Wednesday, October 22, 2008

தொடர்நாவல்: மனக்கண்

- அ.ந.கந்தசாமி

29-ம் அத்தியாயம் மர்மக் கடிதம்!

சுரேசும் தாயும் சொன்ன விவரங்களால் ஸ்ரீதரின் உள்ளம் இப்பொழுது சுசீலாவைச் சுற்றிப் படர்ந்தது. "என்னே அவள் தியாகம், அவள் அன்பு. முறிந்து சரிந்த என் வாழ்க்கைக்கு அன்று அவள் மட்டும் துணிந்து முட்டுக் கொடுக்க முன் வந்திருக்காவிட்டால், நான் இன்று உயிருடன் இருப்பேனா? அப்பா நினைத்தது போல் பத்மாவைப் பலாத்காரமாகத் தூக்கி வந்து எனக்கு மனைவியாக்கியிருந்தால்... சீ அதுவும் ஒரு கல்யாணமா? அதை விட எனக்கு வேறு நரகம் வேண்டியிருந்திருக்குமா?" என்று பல விதமான சிந்தனைகள் சங்கிலித் தொடர் ஒன்றின் பின்னொன்றாக நகர்த்து வந்தன.

அன்னையின் பேச்சுகளைக் கேட்ட ஸ்ரீதர் "அம்மா நான் சுசீலாவுக்கு எவ்வளவு அநியாயம் செய்துவிட்டேன். மோசக்காரி - உன்னை நான் வெறுக்கிறேன் என்று அவளைப் பார்த்து நான் எத்தனை தரம் வாய் கூசாது கூறியிருக்கிறேன். பொறுமைக்குப் பூமாதேவியை உதாரணம் சொல்வார்கள். ஆனால் அம்மா சுசீலாவைப் போல் பொறுமைக்காரியை நீ கண்டதுண்டா?" என்றான்.

பாக்கியம், "ஆம், ஸ்ரீதர். சுசீலா சாதாரண பெண்ணல்ல. அன்பின் உருவம். தியாகமே உருவானவள். இந்த ‘அமராவதி’யின் அதிர்ஷ்டத்தினால் இங்கு வந்து சேர்ந்தவள். ஆனாலும் உன்னைப் பொறுத்தவரையில் உனக்குப் பத்மா மீது தானே இன்றும் உண்மை ஆசை? அதனால்தானே இன்னும் சுசீலாவைப் பத்மா என்று அழைக்கிறாய்" என்றாள்.

ஸ்ரீதர் "இல்லை அம்மா, நான் என்ன செய்வேன்? பத்மாவின் மோசடி முன்னரே எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவளைத் தொடர்ந்து நேசித்திருப்பேனா? இனி மேல் பத்மா என்ற பேச்சையே எடுக்க வேண்டாம். அந்தச் சொல்லே என் காதில் விழ வேண்டாம். நான் அவளை வெறுக்கிறேன். இனி மேல் சுசீலாவே எனக்கு எல்லாம். பேராசிரியர் நோர்த்லி எனக்குக் கண்களைத் தந்ததும் என் ஊனக் கண்களுக்கு முன்னால் சுசீலா வந்தாள். அவளை அந்த உருவில் நேசிக்க முடியாததால் என் கண்களை நான் அன்று குத்திக் கொண்டேன். பார்வையை இழந்த என் மனக்கண்ணில் அவள் பத்மாவானாள். ஆனால், அந்தோ, நான் எத்தகைய மடையன்? என்னை ஆசை காட்டி மோசம் செய்தவளுக்கு என் மனக் கண்ணிலே இடம் கிடைத்ததே. ஆனால் அந்த மனக்கண்ணுக்கு அப்பாலும் ஒரு மூன்றாவது கண் இருப்பது போலல்லவா இப்பொழுது தோன்றுகிறது. அந்தக் கண்ணிலே இன்று சுசீலாவை நான் காண்கிறேன். அங்கு அவள் ஓர் ஒளிப்பிழம்பாகக் காட்சியளிக்கிறாள். சீதை, சாவித்திரி, நளாயினி, கண்ணகி போல அவள் அங்கே நடமாடுகிறாள்..."

பாக்கியம் மகனின் மன மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாளாயினும், சுசீலாவின் மீது அவள் கொண்ட பச்சாத்தாபத்தினால் அவன் உள்ளம் கவலையுற்றுக் கலங்குவதைக் கண்டு மனம் வருந்தினாள். சுரேஷைப் பார்த்து "வா சுரேஷ். இப்பொழுது ஸ்ரீதருக்கு எல்லாம் தெரிந்து விட்டது. நாங்கள் உள்ளே போய்ச் சுசீலாவை அனுப்புவோம். இருவரும் பேசிக் கொள்ளட்டும்." என்று கிளப்பினாள். பாக்கியம் முரளியைத் தூக்கிக் கொண்டு முன்னே நடக்க, சுரேஷ் அவளைப் பின் தொடர்ந்தாள்.

சுசீலா ஸ்ரீதருக்குச் சமீபமாக வந்து உட்கார்ந்தாள். "என்ன என்னை அழைத்தீர்களா?" என்றாள் அவள்.

"ஆம், சுசீலா உன்னை அழைத்தேன். உன்னுடன் பேச வேண்டும்." என்றான் ஸ்ரீதர்.

"என்ன, சுசீலாவா? புதுமையாயிருக்கிறதே. ஏன் என்னை வழக்கம் போல் பத்மா என்றழைக்காமல் சுசீலாவென்றழைக்கிறீர்கள்?" என்றாள் அவள் ஆச்சரியத்துடன்.

"சுசீலா, இனிமேல் நான் உன்னைப் பத்மா என்றழைக்க மாட்டேன். பத்மா என் இதயத்திலிருந்து அஸ்தமித்துவிட்டாள். சுசீலாதான் இனி எனக்கெல்லாம். சுரேசும் அம்மாவும் எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டார்கள். சுசீலா நீ அல்ல மோசக்காரி, பத்மா தான் மோசக்காரி. நீ என் அன்பின் தெய்வம். ஆசைக் கொழுந்து, வாழ்க்கையின் விளக்கு"

அதற்கு மேலும் ஸ்ரீதரின் வார்த்தைகளை அவளால் கேட்டுக் கொண்டு நிற்கமுடியவில்லை. உணர்ச்சிப் பெருக்கிலே அவள் மனம் உடைந்தது. விழிகள் ஆனந்தக் கண்ணீர் பெருக்கின. வாழ்க்கையின் பேற்றை அடைந்துவிட்டது போல, பரம ஏழை ஒருவன் பெரும் பொக்கிஷத்தைப் பெற்றுவிட்டது போல இன்பத்தின் உச்சக் கட்டத்தை அடைந்தாள் அவள்.

