் எதிரொலியுமாகச் சப்தித்தது.

ஸ்ரீதர் தனது காரில் மிக வேகமாக ‘அமராவதி’ வந்து பத்மாவை அழைத்துக் கொண்டிருந்தாள். காரை ஓட்டி வந்த காரோட்டி காரைப் ‘போர்ட்டிக்கோ’வில் நிறுத்திவிட்டு இறங்கிப் போய்விட்டான். அவள் வாசலில் வாயிற்காவலாளியோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

ஸ்ரீதர் “பத்மா, பத்மா” என்று கூறியவாறு தனது அறைக்குள்ளே போனான். ஆனால் அங்கே ஓர் ஆளரவத்தையும் காணோம். இருந்தாலும் அங்கு ஒரு புறத்தில் இருந்த சிறிய ‘ஸ்கிரீனு’க்குப் பின்னால் ஏதோ சலனம் ஏற்பட்டது போலிருந்தது. விரைந்து சென்று அது என்ன சலனம் என்று பார்த்தான் ஸ்ரீதர்.

அங்கே ஸ்கிரீனுக்குப் பின்னால் ஒரு பெண் நடுங்கிக் கொண்டு நிற்பதைக் கண்டான் அவன். அவள் முன்னே ஒரு சிறிய மேசை. அதில் ஒரு கண்ணாடி கிளாசில் எதையோ கலக்கிக் கொண்டிருந்த அவளை ஸ்ரீதர் அடையாளம் கண்டு கொண்டாள். ஆம், நன்னித்தம்பி மகள் சுசீலா அல்லவா இவள் - இவள் ஏன் இங்கு வந்தாள் என்று அதிசயித்தான் அவன்.

ஆம். சுசீலா தான் அங்கு நின்று கொண்டிருந்தாள். இன்று ஸ்ரீதர் கண் பார்வை பெறுவான் என்பது அவளுக்கு நன்கு தெரிந்திருந்தால் காலையிலிருந்தே ஒரு நிலையில் நில்லாது தவித்துக் கொண்டிருந்தது அவள் மனம். “ஸ்ரீதர் முன்னர் நான் தான் பத்மா என்று பேசுவது எப்படி?” என்ற கலக்கம் அவளைப் பீடித்தது. “ஸ்ரீதருக்குக் கண் பார்வை கிடைத்துவிட்டது. இனி நான் இருந்தென்ன, இறந்தென்ன?” என்று எண்னிய அவள் இவ்வுலகில் நச்சுக் கோப்பையே தனக்குத் தஞ்சமென முடிவு கட்டி விட்டாள். அதன் பயனாகவே ஆஸ்பத்திரியிலிருந்து அதிகாலையிலேயே வந்து, தேநீருடன் அசெட்டிக் திராவகத்தைக் கலந்து அதனை அருந்துவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் அவள்.

ஆனால் இறப்பதென்னவோ அவ்வளவு இலேசான காரியமாகத் தெரியவில்லை. தன் ஆள் மாறாட்டக் குழறுபடியின் காரணமாக ஸ்ரீதரிடமிருந்து பிரிவதென்னவோ சுசீலாவுக்கு அவசியமானதாகிவிட்டது. தன் முன்னுள்ள பிரச்சினைக்கு அது ஒன்றுதான் திருப்திகரமான முடிவாகத் தோன்றியது. ஆனால் முரளியிடமிருந்து பிரிவதெப்படி? என் உயிரின் உயிரான, இரத்தத்தின் இரத்தமான அவனை விட்டுவிட்டு நான் போவதா - என்று தயங்கினாள் அவள். அவ்வாறு அவள் தயங்கிக் கொண்டிருந்த போது தான் ஸ்ரீதரின் “பத்மா, பத்மா” என்று அழைப்பு அவள் காதுகளில் எதிரொலிக்க ஆரம்பித்தது. அதைக் கேட்டதும் சுசீலாவின் உள்ளத்தில் புதிய ஆசை ஒன்று தோன்றியது. “இதோ ஸ்ரீதர் கண் பார்வை பெற்று வந்துவிட்டார். சாவதன் முன்னர் ஒரு தரமாவது அவரது விழி பெற்ற நிலையில் அவரைப் பார்த்துவிட வேண்டும்.” என்பதே அது. அந்த ஆசையினால்தான் ‘ஸ்கிரீனி’ன் பின்னல் பூனை போல் பதுங்கி நின்றாள் அவள். அவனறியாமல் அவனை ஒரு தரம் நன்கு பார்த்துவிட வேண்டுமென்பது அவளது ஆசை.