"சுசீலா..." அவர் அந்த வார்த்தைகளைச் சொல்லும் போது எவ்வளவு இனிமையாயிருக்கிறது. இது போன்ற இன்பம் இவ்வுலகில் வேறு யாருக்குக் கிடைக்கும்" என்று இன்பத் திகைப்பிலே மயங்கி நின்றாள் அவள்.

ஏறக்குறைய இரண்டு நீண்ட வருடங்களாகச் சுசீலா இவ்வுலகில் இறந்து போயிருந்தாள். அப்பெயரே மறக்கப்பட்டுப் போயிருந்தது. உண்மையில் அது தன்னை நிலத்துள் உயிருடன் புதைந்தது போன்ற உணர்ச்சியைச் சுசீலாவுக்கு அளித்து வந்து கொண்டிருந்தது. சகிக்க முடியாத அந்தத் துன்பத்தை அவள் சகித்து வந்தது ஒரே ஒரு காரணத்தை முன்னிட்டுத் தான். ஸ்ரீதர் வாழ்க்கைக்கு இன்பம் அளித்து வந்தால் போதும் என்பதே அது. அதற்காகவே எவராலும் செயற்கரிய அந்தத் தியாகத்தைச் செய்து வந்தாள் அவள். அதனால் ஏற்பட்ட வேதனையைத்தான் பற்களைக் கடித்துக் கொண்டு பொறுத்து வந்தாள். ஆனால் இன்று மறுபடியும் அவளது சொந்தப் பெயர் அவளிடம் மீண்ட போது எல்லையற்ற இன்ப உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. நிலத்தில் புதையுண்டு கிடந்த அவள் பழையபடி வெளியே வந்து விட்டாள். வந்ததும் நெஞ்சை அகல விரித்து, பிராண வாயுவை முழு மூச்சாக இழுத்து எல்லையற்ற பூரிப்படைந்தாள் அவள்.

சுசீலா ஸ்ரீதரை நோக்கி "இப்பொழுதாவது உங்களுக்கு உண்மை தெரிந்ததே, அது போதும். எங்கே உங்கள் வாழ்க்கை முழுவதுமே இது தெரியாமலே போய்விடுமோ என்று அஞ்சினேன். ஆனால் நான் அதிர்ஷ்டக்காரி. எந்த அனுபவத்துக்காக நான் ஏங்கித் தவங் கிடைந்தேனோ, அதை நான் பெற்றுவிட்டேன். என்னைச் சுசீலா என்று இன்று உங்கள் வாயால் அழைத்தீர்களே, அதை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். இந்த அனுபவத்தைப் பெற்ற நான் இப்போதே இறந்துவிட்டாற் கூடப் பரவாயில்லை. என் வாழ்க்கை மலர்ந்து விட்டது." என்றாள்.

ஸ்ரீதர் சுசீலாவைத் தன் கரங்களால் அணைத்துக் கொண்டான். தன் காதலியை அன்று தான் வாழ்க்கையில் முதல் முதலாகச் சந்தித்து அவளது அன்பு மொழியைப் பெற்ற ஒரு காதலன் என்ன நிலையில் இருப்பானோ, அந்த நிலையில் ஸ்ரீதர் இருந்தான் அப்பொழுது. "சுசீலா, நீயே என் உயிர். உன்னை நான் ஒரு போதும் பிரியேன்." என்று ஆயிரம் தடவை கூறிவிட்டான் அவன்.

சுசீலாவைப் பொறுத்தவரையில் ஸ்ரீதரின் அணைப்பையும் ஆலிங்கனங்களையும் அவள் தினசரி அனுபவித்து வந்தாளாயினும், இது வரை பத்மா என்ற எண்ணத்திலும் பாவனையிலுமே அவை அவளுக்குக் கிடைத்தனவே அல்லாமல், சுசீலா என்பதற்காக ஒரு முத்தம் கூட ஸ்ரீதர் அவளுக்கு அளித்ததில்லை. உண்மையில் இன்று தான் சுசீலா முதன் முதலாக ஸ்ரீதரின் அன்புக்கும் அணைப்புக்கும் ஆளானாள். பார்க்கப் போனால் இன்று தான் அவளது முதலாவது காதலனுபவம் என்று கூடச் சொல்லலாம்.

ஸ்ரீதரும், சுசீலாவும் தம்மை மறந்து இவ்வாறு வீற்றிருந்ததைப் பாக்கியம் முரளியுடன் வீட்டு விறாந்தையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்ரீதர் வாழ்க்கையின் பெரிய புதிரொன்று விடுபட்டுச் சுசீலாவும் ஸ்ரீதரும் முன்னிலும் நெருங்கிய அன்பு கொண்டவர்களாகியதைக் கண்டு அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

ஸ்ரீதர் "சுசீலா, இன்று உலகிலேயே என்னைப் போல் சந்தோஷமானவன் யாரும் கிடைக்கமட்டார்கள். ஆனால் ஒரே ஒரு வேதனை. எந்தச் சுசீலாவைப் பார்க்க மாட்டேன் என்று என் கண்களை நான் அன்று குத்திக் கொண்டேனோ அந்தச் சுசீலாவை மீண்டும் காணத் துடியாய்த் துடிக்கிறேன் நான். ஆனால் அது முடியக் கூடிய காரியமா, என்ன? எனக்குக் கண் வேண்டும். சுசீலா, கண் வேண்டும். உன்னைக் காணக் கண் வேண்டும்" என்று கதறினான்.

சுசீலா சுரேஷிடம் பேசினாள். "சுரேஷ், ஸ்ரீதருக்கு மீண்டும் கண் பார்வை வேண்டுமாம். அவருக்கு மறுபடியும் கண் பார்வையைத் தருவது சாத்தியமா? சாத்தியமானால் அதற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள்" என்றாள்.

சுரேஷ் "அது விஷயமாக நாளை கண் டாக்டர் நெல்சனுடன் கலந்தாலோசிப்போம்" என்றான்.