ஆனால் அதற்கிடையில் ஸ்ரீதரிடம் அகப்பட்டுக் கொண்டாள் அவள்.

சுசீலாவைக் கண்டதும் ஸ்ரீதர், “யாரது? நீ ஏன் இங்கு நிற்கிறாய்? நீ நன்னித்தம்பியரின் மகளல்லவா? நான் பத்மாவைக் காண வேண்டும். பத்மாவைக் கூப்பிடு” என்றான்.

சுசீலாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “பத்மாவா? நான் தான் பத்மா. ஏன் என் குரல் உங்களுக்குத் தெரியவில்லையா? இது பத்மாவின் குரலில்லையா?” என்று கேட்டாள்.

ஸ்ரீதர் திடுக்கிட்டான்: “ஆம், பத்மாவின் குரல்தான். ஆனால் நீ பத்மா அல்லவே?” என்றான்.

சுசீலா, “உண்மைதான். நான் பத்மா அல்ல - சுசீலா. ஆனால் உங்களை நாங்கள் ஏமாற்றிவிட்டோம். பத்மாவுக்குப் பதிலாக உங்கள் அப்பாவும் அம்மாவும் என்னை பத்மா என்று சொல்லி உங்களுக்கு மணம் செய்து வைத்தார்கள். நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டீர்கள்.” என்றாள். அவ்வாறு சொல்லிக் கொண்டே நச்சுத் திராவகத்தை மடக்கென்று வாயில் ஊற்றுவதற்குக் கிளாசைக் கையிலே எடுத்தாள் சுசீலா.

அதைக் கண்ட ஸ்ரீதர், “என்ன இது? நீ என்ன குடிக்கப் போகிறாய்?” என்றான்.

“நஞ்சு - அசெட்டிக் அசிட்” என்றாள் சுசீலா. அதைக் கேட்ட ஸ்ரீதர் அப்படியே பாய்ந்து கிளாசைத் தன் கைகளால் பற்றினான். இதனால் ஏற்பட்ட சந்தடியில் கிளாஸ் நிலத்தில் குப்புற விழுந்து சுக்கு நூறாக உடைந்தது.

சுசீலா ஒன்றும் தெரியாமல் திகைத்துப் போய் நின்றான். அவன் கண்கள் ஸ்ரீதரின் பார்வை பெற்ற கண்க¨ளால் அள்ளி விழுங்குவது போல் நோக்கின.

ஸ்ரீதர், “ நீ சொன்னது உண்மைதானா? நீதானா என்னுடன் பத்மாவாக வாழ்ந்தவள்? என் முரளிக்குத் தாய் நீதானா?” என்று ஒன்றின் பின் ஒன்றாகப் பல கேள்விகளைக் கேட்டான்.

ஒவ்வொன்றையும் “ஆம், ஆம்” என்று உறுதிப்படுத்தினாள் சுசீலா.