ஸ்ரீதரின் வாழ்க்கையனுபவங்களைக் கண்டு அவனுக்காக இரங்கிய உள்ளங்கள் இவ்வுலகில் பலவாயினும், அவற்றில் ஓர் உள்ளம் உண்மையில் அவனுக்காக மற்றெல்லா இதயங்களிலும் பார்க்க அதிகமாகத் துடித்துக் கதறிக் கொண்டிருந்தது. அது தான் அவனது தந்தை சிவநேசரின் இதயம். ஒரே மகன். அதிலும் சகல சிறப்புப் பண்புகளும் வாய்க்கப் பெற்ற உத்தம புத்திரன், எப்படியெல்லாமோ வாழ்க்கையைச் சுவைத்து ஆடம்பரமாக வாழ வேண்டியவன், நாடெல்லாம் போற்றச் சமுதாயத்தின் நடு நாயகமாய் நிற்க வேண்டியவன், இன்று அந்நிலையை எய்தாதது மட்டுமலல், மனிதனின் பஞ்ச புலன்களில் மிகச் சிறந்ததெனக் கருதப்படும் கண் பார்வையை இழந்து, அதன் பயனாக மூலையில் வைக்கப்பட்ட முத்தாகிவிட்டான். சிலம்புள் இடப்பட்ட இரத்தினக் கல் சப்தத்தின் மூலம் உலகத்தால் அறியப்பட்டாலும் அதன் ஒளியை யாரும் அறிய முடிவதில்லையல்லவா? ஸ்ரீதரின் நிலையும் அப்படியே ஆகிவிட்டது. வையத்துக்கு ஒளி வீசி ‘அமராவதி’க்கு அழியாது சிறப்புத் தர வேண்டிய அந்த வைரமணி துணையின்றி வீதியில் நடக்க முடியாத அந்த வாழ்வுக்கு ஆளாகிவிட்டான். இதை நினைத்தால் எவருக்கும் துயர் ஏற்படுமாயினும், சிவநேசருக்கு ஏற்பட்ட துன்பமோ அத்துடன் அமையவில்லை.

ஸ்ரீதரின் துயரம் கண் பார்வை இழப்பு மட்டுமல்ல - காதலின் தோல்வியுமல்லவா? இன்னும் மீண்ட கண் பார்வையைக் கூட அவன் இரண்டாவது தடவையும் அழித்துக் கொண்டான். இச்சம்பவங்கள் யாவற்றிலும் தன் பங்கு மிகப் பெரியது என்று சிவநேசர் நினைத்ததே அவரது துயருக்கு ஓர் எல்லைக் கோடே இல்லாமல் செய்துவிட்டது. அவர் துயரம் எல்லை தெரியும் குளம் போல அமையவில்லை. கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு முடிவற்றுத் தெரியும் அலை கடல் போன்ற பெரும் துன்பம் அவர் உள்ளத்தைக் கெளவியிருந்தது.

"ஸ்ரீதர்! அவன் பத்மாவை மணக்க விரும்பிய அந்த நேரத்தில் நான் அதற்கு எதிர்ப்பேச்சுப் பேசாமல் சம்மதித்திருந்தால் நிச்சயம் ஸ்ரீதர் - பத்மா திருமணம் சிறப்பாக நடந்திருக்குமல்லவா? ‘அமராவதி’யிலும் கொழும்பிலுமாக ஊரே வியக்கும்படி எட்டு நாள் திருமண விழா நடத்தியிருக்கலாம். ஆனால் நான் அதை அப்பொழுது எதிர்த்தேன். இதற்கிடையில் அவனும் கண் பார்வையை இழந்தான். பத்மாவும் அவளைக் கை விட்டாள். இதனால் அந்தப் பெண் மீது எனக்கு ஏற்பட்ட சினம் கொஞ்சமல்ல. ஆனால் யோசித்துப் பார்த்தால் அவள் நினைத்ததும் சரி தானே? குருடனுக்கு மனைவியாக யார்தான் விரும்புவார்கள்? இருந்தாலும் நான் மட்டும் ஸ்ரீதர் - பத்மா திருமணத்திற்கு எனது சம்மதத்தைத் தருவதில் தாமதம் செய்திருக்காவிட்டால், அத்திருமணம் நிறைவேறியே இருக்கும். கல்யாணத்துக்குப் பின் அவன் கண்களை இழந்திருந்தால் அந்தப் பெண் நிச்சயம் அதனைப் பொறுத்து வாழ்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

"எனது தாமதம் அந்தோ, ஸ்ரீதர் வாழ்க்கையைச் சீர்குலைத்தது. அதனால்தான் சுசீலாவின் ஆள் மாறாட்ட நாடகத்தை நாம் நடத்த வேண்டி ஏற்பட்டது. பார்க்கப் போனால் ஸ்ரீதர் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலி என்றே கூற வேண்டும். இல்லாவிட்டால் சுசீலா போன்ற அன்பும் பண்பும் அறிவும் அழகும் கொண்ட ஒரு பெண் குருடனான அவனைத் திருமணம் செய்ய முன் வந்திருப்பாளா? ஆனால் இந்த ஆள் மாறாட்டத்தை நாம் நடத்தியதால் அல்லவா அவன் இரண்டாவது தடவையும் குருடனானான்? தன் கண்ணைத் தானே குத்திக் கொண்டான்? இதற்கெல்லாம் மூலக் காரணம் பத்மாவைத் திருமணம் செய்ய வேண்டுமென்று அவன் கேட்டபோது நான் அதற்கு இசையாததலல்லவா? இல்லாவிட்டால், நோயினால் அவன் முதலில் கண் பார்வையை இழப்பதை யாராலும் தடுத்திருக்க முடியாவிட்டாலும் இரண்டாவது முறை அவன் கண் பார்வையை இழந்திருக்கும் நிலை ஒரு போதும் ஏற்பட்டிருக்காது. ஆகவே, இன்று அவன் கண் பார்வையற்றுக் கபோதியாய் இருப்பதற்கு நானே பொறுப்பாளி, நானே பொறுப்பாளி"

இவ்வாறு சிந்தித்து வாடிய சிவநேசர் எந்நேரமும் ஸ்ரீதரின் நிலையைப் பற்றியே எண்ணி எண்ணிக் கவலைப்பட்டதில் ஒருவித வியப்புமில்லை. ஆனால் சிவநேசர் இவ்வாறு பெருங்கவலைக்காளாகியிருந்தார் என்பதற்காக மற்றவர்களின் துயரை நாம் குறைவாகக் கருதிவிடக் கூடாது. தாய் பாக்கியம், மனைவி சுசீலா, நண்பன் சுரேஷ் ஆகியோரும் கவலைப்படவே செய்தனர். ஆனால் ஸ்ரீதரின் துயருக்கே காரணமானவர் தான் என்பதால் சிவநேசர் அனுபவித்து வந்த துன்பம் சற்று அதிகமாகத் தானிருந்தது.