ஸ்ரீதர் ‘அமராவதி’யை நோக்கிக் காரில் புறப்பட்டதும் அவன் பின்னாலேயே சிவநேசரும் பார்வதியும் குழந்தை முரளியுடன் புறப்பட்டு வந்துவிட்டார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தது தான் தாமதம். சுசீலாவும் ஸ்ரீதரும் தங்கள் அறையுள் பலமாகப் பேசிக் கொண்டிருப்பது அவர்கள் காதில் வீழ்ந்தது. அதைக் கேட்ட பாக்கியம் அவர்கள் அறையுள் நுழையப் போனாள். ஆனால் சிவநேசர் அதைத் தடுத்தார். “வேண்டாம் அவர்கள் எதையும் பேசிக் கொள்ளட்டும். பேசி முடிந்து வெளியில் வந்த பின் விஷயத்தை நாம் சுசீலாவிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.” என்றார். பாக்கியமும் ஒப்புக்கொண்டு கீழே விறாந்தையில் முரளியை ஆயாவிடம் ஒப்படைத்துவிட்டுச் சிவநேசருடன் உட்கார்ந்து கொண்டான். முரளி சிறிது நேரத்தில் ஆயாவின் அரவணைப்பில் தூங்கிவிட்டான்.

சிவநேசரும் பாக்கியமும் ஸ்ரீதர் தன் கண் பார்வையைப் பெறுவது சுசீலாவுக்குப் பெரிய பிரச்சினையையே உண்டு பண்ணும் என்று உணர்ந்த போதிலும், அது தற்கொலை பன்ணும் அளவுக்கு அவளைத் தூண்டும் என்று ஒரு போதும் எண்ண வில்லை. எனவே அவர்கள் இது விஷயமாக ஓரளவு பரபரப்பு அடைந்திருந்த போதிலும், அளவுமீறிய பதை பதைப்படைந்தார்கள் என்பதற்கில்லை. ஆகவே ‘அமராவதி’யின் விறாந்தையில் அவர்கள் மிக அமைதியாகவே அமர்ந்திருந்தார்கள்.

ஸ்ரீதர் சுசீலாவை நோக்கிக் குமுறிக் கொண்டிருந்தான். “நான் குருடன். அதை உபயோகித்து என் பெற்றோர்களே என்னை ஏமாற்றிவிட்டர்கள். உன்னைப் பத்மா என்று கூறி என்னை மோசம் செய்துவிட்டார்கள். சிச்சீ! எத்தகைய மடையன் நான்? எப்படிப்பட ஏமாளி நான். நினைக்கவே வெட்கமாயிருக்கிறது” என்றாள்.

சுசீலாவுக்கு என்ன பதிலும் கூறத் தோன்றவில்லை. கற்சிலை போல் நின்று கொண்டிருந்தாள்.

ஸ்ரீதர் பேசிக் கொண்டே போனான். உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவன் பேசியது ஒரு நாடக நடிகன் நாடகத்தின் உச்சக் கட்டத்தில் பேசுவது போலிருந்தது. ஈடிப்பஸ் அரசன் தனது இழிதகைமையை அறிந்து, கொதிப்படைந்து தன் கண்களைத் தன் கைகளாலேயே சிதைத்தெறியுமுன் எவ்வித உணர்ச்சியுடன் பேசினானோ அத்தகைய உணர்ச்சியுடன் பேசிக் கொண்டு போனான் ஸ்ரீதர்.

அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பிலே அவன் சுசீலாவை நோக்கி, “ நீ பத்மாவல்ல. நான் உன்னை வெறுக்கிறேன். நீ என்னை ஏமாற்றியவள். மோசக்காரி. நான் உன்னை என் முழு மனதாலும் வெறுக்கிறேன்.” என்றான்.