புத்திர பாசத்தால் ஏற்பட்ட இத்துயரம் சிவநேசரின் போக்கிலேயே பெரிய மாற்றத்தை ஏற்பட்டுவிட்டது. அவரது அகம்பாவமும் மிடுக்கும் அதி மனித மனோபாவமும் இப்பொழுது தம் வலுவை இழந்துவிட்டன. தன் மகன் இராமச்சந்திரன் காடேகுகிறான் என்று கேள்வியுற்ற அயோத்தி மன்னன் தசரதன் போல் தன் சகல சக்திகளையும் முற்றாக இழந்து நின்றார் சிவநேசர். ஒன்றே ஒன்று தான் அவர் மனதில், இன்று தலை தூக்கி நின்றது. ஸ்ரீதர் மீது அவர் கொண்ட அளப்பறும் அன்புதான் அது. அந்த அன்பிலே உதித்து பச்சாத்தாபம் அவர் உள்ளத்தை ஒரு நிலையில் நிற்கவிடாது அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ஸ்ரீதருக்குத் தான் செய்த கொடுமைகளுக்குப் பிராயசித்தம்முண்டா என்று ஆராய்வதிலே அவர் தமது முழு நேரத்தையும் செலவிடலானார்.

இந்த மனோ நிலையில் அவர் இருக்கும்போதுதான் பத்மா செய்த மோசடியை ஸ்ரீதர் உணர்ந்து கொண்டமையையும் அதனால் சுசீலாவின் மகிமையை அவள் முற்றாக உணர்ந்து அவளை அவள் பெயராலே அழைக்கத் தொடங்கி இருந்தமையையும் பாக்கியம் அன்றிரவு அவருக்கு எடுத்துச் சொன்னாள். அதைக் கேட்ட சிவநேசர் அடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் அளவே இல்லை. இதற்குக் காரணம் தம் மருமகள் மீது அவர் கொண்டிருந்த பெரு மதிப்பும் அன்புமேயாகும்.

பத்மா போன்ற பெண்களே அதிகமாக வாழும் இவ்வுலகிலே சுசீலா போன்ற பெண் தோன்றியிருப்பது எவ்வளவு அதிசயம் என்று அவர் அடிக்கடி ஆச்சரியப்படுவதுண்டு. நீண்ட காலமாக ஸ்ரீதரைக் காதலித்த பத்மா அவன் குருடாகிவிட்டதை அறிந்ததும் தன் காதலையே மறந்துவிடத் தயாராயிருக்க, இதோ ஒரு பெண் அவன் குருடனாகிவிட்டான் என்பதற்காகவே அவன்மீது அனுதாபம் கொண்டு அவனைக் கல்யாணம் செய்ய முன் வந்திருக்கிறாள் என்றால், அது வியப்புக்கு உரிய விஷயம் தானே? இந்த வியப்பின் காரணமாகத்தான் வாழ வகையற்றுப் போன தன் அன்பு மகனுக்கு வாழ்க்கைத் துணைவியாக்கி ‘அமராவதி’ வளவுக்கு ஒரு வாரிசையும் பெற்றுத் தந்த சுசீலாவை ஒரு தந்தை தன் சொந்த மகளை நேசிப்பது போல நேசித்து வந்தார். ஆனால் இவ்வளவு அரும் பெரும் குணவதியாகிய சுசீலா, ஐயோ இன்னொருத்தியாக நடித்த அநாமதேயமாக வாழும் நிலை ஏற்பட்டதே. அவளால் தன் கணவனின் அன்புக்குப் பாத்திரமாக முடியவில்லையே என்று அவர் அடிக்கடி கவலைப்படுவதுண்டு. அதனால்தான் பாக்கியம் சொல்லிய செய்தி அவருக்குத் தேனாக இனித்தது. "சுசீலா தன் வாழ்வின் வெற்றியை அடைந்து விட்டாள். பழையபடியும் சுசீலாவாகிக் கணவனின் அன்புக்கும் பாத்திரமாகிவிட்டாள். இது எத்தகைய அற்புதமான செய்தி." என்று தனக்குள் தானே களித்தார் அவர்.

பாக்கியம் சிவநேசருடன் தன் பேச்சைத் தொடர்கையில் சுசீலாவைக் காண்பதற்குத் தனக்குக் கண்ணில்லையே என்று கவலைக்காளாகி ஸ்ரீதர் வாட்டமடைந்திருப்பதைப் பற்றியும் கூறினாள். இது சிவநேசருக்கும் பெரும் கவலையையே தந்தது. "பாவம், ஸ்ரீதர் கண் பார்வை பெறுவதற்கு ஏதாவது வழியில்லையா என்று சுரேசுடனும் டாக்டர் நெல்சனுடனும் நாளையே நாம் பேசிப் பார்க்க வேண்டும்" என்று பாக்கியத்திடம் கூறினார் அவர்.

அடுத்த நாள் சுரேஷ் டாக்டர் நெல்சனுடன் ‘அமராவதி’ வளவுக்கு வந்தான். சிவநேசர் அவர்களை வரவேற்றுபசரித்து, "ஸ்ரீதரின் கண் நிலைமை பற்றிப் பேச வேண்டும். ஸ்ரீதரின் கண்களை நன்கு ஆராய்ந்து உங்களாலானதைச் செய்ய வேண்டும். உங்களால் செய்ய முடியாவிட்டால், நாங்கள் எல்லோருமாகப் பேராசிரியர் நோர்த்லியைக் காண இங்கிலாந்துக்குப் போய் வருவோம். ஸ்ரீதர், நான், பாக்கியம், சுசீலா, நீங்கள், சுரேஷ் எல்லோருமே போய் வரலாம்! எதற்கும் ஸ்ரீதரின் கண்களை நன்கு பரிசீலியுங்கள். சென்ற தடவை அவன் கண் பார்வை

பெறுவதை நான் அடியோடு விரும்பவில்லை. அதனால் தீமைகள் தான் விளையுமென்று நான் நினைத்தேன். அது அப்படியே ஆயிற்று. ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது. அவன் கண் பார்வை பெறுவதால் யாருக்கும் தீமையில்லை. மேலும் எனக்குப் பின்னால் இந்த ‘அமராவதி’யின் பொறுப்பை ஏற்கப் போகும் அவன் கண் பார்வையற்ற அரை மனிதனாக இல்லாமல் முழு மனிதனாக விளங்க வேண்டும் என்பதே எனது ஆசையும். அவன் தனது பாட்டன் சேர் நமசிவாயம் போல் பெரும் புகழும் பெற்று இலங்க, கண் பார்வை அவனுக்குப் பெரிதும் உதவும். எங்களால் முடிந்தால் அதனை நாம் அவனுக்கு அளித்தே ஆக வேண்டும்" என்றார்.

டாக்டர் நெல்சன் அதை ஆமோதித்தபடியே ஸ்ரீதரின் கண்களை வெகு கவனமாக நீண்ட நேரம் பரிசோதித்து விட்டுப் பின் வரும் தீர்ப்பைக் கூறினார்.