இவ்வார்த்தைகள் சுசீலாவை அப்படியே இடிந்து போகச் செய்துவிட்டன. “என் காதால் இந்த வார்த்தைகளைக் கேட்கத்தானா நான் கண்ணற்ற அவரைத் திருமணம் செய்தேன்? அவர் வாழ்க்கை அழிந்து விடுமென்பதற்காக அவர் மீது நான் கொண்ட இரக்கமல்லவா அவரைத் திருமணம் செய் என்ற திடீர் முடிவுக்கு என்னைக் கொண்டு வந்தது? அது மட்டுமல்ல, நான் மட்டும் அவருக்குக் கண் பார்வை அளிக்கக் கூடாது என்று நினைத்திருந்தால் இன்று அவர் என்னை நோக்கி இந்த வார்த்தைகளைக் கூறும் படி ஏற்பட்டிருக்குமா?... இருந்தாலும் பாவம், பிழை அவர் மீதில்லை. அவர் மோசடி செய்யப்பட்டதென்னவோ உண்மை. இந்த நிலையில் யாரும் அவர் போல தானே பேசியிருப்பார்கள்? பிழை என் மீது தான், என் மீதேதான். நான் அவர் இங்கு வருவதற்கு முன்னரே நஞ்சை அருந்தியிருக்க வேண்டும். அவ்வாறு அருந்தியிருந்தால் இந்த வார்த்தைகளை நான் கேட்காதிருக்கலாமல்லவா?” என்று தனக்குள் தானே கூறிக் கொண்டாள் அவள்.

சுசீலாவைப் பொறுத்தவரையில், அவள் வாழ்க்கையின் தோல்வி நாள் இன்று. ஒரு பெண்ணினுடைய இதயத்தின் பெரிய வெற்றி காதலின் வெற்றியே. அது போல் காதலின் தோல்விதான் வாழ்க்கையின் தோல்வியும், தான் விரும்பி அன்பு செலுத்திய ஓர் ஆண் மகன் தன் முகத்தைப் பார்த்துச் சிறிதும் கூசாது “ நான் உன்னை வெறுக்கிறேன்.” என்று கூறுவதை எந்தப் பெண்ணால் தான் சகிக்க முடியும்? இவ்வுலகில் எந்த ஓர் ஆணின் மீது தன் முழு அன்பையும் செலுத்தி வந்தாளோ, எவனது சிரிப்பிலே பூரிப்பையும், எவனது துக்கத்திலே உள்ளக் குமுறலையும் கண்டு வந்தாளோ, எவனைத் தன்னுயிரினும் மேலான பொருளாக எண்ணி வந்தாளோ அவன், “நான் உன்னைக் காதலிக்கவில்லை. உன்னை வெறுக்கிறேன்.” என்று கூறிவிட்டான். இனி இந்த வாழ்க்கையில் எனக்கென்ன இருக்கிறது. முரளி... ஆனால் அவன் கூட தந்தையுடன் சேர்ந்து கொள்ள மாட்டான் என்பது என்ன நிச்சயம். அவரால் வெறுக்கப்பட்ட நான் இனி ‘அமராவதி’யில் இருக்க முடியாது. நான் அப்பா வீட்டுக்குப் போக வேண்டியதுதான். அப்படி நான் அப்பா வீட்டுக்குப் போகும்போது முரளியை என்னிடம் தருவார்களா? நிச்சயம் தர மாட்டார்கள். என்னை வெறுத்தாலும் முரளி அவர் பிள்ளை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இன்னும் முரளி ‘அமராவதி’யின் ஒரே வாரிசு. அவனை என்னிடம் ஒருபோதும் தர மாட்டார்கள். என் மகன் கோடீஸ்வரன். தங்கத்திலும் வைரத்திலும் புரண்டு வளர்வான் அவன். ஆனால் நான் அவன் தாய் என்பது கூட மறக்கப்பட்டு எங்கோ ஒரு மூலையில் கிடப்பேன். விஷயம் தெரிந்த ஒரு சிலர் மட்டும் அதைப் பற்றி அனுதாபமாகப் பேசுவார்கள். இதை விடக் கேடு கெட்ட வாழ்க்கை என்ன இருக்கிறது? சாவு அதை விட எவ்வளவோ மேலல்லவா? ஆனால் சாவதற்கு நான் எடுத்த முதல் முயற்சி இன்று தோற்றுவிட்டது. இரண்டாம் முறை எப்படியும் வெற்றி பெற்றே தீருவேன். ‘அமராவதி’யில் இல்லாவிட்டாலும் அப்பா வீடு சென்ற பிறகாவது நிச்சயம் நான் நஞ்சு குடித்துச் சாவேன். இது சத்தியம்” என்று தனக்குள் தானே உறுதி கூறிக் கொண்டாள் அவள்.

இவ்வாறு அவன் சிந்தித்துக் கொண்டிருந்த போது அவளை அறியாமலே கண்ணீர் பிரவகித்து கொண்டிருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு அவள் தன் அழுகையை அடக்க முயன்ற காட்சி மிகப் பரிதாபமாக இருந்தது.

ஸ்ரீதர் அதைப் பார்த்ததும் கலங்கி விட்டான். இதற்கு முன் அவன் தன் வாழ்க்கையில் எவருமே இவ்வாறு கண்ணீர் சிந்திக் கலங்கி நின்றதைத் தன் கண்களால் கண்டதில்லை. “இழந்த கண்கள் மீண்டும் கிடைத்ததும் நான் காணும் முதற் காட்சி இப்படியா அமைய வேண்டும்.” என்று எண்ணினான் அவன்.

“நான் ஏமாற்றப்பட்டேன். பத்மா எங்கள் அந்தஸ்துக்குக் குறைந்தவளென்பதற்காக என் அப்பா செய்த மோசடி இது. ஆனால் உண்மையில் நான் ஏமாறியவன்தானா...”

“ஏறக்குறையக் கடந்த இரண்டு வருட காலமாக சுசீலா என்னுடன் வாழ்ந்து வருகிறாள். உண்மையைச் சொல்லப் போனால் என் வாழ்க்கையின் மிகவும் இன்பகரமான நாட்கள் இந்த இரண்டு வருடங்களும்தானே. சாதாரணமாகக் குருடனின் வாழ்க்கை மிகவும் துன்பம் நிறைந்ததாயிருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இவைதான் என் வாழ்வின் மிகவும் இன்பமான நாட்கள். என் குருட்டு வாழ்க்கைக்கு இன்பச் சுவையை ஊட்டியது யார்? சுசீலா அல்லவா? அவள் பேச்சு எனக்கு இனித்தது. அவள் காட்டிய அன்பு என்னுள்ளத்தின் அடித்தளத்தைத் தொட்டு என்னை மெய்மறக்கச் செய்திருக்கிறது. இன்னும் அவள் என் முன் காட்டிய பணிவை என்னென்பேன். அவளது ஒவ்வொரு செயலும் என்னுள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறது. அவள் பாட்டு என்னைப் பரவசப்படுத்தியது. அவளது விளையாட்டுப் பேச்சு என்னை எப்பொழுதும் சிரிக்க வைத்திருக்கிறது. உண்மையில் நான் தனித்திருக்கும் வேளைகளில், “இப்படிப்பட்ட பெண் வேறு யாருக்கும் இவ்வுலகில் கிடைக்க மாட்டாள். உலகிலேயே மிகச் சிறந்த பெண் எனக்குக் கிடைத்துவிட்டாள்” என்று எனக்குள்ளே நான் எத்தனை தடவை கூறி மகிழ்ந்திருக்கிறேன்? உண்மையில் நான் விரும்பியது போல் பத்மாவைத் திருமணம் செய்திருந்தால் அவள் கூட என்னுடைய உள்ளத்தை இவ்வாறு ஒரு சேரக் கொள்ளை கொண்டிருப்பாளோ என்னவோ? சுசீலா பக்கத்தில் இருந்தால் இன்பம், விலகினால் துன்பம். கடந்த இரண்டு வருட காலத்தில் ஒவ்வொரு நிமிஷத்தையும் இன்ப நினைவாக்கியவள் அவள். உண்மையில் அவள் என் காதற்கன்னி. உயிர்த் துணை, மனதின் அரசி, இதய ராணி. ஆனால் அது இருளில்தான். என் கண்களில் பார்வை இல்லாத போதுதான் பத்மா என்று அவளை நினைக்கும்போது தானே...