"ஸ்ரீதரின் இரு கண்களில் ஒரு கண் ஒன்றுக்கும் உதவாது. அதை என்ன செய்தும் பார்வை பெறச் செய்ய முடியாது. ஆனால் மற்றதைச் சுகப்படுத்த முடியும். எனினும் அதற்கு இன்னொருவனின் ‘கோர்னியா’ என்னும் கண்ணின் ஒரு பகுதியை எடுத்து அவன் கண்களில் ஒட்ட வைக்க வேண்டும். ஆனால் இது ஒரு சிக்கலான விஷயம். இதற்கு முதலாவதாக இன்னொருவன் தனது கண்ணின் ‘கோர்னியா’வை ஸ்ரீதருக்குத் தருவதற்கு முன் வர வேண்டும். புதிதாக வழக்கத்துக்கு வந்துள்ள இந்தச் சந்திர சிகிச்சை இலங்கையில் இது வரை வேறெவருக்கும் செய்யபட்டதில்லை. ஆறு மாதங்களின் முன்னர் நான் சென்னை சென்றிருந்த போது இச் சத்திர சிகிச்சை சென்னை மோகன் ராவ் கண்ணாஸ்பத்திரியில் ஒரு நோயாளிக்கு நடை பெற்றது. இச் சிகிச்சை முறை மட்டும் தான் ஸ்ரீதருகுப் பலனளிக்கும். வேறெவ்வகையிலும் அவன் கண்ணைத் தெரிய வைக்க முடியாது." என்றார்.

அதைக் கேட்ட சிவ நேசர் "இந்தச் சிகிச்சையை ஸ்ரீதருக்குச் செய்ய நாம் யாது செய்ய வேண்டும்." என்றார்.

முதலில் இதற்கு இன்னொருவரின் கண் வேண்டும். அது இருந்தால் சந்திர சிகிச்சையை நானே செய்து முடித்துவிடுவேன். சென்னைச் சிகிச்சையை இத்துறையில் அனுபவம் பெறுவதற்காக உண்மையில் நானே தான் செய்து முடித்தேன். மோகன் ராவும் நானும் ஒன்றாகக் கல்கத்தாவில் வைத்தியம் படித்தவர்கள். இது விஷயத்தில் அவன் எனக்கு மிகவும் ஒத்தாசை புரிந்தான்." என்றார்.

இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த சுசீலாவுக்குத் திடீரென ஓர் எண்ணம் உதயமாயிற்று. டாக்டர் சுரேஷைச் சைகை செய்து தனியான ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றாள். "சுரேஷ்! எனக்கு ஓர் ஆலோசனை தோன்றுகிறது. ஸ்ரீதருக்குக் கண் நான் கொடுக்கிறேன். டாக்டர் நெல்சனிடம் சொல்லி இன்றோ நாளையோ ஆப்பரேஷனைச் செய்து விடுங்கள். இந்த உதவியை நீங்கள் தாமதமின்றிச் செய்ய வேண்டும். ஸ்ரீதர் உடனே கண் பார்வை பெற வேண்டும். என்னைப் பார்க்க அவர் ஆசைப்படுகிறார். சில நாட்களுக்கு முன் எந்த சுசீலாவைப் பார்க்க வெறுத்துத் தன் கண்களைத் தாமே குத்திக் கொண்டாரோ, அதே சுசீலாவை அவர் இன்று அன்போடு பார்ப்பதற்குத் துடிதுடிக்கிறார். இது எனக்குப் பெரிய வெற்றியல்லவா? அதற்குப் பதிலாக என் கண்ணைக் கொடுத்தாலென்ன? உடனே இதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள்" என்றாள்.

சுரேஷ் தலையை அசைத்தான். "சுசீலா, நீ ஸ்ரீதருக்காக இது வரை செய்த தியாகங்கள் பெரியன. ஆனால் இப்போது நீ கூறும் ஆலோசனை அவற்றுக்குச் சிகரம் வைத்தது போல் இருக்கிறது. என்றாலும் இது நடவாத காரியம். நாட்டின் சட்டங்கள் அவற்றுக்கு இடம் கொடா" என்றாள்.

"ஏன்? நான் வயது வந்தவள். எனக்கு இப்பொழுது வயது இருபத்தைந்து. என் சுய சம்மதத்தோடு நானே இதைச் செய்கிறேன். வேண்டுமனால் என் சம்மதத்தை என் கையாலேயே ஒரு கடிதமாக எழுதிக் கொடுத்து விடுகிறேன்." என்றாள் சுசீலா.

அதற்குச் சுரேஷ் "இது விஷயத்தில் சட்டம் வேறுவிதமாக இருக்கிறது. ஒருவர் கண்ணை இன்னொருவருக்குப் பொருத்துவதற்கு முன் அந்த மனிதர் முதலில் இறந்திருக்க வேண்டும். இறந்து மிக சொற்ப வேளைக்குள் கண்ணை எடுத்துச் சீர் கெடாது பாதுகாத்து மற்றவருக்கு ஒட்ட வைக்க வேண்டும். ஆனால் அதற்குக் கூட இறப்பவர் தாம் இறப்பதற்கு முன்னர் தம் கண்ணை எடுத்து இன்னொருவருக்கு உபயோகிக்கலாம் அல்லது இன்னாருக்கு உபயோகிக்கலாமென்று தம் சம்மதத்தை எழுத்தில் கொடுத்திருக்க வேண்டும்" என்றான்.

"சுரேஷ்! அப்படியானால் நான் அவ்வாறு எழுதி வைத்து விட்டு என்னை நானே கொலை செய்து கொள்ளுகிறேன். ஸ்ரீதருக்குக் கண்ணைக் கொடுங்கள்." என்றாள் சுசீலா.

இதைக் கேட்ட சுரேஷ் திகைத்துவிட்டான். ஒன்றும் பேசாது சுசீலாவை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான் அவன். தன் முன் நிற்பது ஒரு மானிடப் பெண்ணா, தெய்வமா என்று அவனால் முடிவு செய்ய முடியவில்லை. அதைக் கண்ட சுசீலா, "என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? நான் உண்மையைத் தான் சொல்கிறேன். நீங்கள் விரும்பினாலென்ன? விரும்பாவிட்டாலென்ன? நான் அப்படித்தான் செய்யப் போகிறேன். எப்படியும் என் ஸ்ரீதர் கண் பெற வேண்டும்." என்றான்.