ஆனால் பார்வை பெற்றதும் கண்ணால் பார்த்ததும் காதல் மறைந்தது. அழகைப் பொறுத்தவரையில் இவளும் பத்மாவுக்குக் குறைந்தவளல்லதான். உண்மையில் இவள் கண்கள் பத்மாவின் கண்களை விட அழகு. இருந்துமென்ன? என் மனம் விரும்புவது பத்மாவை. அவளே இதுவரை என்னுடன் வாழ்ந்து வந்திருக்கிறாள். ஆனால் கண்கள் வந்ததும் இவள் யாரென்று தெரிந்து விடுகிறது. இவள் பத்மாவல்ல என்று தெரிந்ததும் இவள் மீது வெறுப்புதான் ஏற்படுகிறது. நான் இவளை வெறுக்கிறேன். பத்மாவைத் தவிர வேறு எல்லாப் பெண்களையுமே நான் வெறுக்கிறேன். இந்த நிமிஷம் வரை நான் பத்மாவுடனல்லவா என் மனதில் வாழ்ந்து வருகிறேன்? இன்று திடீரென என் காதலைச் சுசீலாவிடம் மாற்றி அவளுடன் வாழ முடியுமா? அது ஓர் இரண்டாம் திருமணம் போலல்லவா தோன்றுகிறது. நான் என்ன செய்வேன்? சுசீலா? மனதாரப் பார்த்தால் மகராசியாகத் தெரியும் அவள் ஊனக் கண்ணுக்கு வெறுப்பூட்டுபவளாகக் காட்சியளிக்கிறாள். ஆனால் ஐயோ சுசீலாவை நான் வெறுப்பதா? குருடனென்றும் பாராமல் என்னைக் கல்யாணம் செய்தாளே. இரவு பகலாக எனக்குப் பணிவிடை புரிந்தாளே, எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குக் கண் பார்வை கிடந்தால் அதனால் தன் மோசடி வெளியாகித் தான் இன்னங்களுக்கு ஆளாக நேரிடும் என்று தெரிந்தும் நான் கண் பார்வை பெற வேண்டுமென்று ஊக்கமாக உழைத்தாளே, அந்த உத்தமியையா நான் வெறுப்பது? இல்லை, நான் அவளை வெறுக்கவில்லை. நேசிக்கிறென். காதலிக்கிறேன். அவள் என் காதல் தெய்வம். ஆனால், இருளில்தான் அவள் என் காதலி. உண்மையில் அவளைச் சுசீலா என்று நான் இனங்காணாத வரையில் தான் அவள் என் காதலி. ஒளியில் அவள் ஓர் ஏமாற்றுக்காரி. அவளை நான் விரும்ப முடியாது.

ஆனால் இதுதானா? அவள் காட்டிய அன்புக்கு நான் செய்யும் கைம்மாறு? அவளது தியாகங்களுக்கு நான் செய்யும் பதில்? வெறுப்பு? கூடாது. அவள் நான் வெறுக்கக் கூடாது. நேசிக்க வேண்டும். என்றும் எப்பொழுதும் இரவும் பகலும் அவளைக் காதலிக்க வேண்டும். ஆனால் அதற்குத் தடை? என் கண் பார்வை? ஐயோ, நான் என் கண் பார்வையை ஏன் பெற்றேன்? அது கிடைக்கும் வரை நான் அவளை நேசிக்கத் தானே செய்தேன்? என்னுயிருக்குயிராக அல்லவா அவளை நான் நேசித்தேன்? ஐயோ என் கண் பார்வையால் நான் பெற்ற பயன் இதுதானா?”