சுரேஷ், "சுசீலா, நீ என்ன பேசுகிறாய். ஸ்ரீதர் இன்று தன் பார்வையைப் பெற விரும்புவது எதற்காக? சுசீலாவைப் பார்ப்பதற்கு. சுசீலாவின் பிணத்தைப் பார்ப்பதற்கல்ல. ஆனால் சுசீலாவுக்குப் பதில் சுசீலாவின் பிணமே அவனுக்குத் தென்பட்டால் மீண்டும் தன் கண்ணைப் பிய்த்தெறிந்து விடுவான் அவன். அதை நீ யோசிக்கவில்லையே" என்றான்.

சுரேஷின் வார்த்தைகள் சுசீலாவை அதிர வைத்தன. "அது உண்மைதான். ஆனால் நாம் இப்போது என்ன செய்வது? எப்படிக் கண்களைப் பெறுவது" என்றாள் கவலையோடு.

சுரேஷ், "எடுத்த எடுப்பில் இக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது" என்று மட்டும் கூறினான்.

டாக்டர் நெல்சன் சிவநேசரிடம் "இன்று கண் தான இயக்கமொன்று உலகத்தில் தோன்றியிருக்கிறது. சிலர் தாம் சாகுமுன்னர் தம் கண்களைப் பிறருக்குப் பார்வையளிக்க உபயோகிக்கும்படி மரண சாசனம் எழுதி வைத்துச் செல்லுகின்றனர். ஆனால் இது வெகு அபூர்வமாகத்தான் நடைபெறுகிறது. அப்படி எவராவது தானம் செய்யும் கண் எங்காவது கிடைத்தால் தான் ஸ்ரீதருக்கு நம்மால் கண் பார்வையை அளிக்க முடியும். ஆனால் அதற்கு நீங்கள் சிறிது பொறுத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை." என்றார்.

உயிருள்ளவர்களிடமிருந்து கண்ணைத் தானமாகப் பெற முடியாதிருப்பதற்குரிய சட்டங்களைப் பற்றியும் அவர் விளக்கினார். அத்துடன் உயிருள்ளவர்களிடமிருந்து கண்ணை எடுக்கும் போது அவ்விதம் கண் கொடுப்பவர்களின் நரம்புகள் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு வேறு பல சிரமங்கள் ஏற்படுதற்கு இடமிருக்கிறதென்றும், அதனால் தான் சட்டம் இவ்வாறு கண்டிப்பாக வகுக்கப்பட்டிருக்கிறதென்றும் குறிப்பிட்டார் அவர்.

முடிவாக, டாக்டர் நெல்சன், "ஸ்ரீதரின் நிலை பற்றி நான் உடனேயே என் சென்னை நண்பர் மோகனராவுக்கும் அறிவிக்கிறேன். எங்காவது கண் கிடைத்தால் உடனே எங்களுக்கு அது பற்றி அறிவிக்கும்படி நான் அவருக்கு எழுதுகிறேன். ஸ்ரீதர் அதிர்ஷ்டசாலியாய் இருந்தால் சீக்கிரமே கண் கிடைத்துவிடும்" என்று கூறி விடை பெற்றுச் சென்றார்.

அன்று பிற்பகல் சுசீலா ஸ்ரீதருடன் தோட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது கண் தானம் சம்பந்தமான சட்டப் பிரச்சினைகளைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள். முடிவில், "நான் என் கண்களை உங்களுக்கு எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து விடுகிறேன். அவ்விதம் நான் செய்தால் நீங்கள் கண் பார்வை பெற முடியுமல்லவா?" என்றாள்.

ஸ்ரீதர் கோபமும் கொதிப்பும் அடைந்தான். "என்ன சொன்னாய் சுசீலா? நீ அவ்விதம் செய்தால் நானும் தற்கொலை செய்து கொள்வேன். இன்னும் நான் பார்வையை விரும்புவதே உன்னைப் பார்த்து மகிழ்வதற்குத் தானே? ஆகவே நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை எதற்கு? நீ இவ்வாறு பேச என்னைப் பற்றி என்ன நினைத்தாய்?" என்றான்.

சுசீலாவால் அவ்வார்த்தைகளை எதிர்த்து ஒன்றும் பேச முடியவில்லை. ஆகவே இது விஷயத்தில் டாக்டர் நெல்சனின் முயற்சிகளையே நம்பியிருக்க வேண்டும் வேறு வழி இல்லை என்று முடிவு செய்தாள் அவள்.

‘அமராவதி’யில் வாழ்க்கை மீண்டும் தனது மந்த கதியில் நடக்க ஆரம்பித்தது. ஸ்ரீதரின் கண் பார்வை பற்றிய கவலையைத் தவிர வேறு கவலைகள் எதுவும் அங்கு யாருக்கும் இருக்கவில்லை. வாழ்க்கை பொதுவாக இன்பம் நிறைந்ததாகவே இருந்தது. வேறெந்தக் கவலைகள் இருந்தாலும் அன்பு தோய்ந்த வாழ்க்கை மனதுக்குச் சாந்தியையும் இன்பத்தையும் அளிப்பதற்குக் கேட்கவா வேண்டும்?

இந்தக் காலத்தில் அங்கே நடந்த ஒரே ஒரு முக்கிய சம்பவம். ‘மோகனா’வைப் பற்றியது. அது தனது பழைய வழக்கத்தின் படி வீடதிரக் கூவிக் கொண்டே இருந்தது. இது ஸ்ரீதருக்கு இப்பொழுது சினத்தை மூட்ட ஆரம்பித்தது. "பத்மா" என்ற அந்த மூன்று எழுத்துகள் முன் எவ்வளவு இனிமையாக அவன் காதுகளில் ஒளித்தனவோ அவ்வளவுக்குக் கர்ண கடூரமாக ஒலித்தன இப்போது. பத்மா என்ற அப்பெயர் இன்று அவனுக்குத் தாங்கொணாத அருவருப்பையே ஊட்டியது. அதனால் அவன் பாக்கியத்திடம் ஒரு நாள் "அம்மா மோகனாவை வாயை மூடச் சொல்லு. அந்தப் பெயர் என் காதில் விழுவதை என்னால் சகிக்க முடியவில்லை. உடனே அதை எங்காவது அனுப்பி விடு" என்று சப்தமிட்டான். "நீ தானே அதற்கு அந்த வார்த்தையைச் சொல்லிக் கொடுத்தாய்" என்று கூறிய அவள் சீக்கிரமே ‘மோகனா’வைக் குடும்ப நண்பர் ஒருவருக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்து விட்டாள்.

இது போக, ‘அமராவதி’யில் காணப்பட்ட ஒரு முக்கிய மாற்றம் சிவநேசரின் போக்காகும். முன்னிருந்த கர்வமான படாடோபப் போக்குகளெல்லாம் பெரிதும் மாறப் பெற்ற அவர் இப்பொழுது ஒரு புது மனிதர் போல் நடந்து வந்தார். ஸ்ரீதர் வாழ்க்கையின் துயரத் திருப்பங்களின் பின்னால் அவர் முன் போல் புத்தகங்களைக் கருத்தூன்றிப் படிப்பதையும் மேலை நாட்டுத் தரிசர்களின் நூல்களை ஆராய்வதையும் முற்றாக நிறுத்திக் கொண்டுவிட்டார். அவர் ‘அமராவதி’ வளவில் அங்குமிங்கும் தனிமையாக நடப்பதும், தோட்டத்திலிருந்த செங்கழு நீர்த் தொட்டியின் விளிம்பில், சிந்தனையில் முழ்கி உட்கார்ந்திருப்பதும் இப்பொழுது வழக்கமாகிவிட்டன. தன்னத்தனியாக, சிறகுகள் என்ற மேலைத் தேயச் சிற்பத்தில் காணப்பட்ட உருவத்திற் போல், அவர் சிந்தனையில் இலயித்திருந்த தோற்றத்தைக் கண்டு பாக்கியமும் சுசீலாவும் புதுமையடைந்தார்கள். எதைப் பற்றி அவர் இவ்வளவு ஆழமாக்ச் சிந்திக்கிறார் என்பது எவராலும் விடுவிக்க முடியாத புதிராயிருந்தது. சின்னைய பாரதியும் நன்னித்தம்பியரும் கூட அவரது போக்கைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.

ஆனால் சிவநேசரின் மனம் இப்பொழுது ஒன்றே ஒன்றைப் பற்றித் தான் சிந்தித்தது. ஸ்ரீதரைப் பற்றிய பிரச்சினைதான் அது. சில சமயம் அவர் முரளியைத் தனியே விறாந்தையில் கண்டால் அவன் தலையைத் தடவிக் கன்னத்தைக் கிள்ளி விளையாடுவார். "நீ உன் அப்பாவை விட அதிர்ஷ்டசாலி. ஏனென்றால் அவன் அப்பா போல் உன் அப்பா முரட்டுப் பேர்வழியல்ல. ஸ்ரீதர் அன்பே உருவானவன்" என்று கூறுவார். ஆனால் இவ்வார்த்தைகளைப் பாக்கியத்துக்கோ சுசீலாவுக்கோ கேட்கும்படி அவர் கூற மாட்டார். இந்த வகையில் எதையும் தன்னுள் தானே வைத்துத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற அவரது பழைய கர்வமென்னவோ இன்னும் அடங்கிவிடவில்லை.

சில சமயம் எவ்வித முன்னறிவிப்புமில்லாமல் திடீரெனத் தமது காரிலேறிக் கிளிநொச்சியிலுள்ள தமது வயலுக்குப் போய்விடும் பழக்கமும் இப்பொழுது அவருக்கு ஏற்பட்டிருந்தது. அங்கே தமது பங்களாவில் கார்ச் சாரதியோடு ஓரிரண்டு நாள் தனியாகத் தங்கியிருந்துவிட்டு மீளுவார். பங்களாவில் நிரந்தரமாக இருக்கும் பணியாட்கள் அப்பொழுது அவருக்கு வேண்டிய உணவு படுக்கை வசதிகளைக் கவனித்துக் கொள்வார்கள்.

இந்தப் புதிய பழக்கங்களைச் சிவநேசர் மேற்கொண்டு ஓரிரண்டு மாதங்களின் பின் அவர் திடீரெனப் பாக்கியத்திடம், "எனது பழைய நண்பர் மாஜி மைசூர் திவான் சேர் சூரியப் பிரசாத் இன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். தன் மகளுக்கு அடுத்த வாரம் கல்யாணமாம் - கட்டாயம் வர வேண்டுமென்று. நான் தவறாமல் அதற்குப் போக வேண்டும். உண்மையில் சூரியப் பிரசாத் என் கல்யாணத்துக்குக் கூட வந்திருந்தவன். அப்பொழுது அவன் ஒரு வெறும் வக்கீல் மட்டும்தான். உனக்கு அவனை அவ்வளவு ஞாபகமிருக்காது. உண்மையில் இக் கல்யாணத்துக்கு உன்னைக் கூட அழைத்துப் போகலாம். ஆனால் இங்கே பிள்ளைகளுக்கு யார் துணை? ஆகவே நான் மைசூர் போய் விட்டு மூன்று வாரங்களுள் திரும்ப இருக்கிறேன். இன்னொன்று. சூரியப் பிரசாத் இன்னொரு வகையிலும் முக்கியமானவர். நான் சென்ற வருடம் ஆயிரம் பங்குகள் வாங்கிய "சிநேட் இந்தியன் இன்சுரன்ஸ் கம்பெனி"யின் சேர்மனும் அவன் தான்." என்றார்.

இவ்வாறு சொல்லிய அவர் அந்த வாரமே மைசூர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். வழக்கத்தில் இப்படிப்பட்ட பிரயாணங்களிற் செல்லும்போது சிவநேசர் குறைந்தபட்சம் இரண்டு வேலைக்காரர்களையும் நன்னித்தம்பியையும் தம்முடன் அழைத்துச் செல்லத் தவறுவதில்லை. ஆனால், இம்முறை அவர் தன்னந்தனியாகவே சென்றார். அது பற்றிப் பாக்கியம் அவரிடம் கேட்டபோது "தனியாகப் போவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் இருக்கிறது. இன்னும் வழியிலே மிக நல்ல ஹோட்டல்களில் தானே தங்கப் போகிறேன்? இன்னும் மைசூர் சேர்ந்ததும் அங்கு சூரியப் பிரசாத் வீட்டில் எனக்கு என்ன குறை இருக்கப் போகிறது?" என்று கூறிவிட்டார்.