ஸ்ரீதரின் மனதில் இடியும் மின்னலும் பூகம்பமும் ஏக காலத்தில் நிகழ்ந்தது போன்ற நிலை. தன்னையிழந்து தவிக்கும் அந்நிலையிலே அவன் கண்கள் அங்குமிங்கும் சுழல்கின்றன. அவ்வாறு சுழன்ற அவனது கண்கள் திடீரென ஓரிடத்தில் நிலைத்தன. ஆம், சுசீலாவுக்குச் சமீபமாக இருந்த மேசையிலே காணப்பட்ட பவுண்டன் பேனாவிலே அவன் கண்கள் அப்படியே நிலைத்துவிட்டன. நஞ்சருந்தி மாள்வதற்கு முன்னர் ஏதாவது எழுதி வைப்போமா என்ற சபலத்தில் சுசீலா கொண்டு வந்திருந்த பேனா அது. அதற்குப் பக்கத்தில் காகிதம் எழுதும் ‘லெட்டர் பாட்’ ஒன்றும் கிடந்தது.

“என் கண்களே என் எதிரிகள். அவை எனக்கு இன்பத்தைக் கொண்டு வரவில்லை. துன்பத்தையே கொண்டு வந்தன. அவை இருக்கும் வரை என்னால் சுசீலாவை நேசிக்க முடியாது...” என்று எண்ணிய அவன் மறுகணம் வெறி பிடித்தவன் போலானான். பவுண்டன் பேனாவைக் கையில் எடுத்தான். மின்னி மறையும் நேரத்துள் அவற்றால் தன்னிரு கண்களையும் குத்திக் கொண்டு “ஐயோ” எனக் கதறினான். உலக் நாடக பாத்திரங்களில் தன்னை முற்றாகக் கவர்ந்து அடிமை கொண்ட ஈடிப்பஸ் போலத் தன் கண்களைத் தானே குத்திக் கொண்டு கதறினான் ஸ்ரீதர்.

இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னைய கிரேக்க நாடகம் ஸ்ரீதரின் வாழ்க்கை நாடகமாகிவிட்டது.

ஒரு முறை கண்ணை மூடி மீண்டும் திறப்பதற்குச் செல்லும் அற்ப நேரத்துள் திடுதிடுப்பென்று நடந்து விட்ட இந்நிகழ்ச்சி சுசீலாவைத் திகிலடைய செய்துவிட்டது. அவள் ஒரே தாவலாகச் ஸ்ரீதரிடம் ஓடினாள். ஆனால் அதற்கு முன்னர் விஷயம் முடிந்து விட்டது. கண்களிலிருந்து இரத்தம் பிரவகித்தது. கண்கள் இரண்டும் இரண்டு புண்களாகிவிட்டன. அதைக் கண்டு ஆற்றாத சுசீலா “ஐயோ நான் என்ன செய்வேன்” என்று உச்சக் குரலில் கூச்சலிட்டாள்.

கீழே விறாந்தையிலிருந்த சிவநேசரும் பாக்கியமும் சுசீலாவின் அலறலைக் கேட்டுத் திடுக்கிட்டு விட்டார்கள். ஒரே ஓட்டமாக ஸ்ரீதரின் அறைக்கு ஓடினார்கள்.**** கேட்டார் சிவநேசர்.

“தன் கண்களைத் தாமே குத்திக் கொண்டு விட்டார். உடனே டாக்டர் நெல்சனை அழையுங்கள்.” என்றாள் சுசீலா விம்மியவண்ணம்.

சிவநேசர் உடனே டெலிபோனுக்குச் சென்று டாக்டர் நெல்சனுடன் பேசினார்.

“இங்கு பயங்கரமான நிகழ்ச்சி ஒன்று நடந்துவிட்டது. ஸ்ரீதர் தனது கண்களைத் தானே குத்திக் கொண்டு விட்டான். உடனே வாருங்கள்.”

டாக்டர் நெல்சன் பதைபதைத்துப் போய்விட்டார். சில நிமிஷங்களில் வந்து விடுவதாகக் கூறி டெலிபோனை வைத்தார் அவர்.

[தொடரும்]