சிவநேசர் மைசூர் போய்ச் சேர்ந்தவுடன் ஒரே ஒரு கடிதம் ‘அமராவதி’க்கு அதாவது பாக்கியத்துக்கு எழுதினார். அதில் அவர் தமது சுக சேதியைக் கூறியிருந்ததோடு, தமது நண்பர் சேர் சூரியப் பிரசாதும் தானும் சில காலத்துக்கு இந்தியச் சுற்றுப் பிரயாணம் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதால் குறிப்பிட்ட ஒரு விலாசத்தில் தானிருக்க மாட்டாரென்று எழுதியிருந்தார். ஏதாவது அவசரமான செய்திகளிருந்தால் சென்னையிலுள்ள இலங்கைக் காரியலயத்துக்குக் கடிதம் எழுதினால், அது தனக்குக் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

‘அமராவதி’ வளவில் அதன் மாமன்னர் போல் விளங்கிய சிவநேசர் இல்லாது போனது அந்த வீட்டின் களையைப் பெரிதும் குறைக்கத்தான் செய்தது. அவர் அவ்வில்லத்தின் பெரிய தோட்டத்தில் மாலை வேளைகளில் தன்னந்தனியாக உலவும் போது அவரது நெடிய கம்பீரமான உருவம் அவருக்கு அந்த இல்லத்தின் காவல் தெய்வம் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுத்தது. அவர் தன் பக்கத்தில் இல்லாது பாக்கியம் மிக வாடிப் போனாள் என்றாலும், பேரன் முரளியின் விளையாட்டுகளில் ஈடுபட்டதால் ஓரளவு தாங்கிக் கொள்ள முடிந்தது. உண்மையில் பாக்கியத்தைப் பொறுத்த வரையில் அவளது முப்பது வருட இல்லற வாழ்வில் சிவநேசரை அவள் பிரிந்திருந்தது மிகச் சொற்ப நாட்களேயாகும். அதனால் எப்பொழுதுமே சிவநேசரைப் பிரிந்திருப்பதென்பது அவளால் தாங்க முடியாத ஒன்றுதான். அத்னால் இரவு படுக்கைக்குப் போகு முன் ஒவ்வொரு நாளும் மேல் மாடிச் சுவரில் ஸ்ரீதரால் எழுதி மாட்டப்பட்டிருந்த சிவநேசரின் படத்தைச் சிறிது நேரமாவது சமீபத்தில் சென்று பார்க்கத் தவறுவதில்லை. அப்பொழுது அவரது பாதங்களைத் தன் கையால் தொட்டுத் தன் கண்ணிலே ஒற்றிக் கொள்ளுவாள் அவள்.

சிவநேசரின் பிரிவை அவ் வீட்டில் எல்லோருக்கும் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருந்தவன் புரளிக்கார முரளிதான். அவன் சிவநேசர் வழக்கமாய் உட்கார்ந்து பத்திரிகை வாசிக்கும் நாற்காலிக்கு ஓடிப் போய் அதன் கைப்பிடியைப் பிடித்து நின்று கொண்டு "தாத்தா" "தாத்தா" என்று கூச்சலிடுவான். இன்னும் மேல் மாடிக்குத் தாயோடோ, ஸ்ரீதரோடோ, பாக்கியத்தோடோ, ஆயாவோடோ போய் விட்டால் போதும், அங்குள்ள படத்தைப் பார்த்து "தாத்தா" "தாத்தா" என்று கும்மாளமடிக்கத் தொடங்கிவிடுவான் அவன்.

இவை ‘அமராவதி’யில் நடந்து கொண்டிருக்க, சிவநேசர் வீட்டை விட்டுச் சென்ற மூன்று வாரங்கள் கழித்து டாக்டர் சுரேசுக்கு அவனது கல்வெட்டித்துறை இல்லத்துக்கு ஒரு கடிதம் வந்தது. தபாலுறையின் வெளிப்பக்கத்தில் சென்னை முத்திரையும் சிவநேசர் பெயருமிருக்கவே அவன் அதைப் பரபரப்போடு பிரித்தான். அதில் சிறிய ஒரு காகிதத்தில் சிவநேசரின் கைஎழுத்தில் ஒரு கடிதமும் ரூபா 2000- திற்கு ஒரு ‘செக்’கும் காணப்பட்டன. சுரேஷ் கடிதத்தை மிக ஆவலோடு வாசித்தான். அதை வாசித்த போது அவன் ஏதோ ஒரு மர்மக் கதையில் மத்திய பாத்திரமாகிவிட்டது போல் தோன்றியது சுரேசுக்கு. அவன் உள்ளத்தில் அந்த உணர்ச்சியை ஊட்டிய அக்கடித்ததின் வாசகம் பின் வருமாறு -

"அன்புள்ள சுரேஷ்! இக்கடிதத்தின் செய்தியை வேறு யாருக்கும் சொல்லக் கூடாது. இதை நீ மிகவும் இரகசியமாகப் பெறுவாய் என்ற துணிவிலும் நம்பிக்கையிலும் நான் இதை எழுதுகிறேன். நிச்சயமாக இதிலுள்ள செய்தி, ஸ்ரீதருக்கோ ‘அமராவதி’யிலுள்ள வேறு யாருக்குமோ தெரியக் கூடாது. இக்கடிதத்தை நீ பெற்றுக் கொண்டதும் சென்னை மோகனராவ் கண்ணாஸ்பத்திரிக்கு வந்து டாக்டர் மோகனராவைச் சந்திக்கவும். கைச் செலவுக்கு ரூபா 2000 செக் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. உடனே நீ இதனைச் செய்ய வேண்டும். நீ சென்னை வருவதைப் பற்றிக் கூட யாருமே அறியக் கூடது. நீ செய்யும் இவ்வுதவியை நான் என்றும் மறவேன். இது மிகவும் முக்கியமான விஷயம்.

இப்படிக்கு,
சிவநேசர்

சுரேஷ் இக் கடிதத்தைக் கண்டு அடைந்த குழப்பத்தை வார்த்தைகளில் சொல்லி முடியாது. இருந்தாலும் கடிதத்திலுள்ள செய்தியின் போக்கைப் பார்த்தால் அது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதற்கு நேரமில்லை. சிந்தனையல்ல செயலே வேண்டியது என்று எண்ணிய அவன் அடுத்த நாட் காலையே சென்னைக்குப் புறப்பட்டுவிட்டான். இவ்வளவு அவசரமாகப் பிரயாணத்தை மேற்கொளவதில் அவனுக்கு அதிக சிரமங்கள் ஏற்படத்தான் செய்தன. ஆனால் உத்தியோக வட்டாரங்களிலும் பெரிய காரியாலயங்களிலும் போதிய செல்வாக்குப் படைத்த அவன் அவற்றை இலகுவில் சமாளித்துக் கொண்டான்.

சுரேஷ் அடுத்த நாள் விமான மூலம் சென்னை சேர்ந்த பொது, அந்த விஷயம் அவன் தாயாருக்குக் கூட தெரியாது. அவர்கள் அவன் கொழும்பு போயிருப்பதாகவே எண்ணினார்கள். இந்த விஷயத்தில் அவன் சிவநேசரின் ஆக்ஞையை வரிக்கு வரி நிறைவேற்றி விட்டான். யாவற்றையும் அவர் கேட்டுக் கொண்டது போல் மூடுமந்திரமாக வைத்திருப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டான் அவன்.

[தொடரும்]

No comments: