Saturday, July 19, 2008

தொடர்நாவல்!
மனக்கண்
- அ. ந. கந்தசாமி-


[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ]

11-ம் அத்தியாயம்: சுந்தரேஸ்வரர் சந்நிதியில்

பத்மா நீச்சல் ராணிப் போட்டியில் கலந்து கொண்டது பற்றி பரமானந்தர் எவ்விதக் கவலையோ கோபமோ கொள்ளாதபடி ஸ்ரீதரும் சுரேசும் பார்த்துக் கொண்டனர். ஸ்ரீதர் பத்மாவை அன்று வழக்கத்துக்கு மாறாகத் தனது ‘பிளிமத்’ காரில் கொலீஜ் ரோட்டிலுள்ள அவள் வீட்டிலேயே கொண்டு போய் இறங்கி விட்டான். பரமானந்தர் கூட அன்று தான் அவன் காரை முதன் முதல் பார்த்தார். சிவநேசரின் மகன் என்பதை மூடு மந்திரமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் முற்றிலும் தீர்ந்து விட்டதும், பத்மாவுக்கும் தனக்குமுள்ள காதல், திருமணக் கட்டத்தை அடைந்து விட்டது, இனி யாருக்கும் தான் அஞ்சாமல் காரியங்களைச் செய்யலாம் என்று அவன் நம்பியதுமே அவன் இவ்வாறு பகிரங்கமாகத் தன் படாடோபக் காரில் பத்மா வீட்டுக்குப் போகும் துணிவைப் பெற ஏதுவாயிருந்தது. பத்மா - ஸ்ரீதர் திருமணத்தை விரைவில் செய்து முடிக்க இன்னும் ஒரே ஒரு நடவடிக்கைதான் எடுக்கப்பட வேண்டியிருந்தது. தந்தை சிவநேசரதும் தாய் பாக்கியத்தினது ஆசியைப் பெறுவதே அது. ஸ்ரீதருக்கு அது மிகவும் அற்ப விஷயமாகவே பட்டது. டாக்டர் சுரேஷ் அடுத்த வாரம் இங்கிலாந்துக்குப் புறப்பட்டதும், அவனை வழியனுப்பிய அடுத்த நாளே தான் ஊருக்குப் போய், அம்மாவிடம் எல்லா விஷயங்களையும் கூறித் திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் - கல்யாணத்தைத் தங்கள் பரம்பரைக் கோவிலான சுந்தரேஸ்வரர் கோவிலிலேயே நடத்தி விட்டு, திருமண வரவேற்பு வைபவத்தையும் விருந்தையும் ஹோர்ட்டன் பிளேசிலுள்ள தங்கள் இல்லத்திலோ அல்லது கால் பேஸ் ஹோட்டல் போன்ற ஒரு பெரிய ஹோட்டலிலோ நடத்திக் கொள்ளலாம் என்பது அவன் முடிவு. அதன் பின் பத்மாவும் தானும் ஜோடியாகக் கிராமத்திலுள்ள தங்கள் மாளிகைக்குப் போய் ஒரு வார காலமாவது உல்லாசமாகத் தங்கி விட்டு கொழும்புக்கு வந்து ஹோட்டன் பிளேஸ் ‘கிஷ்கிந்தா’வில் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று அவன் திட்டமிட்டிருந்தான். இதுவரை அந்தப் பெரிய வீட்டில் சுரேஷ் அவனுக்குத் தோழனாயிருந்தான். இனிமேல் பத்மா அந்த இடத்தைப் பெற்றுக் கொள்வாள். வாழ்க்கை சலிப்பின்றிப் போகும் ஆனால் கல்யாணம் செய்து கொண்டோமென்பதற்காக படிப்பை விட்டு விடக் கூடாது. குறைந்தபட்சம் பி.ஏ. பரீட்சையையாவது பத்மாவும் நானும் ‘பாஸ்' பண்ணி விட வேண்டும் - என்றெல்லாம் திட்டம் தீட்டியிருந்தான் அவன். இந்தத் திட்டங்களுடன் இன்று புதியதொரு கனவும் சேர்ந்து கொண்டது. நீச்சலுடை அணிந்து அலைகளிடையே நீண்டு கொழுத்த ஒரு சுறா மீன் போல பத்மா தன் ஈரக் கால்கள் மீது புரண்டு ஆர்வத்துடனும் விரைவாகவும் நீந்தக் கற்றுக் கொண்டது அவனுக்கு அதிக இன்பத்தைக் கொடுத்திருந்தது. ஸ்ரீதருக்குக் கடல் ஸ்நானமென்றால் எப்பொழுதுமே பிரியம். பத்மாவுக்கும் அதே பிரியம் இருப்பதால் இருவரும் வாரத்துக்கொரு தடவையாவது கடற்கரைக்கு வந்து கடலிலும் கரையிலும் கும்மாளம் போடலாம். ஒரு வேலைக்காரனையோ வேலைக்காரியையோ வைத்துக் கொண்டால் கடற்கரையிலேயே சாப்பாட்டைக் கூட வைத்துக் கொள்ளலாம் என்றெலலாம் மனக் கோட்டை கட்டினான் அவன்.

ஸ்ரீதர் பத்மா வீட்டுக்குப் போன பொழுது சுரேசும் அவர்கள் கூடப் போனான். அவள் காரின் பின்னாசனத்தில் உட்கார்ந்து கொண்டு அங்கு குவிந்து கிடந்த பரிசுப் பொருள்களைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நீச்சல் ராணிக்குக் கிடைத்த பரிசுப் பொருள்கள் காரின் ‘டிக்கி’யை நிறைத்து, பின்னாசனத்தையும் நிறைத்துவிட்டன. அப்பப்பா, அப்பரிசுகள் தான் எப்படிப்பட்டவை? சேலை தொடக்கம் செருப்பு வரை, மார்புக் கச்சிலிருந்து மணிக் கூடு வரை ஒரு பெண்ணுக்குத் தேவையான சகலப் பொருள்களும் பரிசாகக் கிடைத்திருந்தன. எதிர் காலத்தைப் பற்றி அதிக யோசனையுள்ள ஒருவர் குழந்தைகளுக்குப் பால் பருக்கச் ‘சூப்பி’யுடன் கூடிய கண்ணாடி பாலூட்டி ஒன்றைப் பரிசாக அளித்திருந்தார். ஆனால் இப்பரிசை ஆட்சேபிப்பது போல, தேச நலனிலும் குடும்பக் கட்டுப்பாட்டிலும் அக்கறையுள்ள இன்னொருவர் ஒரு டசின் ரப்பர்க் கர்ப்பத் தடைக் கருவிகளைப் பரிசாக வழங்கியிருந்தார்! சுரேஷ் இவற்றைப் பிரித்துப் பார்த்து விட்டு "அழகுராணி கூட அதிகம் பிள்ளகள் பெறக் கூடாது என்பது இதைத் தந்தவர் எண்ணம். உன் எண்ணம் என்னப்பா?" என்றான் ஸ்ரீதரைப் பார்த்து. ஸ்ரீதர் சிரித்து விட்டு "பத்மாவைக் கேள்!" என்றான். பத்மாவோ நாணத்தோடு பொய்க் கோபம் காட்டி முகத்தைச் சுளித்துக் கொண்டாள்!

இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருக்க, கார் பத்மா வீட்டை அடைந்து விட்டது. ஸ்ரீதரும் சுரேசும் பரிசுப் பொருள்களை இறக்க, பத்மா துள்ளிக் குதித்து வீட்டுக்குள் போய்விட்டாள். அதன் பின், பரமானந்தரிடம் உரையாடுகையில் ஸ்ரீதர் தாங்கள் இருவரும் கல்கிசைக்குப் ‘பிக்னிக்’ போனதையும், அங்கு எதிர்பாராத விதமாக நீச்சலழகிப் போட்டியில் பத்மா பங்கு பற்ற வேண்டிய சூழ் நிலையும் ஏற்பட்டதையும் விளக்கிக் கூறினான்.

பரமானந்தர் அவனது பேச்சைச் சுவாரஸ்யமாகக் கேட்டுச் சிறிது நேரம் பேசாதிருந்து விட்டுப் பின் சிரித்தார்.

"பத்மா உன்னுடையவள். நீயும் அவளோடு இனி என்ன செய்தாலும் உங்களிஷ்டம். இதற்காக எனக்கேன் குற்றாவாளிகள் போல் இவ்வளவு பெரிய விளக்கம் தர வேண்டும்? இன்னும் இது நாகரிக காலம். இப்படிப்பட்ட விஷயங்களை ஆட்சேபிப்பதால் பிரயோசனமில்லை. மேலும், இன்று இது போன்ற போட்டிகள் உலகெல்லாம் நடக்கின்றன. என் மகளும் அதில் கலந்து கொண்டாலென்ன? இவற்றை எதிர்த்து இயக்கம் நடந்த நான் அவ்வளவு கர்நாடகமானவனல்ல" என்று விஷயத்தை மிகவும் சுருக்கமாகவே முடித்துவிட்டார் அவர். பத்மாவுக்குப் பெரிய நிம்மதி. "எங்கப்பாவைப்போல் யார் இருக்கிறார்கள்? எவ்வளவு நாசுக்காகவும் நாகரிகமாகவும் விஷயத்தை முடித்து விட்டார்! அவருக்கு வயதுதான் அதிகமேயொழிய, மனோபாவத்தில், இளைஞர். என் தங்க அப்பா அவர்!" என்று பெருமையோடு எண்ணிக் கொண்டாள் அவள்.

பரமானந்தர் சுரேஷிடம் பேசிக் கொண்டிருந்த பொது, "என் மகள் அழகி என்றால் எனக்குப் பெருமை இல்லையா? நீங்கள் அவள் அம்மாவைப் பார்த்திருக்க வேண்டும். பத்மா சரியாக அவள் அம்மாவைப் போல. அதனால் தான் அவள் அழகாயிருக்கிறாள். நல்ல வேளை, அவள் என்னைப் போல் இருந்திருந்தால் நிச்சயம் போட்டியில் தெரியப்பட்டிருக்க மாட்டாள்!" என்றார் தமக்கே இயல்பான நகைச்சுவையோடு. பத்மாவுக்கு இதைக் கேட்டதும் மேலும் அதிக ஆனந்தம்.

ஸ்ரீதரும் சுரேசும் வீட்டை விட்டுப் போனதும், பத்மா தனது அறைக்குள் போய்க் கதவைப் பூட்டிக் கொண்டு கண்ணாடி முன் நின்ற படி தன்னுடைகளைக் களைந்து வீசி விட்டுத் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஆடை ஆபரணங்களை ஒவ்வொன்றாய் அணிந்து பார்க்க ஆரம்பித்தாள்.

"அப்பப்பா என்னுடன் போட்டி போட்ட அந்தப் பத்துப் பெண்களும் எவ்வளவு அழகு! தங்கம் போன்ற மேனி, தளிர் போன்ற இடை, உருண்டு திரண்ட வாளிப்பான உடம்பு, முத்துப் பல் வரிசை, அழகாக் கத்தரித்து விசித்திரமாகச் செய்யப்பட்டிருந்த கூந்தல் அலங்காரங்கள், சிவந்து திரண்ட கால்கள், பூரித்துக் குடம் போல் விளங்கிய பின்னழகு - இப்படி அல்லவா அவர்கள் இருந்தார்கள்? அவர்கள் எல்லாரையும் விட நான் அழகா? நம்ப முடியவில்லையே! மேலும் கண்ணாடிக்குள் பார்த்தால் என்னழகு அவ்வளவு ஒன்றும் பிரமாதமாகத் தெரியவில்லையே! ஆனால் எனக்குத் தெரியாவிட்டலும் நான் பேரழகியாகத்தானிருக்க வேண்டும். எல்லோரும் என்னிடம் எனது அழகைப் பற்றித் தானே பேசுகிறார்கள்! விமலாவும் லோகாவும் கூட நான் அந்தச் சினிமா நட்சத்திரத்திலும் பார்க்க அழகு, இந்தச் சினிமா நட்சத்திரம் போலிருக்கிறேன், டீச்சரின் கையைப் பிடிக்க ஆசையாயிருக்கிறது. டீச்சரின் கைகள் மிகவும் அழகு என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறார்கள்" என்று தன்னோடு தான் பேசிக் கொண்டே பரிசாகக் கிடைத்த ஆடைகளை ஒன்று மாறி ஒன்றாக அணிந்து கண்ணாடியில் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவளுக்குப் பரிசாகக் கிடைத்திருந்த பொருள்களோ ஏராளம். சேலைகள் எட்டு, நீச்சலுடைகள் மூன்று, மார்புக் கச்சைகள் பதினேழு, செருப்புகள் நான்கு சொடி, கறுப்புக் கண்ணாடி இரண்டு, ஜீன்ஸ் என்னும் நீண்ட காற்சட்டைகள் இரண்டு, சுவெட்டர் ஒன்று, டென்னிஸ் விளையாடுவதற்கேற்ற கட்டைக் காற் சட்டைகள் இரண்டு, தங்கச் சங்கிலி ஒன்று, ரங்கூன் வைர மாலை ஒன்று, காதணிகள் மூன்று சோடி, வெள்ளி வளையல்கள் மூன்று சோடி, ஒரு கைக் கடிகாரம், தங்க வளையல்கள் இரண்டு, பொதுவாக ஒரு பெண்ணுக்குச் சீதனம் கொடுப்பதற்கே அவளுக்குக் கிடைத்த பொருள்கள் போதும் போலிருந்தன. இவற்றில் ஒரு சிலவற்றை அணிந்து பார்த்ததுமே அவளுக்குக் களைப்பேற்பட்டு விட்டது. முடிவில் ‘ஜீன்சை’ அணிந்து அறையில் அங்குமிங்கும் நடந்து அழகு பார்த்துக் கொண்டிருந்த போது களைப்பு மிகவும் அதிகமாகவே கட்டிலில் படுத்து ஒரு தலையணையை நெஞ்சுடன் அணைத்தவாறு நித்திரையாகி விட்டாள் அவள். கடலாடியதால் ஏற்பட்ட ஆயாசம் அத்து மீறி வந்து, ஆழ்ந்த துயிலுலகிற்கு அழைத்துச் சென்று விட்டது அவளை!

சற்றேறக் குறைய ஐந்தரை மணியளவில் துயில் சிறிது கலைந்து வரவும் விமலாவும் லோகாவும் கதவில் தட்டவும் சரியாக இருந்தது. பத்மா தான் ஜீன்ஸ் அணிந்திருந்ததை மறந்து படாரென்றெழுந்து கதவைத் திறந்து விட விமாலும் லோகாவும் வியப்போடு "அம்மாடி, டீச்சரைப் பார்! ஜீன்ஸ் அணிந்திருக்கிறா! மிகவும் அழகாயிருக்கிறது!" என்று கூச்சலிட்டார்கள். அந்தச் சப்தத்தைக் கேட்டு திரும்பிய பரமானந்தர் பத்மாவின் அழகுக் கோலத்தைக் கண்டு திகைத்துவிட்டார். பத்மா வெட்க மேலிட்டால் விமலாவையும் லோகாவையும் அறைக்குள் அனுமதித்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டாள். பரமானந்தர் என்ன செய்வார்? பத்மாவுக்குத் தான் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று கருதித் தமது கைப்பிரம்பை எடுத்துக் கொண்டு வெளியே போகக் கிளம்பினார். போகுமுன் பலத்த குரலில் "பத்மா பத்மா’ எனக் கூவி "நான் வர எட்டு மணியாகும்" என்று கூறி விட்டுச் சென்றார் அவர்.

அதன் பின் குழந்தைகளோடு சேர்ந்து கும்மாளமிட்டாள் பத்மா. தான் நீச்சல் ராணியாகத் தெரியப்பட்ட விஷயத்தை விவரமாகச் சொல்லி "நாளைக் காலைப் பேப்பரிலே எனது படங்கள் நிறைய வரும், பாருங்களேன்!" என்று பெருமையாகக் கூறினாள் அவள். அதற்கு விமலா "அப்படியானால் அண்ணாவிடம் சொல்லி எல்லாப் பேப்பரையும் வாங்கி டீச்சரின் படங்கள் எல்லாவற்றையும் வெட்டி வைத்துக் கொள்ளப் போகிறேன்" என்று பளிச்சென்று பதிலளிதாள்

அண்ணா! அந்த வார்த்கைளைக் கேட்டதும் பத்மாவின் மனம் கமலநாதனைச் சுற்றிப் படர ஆரம்பித்தது. கமலநாதன் தன்னைப் பற்றியும் தன்னழகைப் பற்றியும் என்ன நினைக்கிறான்? அழகான பெண்ணைக் கண்டால் ஆண்கள் யாருக்குமே ஆசையும் சபலமும் ஏற்படுமென்பது அவளுக்குத் தெரியுமென்றாலும், தான் ஒரு பேரழகி என்பது இப்பொழுதுதான் உண்மையில் திட்டவட்டமாகவும் சந்தேகமில்லாமலும் அவளுக்குத் தெரிந்திருந்தது. கமலநாதனுக்கு முன்னால் தன் பேரழகு முழுவதையும் ஒரு முறை காட்டி, அவன் அதன் தாக்கத்துக்கு முன்னால் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. எனவே விமலாவிடம், "சீ, அண்ணாவிடம் போய், நான் நீச்சல் ராணியாகத் தெரியப்பட்டதைப் பற்றிப் பேசக் கூடாது. தெரியுமா?" என்றாள். இவ்வாறு சொன்னால் அவள் கட்டாயம் கமலநாதனிடம் தன்னைப் பற்றிப் பேசுவாளென்பதும், உடனேயே அது சம்பந்தமாக ஒரு வாக்குறுதியைத் தனக்கு அளிபாள் என்பதும் பத்மாவுக்குத் தெரியும். அவள் நம்பிக்கை வீண் போகவில்லை. ஏனெனில் விமலா உடனேயே "அதெப்படி முடியும்? வீடு போனதும் எல்லோருக்கும் இதைச் சொல்லிவிட்டுத் தான் மறு வேலை. முதற் சொல்லுவது அண்ணாவுக்குத்தான்" என்று கூறி விட்டாள்!

அடுத்த நாட் காலை கொழும்பு முழுவதும் நீச்சல் ராணி பத்மா பரமானந்தைப் பற்றித் தான் பேச்சு.. கொழும்பு மட்டுமல்ல, இலங்கை முழுவதுமே அவளைப் பற்றியே பேசியது. வெள்ளவத்தையிலிருந்து கல்யாணமாகாத எழுது வினைஞர் **** தொடக்கம், செட்டியார் தெருவிலுள்ள சைவக் கடை, ஜவுளிக் கடை வீறாக எங்கும் பத்மாவின் பெயரே அடிபட்டது. ஒரு சிலர் "சிச்சீ, தமிழ்ப் பெண்கள் கூட இப்படியாகி விட்டார்களே!" என்று நாலு பேர் மத்தியில் முகம் சுளித்த போதிலும், ஆட்களில்லாத நேரமாகப் பார்த்து, பத்திரிகையில் வந்திருந்த பத்மாவின் ஒய்யாரப் படங்களை ‘லென்ஸ்’ என்ற பூதக் கண்னாடியால் கூடப் பார்த்தார்கள்! ‘வளவளப்பான’ காகிதத்தில் அச்சடித்திருந்தார்களானால் இந்த ‘லென்ஸி’ல் அவள் கால்கள் எவ்வளவு ஜோராக இருக்கும்" என்று தம்முள் இரகசியமாகக் கூறிக் கொண்ட இவர்களில் பலர், "என்ன கண்ணராவி, நீச்சலுடையாம் நீச்சலுடை! எவ்வளவு அவலட்சணமாயிருக்கிறது!" என்று நண்பர்களிடம் பகிரங்கமாகக் கூறிக்கொண்டார்கள். ஹோட்டல்களில் தேநீர்ப் பட்டறையில் வேலை செய்யும் ‘டீ மேக்கர்’களும், ‘குசினி’யில் வேலை செய்த சமையற்காரர்களும் மட்டுமே இவ்வாறு இரட்டை வேஷம் போடவில்லை. பத்மாவின் படங்களை வெட்டி எடுத்துச் சுவர்களில் ஒட்டி வைத்துக் கொண்டார்கள் அவர்கள்! அடுத்த நாள் மட்டுமல்ல, அடுத்து இரண்டு மூன்று நாட்களாகவே அவள் பேச்சாகவே இருந்தது எங்கும். கொலீஜ் ரோட் 48ம் இலக்கத் தோட்டத்தைப் பொறுத்த வரையில், அந்த இரண்டு மூன்று நாட்களில் ஒரு பெரிய பூகம்பமே நடந்து முடிந்து விட்டது. அன்னம்மா அனுதாபத்துடன் பேசினாள். திராவிட தாசனோ தனது அபிமான சினிமா நட்சத்திரமான எம்.ஜி.ஆருடன் பத்மா கடற்கரைக் காதற் காட்சிகளில் தோன்றினால் எவ்வளவு கவர்ச்சியாயிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தாள். குசுமாவோ பரமானந்தர் வீட்டிலில்லாத சமயம் வந்து பத்மாவை அவள் வெற்றிக்காகப் பாராட்டினாள். மூன்றாம் வீட்டு அவிஸ் நோனா முழுத் தோட்டத்திலும் செய்தியை இடை வீடின்றிப் பரப்பி விட, ஒரு சிலர் பத்மாவைப் பாராட்ட, இன்னும் சிலர் கிண்டலாகப் பேசவும் செய்தார்கள். தோட்டத்தில் வட்டிக்குப் பணம் கொடுத்து பிழைத்த கடைசி வீட்டுப் பூவுலிங்கத்தின் பொறாமைக்கார மகள் "ஆமாம் அங்கு வந்த பத்துப் பேரில் அவ அழகி. அதிலென்னாவாம்? இன்னும் நாங்கள் மரியாதையானவர்கள். இப்படி வெட்கமில்லாமல் நீச்சலுடை உடுத்துவோமா?" என்று கேட்டாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவளது தம்பி "ஆமாம், நீ நீச்சலுடை உடுத்தி உன் முகத்தில் முன்னே தள்ளிக் கொண்டிருக்கிற பல்லுகளில் இரண்டை சீனாக்காரன் கடையிலே போய்ப் புடுங்கிக் கொண்டு போயிருந்தால் உனக்குத்தான் பரிசு கிடைத்திருக்கும்! போக்கா, ஏன் அப்படிப் பேசுகிறாய்? பத்மா அக்கா நல்ல அழகு. நல்லவ கூட. காசு வாங்காமல் எத்தனை நாள் எனக்குப் பள்ளிப் பாடம் சொல்லித் தந்திருக்கிறா" என்று குறிப்பிட்டான். அதற்கு "போடா மடையா!" என்று சீறினாள் அக்கா. வெற்றிலைக் கடை வேலாயுதக் கிழவனுக்கு அவிஸ் நோனா செய்தியைச் சொல்லிப் பத்திரிகையில் கிடந்த பத்மாவின் படத்தைக் காட்டிய போது அவன் தன் மொட்டந் தலையைத் தடவி விட்டுக் கொண்டு "அப்படியா?" என்று கூறி அமைதியாகி விட்டான். அவன் மட்டும் தான், தான் கேட்ட செய்தியால் பாதிக்கப்படாதவன். "பத்மா நல்ல பெண், தமாஷ்காரி என்னோடு விளையாடுவதிலும் தலையில் குறும்பாகக் குட்டுவதிலும் அவளுக்குப் பிரியம்" என்ற நினைவைத் தவிர வேறொன்றுமே அவனுக்கு வரவில்லை. தோட்டத்தின் வாலிபர்களும் இளம் பெண்களும் பத்மாவை மீண்டும் மீண்டும் பார்க்க ஆசைப்பட்டார்கள். "ஆமாம், அந்தப் பெண் அழகுதான். அவள் நீச்சல் ராணியாகத் தெரியப்பட்டது நமது தோட்டத்துக்கே பெருமைதான்" என்று வஞ்சனையில்லாமல் ஜம்பமடித்துக் கொண்டார்கள் அவர்கள்.

பல்கலைக் கழகத்தைப் பொறுத்தமட்டில் பத்மா பெயர் பேசப்படாத இடமேயில்லை. இளம் பேராசிரியர், விரிவுரையாளர்கள் தொடக்கம் மாணவர்கள் வரை, எல்லோரும் பத்மாவைப் பார்க்கத் தவம் கிடந்தார்கள். பல தமிழ் மாணவர்களுக்கு ஒரு தமிழ்ப் பெண் நீச்சலழகியாகத் தெரியப்பட்டது ஒரு வித இனத் திருப்தியைக் கூடக் கொடுத்தது. "அது தமிழ்ப் பெண் குலத்துக்கே ஒரு பெருமை!" என்று குறிப்பிட்டான், அவர்களில் ஒருவன், சிற்றுண்டிச் சாலையில். "நல்ல பெருமை! என்னைப் பொறுத்த வரையில் அதை இழிவென்று நான் கருதுகிறேன்." என்று அதற்குப் பதிலளித்தான் இன்னொரு மாணவன். அது அவன் மனதிலிருந்து வந்த வார்த்தைகளல்ல. பெருமை பேசியவனின் அரசியல் பின்னவனுக்குப் பிடிக்காது. ஆகவே அவனுக்குச் சூடு கொடுக்கச் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை. ஒரு சில மாணவர்கள் "பத்மாவைத் திருமணம் செய்தாலோ" என்று கூட இரகசியமாகக் கற்பனை செய்து பார்த்தார்கள். வேறு சில மாணவர்கள் பத்மாவைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமான கதைகளைக் கட்டி விட்டார்கள். அவதூறுக் கதைகளைப் பரப்புவதிலும் பேசுவதிலும் அவ்வளவு திருப்தி சிலருக்கு!
பெண் மாணவிகள் பலர் பத்மாவைப் பார்ப்பதற்காக அவள் போகுமிடங்களுக்குப் படை எடுத்தார்கள். ஒரு பல்கலைக் கழக மாணவி போட்டியில் வெற்றி பெற்றது, பொதுவாக அவர்களுக்குத் திருப்தியையே தந்தது என்றாலும் ஒரு சிலருக்குப் பொறாமையும் ஏற்படவே செய்தது. சில அழகான பெண்கள் "நானும் இப்படிப்பட்ட போட்டிகளில் பங்கு பற்ற வேண்டும், அழகை அதிகரிக்கவோ வேண்டும், எனது உடம்பின் இந்தப் பகுதி மிகவும் கொழுத்திருக்கிறது. அதைத் தேகாப்பியாசத்தால் குறைக்க வேண்டும். இந்தப் பகுதி மிகவும் சிறுத்திருக்கிறது. அப்பகுதியைப் பெரிதாக்க முயற்சி எடுக்க வேண்டும்" என்ற தோரணையில் சிந்தித்துக் கொண்டார்கள். தங்கமணியைப் பொறுத்த வரையில் அவளுக்குத் தாங்கொணாத ஆத்திரம். "இந்தப் பத்மா ஆச்சரியமான பெண். பார்ப்பதற்குப் பசுப் போல! மிகவும் வெட்கமுள்ளவள் போலவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளுகிறாள். ஆனால் காதல், நீச்சலுடைப் போட்டி, இவற்றுக்கெல்லாம் துணிந்து விடுகிறாள். இவளை எவ்வளவு காலத்துக்குப் பொறுப்பது!" என்று சினந்து கொண்டாள் அவள். அவளை ஏதாவது செய்ய வேண்டும் போலிருந்தது தங்கமணிக்கு.

கமலநாதன் வீட்டிலோ பத்மாவைப் பற்றி ஒரே அமர்க்களம். விமலாவும் லோகாவும் பத்திரிகைகளை எடுத்து அதிலிருந்த பத்மாவின் படங்கள் எல்லாவற்றையும் வெட்டி ஒரு பழைய வரைதற்கொப்பியில் ஒட்டி வைத்துக் கொண்டு, "எங்கள் டீச்சரின் படங்கள்" என்று வருவோர் போவோருக்கெல்லாம் காட்டிக் கொண்டிருந்தார்கள். கமலநாதனிடம் அடிக்கடி காட்டி "அண்ணா, டீச்சர் மிகவும் அழகுதானே!" என்று கேட்டார்கள். கமலநாதனோ தனக்கு அதில் அக்கறை இல்லை என்பது போல் காட்டிக் கொண்டாலும், உண்மையில் தனது படுக்கை அறையில் தனியாக இருந்த போது இரவு வெகு நேரம் வரை பத்மாவின் படங்களைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். "அந்த ஸ்ரீதர் கொடுத்து வைத்தவன். மிகவும் அதிர்ஷ்டசாலி." என்று பொறாமைப்பட்டான் அவன். பத்மாவைப் போன்ற அழகும் அறிவும் படைத்தவள் ஒருவனுக்கு மனைவியாகக் கிடைத்தால் அவனுக்கு அதை விட உலகில் வேறென்ன வேண்டும் என்று சிந்தித்தான் அவன். தன் கறுத்தடர்ந்த மீசையைத் தன் விரல்களால் தடவ்¢ விட்ட வண்ணமே அவன் "என் வாழ்க்கையில் பத்மா எனக்குக் கிடைப்பதற்கு வழியேயில்லை. அவள் ஏற்கனவே இன்னொருவன் காதலி. அவனது ஆலிங்கனங்களுக்கும் அவள் ஆளாகியிருக்கலாம். யாருக்குத் தெரியும்? சில சமயம் அதற்கு ஒரு படி மேலே கூட அவர்கள் போயிருக்கலாம். அப்படியானால் அவள் எச்சிற்படுத்தப்பட்ட மாங்கனி. இருந்தாலும் கூட அவள் எனக்குக் கிடைத்தால் நான் அவளை ஏற்றுக் கொள்ளவே செய்வேன்...! ஆனால் இது நடக்கக் கூடிய காரியமா? எச்சிற்படுத்தப்பட்ட மாங்கனி ருசியிலே குறைவதில்லை. ஆனால் சுகாதாரத்துக்குக் கேடுதான். முனிசிப்பல் சுகாதார பரிசோதகனான எனக்கு இது தெரியாததல்ல. ஆனால் எச்சிற்படுத்தியவன் சுகதேகியாய் இருந்தால் கிருமிகள் இருக்க இடமில்லை. அப்படிப்பட்ட நிலையில் எச்சிற்கனியால் கூட ஆபத்தில்லை. ஏன் நான் எச்சிற்படுத்திய உணவை எனது தங்கைகளும் அவர்கள் எச்சிற்படுத்தியதை நானும் வீட்டில் சாப்பிடுவதில்லையா? நேற்றுக் கூட லோகா தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த இனிப்பு மிட்டாயிற் பாதியை தன் வாயாற் கடித்து என்னை அண்னாந்து பார்க்கும் படி சொல்லி என் வாயில் இடவில்லையா? நான் நாளைக்கு வேலைக்குப் போகும் வழியில் அவள் வீட்டிற்குப் போய் அவள் நீச்சலழகியாகத் தெரியப்பட்டதற்கு என் நல்வாழ்த்தைத் தெரிவிக்கவே வேண்டும். உண்மையில் பத்திரிகைகளில் வெளி வந்த படங்களைக் கொண்டு பார்த்தால், நீச்சலுடையில் அவளது அழகு வியப்பூட்டவதாகவோ இருக்கிறது. உடுக்குப் போன்ற அவளது உருவ அமைப்பு சேலைக் கூடாக இவ்வளவு அழகாகத் தெரிவதில்லை. பத்மாவின் அழகு பாராட்டுக்குரியது தான் என்று பலவாறு சிந்தித்தான் அவன்.

அடுத்த நாள் கமலநாதன் தனது மோட்டார் சைக்கிளில் பத்மா வீட்டுக்குச் சென்ற போது, அவனது அதிர்ஷ்டம் போலும், பரமானந்தர் அங்கிருக்கவில்லை. பத்மாவின் செங்கரங்களை அவன் தன் கரங்களால் இறுகப் பற்றிக் குலுக்கி விட்டு, "அழகு ராணிக்கு என் நல்வாழ்த்துகள்!" என்று அவன் கூறிய போது பத்மா அடைந்த போது பெருமை கொஞ்சமல்ல. அவன் மீசை அவளைக் கவர்ந்திழுக்க, அவள், "என்னை எல்லோரும் அழகி அழகி என்று பாராட்டுவது உண்மையில் எனக்கு வெட்கமாயிருக்கிறது. நான் என்ன அவ்வளவு அழகியா? ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் தெரியப்பட்டு விட்டேன்!" என்றாள். "சே, அப்படிச் சொல்லிவிட முடியாது! நான் உங்களை விட அழகான பெண்ணை என் வாழ்க்கையிலேயே கண்டதில்லை" என்றான் கமலநாதன்.

அதைக் கேட்ட பத்மாவின் மனம் இன்பத்தால் நிறைந்தது. அவனோடு நீண்ட நேரம் உரையாடி மகிழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. ஆனால் கமலநாதனுக்கோ வேலைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் "பத்மா உன்னை நான் வேறு நேரத்தில் ஆறுதலாகக் காணுவேன்" என்று கூறிவிட்டு, பின் திடீரென, "எங்கள் முனிசிப்பல் விளையாட்டுச் சங்கத்தின் வருடாந்த நடன விருந்து சீக்கிரம் நடைபெறும். கட்டாயம் நீங்கள் அதற்கு வர வேண்டும். நான் தான் சங்கத்தின் காரியதரிசி!" என்றாள்.

பத்மா, "பார்ப்போம் வசதியிருந்தால் வருகிறேன்." என்று கூற, கமலநாதன் அவள் கரங்களை மீண்டும் ஒரு தடவை குலுக்கிவிட்டுத் தனது மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டான்.

மோட்டார் சைக்கில் பேரிரைச்சலுடன் காற்றைக் கிழித்துச் செல்ல, பத்மா கமலநாதனின் பின்னழகைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றாள். சைக்கிளின் வெறுமையான பின்னாசனம் அவள் கவனத்தை ஈர்த்தது. சின்ன வயதிலிருந்து மோட்டார் சைக்கிளின் பின்னாசனத்தில் தன் காதலனோடு வீதியில் பவனி வர வேண்டுமென்று அவன் கண்டு வந்த ஆசைக் கனவு ஒரு கணம் உயிர்த்தெழுந்தது அப்போது.

இவை நடந்து இரண்டு மூன்று தினங்கள் கழித்து, பத்மாவும் ஸ்ரீதரும் பலகலைக் கழகத்தில் சந்தித்த ‘எஸ்கிமோ ஐஸ்கிறீம் பார்லரு’க்கு ஐஸ்கிறீம் அருந்தச் சென்ற பொழுது அங்கே சுரேசும் எதிர்ப்பட, எல்லோரும் ஐஸ்கிறீம் அருந்த ஒரு மேசையில் உட்கார்ந்தார்கள். மணவாள சுந்தரேஸ்வரருக்குப் பத்மா செய்துகொண்ட நேர்த்திக் கடன் பற்றிப் பேச்சு எழும்பியது.

"இன்று மாலை நான் எப்படியும் சுந்தரேஸ்வரர் கோவிலுக்குப் போக வேண்டும். நேர்த்திக் கடனை முடிக்க வேண்டும். ஸ்ரீதர், நீங்களும் என்னுடன் வரவேண்டும், தெரிந்ததா? என்றாள் பத்மா.

சுரேஷ் கேலியாக, "காரியந்தான் முடிந்து விட்டதே. சுந்தரேஸ்வரர் நீ கோரிய வெற்றியைத் தந்துவிடார். இனியேன் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? பேசாது எங்கள் அலுவலைப் பார்க்க வேண்டியது தானே?" என்றான்.
பத்மா முகத்தைச் சுளித்துக் கொண்டு, "நன்றாயிருக்கிறது உங்கள் பேச்சு! கடவுளைக் கூட ஏமாற்றப் பார்க்கிறீர்களே? வைத்த நேர்த்திக் கடனை செய்யாது விட்டால், அதனால் பல விபரீதங்கள் ஏற்படும். தெரிந்ததா?" என்றாள்.

சுரேஷ் சிரித்துக் கொண்டு "கடவுளை ஏமாற்றிய இடையன் மனைவியின் கதை உங்களுக்குத் தெரியாதா? அவள் மிகவும் புத்திசாலி என்பதே என் கருத்து." என்றான்.

பத்மா, "அப்படி ஒரு கதை இருக்கிறதா? சரிதான். அப்படியானால் அந்தப் புத்திசாலியின் கதையைச் சொல்லுங்கள் கேட்போம்!" என்றாள். ஸ்ரீதரும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்க ஆரம்பித்தான். சுரேசுக்கோ கதை சொல்வதில் ஆசை. அவர்களுக்கோ கேட்பதில் ஆசை. கதை படலம் ஆரம்பமாயிற்று.

"ஓர் இடையன் நோய்வாய்ப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தான். இடையன் மனைவி பக்கத்திலிருந்து பணிவிடை செய்து கொண்டிருந்தான். திடீரென அவள் கடவுளுக்கு ஒரு நேர்த்திக் கடன் வைத்தாள். ‘கடவுளே!! வைரவரே! என் கணவரைக் காப்பாற்று. காப்பாற்றினால், எங்களிடமுள்ள நூறு ஆடுகளையும் உனக்குப் பலி அளிப்பேன்," என்றாள். அதைக் கேட்ட இடையன் "பைத்தியக்காரி. எங்களிடமுள்ளதே நூறு ஆடுகள். அவை யாவற்றையும் வைரவருக்குக் கொடுத்துவிட்டால் நாங்கள் சீவிப்பது எப்படி?" என்று கேட்டான். உடனே இடையன் மனைவி இடையன் காதுள் குனிந்து ‘எனக்குப் பைத்தியமில்லை. அது நான் சும்மா சொன்னனான். எதையாவது சொல்லி உங்களைச் சுகமாக்க வேண்டுமென்பதற்காக என்றாளாம்!"

பத்மாவும் ஸ்ரீதரும் சிரித்தார்கள். "சுரேசுக்கு ஆண்டவன் மீது என்ன கோபம்? எந்த நேரமும் கிண்டல் செய்கிறார்" என்றாள் பத்மா. அதன் பின் சுந்தரேஸ்வரர் செய்த உதவிக்குக் கைம்மாறாகப் பத்மாவும் ஸ்ரீதரும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிப் பேச்செழுந்தது.

ஸ்ரீதர், "அம்மனுக்குப் பத்மாவும் நானும் ஒரு தங்கப் பதக்கம் வாங்கி அளிக்கப் போகிறோம். எல்லோருமாகச் செட்டியார் தெருவுக்குப் போய் ஒரு பதக்கம் வாங்குவோம் வருகிறீர்களா?" என்றான்.

வழியில் காரிலே ஸ்ரீதர் தனது அன்றைய வேலைத் திட்டத்தைப் பற்றிப் பத்மாவிடம் விவரித்தான். "சுந்தரேஸ்வரர் கோவ்¢லில் ஐயர் தொடக்கம் கோவில் மேளம் வரை எல்லோரும் என்னை நன்கு அறிந்தவர்கள். ஆகவே இன்று உன்னோடு ஜோடியாக நான் அங்கு செல்ல விரும்ப வில்லை. நீ இரவு ஆறு மணியளவில் அங்கு வந்து காணிக்கையை ஐயரிடம் கொடுத்துப் பூசையை முடித்துக் கொண்டு மெல்லச் சண்டேசுரர் சந்நிதிக்கு வா. அங்கே நாம் சந்தித்துக் கொள்வோம். அப்புறம் நான் அங்கிருந்து உன்னை வீட்டுக்குக் கொண்டு போய் விடுகிறேன்." என்றான். பத்மா "ஆகட்டும்" என்று தலையை அசைத்தாள். ஆனால் சண்டேசுரர் சந்நிதி என்றால் என்ன என்பது பத்மாவுக்கு விளங்க வில்லை. கொழும்பிலே பிறந்து வளர்ந்த அவள் கோயிலுக்கு இடையிடையே போய் வந்த போதிலும், முறையாக இந்து மதப் பயிற்சியைப் பெறாதிருந்ததே இதற்குக் காரணம். "சண்டேசுரர் சந்நிதியா, அது எங்கே?" என்றாள் பத்மா. ஸ்ரீதர் திடுக்கிட்டு விட்டான். "என்ன, இது கூடத் தெரியாதா? ஓர் இந்துப் பெண்ணுக்கு இது வெட்கமில்லையா?" என்றான் ஆச்சரியத்துடன்.

பின்னர் சண்டேசுரரைப் பற்றி விவரமாகச் சொல்ல ஆரம்பித்தான் அவன். "கோவிலிலே கடைசியாக நாம் கும்பிட வேண்டிய மூர்த்தி சண்டேசுர மூர்த்திதான். இவர் பொதுவாகக் கோவிலின் மூல ஸ்தானத்துக்குப் பின்னே இருப்பார். இன்னும் அவரைக் கும்பிடுவதற்குக் கூடத் தனி முறை இருக்கிறது. அவர் எப்பொழுதும் யோக நித்திரையிலிருப்பதால் அவரை விழித்தெழச் செய்த பின்பே நாம் அவரைக் கும்பிட வேண்டும். அவரை விழிக்கச் செய்ய என்ன செய்ய வேண்டுமென்று தெரியுமா?" என்று பத்மாவை வினவினான்.

தனக்குத் தெரியாது என்று பதிலளித்தாள் அவள். "மூன்று முறை சண்டேசுரர் காதுக்குச் சமீபமாக கை தட்ட வேண்டும்" என்றான் ஸ்ரீதர். அதன் பின் "எங்கள் அம்மாவுக்கு இதெல்லாம் நன்றாய் தெரியும். எனக்கு அம்மாதான் இவற்றைச் சொல்லிக் கொடுத்தார். யாழ்ப்பாணத்துக்கு வரும்போது நீ இவற்றை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும், பத்மா" என்றான் ஆர்வத்துடன்.

பத்மா "கட்டாயம் நான் இவற்றைக் கற்றுக் கொள்வேன்" என்றாள்.

சுரேஷோ அவர்களின் பேச்சைப் பின்னாசனத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தான். "யாழ்ப்பாணப் பெண்கள் வேறெந்தப் பரீட்சையில் சித்தி எய்தினாலும் எய்தாவிட்டாலும் இப்படிப்பட்ட விஷயங்களில் பரீட்சை வைத்தால், நிச்சயம் சித்தி அடையவே செய்வார்கள்" என்றான் அவன். "என்னைப் பொறுத்த வரையில் சண்டேசுரரின் யோக நித்திரையைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான் சிறுவனாயிருந்த போது சண்டேசுரரின் காதுகளில் நானும் கை தட்டி இருக்கிறேன். அவருக்குக் காது மந்தமென்றும் சற்றுப் பலமாக கை தட்டினால்தான் அவர் கண்ணை விழித்துப் பார்ப்பாரென்றும் மற்றப் பிள்ளைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்" என்றும் கூறினான் அவன்.
சுரேசுக்கு எவ்வளவு உலக விஷயங்களும் இலக்கிய விஷயங்களும் தெரிந்திருந்தாலும் கோவில் சம்பந்தமான விஷயங்களில் ஸ்ரீதருக்கு இருந்த அறிவு அவனுக்கில்லை. எந்தப் பக்கத்தைப் பார்த்துக் கும்பிட வேண்டும், எந்தத் தெய்வத்தை முதலில் கும்பிட வேண்டும், எவரை அடுத்தபடி கும்பிட வேண்டுமென்பது போன்ற பிரச்சினைகளை அவன் விடுவிப்பது போல் சுரேஷால் இலகுவில் விடுவிக்க முடியாது. ஸ்ரீதர் கோவிற் சொந்தக்காரனல்லவா, ஆகவே சண்டேசுரரைப் பற்றித் தனக்கிருந்த ஐயங்கள் சிலவற்றை ஸ்ரீதரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினான் சுரேஷ்.

"சண்டேசுரர் யார்? ஒரு தெய்வமா? அப்படியானால் சிவ பெருமானுக்கு என்ன முறை? அதாவது உமை மனைவி, குமரக் கடவுள் மகன், விஷ்ணு மைத்துனன் என்பது போல!" இப்படிச் சில முக்கியமான கேள்விகளைத் தூக்கிப் போட்டான் சுரேஷ். ஸ்ரீதர் அவற்றுக்கெல்லாம் டக் டக் என்று பதிலளித்து வந்ததைக் கண்டு பத்மா பெரிது வியப்படைந்தாள். பார்க்கப் போனால் "சுரேஷ் எவ்வளவுதான் பெரிய ‘புரொபசர்’ போலப் பேசிக் கொண்டாலும், ஸ்ரீதரும் அவனுக்குக் குறந்தவனல்ல" என்று மகிழ்ச்சியடைந்தாள் அவள்.

"சண்டேசுரர் ஒரு தெய்வமல்ல. அவர் ஒரு நாயனார். அவரது பக்தியை மெச்சிப் பரம சிவன் அவரைத் தொண்டர் நாயகனக நியமனம் செய்திருக்கிறார். உண்மையில் சிவ பெருமானுக்கும் உமா தேவிக்கும் அளிக்கும் பொருள்கள் யாவும் முடிவில் சண்டேசுரருக்கே உரியன" என்று விளக்கினான் ஸ்ரீதர். இந்த ருசிகரமான தகவல்களைக் கேட்கக் கேட்கத் தானும் புராணங்களைப் படித்தும் பெரியவர்களுடன் பேசியும் இவ்விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டாள் பத்மா.

இதற்கிடையில் செட்டியார் தெரு வந்து விடவே, பத்மாவும் ஸ்ரீதரும் அங்கே இருந்த ஒரு நகைக் கடைக்குப் போய் அன்று மாலை அம்மனுக்குக் காணிக்கை அளிப்பதற்காக ஒரு தங்கப் பதக்கத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். பத்மா அதனை வீட்டுக் எடுத்துச் சென்று, ஐந்தரை மணியளவில் கோவிலுக்கு வரும் போது, அதனை இதர நைவேத்தியப் பொருள்களுடன் எடுத்து வர வேண்டுமென்பது ஸ்ரீதரின் ஏற்பாடு.

அன்று மாலை கோவிலுக்குப் போவதற்காக ஸ்ரீதர் குளித்து முழுகிச் சந்தனப் பொட்டிட்டு அதற்கு மேல் ஒரு குங்குமப் பொட்டுமிட்டுக் கொண்டிருந்த போது, அறையுள் அழைத்து சுரேஷ் ஸ்ரீதரின் பக்திக் கோலத்தைக் கண்டு "அடி சக்கை! கோவிலுக்கு ‘ரெடி’யாகிறாய் போலிருக்கிறது! நல்ல வேஷப் பொருத்தம். அசல் பக்தனாகக் காட்சியளிக்கிறாய்" என்றான்.

அதற்கு ஸ்ரீதர், "சுரேஷ்! நீயும் வா! ஏதாவது சிரிப்பாய்ப் பேசிக் கொண்டிருப்பாயல்லவா! நீயிருந்தால் நேரம் போவதே தெரியாது. புறப்படு. ஆனால் குளிக்காமல் வரக் கூடாது." என்றான்.

சுரேஷ், "ஓகோ கோவிலுக்கு எப்படிப் போக வேண்டுமென்று எனக்குச் சொல்லிக் கொடுக்கிறாய் போலிருக்கிறது. நீ வர வரப் பெரிய ஆளாகி வருகிறாய்!" என்றாள்.

ஸ்ரீதர், "ஆம் கோவிலுக்கு எப்படிப் போக வேண்டுமென்பது சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயம் தானே! இதெல்லாம் எனக்கு மனப்பாடம். சின்ன வயதில் எங்கள் வீட்டுப் பண்டிதர் சின்னையா பாரதியார் எனக்கு ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடையைப் படிப்பித்து வைத்தார். அதில் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா?" என்றாள்.

"சொல்லு!" என்றான் சுரேஷ்.

"ஸ்நானம் செய்து, தோய்த்துலர்ந்து வஸ்திரம் தரித்து, சந்தியா வந்தனம் முதலியன முடித்துக் கொண்டு, தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, கர்ப்பூரம், முதலியன வைக்கப்பட்ட பாத்திரத்தைத் தாமே எடுத்துக் கொண்டேனும் சுரேஷைக் கொண்டேனும் வாகனாதிகளின்றி நடந்து போதல் வேண்டும்."

"சுரேஷ் என்று சொல்லாதே. பத்மா என்று சொல்லு!"

நண்பர்கள் இருவரும் சிரித்துக் கொண்டார்கள். ஸ்ரீதர் திடீரென சுரேஷை நோக்கி "அது சரி. உன்னிடம் நானொன்று கேட்க விரும்புகிறேன். பத்மாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டான்.

"நான் என்ன நினைப்பது? அது தான் அதிகார் அம்பலவாணர் உட்படப் பென்னாம் பெரிய மனுஷர்களே தீர்மானித்து விட்டார்களே, பத்மா பேரழகி என்று!" என்றான் சுரேஷ்.

"நான் அதைக் கேட்கவில்லை. அவள் அழகு கிடக்கட்டும். மற்ற விஷயங்களில்?"

"பத்மா புத்திசாலி, படித்திருக்கிறாள். உன்னைப் போலவே கடவுளிலும் பக்தி! எப்போதும் உற்சாகமாயிருக்கிறாள். உனக்கேற்ற ஜோடிதான் பத்மா. சந்தேகமேயில்லை."

"அப்படிச் சொல்லு. அதைத் தான் நான் கேட்டேன்." இவ்வாறு சொல்லிக் கொண்டு பெரிய சரிகைக் கரை விட்ட வேட்டியை எடுத்து உடுக்க ஆரம்பித்தான் ஸ்ரீதர். சுரேஷ் அவனைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு "வேஷம் நன்றாக இருக்கிறது. அசல் பணக்காரப் பக்தன். பார்க்கப் போனால் வாழ்க்கையே ஒரு நாடகந்தானே? வேஷம் போடுவதே எல்லோர் வேலையுமாயிருக்கிறது" என்றான்.

"ஏன் அப்படிச் சொல்லுகிறாய்!" என்றான் ஸ்ரீதர்.

"ஏனா? உண்மையைச் சொன்னேன். இப்போது கோவிலுக்குப் புறப்படுகிறாய். அதனால் பக்தன் வேஷம். காலையில் பள்ளிக் கூடம் சென்றாய் - மாணவ வேஷத்தில்! சிறிது சுகமிலாவிட்டால் தொள தொளப்பாக உடுத்திக் கொண்டு நோயாளி வேஷம் போடுகிறோம். கல்யாணத்தன்று மாப்பிள்ளை வேஷம். அடுத்த வாரம் நான் இங்கிலாந்துக்குப் புறப்படுகிறேன் - பிரயாணி வேஷம் போட்டுக் கொண்டு. இப்படி நேரத்துக்கும் இடத்துக்கும் தக்கபடி உடைகளை மாற்றிக் கொண்டிருப்பது தானே எல்லோர் வேலையுமாயிருக்கிறது! இப்பொழுது உன்னுடைய மேக்கப்பையே பாரேன் . நெற்றியில் சந்தனம், குங்குமம் - எல்லாம் வேஷம் தானே? இன்னும் வாத்தியார், வாத்தியார் வேஷம் போடுகிறார். கிளார்க், கிளார்க் வேஷம் போடுகிறான். போலீஸ்காரன், போலீஸ்காரன் வேஷம் போடுகிறான். ஆகவே வேஷம் போடுவது நாடகத்துக்கோ சினிமாவுக்கோதான் என்று நினைத்து விடாதே. சாதாரண வாழ்க்கையே வேஷங்களால் தான் நடைபெறுகிறது. ஏன் அதிகார் அம்பலவாணரைப் பாரேன்! தலைப்பாகையும் ஆளுமாகப் பார்த்தவர் பயந்து மரியாதை செய்யும்படியாக ஒரு வேஷம்!" என்று ஒரு குட்டிப் பிரசங்கமே பண்ணிவிட்டான் சுரேஷ்.

"அது சரி, என்னைப் பார்த்தால் பணக்காரப் பக்தன் போலிருக்கிறது என்றாய். பிச்சைக்காரப் பக்தன் எப்படியிருப்பான்?" என்றான் ஸ்ரீதர்.

"அவனுக்கேது உன் போல் பல நூறு ரூபா பெறுமதியான பட்டு வேட்டி, வைர மோதிரம்! இவற்றுடன் உன்னைப் பார்த்தால் பளிச்சென்று பணக்காரனென்ற நினைவு வரத்தானே செய்கிறது? இன்னும் ஒன்றை யோசித்தாயா? நீ சாதாரணமாக அணியும் காற்சட்டை சேர்ட்டை விட இந்தப் பட்டு வேட்டியும் சாங்கையும் அதிக விலையல்லவா? பார்க்கப் போனால் பணக்காரர்கள் கோவிலுக்குப் போகும்போது, தமது மத நூல்களில் கூறியுள்ளதற்கு மாறாக மிக்க படாடோபமாக அல்லவா உடுத்தி செல்லுகிறார்கள்?" என்றான்.

ஸ்ரீதர் தன் தலைமயிரை மீண்டும் மீண்டும் அழகாக வாரி விட்ட வண்ணமே சுரேஷின் பேச்சை ‘உம்’ கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"இன்றைய உலகில் கோவில் கூடப் பணக்காரருக்குத்தான். அர்ச்சனைக்குக் கூட டிக்கெட் எடுக்க வேண்டும். அதிலும் ‘கிரேட்’ இருக்கிறது. ஒரு ரூபாவுக்கும் பூசை செய்யலாம். ஒன்பது ரூபாவுக்கும் செய்யலாம். அதிக காசு செலவழிப்பவனுக்குக் கடவுள் அதிகக் கருணை காட்டுவாரோ என்னவோ? இன்னும் காலையிலிருந்து மாலை வரை தொழிலும் வீட்டு வேலையுமாக இருக்கும் ஒருவன், அவற்றை விடுத்துக் கோவிலுக்குப் போய் வரும் போது, அவனுக்குப் பண நஷ்டம் ஏற்படுவதோடு, பஸ் செலவு முதலியனவும் உண்டு. ஆகவே பக்திக்குக் கூடப் பணம் தேவை!"

"சுரேஷ், நீ இதில் பிழை விடுகிறாய். பணக்காரன் ஐம்பது ரூபாவுக்குப் பூசை செய்தால் ஏழை ஐம்பது சதத்திலேயே அதை முடிக்கலாம். கடவுள் இருவருக்கும் ஒரே விதமாகத்தான் அருள் செய்வார் என்று அம்மா சொல்லுவாள். சின்னையா பாரதியார் கூட அப்படித்தான் சொல்லுவார். கடவுளுக்கு வேண்டியது காசல்ல, பூவல்ல, நைவேத்தியமுமல்ல. உனக்குத் தெரியுமா சுவாமி விபுலானந்தரின் "வெள்ளை நிறப் பூ" என்ற பாட்டு"

"தெரியாது, சொல்லு..."
"வெள்ளை நிறப் பூவுமல்ல
வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது!
- இப்படிப் பாடியிருக்கிறார் அவர்"

"கருத்தை நான் ஏற்றால் என்ன, ஏற்காவிட்டால் என்ன, இது அழகான பாட்டு. நானும் அதைப் பாடம் பண்ணிக் கொள்ள விரும்புகிறேன்."

சுரேஷின் இவ்வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த ஸ்ரீதர், "சுரேஷ் நீ என்னை விட்டு இங்கிலாந்துக்குப் போகப் போகிறாய். நீ பக்கத்திலில்லாமல் நான் என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை" என்றான் .
"உனக்குத்தான் இப்பொழுது பத்மா இருக்கிறாளே! அவளைச் சீக்கிரம் கல்யாணம் செய்து ‘கிஷ்கிந்தா’வில் இதே அறையில் குடியேற்றி விடு. அப்பொழுது அறையும் இப்படியிருக்காது. மிகவும் அழகாய் வைத்திருப்பாள். மேலும் இப்பொழுது ‘கிஷ்கிந்தா’ தன் பெயருக்கேற்ற படி பிரமச்சாரிக் குரங்குகளின் வீடாகத்தானே இருக்கிறது? நான் அனுமான், நீ சுக்கிரீவன்! வேலைக்காரர்கள் வானரங்கள்! உங்க அப்பா பொருத்தமாகத்தான் வானரங்களின் ஊர்ப் பெயரை இவ்வீட்டுக்கு வைத்திருக்கிறார். ஆனால் பத்மா வந்ததும் இந்த வீடு கிஷ்கிந்தாவாக இருக்காது. அயோத்தியாவாக மாறிவிடும். இராமன் இருக்குமிடம் ‘அயோத்தியா’ என்று சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இராமன் இருக்குமிடம் அயோத்தியாவல்ல. சீதையோடு அவனிருக்குமிடம் தான் அயோத்தியா! ஸ்ரீதர், ஓர் ஆச்சரியமான விஷயத்தைப் பார்த்தாயா, உனக்கும் பத்மாவுக்கும் இருக்கும் பெயர் பொருத்தம். ஸ்ரீதர் என்றால் விஷ்ணு, பத்மா என்றால் இலட்சுமி! விஷ்ணு, இலட்சுமி ஆகியவர்களின் மானிட உருவங்கள் தானே இராமரும் சீதையும்! அவர்களின் வீட்டுக்கு ‘அயோத்தியா’ என்பது தான் பொருத்தமான பெயர். பெயரை மாற்றி விடு."

"பெயரை மாற்றுவது கூடாது. அப்பாவுக்கு அது பிடிக்குமோ என்னவோ? உனக்குத் தெரியுமா. சிலருக்கு இராமனை விட அனுமானில் தான் மதிப்பு அதிகம். அப்பாவுக்கும் அப்படியிருக்கலாம். ஆகவே ஒரு புதிய விட்டைக் கட்டி அதற்கு ‘அயோத்தியா’ என்று பெயர் வைத்து விட்டால் போகிறது. பத்மாவும் நானும் அங்கே வசிப்போம். நீ இங்கிலாந்திலிருந்து வந்ததும் நேரே அங்கு வந்து எங்களைக் காண்.’

ஸ்ரீதர் இவ்வாறு பேசி முடிப்பதற்கும் உடைகள் முழுவதையும் உடுத்தி முடிப்பதற்கும் சரியாக இருந்தது. அவன் சுரேஷின் முன்னால் கம்பீரமாகத் திரும்பி நின்று கொண்டு "சுரேஷ், என்னைப் பார், பக்தன் வேஷம் நன்றாயிருக்கிறதா? நான் அழகாயிருக்கிறேனா?" என்று கேட்டான்.

"பக்தன் வேஷமா? நான் வேடிக்கைக்காக அல்லவா பக்த வேஷம் என்று சொன்னேன். உண்மையில் நீ மாப்பிள்ளை போலல்லவா இருக்கிறாய்? ஆனால் உன் அழகைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். பத்மாவிடம் கேள்" என்றான் சுரேஷ்.

"பத்மாவிடம் கேட்பதா? என்னைப் போல் அழகானவன் உலகிலேயே இல்லையென்று என்னிடம் ஆயிரம் தடவை சொல்லி விட்டாள்!" என்று பெருமையாக முகத்தை நிமிர்த்திச் சொன்னான் ஸ்ரீதர்.

"அப்படியா? அப்படியானால் அனுமானாகிய நீ கிஷ்கிந்தாவின் இந்தச் சுக்கிரீவனை விட அழகென்கிறாய்! சரி. இருந்து விட்டுப் போகட்டும்" என்றான் சுரேஷ்.

"இல்லை நீயும் அழகுதான்" என்றான் ஸ்ரீதர், சுரேஷைத் தேற்றுவதற்காக. சுரேஷ் சிரித்தான். ஸ்ரீதரை அவன் தன் நண்பனாகக் கருதிய போதிலும் ஏனோ அவனை ஒரு குழந்தையாகக் கருதுவதையும் அவனால் விட்டு விட முடிவதில்லை.

"சரி நேரமாகிறது போ. பத்மா உனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்" என்றான் சுரேஷ்.

ஸ்ரீதர் சுந்தரேஸ்வரர் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்த போது அங்கே பத்மா கோபுர வாசலில் ஒரு பித்தளைத் தட்டில் தேங்காய், வாழைப்பழம், புஷ்பம் முதலியவற்றை ஏந்திய தட்டுடன் நின்று கொண்டிருந்தாள். நெற்றியில் குங்குமப் பொட்டுடன் தனியே ஒரு மல்லிகை மலர் போல், அவள் அங்கே நின்று கொண்டிருந்த காட்சி அவனை அப்படியே மெய் மறக்கச் செய்துவிட்டது! வெள்ளை நிறச் சேலையுடுத்தித் தூய்மையின் மறு உருவமாகக் காட்சியளித்த பத்மா அவன் மனதில் அப்பொழுது தான் காதலிக்கும் ஒரு பெண்ணாகத் தோன்றவில்லை. வணங்குதற்குரிய தெய்வத் திருமகள் ஒருத்தி தனக்கு அருள் புரிவதற்காக அங்கே நின்று கொண்டிருப்பது போன்ற மயக்கம் ஏற்பட்டது அவனுக்கு. அவளது வெள்ளைப் பாதங்களைத் தொட்டு வணங்கலாம் போலிருந்தது. அந்த நினைவின் உந்தலிலே அவன் கண்கள் பாதங்களிற் சஞ்சரித்த போது, அவற்றை அழகிய வெள்ளிப் பாதசரங்கள் அவள் தரித்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தான் அவன். பத்மாவுக்கு எத்தகைய அழகுணர்ச்சி என்று வியப்படைந்தான். பாதசரங்களை அவள் எங்கே வாங்கினாள் என்று கேட்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

நீச்சலுடை மோகினியாகத் தெரியப்பட்ட அவள் உண்மையில் நீச்சலுடையிலும் பார்க்க இந்த உடையில் அல்லவா மிகவும் அழகாயிருக்கிறாள் என்று எண்ணினான் அவன். நீச்சலுடையில், தெரியும் மலைப் பாம்பு போன்ற ஒரு மிருக அழகு அவளிடம் கானப்பட்டது. விஷம் தோய்ந்த அவ்வழகு அவளை ஒரு விளையாட்டுப் பொம்மை போலத் தோன்ற செய்ததல்லாமல், புனிதமான பூப்போலத் தோன்றும் படி செய்யவில்லை. இப்பொழுதோ அவள் தலையிலணியத்தக்க ஒரு மலர் போலக் காட்சியளிக்கிறாள். அவள் பார்வையிலும் உடலிலுமிருந்து விஷம் பிரவகிக்க வில்லை. அமிர்தம் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது.

என்றாலும் பத்மா மீது அவனுக்கு ஒரு கோபமும் ஏற்படச் செய்தது. அவள் வெள்ளை உடுத்திருந்ததே, அதற்குக் காரணம், கன்னிப் பெண்களும், சுமங்கலிகளும் வெள்ளை கறுப்புச் சேலைகளை அணியக் கூடாது என்பது சிவநேசரின் கொள்கை. உண்மையில் அவள் தாயார் ஒரு போதும் வெள்ளை உடுத்தி அவன் கண்டதேயில்லை. வெள்ளை விதவைகளுக்கும் கருமை சோகத்துக்கும் உரியது என்ற கொள்கை அவர்கள் வீட்டில் என்றும் நிலை பெற்றிருந்த ஒன்றாகும். ஆனால் "பாவம், பத்மாவுக்கு இவை ஒன்றும் தெரியாது. அவளுக்கு இவற்றைச் சொல்லித் தர யார் இருக்கிறார்கள்? தருணம் வரும்போது நாந்தான் இவற்றை அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்!" என்று தனக்குள் தானே கூறிக் கொண்டான் அவன்.

இக் கருத்தை ஸ்ரீதர் சுரேஷிடம் கூறியிருந்தால், அவன் என்ன சொல்லியிருப்பான்? "ஓகோ மூட நம்பிக்கைகளில் பத்மாவுக்கு ஒரு ‘கோர்ஸ்’ கொடுக்கப் போகிறாயா என்ன?" என்று கேட்டிருப்பானல்லவா? ஒருவருக்கு அவசியமான அறிவாகப்படுவது இன்னொருவனுக்கு மூட நம்பிக்கையாகத் தெரியும் விசித்திரத்தை எண்ணி ஸ்ரீதர் தனக்குள் தானே சிரித்துக் கொண்டான்.

ஸ்ரீதர் கோபுர வாசலில் பத்மாவிடம் அதிகம் பேச விரும்ப வில்லை. கோவிலிலிருந்த கணக்கப்பிள்ளை, தவசிப்பிள்ளை தொடக்கம் ஐயர் குடும்பம் - எல்லோரும் அவனை நன்கறிந்தவர்களாயிருந்ததே இதற்குக் காரணம். ஆகவே சற்று எட்ட நின்ற படியே "பத்மா, போய்ப் பூசையை முடித்துக் கொண்டு நான் சொன்னது போல் சண்டேசுரர் சந்நிதிக்கு வா" என்று கூறிவிட்டுத் தான் தனியாகக் கோவிலுக்குள் சென்றான் அவன். பத்மாவும் தனியே மறு பக்கம் திரும்பிக் கொண்டு நடந்தாள். ஸ்ரீதர் அவளை ஒரு தரம் பார்த்துப் புன்னகை பரிமாறிக் கொள்ள விரும்பி, அவள் முகத்தை நோக்கினான். ஆனால் அவளோ தான் தன் முழு ஜன்மத்திலேயும் ஸ்ரீதரைக் கண்டது கூட இல்லை என்பது போல் வேண்டுமென்றே அலட்சியமாக வேறு புறமாகப் பார்த்து நடந்தாள். அவளது இக்குறும்பு ஸ்ரீதரின் உள்ளத்தைக் கிளுகிளுக்க வைத்தது!

சுந்தரேஸ்வரர் சந்நிதியில் ஸ்ரீதருக்குத் தனிக் கெளரவம் காட்டினார் ஐயர். அவனைக் கண்டதும் முதலில் அவன் பெயரில் பூசை செய்து திருநீறு, தீர்த்தம் கொடுத்த பின்னரே மற்றவர்கள் பக்கம் திரும்பினார் அவர். பத்மா எல்லாவற்றையும் ஒன்றுமறியாதவள் போல் கவனித்துக் கொண்டு நின்றாள். ஸ்ரீதரைக் கண்ட கோவில் ஊழியர்கள் அவனுக்கு விலகி இடங் கொடுத்த விதத்திலிருந்தே அவனிடம் அவர்களுக்கு எவ்வளவு மதிப்பிருந்தது என்பதை அவள் கண்டு கொண்டாள்.

திருநீற்றை கொடுத்த ஐயர், ஸ்ரீதரிடம் மிக விநயமாக "அப்பா நேற்றுக் கடிதம் எழுதியிருந்தார். இவ்வருடம் முடிவதற்குள் தெற்குக் கோபுரத்தைக் கட்டி விடத் திட்டம் ஒன்று போட்டிருக்கிறார் அவர்" என்றார். "ஓ! அப்படியா? நல்ல செய்தி" என்றான் ஸ்ரீதர்.

பூசை முடிந்ததும் ஸ்ரீதர் அங்கிருந்து கிளம்பி, சண்டேசுரர் சந்நிதியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் வாய் ‘கூற்றாயினவாறு’ என்ற தேவாரத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. இடையிடையே கோவிலை அங்குமிங்கும் உற்றுப் பார்த்த அவன் "சீ, கோவிலை இன்னும் எவ்வளவு அழகாய் வைத்திருக்கலாம்? இனி நானும் இந்த விஷயங்களில் அக்கறை எடுக்க வேண்டும். அம்மா எத்தனை தரம் கோவில் வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்று எனக்குச் சொல்லியிருக்கிறாள்? சரி கல்யாணம் முடியட்டும். அதன் பிறகு கோவிலைச் சுத்தமாவும் அழகாகவும் வைக்கும் பொறுப்பை நிச்சயமாக நான் கவனிக்கத்தான் போகிறேன். பத்மாவிடம் அதை விட்டு விட்டால் எல்லாவற்றையும் நேர்த்தியாகப் பார்த்துக் கொள்வாள்" என்று தனக்குள் தானே கூறிக்கொண்டாள்.
இப்படி அவன் தேவாரம் பாடியும் சிந்தனைகளில் ஆழ்ந்தும் சென்று கொண்டிருந்த போது "தம்பி" என்று ஓர் அழுத்தமான குரல் பின்னாலிருந்து கேட்க "யாரது பழக்கமான குரல்?" என்று திரும்பிப் பார்த்தான் அவன்.

"ஓ! வேணுகோபாலா?"

ஆம். அங்கே நின்று கொண்டிருந்தது யாழ்ப்பாணத்தின் பிரபல நாதசுர வித்துவான் வேணுகோபால். ஸ்ரீதருக்கு சிறு வயதிலிருந்தே அறிமுகமானவன். வைரக் கடுக்கன் அணிந்து நெஞ்சில் தங்கச் சங்கிலியொடும் வாழைப்பூக் குடுமியோடும் விளங்கிய அவன் இசைக் கலையில் இணயற்றாவன் என்று பெயரெடுத்திருந்தான். அதனால் சிவநேசருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவனுக்கு இருந்தது. செக்கச் செவேலென்ற சிவந்த உடலமைப்போடு விளங்கிய அவனுக்குச் சுமார் ஐம்பது வயதிருக்கும். அவனது ஆரோக்கியமான உடலமைப்பு காட்ட மறுத்த அவன் வயதை அவன் குடுமியில் தலையாட்டிக் கொண்டிருந்த வெள்ளை மயிர்கள்தான் ஓரளவு வெளிக்காட்டின.
வேணுகோபால் ஸ்ரீதரைப் நெருங்கி "எங்களுக்கெல்லாம் உங்கள் வீட்டில் பெரிய விசேஷம் காத்திருக்கிறது சீக்கிரம்! இன்னும் நாள் வைக்கவில்லையா? எப்பொழுது வைக்க உத்தேசம்?" என்று கேட்டான்.
ஸ்ரீதருக்கு இக்கேள்வி ஒரு புதிராக இருந்தது. என்றாலும் சமாளித்துக் கொண்டு, "வேணு என்ன புதிர் போடுகிறாய்? ஒன்றும் விளங்க வில்லையே!" என்றான்.

"என்ன, தம்பியின் கல்யாணத்தைப் பற்றித்தான் பேசுகிறேன். அப்பாவைப் போன கிழமை கீரி மலையில் சக்கிடுத்தார் மடத்துக்குக் கிட்ட சிவன் கோவில் வீதியில் சந்தித்தேன். அப்பொழுதுதான் விஷயத்தைச் சொன்னார்" என்றான் வேணு கோபால்.

"என்ன விஷயம்? எனக்கொன்னும் தெரியாது வேணு. சொல்லு!"

"இல்லை. சக்கிடுத்தார் மடக்காரர் சுழிபுரம் கந்தப்பர் இருக்கிறாரல்லவா. அவரது மகளை உனக்கு முடிவு செய்திருக்கிறாராம். அம்பிக்கு இன்னும் அறிவிக்கவில்லையா?"

"இல்லையே"

"ஆனால் ஒன்று. உங்கள் வீட்டில் சம்பந்தம் செய்யும் அந்தஸ்து சுழிபுரம் கந்தப்பரைத் தவிர வேறு யாருக்கு இந்த இலங்கையில் இருக்கிறது? பணத்தைப் பொறுத்த வரையில் உங்கள் அப்பாவின் சொத்தில் பாதியாவது அவருக்கிருக்கிறது. உனது பாட்டனார் சேர். நமசிவாயமென்றால் பெண்ணின் பாட்டனார் கதிர்காமம் சேர் பாலசிங்கம். நீ இந்தக் கோவிலின் சொந்தக்காரனென்றால் கீரிமலை சக்கிடுத்தார் மடமும், கதிர்காமம் சேர் பாலசிங்கம் மடமும் அவர்களுக்கிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் நான் இரண்டு குடும்பத்துக்கும் சேவகம். இன்னொன்று நீ உங்கள் குடும்பத்துக்கு ஒரே வாரிசு. பெண் அவர்கள் குடும்பத்துக்கு ஒரே வாரிசு. அது மட்டுமல்ல, அவள் சீமை எல்லாம் சுற்றி டாக்டர் பட்டமும் பெற்று வந்திருக்கிறாள். போதாதா?" என்றான் வேணு கோபால்.

ஸ்ரீதர் பதிலொன்றும் பேசாமல் வேணுவை மேலும் பேசும்படி தூண்டிக் கொண்டிருந்தான்.

"இன்னும் தம்பிக்கு அப்பாவைத் தெரியும்தானே? இலங்கையில் கல்யாணம் செய்வதானால் கந்தப்பர் வீடொன்று தான் இருக்கிறதென்றும் இதை விட்டால் சேர் நமசிவாயத்தின் தம்பியார் செய்த மாதிரி, ஒரு வெள்ளைக்காரியைத்தான் தம்பி கல்யாணம் செய்ய வேண்டி வருமென்றும் அப்பா சொன்னார். மற்ற இடங்கள் எதுவுமே உங்கள் அந்தஸ்துக்குப் பொருத்தமில்லை என்பது அவர் முடிவு" என்று வேணு மேலும் பேசிக் கொண்டு போனான்.
ஸ்ரீதர் இப்பொழுது கதையை வேறு பக்கம் திருப்ப எண்ணி, "வேணு, கொழும்புக்கு ஏன் வந்தாய்? என்ன விசேஷம்?" என்று கேட்டான்.

"ஒன்றுமில்லை. நாளைக்கு வெள்ளவத்தை கிருப்பர் ராசதுரை வீட்டில் கல்யாணம். அதற்கு வந்தேன். ஆனால் கொழும்புக்கு வருகிற நேரத்தில் எங்களுடைய கோவிலை விட, எனக்குத் தங்குவதற்கு இடமேது? அது தான் இங்கே வந்திருக்கிறேன்" என்றான் வேணு.

அவன் இவ்வாறு பேசிக் கொண்டு நிற்க, பத்மா சண்டேசுரர் சந்நிதியை நோக்கிச் செல்வது தெரியவே வேணுவிடம் விடை பெற்றுக் கொண்டு அந்தத் திசையை நோக்கிச் சென்றான் ஸ்ரீதர்.

அங்கே காதலர்கள் சண்டேசுரர் காதில் பலமாகக் கைகளால் தட்டி நமஸ்காரம் செய்து விட்டுத் தனித் தனியாகப் புறப்பட்டுக் கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கிச் சென்றார்கள். பத்மா சண்டேசுரர் காதில் கைகளால் தட்டி வணங்கியது இதுவே முதல் தடவை. அது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. இன்னும் ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொண்டோமே என்ற திருப்தியும் அவளுக்கு ஏற்பட்டது.

கார் புறப்பட்டுச் சிறிது தூரம் சென்றதும் பத்மா ஸ்ரீதருடன் ஒட்டி உட்கார்ந்து கொண்டாள். "பதக்கத்தை அம்மனுக்குக் கொடுத்துவிட்டேன். இதோ ஐயர் கொடுத்த பூசைப் பொருள்கள். வாழைப்பழத்தில் பாதியைச் சாப்பிடுங்கள்" என்று கூறி வாழைப்பழத்தை உரித்து அவன் வாயண்டை பிடித்தாள். ஸ்ரீதர் வாழைப்பழத்தை முழுக்கச் சாப்பிடப் பார்த்தான். "முழுக்கச் சாப்பிட்டு விடாதீர்கள். எச்சில் துண்டு எனக்கு" என்று கூறிப் பாதியைத் தான் சாப்பிட்டாள் பத்மா.

அதன் பின் கன்னிப் பெண்களும், சுமங்கலிகளும் வெள்ளை, கறுப்பு துணிகளை உடுத்தக் கூடாது என்ற சிவ நேசரின் கருத்தைப் பத்மாவுக்கு எடுத்துக் கூறினான் ஸ்ரீதர்.

"அப்படியானால் பெளத்த பெண்கள் கோவிலுக்குப் போகும்போது வெள்ளைதானே உடுத்துகிறார்கள்?" என்றாள் பத்மா.

"அது அவர்கள் கலாசாரம். எங்கள் கலாசாரம் வேறு. அதை நீ எங்கம்மாவிடமிருந்து படித்துக் கொள்ள வேண்டும்" என்றான் ஸ்ரீதர்.

அதன் பின் நீண்ட நேரம் வரை அவன் பேசவில்லை. வேணு கூறிய விவரங்கள் அவன் மனதில் சலனத்தை ஏற்படுத்தியிருந்ததே அதற்குக் காரணம்.

பத்மாவோ தான் வெள்ளை உடுத்தியதுதான் ஸ்ரீதருக்கு கோபத்தை உண்டு பண்ணியிருக்கிறது. அதுதான் முகத்தை நீட்டிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணிக் கொண்டு பேசாமலிருந்தாள்.




[தொடரும்]



தொடர்நாவல்!
மனக்கண்
- அ. ந. கந்தசாமி-


[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ]

10-ம் அத்தியாயம்: நீச்சல் அழகி

அழகான யுவதி ஒருத்தி கண்ணைக் கவரும் பகட்டான நீச்சலுடையில் இளமையின் பூரிப்புடனும், சதைப் பிடிப்புடனும் விளங்கும் தனதுபெரும்பகுதியை வெளிக்காட்டியவண்ணம், சோவென்றும் காற்று வீசும் தென்றல் கூடலிலே கடற்கரை மணலில் தென்னங்குற்றி ஒன்றில் ஒயிலாக வீற்றிருக்க, அவளை நாகரிகமான காற்சட்டையும் பல வர்ண புஷ் சேர்ட்டும் அணிந்த இளமை ததும்பும் ஆடவனொருவன் கூர்ந்து கவனித்து வண்ண ஓவியமாக வரைந்து கொண்டிருப்பதைக் கண்ட யாருக்குத்தான் அதை நெருங்கிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஏற்படாது?

ஆனால் ஸ்ரீதரும் பத்மாவும் படமெழுதுவதற்காகத் தெரிந்தெடுத்திருந்த தென்னங்கூடல், கடற்கரைக் களியாட்டு விழா நடை பெற்றுக் கொண்டிருந்த கல்கிசை ஹோட்டல் பிரதேசத்துக்கு ஏறக்குறைய அரை மைல் தூரத்தில் இருந்ததால், அவ்வளவு அதிகமான பேர் அன்று அக் காட்சியைப் பார்ப்பதற்காக மொய்க்கவில்லை. கடற்கரைக்கு வந்திருந்தவர்களில் பெரும்பகுதியினர் களியாட்டப் பிரதேசத்துள் சுற்றிச் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததே இதற்குக் காரனம். பாட்டும் கூத்தும், குதூகலப் பேச்சும் ஆரவாரமாய்ப் பிரவகித்துக் கொண்டிருந்த களியாட்டு விழா அவர்களை முற்றாக ஆட்கொண்டிருந்தது. ஓரிருவர் மட்டுமே இதற்கு விதி விலக்காகக் கடற்கரையோரமாக உல்லாச நடை போட்டுக் கொண்டிருந்தனர். நீண்ட நேர ஆரவாரத்தாலும் ஜன சந்தடியாலும் ஏற்படும் அமுக்கத்திலிருந்து விடுபட்டு, பரந்த கடற்கரையில் வெண் மணல் விரிவிலே சுத்தமான பிராண வாயுவை உட்கொண்டு, ஓரளவு தனிமையை அனுபவித்தவண்னம் நீலக் கடலின் ஓங்கார கீதத்தை அமைதியாக செவிமெடுக்க விரும்பிய கலையுள்ளம் படைத்த மிகச் சிலரே அவ்வாறு கிளம்பி வந்தனர். அவ்வாறு கிளம்பி வந்தவர்களும் நீண்ட விழி நீச்சலுடை மோகினியையும், அவளைத் தூரிகையால் தீட்டிக் கொண்டிருந்த ஓவியனையும் தூரத்திலிருந்தவாறு பார்த்தார்களேயல்லாமால் நெருங்கி வந்து தொல்லை கொடுக்கவில்லை. இதற்குக் காரணம் அவர்களது பண்பு அல்லது நாசுக்கு மட்டுமல்ல. இப்படிப்பட்ட காட்சிகளைத் தாமாகத் தனித்துச் சென்று பார்க்கப் பலருக்கு இயற்கையாகவே ஒரு வெட்கம் இருக்கிறது. கூட்டத்தோடு கூட்டமாகத்தான் இவர்களால் இத்தகைய காட்சிகளைக் கூசாது பார்க்க முடியும். இன்னும் சிலருக்கோ பயம். படமெழுதிக் கொண்டிருக்கும் ஆஜானுபாகு அல்லது ‘தடியன்’ "என்ன ஏதோ கண்டறியாததைக் கண்ட மாதிரி வாயைப் பிளந்து கொண்டு நிற்கிறாய்?" என்று கேட்டு விட்டால் என்ன செய்வது என்ற அச்சம். மற்றும் சிலருக்கோ அந்தத் தடியன் தங்களை அடிக்கக்கூட வந்து விடலாம். வம்பில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம். இக் காரணங்களில் ஒன்றோ பலவோ எல்லாமோ சேர்ந்து, ஸ்ரீதர் பத்மா ஜோடிக்கு அன்று ஓரளவு சுதந்திரத்தை அக்கடற்கரையில் அளித்திருந்தது. இதனால் அவர்கள் இஷ்டம் போல் பேசவும் சிரிக்கவும், ஆறுதலாகத் தாம் நினைத்தது போல் படத்தை எழுதவும் வசதியாயிருந்தது. இருந்த போதிலும் ஒரு சில வேலையற்ற இளைஞர்கள் வாலிபத்தின் குறு குறுப்பால் உந்தப்பட்டு அங்குமிங்கும் நின்றும் நடந்தும் தாங்கள் அவதானிக்கப்படாமல் தாம் அவர்களை, முக்கியமாக ஸ்நான உடையணிந்து காற்றில் அலைந்து கொண்டிருந்த கேசத்தை கைகளால் அடிக்கடி ஒதுக்கி விட்டுக் கொண்டு சிரித்துப் பேசி நின்ற சிற்றிடைச் சிங்காரி பத்மாவை அவதானிக்கவே செய்தார்கள்.

அதிகார் அம்பலவாணரைப் பொறுத்தவரையில் அவர் எப்பொழுதுமே நாசுக்குக்குப் பெயர் பெற்றவர். சில சமயங்களில் சற்றும் நாகரிகமற்றவர் என்று மற்றவர்கள் சொல்லும்படியாகக் கூட அவர் நடந்துக் கொள்வதுண்டு. அவர் மனதில் ஓர் எண்ணம் தோன்றி விட்டால், அதை வெளியில் பேசுவது அழகா அல்லவா, என்பது பற்றி யோசிப்பதில் காலம் கடத்தாமல் படாரென்று அதை வெளியிலே பேசி விடுவது அவர் வழக்கம். பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் அவர் அப்படித்தான். விருந்துகளுக்குப் போனால், தமக்கு விருப்பமான பதார்த்தம் என்றால் நாகரிகம் பாராமல் அதை அப்படியே எடுத்து வாயில் போட்டு மென்று விடுவார். அப்படிப்பட்டவர், பத்மாவையும் ஸ்ரீதரையும் முன்னே கூறிய நிலையில் கண்டதும் அடக்க முடியாத அவாவுடன் அவர்களை நெருங்கிப் பார்க்க விரைந்து சென்றதில் ஆச்சரியமில்லையல்லவா?

அம்பலவாணர் அவர் மனைவி வள்ளியாச்சியுடன் களியாட்டுப் பிரதேசத்தில் கன்னியரும் காளையரும் கடலாடிக் களிப்பதைக் காலையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பின்னர் "வா டார்லிங்! கடற்கரையில் சிறிது நேரம் நடந்து விட்டு வருவோம். பிராண வாயு உடம்புக்கு நல்லது. அத்துடன், சிறிது நடப்பது உமது கொழுப்பையும் கொஞ்சம் கரைக்கும்" என்று கூறிக் கிளம்பி வந்த போதே ஸ்ரீதர்-பத்மா ஜோடியை அவர் கழுகுக் கண்கள் கண்டு பிடித்தன. அதிகாரி அவர்கள் தமது அன்பு மனைவியைத் தனித்திருக்கும் நேரங்களில் எப்போதும் "டார்லிங்" என்ற ஆங்கில வார்த்தையால் அழைக்கத் தவறுவதேயில்லை. அந்த வார்த்தையில் தம்பதிகள் இருவருக்கும் தனியின்பம்!அதிகாருக்கு வயது அறுபத்தைந்து. ஆனால் என்ன தான் வயதானவராயிருந்தாலும் இன்னும் அவருக்கு அழகுச் சுவை அதிகமாகத்தானிருந்தது. அதிலும் அழகான பெண்களைக் கண்டுவிட்டால் இன்றும் அவரால் திக்குமுக்காடாமல் இருக்க முடியாது. அப்படிப்பட்டவர் பத்மாவின் பேரழகைக் கண்டு பரபரப்படைந்ததைப் பற்றி யார் தான் வியப்படைவர்? இன்னும், இன்று பத்மா தன் முழு எழிற் கோலத்தில் நூற்றுக்கு தொண்ணூற்றைந்து பங்கையும் சற்றும் மறையாது வெளிக் காட்டிக் கொண்டல்லவா நிற்கிறாள்? அதிகாரி தமது சட்டைப் பைகளிலிருந்த வெள்ளி பிரேமிட்ட மூக்குக் கண்ணாடியை எடுத்து அதைத் துடைப்பதற்கென வைத்திருந்த விசேஷ கைக்குட்டையால் அதனைத் துடைத்து, தமது கண்களில் அணிந்து கொண்டார் மனைவி பக்கத்திலிருந்தாற் கூட, தாம் பார்க்க விரும்பிய ‘பொருளை’ அவர் சரிவர அவதானித்துப் பார்க்க நினைத்து விட்டாரானால் அவரை அவளாலும் தடுத்துவிட முடியாது. இளம் வயதில் அவர் மனைவி வள்ளியாச்சி இதற்காக அவருடன் பல தடவை சண்டை போட்டிருந்தாலும், இப்பொழுது இது பழம் பாடமாகி விட்டது. எந்தப் பெண்ணை எப்படி மூக்குக் கண்ணாடி போட்டுப் பார்த்தாலும் முடிவில் தான் கிழித்த கோட்டை அவர் மீற மாட்டார் என்பது அவளுக்கு நன்கு தெரியும்.

மூக்குக் கண்ணாடியைத் துடைத்து மாட்டிக் கொண்ட அம்பலவாணரின் கண்களுக்கு நல்ல விருந்து காத்துக் கிடந்தது. பத்மா அணிந்திருந்த இளம் பச்சை நிற நீச்சலுடை அவள் உடலோடு ஒட்டிக் கொண்டு அவளது மறைந்திருந்த அழகை எல்லாம் வெளியே வழிந்தெடுத்து ஒரு வட்டிலிலே கொட்டிக் காட்டுவது போல் காட்டிக் கொண்டிருந்தது. அந்தப் பேரழகை கண்டு அவ்வழகுக்குப் பழக்கப் பட்டுப்போன அவள் காதலனான ஸ்ரீதரனே அன்று திகைத்துப் போயிருந்தான். இவ்வளவு அழகும் அவளது ஆடைகளுக்குள்ளே எப்படி ஒளிந்திருந்ததோ என்று அதிர்ச்சியும் வியப்பும் அடைந்திருந்தான் அவன். இந்நிலையில்அப்பேரெழில், அதிகார் அம்பலவானரை ஒரு குலுக்குக் குலுக்கி விட்டதில் ஆச்சரியமென்ன?

நாம் அழகிகள் என்று நினைக்கும் பெண்களில் பலர், உண்மையில் பொருத்தமான ஆடைகளால் நமது அவலட்சணத்தை மறைப்பதில் சாமர்த்தியம் வாய்ந்தவர்கள மட்டும் தான், அவர்களின் உண்மையழகு எவ்வளவு என்பதை அவர்களை ஒரு நீச்சலுடையில் போட்டுப் பார்த்தால் தான் தெரியும்! பத்மாவோ அப்படிப்பட்ட அழகி அல்ல. உடைகள் அவள் அழகை வெளிக் காட்டுவதற்குத் தடையாக இருந்தனவே அல்லாமல், துணை புரியவில்லை. அவற்றைக் குறைக்கக் குறைக்க வளவளப்பான அவளது இயற்கை மேனி வெளியே தெரிய, அவள் அழகும் அதிகரித்தது.

பத்மா தன் ஒளி மயமான நீச்சலுடையில் ஒரு தங்கப் பதுமை போல் பிரகாசித்தாள். அவளது சிற்றிடை உருக்குப் போல் ஒடுங்கித் தோன்ற, அவளது எலுமிச்சம் பழ நிறக் கால்களும், வாளிப்பான பொற்றோள்களும் பரிசுத்தமாக விளங்கிய கழுத்தும் வெறுமையாகத் தோன்றிக் காண்பவர் கண்களைப் பறித்தன. அவளது முகிற் கூந்த தோள் வழி தவழ்ந்து வந்து, அவளது கீற்றுப் போல் விளங்கிய அவளது சின்னஞ் சிறு செந்துவர் வாய்க்கருகாமையில் அவளது மாம்பழக் கன்னங்களில் அவளது வழமையான புன்னகைச் சுழி உயிர் பெற்று விளையாடியது. பளபளவென்று ஒளி வீசிய அவள் நீண்ட கண்களோ மின்வெட்டுப் போல் வெட்டிக் கொண்டிருந்தன.

உண்மையில், அதிகார் அம்பலவாணர் அவளைப் பார்த்ததும் அவளை மட்டுமே தான் பார்க்கலானார். பக்கத்திலிருந்த ஆடவன் நினைவு அவருக்கு அற்றுப் போயிற்று. அவர் மனதில் முதலில் எழுந்த நினைவு அவள் சிங்களப் பெண்ணா அல்லது தமிழ்ப் பெண்ணா என்பதுதான். அந்தப் பிரச்சினயை அவளைப் பார்த்துத் தீர்த்துக் கொள்ள முடியாது போகவே, படம் வரைந்துக் கொண்டிருந்த அவளது தோழனைப் பார்த்தாவது அதனைத் தீர்க்க முயல்வோம் என்று அவர் தன் கண்களை ஸ்ரீதர் மீதிட்டதும், "ஆ! இது சிவநேசர் மகன் ஸ்ரீதரல்லவா?" என்று திகைத்து விட்டார் அவர்.

ஸ்ரீதரோ அதிகாரி அம்பலவாணரைக் கண்டதும் கூடிய வரை முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டு படத்தைத் தீட்டுவதில் தன்னை முற்றாக மறந்தவன் போல் நடித்துக் கொண்டிருந்தான். பத்மாவுக்கோ என்ன செய்வதென்றே தோன்றவில்லை. தன்னைச் சிறிதும் கூச்சமின்றி அங்கமங்கமாய்ப் பிய்த்துப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த தலைப்பாகைக் கிழவனின் பரந்த பொட்டு வைத்த முகத்தையும், கொழுத்த உடலோடு அவருக்கு பக்கத்தில் பூதாகாரமாகக் காட்சியளித்த அவர் மனைவியின் வால் வைத்த "கொர நாட்டுச்" சேலையையும் அவளது கழுத்தை இறுக்கிய தங்க அட்டிகையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு மெளனமாக உட்கார்ந்திருந்தாள் அவள். இடையிடையே செல்லமாகத் தன் செவ்விதழ்களைக் குவிப்பதும் விரிப்பதுமாக அவள் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அம்பலவாணர் ஸ்ரீதரை யாரென்று அடையாளம் கண்டு கொண்டதும் படாரென்று "தம்பி ஸ்ரீதர்! என்ன எங்களை அடையாளம் தெரியவில்லையா? எப்படிச் சுகம்?" என்று முக மலர்ச்சியோடு கேட்டார்.
வள்ளியாச்சியும் "ஓ எங்களுடைய சேர் நமசிவாயத்தின் பேரன் ஸ்ரீதரல்லவா இது? சிவநேசரின் மகன்" என்று ஆச்சரியந் தாங்காமல் கூறினாள்.

ஆனால் ஸ்ரீதரோ அவர்கள் பேச்சுத் தனக்குப் புரியாதது போல "என்ன? என்னை உங்களுக்குத் தெரியுமா? என்னுடைய ஊர் உடுவில். நான் சிவநேசர் மகனல்ல. சின்னப்பா வாத்தியாரின் மகன்" என்று சாவதானமாகக் குறிப்பிட்டான்.

பத்மா திகைத்துப் போய் விட்டாள். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்றாலும் சிரிப்பு வந்தது. ஆனால் அதனை ஒருவாறு அடக்கிக் கொண்டாள். அம்பலவாணரோ அப்படியே அசந்து போய் விட்டார். மூக்குக் கண்ணாடியை மீண்டும் ஒரு முறை துடைத்து மாட்டிக் கொண்டு ஸ்ரீதரை உற்றுப் பார்த்தார். வள்ளியாச்சி புன்னகையோடு, "என்ன தம்பி, பொய் சொல்கிறீர்கள்! நீங்கள் வந்து... பயபடுகிறீர்கள் போலே" என்றாள்.

ஸ்ரீதர் வள்ளியாச்சியை முகத்தை நிமிர்த்தி ஒரு தரம் பார்த்துவிட்டு, "என்ன? நீங்கள் சொல்வது விளங்கவில்லையே! நான் எதற்குப் பயப்பட வேண்டும்? யாருக்கு? இங்கு சிங்கம், புலி, கரடி போன்ற மிருகங்கள் எதையும் நான் காணவில்லையே. நடுப் பகல் நேரமானால் பேய், பிசாசு, பூதங்களைக் கூட இங்கு காணவில்லையே!" என்றான்.

"வந்து... வந்து... நாங்கள், தம்பி இங்கே செய்கிறதை அப்பாவிடம் சொல்லி விடுவோமோ என்று பயப்படுகிறீர்கள்."

"நான் என்ன அப்படிப் பயப்படும்படியான காரியத்தைச் செய்கிறேன்? கொலை, களவு எதையும் நான் இங்கு செய்ய வில்லையே! படம் வரைந்து கொண்டிருக்கிறேன். படம் வரைவதற்கு யாரும் பயப்பட வேண்டுமா?" என்றான்.

"இல்லை வந்து.. வந்து.." என்று மேலும் இழுத்தாள் வள்ளியாச்சி.

"நான் படம் வரைவது அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். உண்மையில் அவரது படத்தைக் கூட அவர் இருப்பதிலும் பார்க்க அதிகம் அழகாகவே அவரது பெரிய தலைப்பாகையுடன் நான் வரைந்திருக்கிறேன். நீங்கள் கூட அதை வீட்டில் பார்த்திருப்பீர்கள். இது "என் மகன் வரைந்த படம்" என்று வாறவர் போறவர் எல்லாருக்கும் அதை அவர் காட்டுவது வழக்கம்." என்று ஸ்ரீதர் பதிலளித்தான். அவர்களிடம் பொய் சொல்வதில் பலனில்லை என்று அவனுக்குத் தெரிந்து விட்டது.

அதிகார் அம்பலவாணர் பத்மாவின் மேல் வைத்த தம் கண்களை வலிந்திழுத்து அவற்றைச் ஸ்ரீதர் மீது செலுத்திய வண்ணம், "அப்போது நீங்கள் சிவநேசரின் மகன் தான். தம்பி சரியான பகடிக்காரன் போல் தெரிகிறது!" என்று கூறிச் சிரித்தார். அவன் தோள்களைத் தம் கைகளால் பிடித்துத் தட்டினார்.

இதற்கிடையில் வள்ளியாச்சி பெரிய கேள்வி ஒன்றைத் தூக்கிப் போட்டுவிட்டாள். "தங்கச்சி யார்?" என்பதே அது. அப்படி அவள் கேட்டதும் சமாளித்துக் கொண்டு "உண்மையில் எனக்கு இந்தத் தங்கச்சி யாரென்பது தெரியாது. ஒரு "வட இந்தியப் பெண்ணாம். பணக்காரி. தன்னைப் படமெழுதிக் கொடுத்தால் ஆயிரம் ரூபா தருவதாகப் பேசி என்னைப் படம் எழுதும் படி கேட்டாள். அது தான் படமெழுதிக் கொண்டிருக்கிறேன். அவள் பெயர் "பத்மா பரமானந்த்." அவள் தகப்பனார் கொழும்பிலே பெரிய ஜவுளிக் கடை வைத்திருக்கிறாராம். என்றாலும் துணி விலை அதிகம் என்பதாலே தனது மகளுக்கு மிகவும் குறைவாகவும் சிக்கனமாகவும் தான் உடைகளை உடுக்க வேண்டுமென்று அவர் புத்திமதி சொல்லிக் கொடுத்திருக்கிறாராம். பெண்ணும் புத்திசாலிதான். அதனாலேதான் இந்தச் சின்னஞ் சிறு ஸ்நான உடையை அவள் அணிந்திருக்கிறாள்!" என்று வேடிக்கையாகக் கூறினான் அவன்.

அதிகாரும் வள்ளியாச்சியும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பத்மாவுக்கும் அடக்க முடியாத சிரிப்பு. ஆனால் ஸ்ரீதரோ அவளைப் பார்த்து, "சிரிக்காதே" என்று மிகவும் கண்டிப்பாகத் தனது கண்ணால் ஜாடை காட்டிக் கொண்டிருந்தான் என்றாலும் அவளால் சிரிக்காதிருக்க முடியவில்லை. இடையைக் கைகளால் தாங்கிக் கொண்டு துடி துடித்துச் சிரித்தாள் அவள். "ஐயோ... ஐயோ..." என்று பெருமூச்சு வாங்கவும் செய்தாள்.

இப்படி அவர்கள் அவிட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருக்க, கடற்காற்றில் அவர்களது நகையொளியின் கிண்கிணி நாதம் கலந்து கொண்டிருக்க, மேலே வானத்திலே இடியேறு போல் ஓவென்று சீறி முழங்கிக் கொண்டு பதிவாகப் பறந்தது ஓர் "ஏயர் சிலோன்" விமானம். விநாடிக்கு விநாடி அதிகரிக்கும் ஓசையோடு மின்னல் வேகத்தில் "விர்"ரென்று பறந்து, மறைந்து, மீண்டும் தோன்றிப் பறந்த இவ்விமானத்தைக் கண்டதும் சிரிப்பை நிறுத்தி எல்லோரும் ஆகாயத்தைப் பார்க்கலானார்கள். முழுக் கல்கிசைக் கடற்கரையும் ஆகாயத்தை நோக்கியது. களியாட்டக்காரர்களெல்லரும் வானத்தை நோக்கினர். கடலில் நீந்திக் கொண்டிருந்தவர்களும் நீச்சலை நிறுத்தி அண்ணாந்து பார்த்தனர். அதிகார் அம்பலவாணர் கூட பத்மாவின் அழகுடலைப் பார்ப்பதை நிறுத்தித் தமது மூக்குக் கண்ணாடிக் கூடாக விண்வெளியைப் நோக்கலானார்.

அப்பொழுது விமானத்திலிருந்து பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் என்ற வர்ணங்களில் நோடீசுகள் மழைபோல் பொழிய ஆரம்பித்தன. ஒரு புறம் ஒரு சப்பாத்துக் கம்பெனியின் விளம்பரத்தைத் தாங்கிய அந்த நோட்டீசுகளின் மறுபுறத்தில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது.


நீச்சலழகிப் போட்டி
களியாட்ட வீரர்களே! இப்பொழுது மணி சரியாக மு.ப. 11.30. நண்பகல் 12 மணிக்கு நீச்சலழகியைத் தெரிந்தெடுக்கும் நடுவர்கள் அழகிகளைப் பொறுக்க அலையோரம் வருவார்கள். அவர்களுடன் ஒத்துழைக்கும்படி எல்லாக் கணவான்களையும் சீமாட்டிகளையும் நாம் கேட்டுக் கொள்ளுகிறோம். 2 மணிக்கு நீச்சலழகிப் போட்டி கல்கிசை ஹோட்டல் நந்தவனத்தில் நடைபெறும். முதலிடம் பெறும் நீச்சல் ராணிக்கு ரூபா 1000 பரிசு வழங்கப்படும். -இப்படிக்கு-கொழும்பில் டைகர் கிளப்

ஸ்ரீதர் ஓடிச் சென்று இந்த நோட்டீசுகளில் ஒன்றைக் கைப்பற்றினான். ஆனால் அதற்கு முன்னரே அதிகார் அம்பலவாணர் ஒரு நோட்டீசைப் பிடித்துவிட்டதோடு, அதில் சொல்லப்பட்ட நேரம் சரியா என்பதைத் தமது கைக் கடிகாரத்துடன் ஒப்பிட்டுக் கொண்டிருந்தார். அதன்பின் பத்மாவை நெருங்கி "உண்மைதான். சரியாக 11.30 மணி தான் இப்போது" என்று குறிப்பிட்டார். பத்மா பதிலுக்கு ஒன்றும் பேசாது தன் அரிசிப் பல் வரிசையை இலேசாகக் காட்டிச் சிரித்து விட்டு "ஸ்ரீதர்! வாருங்கள். படத்தை இவ்வளவுடன் நிறுத்திக் கடலில் குளிக்கப் போவோம்" என்று கூறினான். ஸ்ரீதரும் "ஆகட்டும்" என்று கிளம்பினான்.

பத்மா தென்னங் குற்றியிலிருந்து துள்ளி எழுந்து தன் தலைமயிரைச் சரி செய்தான். மண்ணில் கால்களை அகல ஊன்றிக் கொண்டு கீழே குனிந்து தன் இடக் காலில் முழந்தாளுக்குச் சமீபமாக மெல்ல ஊர்ந்து மேலேறிக் கொண்டிருந்த எறும்பொன்றைத் தன் செவ்விரல்களால் பிடித்தெடுத்த ஸ்ரீதரிடம் "இதை உங்களைக் கடிக்க விடவா?" என்று சிரித்துக் கொண்டு கேட்டாள்.

அதன் பின் பின்புறமாகத் திரும்பி நின்று கொண்டு தென்னங்குற்றியில் வீற்றிருந்ததால் நீச்சலுடையின் பின்புறத்தில் ஒட்டிக் கொண்டிருந்த மணலைத் தன் இரு கரங்களாலும் மெல்லத் தட்டினாள். பின்னர் தனது கழுத்தை உயர்த்தித் தலையைத் திருப்பிப் புருவங்களை உயர்த்திக் கண்களை இயன்ற வரை கீழ் நோக்காகப் பின்னால் செலுத்தி இன்னும் மணல் ஒட்டிக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு மேலும் ஓரிரு தடவை மணல் முற்றிலும் போகும்படியாகக் கையால் மணல் படிந்திருந்த இடத்தைத் தடவி விட்டாள். மணல் சொரசொரவென்று கொட்டியதும் மணல் படிந்திருந்ததால் ஒளி குன்றியிருந்த அவளது இளம்பச்சை நீச்சலுடையின் அப்பாகம் மீண்டும் ஒளி வீசியது!

ஸ்ரீதரோ அவள் செயலெதையும் இலட்சியம் செய்யாது படத்தில் பிரஷால் ஏதோ செய்து கொண்டிருந்தாள். ஆனால் அதிகார் அம்பலவாணரோ கண்ணாடியை நன்கு அணிந்துகொண்டு அவள் பின்னழகை இரசிப்பதில் மூழ்கியிருந்தார். அப்போது அவரது கழுகுக் கண்களுக்கு அவள் முதுகில் ஓர் எறும்பு ஏறிக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனே "அதோ அதோ எறும்பு-முதுகில்" என்றார் பதைபதைத்து. பத்மா அவளது முகிற் கூந்தல் குதிரையின் பிடரி மயிர் போல் துள்ளி அசையப் படக்கென்று தன் தலையைப் பின்னே திருப்பினாள். அவர் எறும்பைத் தட்டி விடுவதற்கு முன்னர் அவளாகவே அதைத் தட்டிவிட்டுக் கொண்டாள்.

வள்ளியாச்சி அதிகாரை ஒரு முறை தன் கண்களால் முறைத்துப் பார்த்தாள். ஆனால் அதிகாரா அதை இலட்சியம் செய்பவர்? பத்மாவின் உடலில் இன்னும் எறும்புகளிருந்து அவளது மெல்லுடலைக் கடித்துவிட்டால் என்ன செய்வது என்றஞ்சி அவர் தம் மூக்குக் கண்ணாடியால் மேலும் எறும்புகள் அவள் உடலிலோ நீச்சலுடையிலோ நடமாடுகின்றனவா என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரீதர் படத்தில் தான் செய்து கொண்டிருந்த வேலையை முடித்ததும் அதிகார் அம்பலவாணரிடமும் வள்ளியாச்சியிடமும் "ஹோட்டலில் இரண்டு மணிக்கு உங்களைச் சந்திக்கிறேன்" என்றான். அவ்வாறு கூறிக் கொண்டே பத்மாவிடமும் ஓவியப் பொருள்களை எல்லாம் எடுத்துக் காருக்குக் கொண்டு போகும்படி சொன்னான். அத்துடன் தானும் சில பொருள்களைத் தூக்கிக் கொண்டு கடற்கரை ரெயில் பாதையின் மறு புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் காரை நோக்கி நடந்தான் அவன். சில நிமிஷங்களில் அவன் அங்கிருந்து தனது செந்நிற ஸ்நான உடையில் பத்மாவுடன் கடலை நோக்கி மீண்டும் வந்த பொழுது பத்மா இவ்வுலகில் இல்லை. முதன் முதலாக ஸ்ரீதரை வெறும் மேலுடன் அவள் கண்டது இதுவே முதல் தடவை. பொன் போன்ற அவன் பூரித்த தேகமும், கன்னங்கரேலென்ற அவன் நெஞ்சின் அடர் மயிரும் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டன. தன் காதலனின் கட்டழகிலே அவளுக்குத் தாங்கொணாத பெருமை. அர்ச்சுன ராஜன் பக்கத்தில் நின்ற அல்லிராணி கூட அவ்வளவு பெருமைப்பட்டிருப்பாளோ என்னவோ? கடற்கரையில் இவ்வளவு ஆட்கள் மட்டுமில்லாவிட்டால் ஸ்ரீதரின் பரந்த நெஞ்சைத் தன் இரு கரங்களாலும் ஆசை தீரத் தடவி மகிழ்ந்திருக்கலாமே என்று எண்ணினாள் அவள். அவன் நெஞ்சின் மயிர்களுள் தனது விரல்களை மறைக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

கடலில் குளிக்க வேண்டுமென்று பத்மா வெறுமனே மனதால் ஆசைபட்டாளே தவிர, கடலலைகளுக்குச் சமீபமாகச் சென்றதும், கடலில் இறங்க அச்சமேற்பட்டு விட்டது அவளுக்கு. உண்மையில் அவள் கடலில் இறங்கி நீராடிச் சுமார் பத்து வருடங்களாவது இருக்கும். கொலீஜ் ரோட்டிலிருந்து சுமார் ஒன்றரை மைல் துரத்திலிருந்த முகத் துவாரம் சங்கமுகக் கடலில் அவள் தந்து சிறு வயதில் சில தோழிகளுடன் நீராடி இருக்கிறாள். அப்போது அவளுக்கு நீச்சலுடை என்று ஒன்று இருப்பது கூடத் தெரியாது. மேற்சட்டையைக் கழற்றிவிட்டுத் தொள தொளவென்ற பாவாடையை நெஞ்சுக்கு மேல் உயர்த்திக் குறுக்குக் கட்டாகக் கட்டிக் கொண்டு அன்று நீராடியதற்கும், இன்றைய கல்கிசை நீராட்டத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்? உடலை இதமாக இறுக்கிக் கொண்டிருக்கும் நீச்சலுடையில் மேல்நாட்டு நங்கையர் போல ஆணழகன் ஒருவனுடன் ஒரு நாள் இப்படி உல்லாசமாகக் கடலாடும் வாய்ப்புத் தனக்கு வரும் என்று கூட அப்பொழுது அவள் எண்ணியிருக்க முடியுமா? அவள் பெரிய பிள்ளையாகி ஒரு சில மாதங்களில் ஒரு சினிமா படத்திற்குப் போன போது தான் முதன் முதலாக நீச்சலுடைச் சிங்காரிகளை அவள் அப்படத்தில் பார்த்தாள். அதன் பயனாக அன்றிரவு வெகு நேரம் வரை அவளுக்கு நித்திரை வரவில்லை. தானும் நீச்சலுடை அணிந்துக் கொண்டு எங்கெங்கோ போய் வருவது போலவும் பல ஆடவர்கள் தன்னைத் தொடர்ந்து திரிந்து மொய்த்துக் கொண்டிருப்பது போலவும் மனத் திரையில் பகற் கனவுகள் தோன்றித் தோன்றி வந்து கொண்டிருந்தன. அவர்களில் ஒரு சிலருடந்தான் உல்லாசமாகப் பேசி மகிழ்வது போலவும் மற்றும் சிலரை ஏசி விரட்டுவது போலவும் காட்சிகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இந்தப் பகற் கனவு அனுபவம் அன்றிரவோடு முடிவடைந்து விடவில்லை. அன்று ஆரம்பித்த இக்கனவுகள் பின்னர் அடிக்கடி அவள் நேரத்தைப் பிடிக்க ஆரம்பித்தன. ஓய்வு நேரங்களிலெல்லாம் கட்டிலிலே படுத்துக் கண்ணை மூடிக் கொண்டு தானாகவே வலிந்து பகற் கனவு காணும் பழக்கத்தை மேற் கொண்டாள் அவள். இந்தப் பழக்கம் ஒரு நாள் கொள்ளுப்பிட்டிக் கடற்கரையில் அவள் நேரில் சில பெண்கள் நீச்சலுடையில் குளித்துக்கொண்டிருப்பதைக் கண்டதால் மேலும் வலுப்பெற்றது. உள்மனதின் ஆசையில் பிறந்த இக்கனவு எவ்வளவு சீக்கிரமாகவும் இலகுவாகவும் இன்று நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இவை எல்லாம் வெறும் கனவாகவே முடியும் என்று தான் அவள் எண்ணியிருந்தாள். ஆனால் அவை இப்பொழுது உண்மையாகவல்லவா நடந்து கொண்டிருக்கின்றன? பத்மாவால் அன்று காலையிலிருந்து நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகளை உண்மை என்றே நம்ப முடியவில்லை. ஏதோ சினிமாப் படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரமைதான் அவளுக்கு ஏற்பட்டது. வாழ்க்கை இவ்வளவு இனிமையானதா என்று ஆச்சரியப்பட்டாள் அவள்.

தண்ணீரில் இறங்க அஞ்சிய பத்மாவை ஸ்ரீதர் "பயப்படாதே பத்மா! நான் உனக்கு நீந்தப் பழக்குகிறேன். இறங்கு" என்று பல தடவை சொல்லியும் அவள் கேட்காமல் போகவே, ஸ்ரீதர் அவளை முரட்டுத்தனமாகத் தன் கரத்தால் பற்றித் தண்ணீருள் இழுத்துச் சென்று விட்டான். முதலில் பத்மா இதனை எதிர்த்துச் சிணுங்கிக் கூச்சலிட்ட போதிலும், பின்னால் சிரித்த முகத்துடன் அவன் தோள்களைப் பற்றிக் கொண்டு, "எனக்குப் பயமாயிருக்கிறது! நீந்தச் சொல்லித் தாருங்கள்" என்று உற்சாகமாகச் சப்தமிட்டாள்.

ஸ்ரீதரும் அவளுக்கு நீச்சற் கலையைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினான். பத்மாவும் வெகு விரைவாகவும் கவனமாகவும் அவன் சொல்லிக் கொடுத்தபடி நீந்தும் கலையைக் கற்க ஆரம்பித்தாள். ஸ்ரீதர் நீந்துவதை முறையாக ஒரு நீச்சல் வாத்தியாரிடம் கற்றிருந்தபடியால் பத்மாவுக்கு நீந்தச் சொல்லிக் கொடுப்பது அவனுக்குக் கஷ்டமாக இருக்கவில்லை. பத்மாவோ வெகு விரைவில் நீந்தத் தொடங்கி விட்டாள். எவரும் தான் ஆசைப்படும் எதையும் மிகவும் விரைவில் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு அவள் நீந்தக் கற்ற வேகம் நல்ல நிரூபணமாய் இருந்தது.

"பத்மா, நீ மிகவும் கெட்டிக்காரி. நீ நீச்சலை விரைவாகக் கற்கும் வேகத்தைப் பார்த்தால் சில நாட்களில் நீ மீன்களை விட நன்றாக நீந்தத் தொடங்கி விடுவாய்!" என்றான் ஸ்ரீதர்.

"அப்படித்தான் என் வேலை எல்லாம்! என்ன நீனைத்தீர்கள் பத்மாவைப் பற்றி? எதில் ஈடுபட்டாலும், அதை விரைவில் பயின்று விடுவேன். அப்பா கூட என்னை அப்படிச் சொல்லி மெச்சியிருக்கிறார்." என்றாள் பத்மா பெருமையாக.

"நிறுத்து. நீ நீந்தப் பழகியது உன்னுடைய கெட்டித்தனமல்ல. வாத்தியார் ஸ்ரீதர் நன்றாகச் சொல்லிக் கொடுத்தார். அதுதான் மாணவி இவ்வளவு விரைவில் கற்றுக் கொண்டாள்" என்றான் ஸ்ரீதர்.

"ஆனால் மாணவி மக்காய் இருந்தால் எப்படிக் கற்றுக் கொள்ளுவாளாம்" என்றாள் பத்மா. இவ்வாறு கூறிக் கொண்டே கைகளையும் கால்களையும் ஸ்ரீதர் சொல்லிக் கொடுத்த பிரகாரம் முறையாக அசைந்து நீரின் மேல் மிதந்தாள் பத்மா. பின்னர் நீச்சலை நிறுத்தி விட்டு அவன் தோள்களை ஆசையோடு கட்டிக் கொண்டாள் அவள்.

அதிகார் அம்பலவாணரும் வள்ளியாச்சியும் அவர்களின் உல்லாசக் கோலத்தைத் தூரத்திலே நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். வள்ளியாச்சிக்கு ஸ்ரீதர் - பத்மாவின் போக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. "பாருங்கள் ஸ்ரீதராவது பரவாயில்லை. அந்தப் பெண்ணுக்குத் தான் கொஞ்சமும் வெட்கமேயில்லை. தேகமெல்லாம் தெரியும் நீச்சலுடை. அவனும் அப்படி. இந்த நிலையில் அந்த முத்தின குமரி எப்படி அவனைக் கட்டிப் பிடித்துக் கொட்டம் போடுகிறாள். பாருங்கள்!" என்றாள் எரிச்சலுடன்.

அம்பலவாணர் புன்னகை பூத்தார். சமீப காலமாக அவர் தமிழிலக்கியப் படிப்பில் ஈடுபட்டிருந்ததால் பழைய காலத்து நீர் விளையாட்டைப் பற்றியும் புகார் நகரத்து இந்திர விழாவைப் பற்றியும் கூற ஆரம்பித்தார் அவர்.

"உனக்குத் தெரியுமா டார்லிங். சிலப்பதிகாரத்திலே இந்திர விழா என்று ஒன்று வருகிறது! இந்திர விழாவென்றால் என்ன? - ’பீச் கார்னிவல்’, கடற்கரைக் களியாட்டு. இந்த டைகர் கிளப் இன்று நடத்துகிற களியாட்டு மாதிரி. அன்று அரசர்கள் ஆதரவில் நடந்த பீச் கார்னிவல் அது. அதில் முக்கிய வைபவம் இன்று இங்கு நடப்பது போலக் கன்னியரும் காளையரும் கடலாடுவதுதான். கடலாடு காதையில் கோவலனும் மாதவியும் இந்திர விழாவுக்குப் போனது சொல்லப்பட்டிருக்கிறது. எங்களுடைய ஸ்ரீதரையும் இந்தப் பெட்டையையும் போல அன்றைக்கும் எத்தனை ஜோடிகள் இப்படிக் கும்மாளமடித்ததோ யாருக்குத் தெரியும்?"

"ஆம் கழிசடை வேலைகளுக்கு இந்தக் காலம் அந்தக் காலமென்று இருக்குதா? நடந்திருக்கும்" என்றாள் வள்ளியாச்சி.

"என்ன அப்படிச் சொல்கிறாய் டார்லிங்! நீ மறந்திட்டாயா, நாங்கள் இங்கிலாந்துக்குப் போனபோது அங்கே பிரைட்டன் கடற்கரையில், ஈர மணலில், ஸ்நான உடையில்..."

வள்ளியாச்சி அதிகாரைக் கடைக் கண்னால் பார்த்துவிட்டுச் சிரித்தாள். "அதை ஏன் இப்போது ஞாபகமூட்டுகிறீர்கள்? அப்படியானால் வாருங்கள். நாங்களும் ஜோடியாக தண்ணீரில் இறங்குவோம்"

அம்பலவாணருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. புன்னகை செய்து கொண்டே கம்ப ராமாயணத்திலிருந்து நீர் விளையாட்டைப் பற்றிய ஒரு பாட்டை எடுத்து விட்டார்.

"தாளையே கமலத்தாளின் மார்புறத் தழுவுவாரும்
தோளையே பற்றி வெற்றித் திருவெனத் தோன்றுவாரும்
பாளையே விரிந்ததென்னப் பாந்தநீர் உந்துவாரும்
வாளைமீன் உகள அஞ்சி மைந்தரைத் தழுவுவாரும்"
என்று இப்படிப் போகிறது பாட்டு. பொருளென்ன தெரியமா? சில பெண்கள் தமது தலைவர்களின் மார்பைத் தழுவுகிறார்களாம். இன்னும் சிலர் தோள்களைத் தழுவுகிறார்கள். மற்றும் சிலர் தண்ணீரைக் கமுகம் பாளை போல் விரியும்படி எற்றி விளையாடுகிறார்கள். ஒரு சில பெண்கள் வாளை மீன்களைக் கண்டு பயந்து தம் காதலரைக் கட்டிக் கொள்கிறார்களாம். தோளையே பற்றி வெற்றித் திருவெனத் தோன்றுவாரும்- என்பது இப்பொழுது நீ கண்ட காட்சியைத் தான். அதாவது அந்தப் பெட்டை ஸ்ரீதரின் தோளைப் பிடித்துக் கொண்டு ஆடிய ஆட்டத்தைத் தான் குறிக்கிறது. தோளைப் பற்றிக் கொண்டு இலட்சுமி போல் தோன்றினார்களாம். பல பெண்கள், நீர் விளையாட்டின் போது, நீர் விளையாட்டுப் படலத்தில் வருகிறது. கம்பர் பாடியிருக்கிறார்" என்று பேசிக் கொண்டே போனார் அதிகார்.

இதற்கிடையில் பத்மாவும் ஸ்ரீதரும் கடலாடிய அலுப்பு நீங்க, கடற்கரை மணலுக்கு ஓடி வந்து மணலில் சிறிது சாய்ந்தனர். நிலத்தோடு நிலமாக மணலில் வீழ்ந்து கிடந்தமை பத்மாவுக்கு மிருகங்கள் அனுபவிப்பது போன்ற ஒரு புதுமையான உடலின்பத்தைத் தந்தது. அதில் மெய் மறந்த பத்மா, "ஸ்ரீதர் டார்லிங்! நாங்கள் என்றுமே இப்படி இன்பக் கடலிலே திளைத்திருப்போமா?" என்று போதை நிறைந்த குரலில் கேட்டாள்.

"சந்தேகமா? நாம் எப்பொழுதும் இப்படித்தான் இருப்போம்" என்று முனகினான் ஸ்ரீதர்.

இவ்வாறு அவர்கள் தம்மை மறந்து இருந்த வேளையில் விமானத்திலிருந்த வீசப்பட்ட நோட்டீசில் கூறப்பட்ட பிரகாரம் நீச்சலழகி ஆரம்பத் தேர்வு நீதிபதிகள் கிளம்பி வந்து கொண்டிருந்தார்கள். ‘புல் சூட்’ அணிந்திருந்த அவர்களின் கோட்டில் காகிதத்தில் அச்சிடப்பட்ட புலிப் படமும் ‘டைகர் கிளப்’ என்ற ஆங்கில வார்த்தைகளும் காணப்பட்டன.

அவர்கள் ஸ்ரீதர் - பத்மா ஜோடியைக் கண்டதும் தம் முன் ஏதோ பேசிவிட்டு அவர்களை நோக்கி வந்தார்கள். அந்த நடுவர்களில் ஒருவர் ஸ்ரீதரைப் பார்த்துவிட்டு "எவ்வளவு அழகான ஜோடி! உம்முடைய தோழி நிச்சயம் முதற் பரிசைப் பெறுவார். அவர் கட்டாயம் நீச்சலழகிப் போட்டியில் பங்குபற்ற வேண்டும். உங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள்." என்றார்.

ஸ்ரீதர் திடுக்கிட்டுவிட்டான். பத்மாவும் அப்படியே. என்ன சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. இருந்த போதிலும் பத்மாவைப் பொறுத்த வரையில் அவள் எதற்கும் தயாராகவே இருந்தாள். சிறு வயதிலிருந்தே எந்தப் புதிய நாகரிகச் செய்கையையும் செய்து பார்ப்பதில் அவளுக்கு ஆசை. தலை மயிரைக் கூடக் குட்டையாக வெட்டி "பொப்’ செய்து கொள்ள வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள். ஆனால் சந்தர்ப்ப சூழல்கள் சரியாக வாய்க்க வேண்டுமே? நீச்சலுடைகளைப் பொறுத்த வரையில் சந்தர்ப்ப சுழல்கல் சரியாக வாய்த்துவிட்டன. இப்பொழுது அதைத் தொடர்ந்து அழகு ராணிப் போட்டிக்கும் சந்தர்ப்பம் வந்து வாசலில் தட்டுகிறது. இருந்தாலும் பெண்மைக்கு இயற்கையான நாணமும், ஸ்திரீகளுக்கே இயற்கையான சாகசமும் அவளை அவளது சம்மதத்தை உடனடியாகத் தெரிவிக்கக் கூடாதென்று தடுக்கின்றன. ஆகவே தனக்கு அப்போட்டியில் பங்குபற்றச் சிறிது கூடவிருப்பமில்லை என்பது போன்ற ஒரு குறிப்பை முகத்தில் படர விட்டு, மெளனமாயிருந்தாள் அவள்.

நடுவர்களில் ஒருவர் மீண்டும் ஸ்ரீதரைப் பார்த்து "உண்மையில் உங்கள் தோழி முதலிடம் பெறுவது நிச்சயம். நீங்கள் தான் அவரைப் போட்டியில் பங்குபற்ற வற்புறுத்த வேண்டும்" என்றார்.

ஸ்ரீதர் பத்மாவை நோக்கி "பத்மா! நீ என்ன சொல்கிறாய்" என்று கேட்டான். அவளோ பதிலுக்கு "முடியாது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டாள். அவள் பேசிய தோரணையில் பத்மாவுக்குப் போட்டியில் பங்குபற்ற ஆசைதான் என்பது ஸ்ரீதருக்குப் புரியவில்லை.

என்றாலும் ஸ்ரீதர் சிறிது நேரம் யோசித்துவிட்டு நடுவர்களிடம் "போட்டி இரண்டு மணிக்குத்தானே? அதற்கிடையி எங்கள் முடிவை அறிவிக்கிறோம். சிறிது யோசிக்க அவகாசம் தாருங்கள்." என்றான். அவர்களோ "இதில் என்ன யோசிக்க இருக்கிறது. கட்டாயம் பங்குபற்ற வேண்டும்." என்று கூறிவிட்டுச் சென்றார்கள். போகு முன்னர், பத்மா பரமானந்த் என்று அவளது பெயரை ஒரு காகிதத்தில் எழுதிக் கொண்டார்கள்.

ஸ்ரீதருக்கு தலை சுற்றியது. பத்மாவிடம் "பொதுவாகத் தமிழ்ப் பெண்கள் இப்படிப்பட்ட அழகு ராணிப் போட்டிகளில் பங்குபற்றுவது குறைவு. மேலும், அவர்கள் நீச்சலுடையை அணியலமா, அது தமிழ்ப் பண்பா என்பது பற்றி இன்று பத்திரிகைகளில் கூட விவாதம் நடக்கிறது. அதுதான் நான் யோசிக்கிறேன். எதற்கும் சுரேஷிற்கு டெலிபோன் செய்து, வீட்டிலிருந்தால் அவனை உடனே வரவழைத்து, விஷயத்தை அவனுடன் கலந்தாலோசிப்போம்," என்று சொல்லிக் கொண்டே அவளையும் அழைத்துக் கொண்டு ஹோட்டலை நோக்கி நடந்தான் அவள்.

அதிர்ஷ்டவசமாக சுரேஷ் "கிஷ்கிஷ்ந்தா"வில் இருந்தான். "சுரேஷ்! உடனே டாக்சி எடுத்துக் கொண்டு கல்கிசை ஹோட்டலுக்கு வா. அவசரமான விஷயம்." என்றான் ஸ்ரீதர்.

"என்ன அவ்வளவு அவசரம்?"

"வா சொல்லுகிறேன். உடனே கிளம்பு"

இவ்வாறு சொல்லி டெலிபோனை வைத்துவிட்டு மத்தியான உணவருந்துவதற்காக ஹோட்டல் நந்தவனத்த்¢ல் தென்னை மரங்களின் கீழ் இடப்பட்டிருந்த மேசைகளை நாடிச் சென்றான் ஸ்ரீதர். அல்பேர்ட் கிழவன் ஓடோடி வந்து மத்தியான உணவுக்கு ஏற்பாடு செய்யலானான். பத்மாவும் ஸ்ரீதரும் ஹோட்டல் ஸ்நான மண்டபத்துக்குப் போய் உப்புத் தண்ணீரின் பிசுபிசுப்பைக் கழுவ அங்கிருந்த சுத்த நீர் ‘ஷவர் பாத்’தில் குளித்த பின்னர், துவாய்களால் உடம்பைத் துடைத்து விட்டுக் கொண்டே, ஈர ஸ்நான உடைகளை மாற்றிக் கொள்ளாமலேயே மேசையில் வந்து உட்கார்ந்தார்கள் கடலாடிய ஆடவர் அரிவையரில் பலர் அவ்வாறு ஈர உடையிலேயே பானங்களையும் உணவையும் அருந்திக் கொண்டிருந்தார்கள்.

பத்மா கழுவிவிடப்பட்ட ஒரு தந்தப் பொம்மை போல நாற்காலியில் செளகரியமாகச் சாய்ந்து கொண்டு வானத்தை நோக்கியவண்ணம் அன்றைய நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக இரை மீட்க ஆரம்பித்தாள். "எத்தகைய இன்பமான நாள்! ஸ்ரீதரும் நானும் எவ்வளவு களிப்பாகக் காலத்தைக் கழித்தோம்! நீச்சலுடை அணிந்து கொண்டதுடன் நீந்தவுமல்லவா கற்றுக் கொண்டேன்? இனி ஒவ்வொரு நாளுமே இப்படிச் செய்ய வேண்டும் போலிருக்கிறது. ஸ்ரீதரும் நானும் என்றென்றும் நீச்சலுடையில் கடற்கரை மணலில் புரள்வதும், அம்மணலைக் கழுவக் கடலில் நீந்துவதும், உப்பு நீரின் பிசுபிசுப்பைப் போக்க ஷவர் பாத்தில் குளிப்பதும், வாய்க்கினிய உணவுகளை உன்பதும் கடற்காற்று உடல் முழுவதையும் தழுவிச் செல்ல இப்படி வீற்றிருப்பதுமாகா... ஆகா இப்படியே காலம் போய்க் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? என் இன்பத்துக்கு ஓர் எல்லையே இல்லை போலிருக்கிறது. காளிதாஸ் கடை விற்பனையாளன் என்னை உலக அழகி ராணியோடு ஒப்பிட்டான். இப்பொழுது நீச்சல் ராணிப் போட்டிக்கே அழைக்கப்பட்டு விட்டேன். ஆனால் ஒன்று நான் இதில் பங்குபற்றினால் அச்செய்தி பத்திரிகைகளில் கட்டாயம் வெளிவரும். அவ்விதம் வெளி வந்தால் நான் அது பற்றி அப்பாவுக்கு என்ன சொல்வது? தோட்டம் முழுக்க எனது நீச்சலுடைக்காக என்னைக் கண்டிக்கும். அன்னம்மாக்கா கூடக் கண்டிப்பாளோ? என்னவோ? அப்பாவை எப்ப்டியோ சமாளித்துவிடலாம். ‘ஸ்ரீதர் சொன்னான் நான் செய்தேன்’ - என்றால் அவர் அதற்கு மேல் ஒன்றும் பேசமாட்டார். நமது தமிழர்கள் தமிழ்ப் பண்பு, தமிழ்ப் பண்பு என்று ஏதோ பேசுகிறார்கள். அவர்களைப் போன்ற புதுமையான சமுதாயத்தினர் வேறு எவருமே இவ்வுலகில் இல்லை. தங்கள் வீட்டுப் பெண்ணிடம் அப்படி உடுத்தாதே, இப்படி உடுத்தாதே, கழுத்தைத் தாழ்த்தி வெட்டாதே, இடையை இவ்வளவுக்கு மேல் காட்டாதே என்றெல்லாம் கூறும் அவர்கள் தங்கள் சினிமாக் கதா நாயகிகள் மட்டும் எப்படி உடுத்தினாலும் மெச்சிக் கொள்ளூகிறார்கள். தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் சினிமா நடிகையரின் கவர்ச்சிப் படங்களில் அவர்கள் எப்படி எப்படி எல்லாம் நீச்சலுடைகளில் பாம்பு போல் நெளிந்து கொண்டு நிற்கிறார்கள். வீட்டிலுள்ள இளம்பெண் இதில் நூறில் ஒரு பகுதி செய்துவிட்டால் போதும். கோபித்துக் கொள்கிறார்கள்" என்றெல்லாம் யோசித்தாள்.

ஸ்ரீதர் எதிர்பார்த்திருக்கும் அவனது நண்பனான டாக்டர் சுரேசைப் பற்றி அவன் எப்படிப்பட்டவனோ, என்ன ஆலோசனை கூறுவானோ என்று கூடப் பத்மா பயப்பட்டாள். "ஒரு வேளை வாழ்க்கையைச் சுவைக்கத் தெரியாத இன்றைய இலட்சிய இளைஞர்கள் பலரைப் போல அவனும் பெண்களைப் பிற்போக்கான நிலையில் வைத்திருக்க விரும்பும் ஒரு மடையனாய் இருந்தால் என்ன செய்வது?" என்று கூட அவள் எண்ணினாள். இருந்தாலும் தனது சிந்தனைகள வெளிக் காட்டாமல் ஸ்ரீதரின் அழகிய முகத்தைப் பார்த்து அதன் கவர்ச்சியைத் தன் மனதால் பருகிக் கொண்டிருந்தாள் அவள்.

ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் அவன் கண்களை மூடிக் கொண்டு காற்றில் அலையாடிய தென்னங் கீற்றுகளின் ‘உர்’ரென்ற சப்தத்தையும், களியாட்டக்காரர்கள் எழுப்பிய பல்வேறு ஓசைகளையும், கடலின் ஓங்கார நாதத்தையும் மனமார அனுபவித்துக் கொண்டிருந்தான். சுரேஷ் வரும் வரை அப்படியே இருப்பதென்று முடிவு கட்டிவிட்டான் அவன்.

பத்மா திடீரென, "ஸ்ரீதர்! இதோ பாருங்கள் தென்னங் குற்றியிலிருந்த எறும்புகள் செய்த வேலையை!" என்று கொண்டே எறும்புக் கடியால் தன்னுடம்பில் இரண்டு இடங்களில் ஏற்பட்டிருந்த சிவந்த தழும்புகளைத் தன் கால்கால் ஸ்ரீதருக்குத் தொட்டுக் காட்டினாள்.

ஸ்ரீதர் "பேசாமலிரு பத்மா. இல்லாவிட்டால் இன்னும் சில எறும்புகளைக் கொண்டு வந்து கடிக்க விட்டுவிடுவேன்" என்றான். தன் அமைதியை அவள் குலைப்பது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. "தென்னங்குற்றியிலிருந்த எறும்புகள் சிறியவை. நான் கட்டெறும்புகளைக் கொண்டு வந்து கடிக்க விடுவேன்" என்றான் அவன்.

பத்மாவுக்கு ஸ்ரீதர் தன் எறும்புக் கடித் தழும்புகளைப் பார்க்க மறுத்ததும், கோபத்தை உண்டு பண்ணியது. தன் காதலிக்குச் சிறிது நோவென்றால் கூடத் துள்ளி எழுந்து பார்ப்பவனல்லவா உண்மைக் காதலன் என்று நினைத்துக் கொண்டே அவள் பேசாது மெளனமாயிருந்தாள்.

அவள் இவ்வாறு அமைதியுற்றதைக் கண்ட ஸ்ரீதருக்கு அவள் மீது அனுதாபம் ஏற்பட்டது. கண்ணை விழித்துக் கொண்டு "எறும்பு எங்கே கடித்தது?" என்று கேட்டுக் கொண்டு அவள் சுட்டிக் காட்டிய இடங்களை எல்லாம் தன் கரங்களால் தடவி விட்டான். அவளுக்குத் தாங்க முடியாத கூச்சம். என்றாலும் ஸ்பரிச சுக அனுபவத்தினால், மேலும் மேலும் கடிக்காத இடங்களையும் கடித்ததாகக் காட்டிக் கொண்டிருந்தாள். ஸ்ரீதர் அவளது பொய்யைப் புரிந்து கொண்டானாயினும் ஒன்றுமறியாதவன் போல் அவள் காட்டிய இடங்களை மேலும் மேலும் தடவி கொண்டேயிருந்தான். இடையிடையே அவளை மெல்ல துள்ளவும் அவன். "கட்டெறும்பு கடிகிறது" என்று செல்லமாக வாயைக் குவித்து முனகினான் அவன்.

*** *** ***

இதற்கிடையில் அல்பேர்ட் புகை கிளம்பிக் கொண்டிருந்த சூடான நண்டுணவை மேசை மீது கொண்டு வந்து பரப்பினான். இருவரும் ஆசையோடு அதனை உண்ண ஆரம்பித்தனர். அவர்கள் சாப்பாட்டை முடித்துப் பழக்கலவையை அருந்திக் கொண்டிருந்த போது, சுரேஷ் அங்கு திடீரெனத் தோன்றினான்.

"வா சுரேஷ்! இது தான் என் காதலி பத்மா. உனக்குத் தெரிந்த என் சகுந்தலை! இது தான் டாக்டர் சுரேஷ். நான் உன்னிடம் அடிக்கடி குறிப்பிட்டுப் பேசுவேனே அந்த நண்பன்!" என்று சுரேஷையும் பத்மாவையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் பண்ணி வைத்தான் ஸ்ரீதர். இருவரும் ஒருவர் கையை ஒருவர் குலுக்கிக் கொண்டார்கள்.

பின் சுரேஷிடம் நீச்சல் அழகிப் போட்டி விவரங்களையும் தன் முன்னிருந்த பிரச்சினையையும் கூறினான் ஸ்ரீதர். சுரேஷ் எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"தமிழ்ப் பெண்கள் நீச்சலுடையை அணிவது தமிழ்ப் பண்புக்கு இழுக்கென்கிறார்களே, அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்றான் ஸ்ரீதர்.

"என்னைப் பொறுத்த வரையில் இந்தத் தமிழ்ப் பண்பு என்ற சொற்கள் இருக்கின்றனவே அவை மிகவும் ஆச்சரியமான வார்த்தைகள் என்று நான் கருதுகிறேன். என்னுடைய பாட்டனார் சிங்கப்பூருக்குப் போய்விட்டு வந்த போது, தன் குடுமியை வெட்டிவிட்டு வந்ததால் அவர் தமிழ்ப் பண்பை முற்றாகாக் கொன்றுவிட்டார் என்று கருதிய அவரது தகப்பனார் அதன் பின், சாகும்வரை அவருடன் பேசியதே இல்லையாம். அதன்படி இச்சந்தர்ப்பத்தில் தமிழ்ப் பண்பென்பது தலைமயிர் விவகாரம். ஒருவனது குடுமிக்குள் அடங்கும் விவகாரம். ஆனால் நீயோ அதை இப்பொழுது ஒரு நீச்சலுடை விவ்காரமாக்கப் பார்க்கிறாய்! சொல்லப் போனால் குடுமி இல்லாத எங்களுக்குத் தமிழ்ப் பண்பைப் பற்றிப் பேசக் கூட அருகதையுண்டா? என்னுடைய பூட்டனார் கருத்துப்படி தலைமயிர் வெட்டியவன் "முழிவியழத்து"க் கூட அருகதையற்றவன்" என்றான் சுரேஷ் சிரித்துக் கொண்டு.

"உன் பகடிப் பேச்சை விட்டுவிட்டு இப்போது கைமேலுள்ள பிரச்சினைக்குப் பதில் சொல்லு" என்றான் ஸ்ரீதர்.

"அதுதான் சொல்லுகிறேன். இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. இன்று தலைமயிர் வெட்டுவதும் தமிழ்ப் பண்பாகிவிட்டது - ஆண்கள் விஷயத்திலாவது! கொஞ்ச நாளில் பெண்கள் விஷயத்திலும் அது சரியாய்ப் போய்விடும். அது போல் தான் நீச்சலுடயும்! இப்பொழுது நீச்சலுடை அணிவது தமிழ்ப் பண்பல்ல. ஆனால் கொஞ்ச நாள் போனதும் அது தமிழ்ப் பண்பாகிவிடும். அதாவது எல்லோரும் அணிய ஆரம்பித்ததும்!" என்றான் சுரேஷ்.

ஸ்ரீதருக்கு இந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை. ஆகவே சுரேஷை மேலும் பேசும்படி ஊக்கிக் கொண்டேயிருந்தான்.

"என்னைப் பொறுத்தவரையில் உடைகள் உடம்பின் எந்தப் பாகத்தையும் மற்றவர்கள் பார்க்காமல் இருக்க வேண்டுமென்பதற்காக மட்டும் அணிபவையல்ல. குளிர், வெப்பம் என்பவற்றிலிருந்து உடம்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கே உடைகள். இதில் நாம் பார்க்க வேண்டியது தமிழ்ப் பண்பல்ல. சுகாதாரப் பண்பு. நீச்சலுடையைப் பொறுத்தவரையில், அது நீந்தும்போது அணியப்படுகிறது. நீந்தும் போது நீச்சலுடையை அணிய வேண்டாமென்பவர்கள் ஒன்றுமே அணிய வேண்டாமென்றால், அது பொருத்தமே. ஏனெனில் குளிக்கும்போது ஒன்றுமணியாமல் குளிப்பது உடம்பை நன்கு சுத்தம் செய்து கொள்வதற்கு உதவியாயிருக்கும். ஆனால் நீச்சலுடையை அணிய வேண்டாம், பதினாறு முழச் சேலையைதான் நீந்தும்போது அணிய வேண்டும் என்பவர்கள் என்ன பண்பு பேசினாலும் சுகாதாரப் பண்புக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்" என்றான் சுரேஷ்.

பத்மா, சுரேஷின் வார்த்தைகளைச் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"சிலர் இந்தத் தொல்லையான பிரச்சினையைத் தீர்ப்பது கடினமாயிருப்பதால் பெண்கள் நீந்தவே கூடாது என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் அப்படி மனித இனத்தின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துவது, அவர்களது சுதந்திரத்தை மறுப்பதாகும்."

ஸ்ரீதர், "நீ சொல்வது நியாயமாகத்தான் படுகிறது. ஆனால் பெண்கள் நீச்சலுடையை அணிந்து கொண்டு நீந்தப் போவதற்குப் பதிலாக மேடைகளில் ஆண்களின் முன் தம் அங்கங்களைக் காட்டுவதற்காகப் போவது சரியா? அது தவறுதானே?" என்றான்.

சுரேஷ் அதனை ஒப்புக் கொண்டான். "பெண்கள் தங்கள் அங்கங்களைக் காட்டி ஆண்களைக் கவர முயல்வது தப்புத்தான். ஆனால் வேறு கவர்ச்சிக்கரமான பண்புகளில்லாதவர்கள் அந்தக் காரியங்களில் ஈடுபடுவார்கள். சிந்தனா சக்தியோ, பேச்சுத் திறனோ, அறிவாற்றலோ, கலைத் திறனோ உள்ள பெண் அவற்றால் தான் ஆணையோ பெண்ணையோ கவரப் பார்ப்பாள்" என்றான்.

ஸ்ரீதர், "நீ சொல்வதெல்லாம் சரி சுரேஷ். ஆனால் போட்டிக்குரிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது பத்மா என்ன செய்ய வேண்டும்? நீச்சலுடையை அணியலாமா" என்று கேட்டான், அவசரமாக.
சுரேஷ், பத்மாவை ஒரு தரம் ஏற இறங்கப் பார்த்து அவள் அழகை இரசித்தவண்ணமே, "இது என்ன கேள்வி ஸ்ரீதர்! பத்மா ஏற்கனவே நீச்சலுடையில்தானே இருக்கிறாள்?" என்றான்.

ஸ்ரீதருக்குக் கோபம் வந்தது. "நீ என்ன சொல்கிறாய் சுரேஷ்? அவள் இது வரை நீச்சலுடை அணிந்தது நீந்துவதற்கு. இப்பொழுது அழகுப் போட்டிக்கு அதை அணியலாமா என்பதுதான் கேள்வி?" என்றான்.

"அதற்கு நான் ஏற்கனவே பதிலளித்துவிட்டேன். கூடாது. ஆனாலும் அது உலகில் ஒரு நாகரிகமாகப் பாவிவிட்டபடியால் அதைச் செய்வதில் பிழையுமில்லை. ஊர் செய்வதை நாமும் செய்யலாம். இன்னும் இந்த விஷயத்தைப் பத்மாவும் நீயும் தீர்ப்பதுதான் சரி" என்றான் சுரேஷ்.

"அது கஷ்டமாயிருப்பதனால் தானே உன்னை அழைத்தேன். உன் தீர்ப்பே முடிவானது. சொல்லு" என்றான் ஸ்ரீதர்.

சுரேசுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனுக்கு மகா அலெக்ஸாந்தரின் ஞாபகம் வந்தது.

"ஸ்ரீதர்! நான் ஒரு கதை சொல்லட்டுமா? இந்தியாவை வெற்றிக் கொண்ட கிரேக்க மன்னனான மகா அலெக்ஸாந்தர் தன் பிரயாணங்களின் போது கோர்டியஸ் என்ற மன்னனைச் சந்தித்தானாம். அவள் அலெக்ஸாந்தருக்கு முன் ஒரு பெரிய கயிற்று முடிச்சை வைத்து ‘இந்த முடிச்சை உன்னால் நீக்க முடியுமா?’ என்றானாம். அலெக்ஸாந்தர் "ஏன் முடியாது? இதோ பாருங்கள்" என்று சொல்லி முடிச்சைத் தன் கரங்களால் விடுவிக்க முயன்றான். முடியவில்லை. உடனே தன் வாளை உறையிலிருந்து நீக்கிக் கயிற்றை அதனால் ஒரே வெட்டாக வெட்டி முடிச்சை அவிழித்தான். இதே முடிச்சு முன்னரும் பல பேரிடம் இதே மன்னனால் அவிழ்ப்பதற்காகக் கொடுக்கப்பட்டது. அவர்கள் எல்லரும் முடிச்சை முறையாக அவிழ்க்க முயன்று தோல்வி அடைந்தார்களேயல்லாமல், ஒருத்தராவது அலெக்ஸாந்தர் கையாண்ட குறுக்கு வழியை அனுஷ்டிக்கவில்லை. அலெக்ஸாந்தரின் துரித முடிவுக்காகவும் செயல் திறமைக்காகவும் எல்லோரும் அவனைப் பாராட்டினர். பார்த்தாயா, ஆளப் பிறந்தவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் உள்ள வித்தியாசத்தை? அலெக்ஸாந்தரின் செயல் அவன் ஆளப் பிறந்தவன் என்பதைக் காட்டுகிறது. இதை நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா?"

"தெரிகிறது. நாமும் ஏதாவது குறுக்கு வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்கிறாய்."

"சரி. நான் ஒரு வழி சொல்லட்டுமா?"

பத்மா, சுரேஷின் வக்கணை நிறைந்த பேச்சை மிக்க சுவையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். அவன் கூறிய அலெக்ஸாந்தரின் கதை அவளுக்கு மிகவும் பிடித்தது. சுரேஷ் நேரத்துக்கும் இடத்துக்கும் தக்கவாறு எவ்வளவு அழகாகக் கதை சொல்லுகிறான் என்றும், மிகவும் தர்க்க ரீதியாகப் பேசுகிறானே என்றும் தனக்குள் தானே அவனை மெச்சிக் கொண்டாள். அவள் தன் பாராட்டைத் தன் கண்களின் மூலமும் புன்னகை பூத்த அதரங்களின் மூலமும் அவள் வெளியிட்டுக் கொண்டிருந்தாள். அவள் கரங்கள் மேசையைத் தட்டிக் கொண்டிருக்க, அவன் என்ன ஆலோசனை கூறப் போகின்றான் என்றறியத் தன் காதுகளைத் தீட்டிக் கொண்டிருந்தாள், அவள்.

சுரேஷ் தன் ஆலோசனையைச் சொல்ல ஆரம்பித்தான்.

"இதோ என்னிடம் இருக்கும் காசைப் பூவா தலையா போட்டுப் பார்ப்போம். தலை கிடைத்தால் பத்மா போட்டியில் பங்கு பற்றட்டும். பூ கிடைத்தால் வேண்டாம்."

"இது பிரச்சினைக்கு நாம் அளிக்கும் தீர்ப்பாகாதே! குருட்டுச் சம்பவமொன்றுக்கு நாம் அடிபணிவதாக அல்லவா முடியும்?"

"அது சரிதான். என்றாலும் இப்பொழுதே ஒரு மணியாகிவிட்டது. பிரச்சினையை நாம் முறையாக அலசித் தீர்ப்பெடுக்க நேரம் போதாது. அதனால் தான் இந்தக் குறுக்கு வழியை நான் சொன்னேன். செய்து பார்ப்போமா?"

ஸ்ரீதர் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டான். சுரேஷ் காசை மேலே சுண்டிப் புல் தரையில் விழச் செய்தான். தலை விழுந்தது. ஸ்ரீதர் உடனே "அப்படியானால் போட்டியில் பங்கு பற்ற வேண்டியது தான். மாரியம்மனின் விருப்பமது!" என்று கூறிக் கொண்டே எழுந்தான். பின்னர் பத்மாவைப் பார்த்து, "காலையில் வாங்கிய நீச்சலுடையை எவ்வளவு கசக்கி விட்டாய், பார். பரவாயில்லை. காளிதாஸ் கடைக்குப் போய் புதிய நீச்சலுடையொன்று வேண்டுவோம்." என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். அல்பேர்ட்டைக் கூப்பிட்டு "இதோ இந்தத் துரைக்கு வேண்டியதெல்லாம் கொண்டு வந்து கொடு. சுரேஷ்! நன்றாய்ச் சாப்பிடு" என்று சொல்லி விட்டுப் பத்மாவுடன் ஹோட்டலை நோக்கி நடந்தான். பத்மாவின் நீண்ட கால்கள் அவளுக்கு தனி அழகைக் கொடுக்க அவள் ஒய்யார நடை போட்டுச் சென்றதைப் பின்னாலிருந்த பார்த்த அல்பேர்ட் சுரேஷிடம், "நோனா மிச்சம் அழகு. இன்று அவர் தான் வெற்றி எடுப்பார்" என்று கூறினான். சுரேசும் "ஆம்" என்று தலையை அசைத்துப் புன்னகை செய்தான்.

ஒரு சில நிமிஷ நேரத்தில் பத்மா தன் முகத்தையும் தலையையும் சரி செய்து கொண்டு புதிய நீச்சலுடையில் போட்டி நடக்கும் இடத்துக்கு ஸ்ரீதருடன் சென்ற போது, உண்மையில் ஒரு மாய மோகினியாக, அதிசய கவச்சிப் பாவையாகக் காட்சியளித்தாள். அவள் இப்போது அணிந்திருந்த நீச்சலுடை ‘பிக்கினி’ அல்லாவிட்டாலும் பார்க்க மிகக் குறைந்த துணியில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். சற்று மேலேறிய கால்களுடனும், முன்னால் இன்னும் அதிகமாகத் தாழ்த்திறங்கிய கழுத்துடனும் பின்னால் முதுகுப் புறத்தின் பெரும் பகுதியை நன்கு காட்டுவதாகவும் மிகவும் நாகரிகமாகவும் அழகாகவும் அமைந்திருந்தன. செம்மை கலந்த பொன் வர்ணத்தில் அமைந்திருந்த அந்த உடையில் அவள் போட்டி நடக்க வேண்டிய இடத்துக்கு அன்னம் போல் ஒயிலாக நடந்து சென்ற பொழுது, ஆண் பெண் சகலரது கண்களும் அவளையே மொய்த்தன.

பத்மாவைப் பொறுத்த வரையில் காலையில் முதன் முதலாக நீச்சலுடையை அணிந்ததும், மற்றவர்கள் அவளை உற்றுப் பார்த்த பொழுது, அவளுக்குச் சிறிது வெட்கமாகத்தானிருந்தது. ஆனால், அவள் அதை எதிர்த்துப் போரடித் தொடர்ந்தாற் போல பல மணி நேரம் நீச்சலுடையிலேயே இருந்துக் கொண்டிருந்ததால் அந்த வெட்கம் இப்பொழுது எப்படியோ மறைந்துபோய்விட்டது. உண்மையில் அவள் மனது அப்போது ஆனந்தத்தில் மிதந்தது. வேகமாக ஸ்நான உடையில் ஏறு போல் வீசிய கடற்காற்று உடம்பில் சகல இடங்களிலும் பட்டு, இன்பச் சிலிர்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, இன்னமும் இன்பத்தால் சிலிர்த்துக் கொண்டிருந்தது. தன் பக்கத்தில் நிமிர்ந்து பெருமையோடு நடந்து வந்து கொண்டிருந்த ஸ்ரீதரைப் பார்த்துப் புளகித்துக் கொண்டிருந்தது, அவள் நெஞ்சம். உணவை முடித்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற சுரேஷின் முகத்தில் இலேசான குறும்புப் புன்னகை ஒன்று தவழ்ந்து கொண்டிருந்தது. தூரத்திலிருந்து அதனைக் கவனித்த ஸ்ரீதருக்கு அதன் பொருள் என்ன என்பது சற்றும் விளங்கவில்லை.

போட்டியிலே தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளில் ஒருவர், கடைசி நிமிஷத்தில் தம்மால் வர முடியவில்லை என்று தந்தி அடித்துவிட்டதால் புதிய நீதிபதி ஒருவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ‘டைகர் கிளப்’ தலைவர் திரு. ஜயசிங்காவின் கண்களில் தமது அசாதாரண உடையில் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்த அதிகார் அம்பலவாணரின் உருவம் அகப்பட்டது! திரு. ஜயசிங்கா அவரை அணுகி, "நீங்கள் யார்? பார்ப்பதற்கு மிகக் கம்பீரமாகத் தோன்றுகிறீர்களே!" என்று விநயமாகக் கேட்டதும், தாம் தான் அதிகார் அம்பலவாணர் என்று உண்மையை மிக்க பெருமையோடு வெளியிட்டார் அவர். தலைப்பாகைக்காரர் ஒரு முக்கியமான பிரமுகரே என்று தெரிந்து கொண்ட திரு. ஜயசிங்கா அவரை நீச்சலழகியைத் தெரிந்தெடுக்கும் நீதிபதிகளின் தலைவராக இருக்க வேண்டுமென்று தாழ்மையாகக் கேட்டுக் கொண்டார். அதிகாரின் வெள்ளைத் தலைப்பாகை களியாட்டச் சூழலின் விநோதத்தையும் வேடிக்கையையும் பல மடங்கு அதிகரிக்கும் என்பது திரு. ஜயசிங்கா கருதியதே அவரை அவ்வளவு விரும்பிகப்பதவியை ஏற்கும்படி அவர் கேட்டுக் கொண்டதற்குக் காரணம்.

சரியாக இரண்டு மணிக்கு நீச்சல் மோகினிகள் தென்னை மரங்களிடையே மலர்ப்பாத்திகளின் நடுவில் புல் தரையில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்குச் சமீபமாக வந்தார்கள். பல மேசைகளை ஒன்றுடன் ஒன்று பொருந்திச் சிவப்புக் கம்பளம் விரித்து அமைக்கப்பட்டிருந்த மேடையில் நீராமகளிர் போல் விளங்கிய நீச்சலழகிகள் ஒன்று, இரண்டு, மூன்று என்று இலக்கங்கள் எழுதப்பட்ட அட்டைகள் குத்திய நீச்சலுடைகளுடன் ஒவ்வொருவராக ஏறி நடக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த ஏற்பாடுகளை ‘டைகர் கிளப்’ தலைவர் திரு. ஜயசிங்கா அழகிகளுக்கு எடுத்துக் கூறினார்.

பத்மா அவற்றைக் கேட்டு விட்டு ஸ்ரீதரின் பக்கத்தில் வந்து நின்று கொண்டாள். அவளுக்கு இப்பொழுது ஒரு பயம் ஏற்பட்டிருந்தது. என்ன தான் மற்றவர்கள் தன்னை அழகி, அழகி என்று போற்றியபோதிலும் தான் உண்மையில் அழகிதானா என்பதே அப்பயம். "ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அவ்வாறு போற்றப்படுகிறேனா அல்லது அது நூற்றுக்கு நூறு முற்றிலும் உண்மைதானா?" என்று தன்னைத்தானே வினவிக் கொண்ட அவன் ஸ்ரீதரிடம் இரகசியமாக "நான் உண்மையில் அழகாயிருக்கிறேனா? எனக்கு வெற்றி கிடைக்குமா?" என்று கேட்டாள். ஸ்ரீதர் அவள் தோள்களைப் பற்றி அவள் முகத்தை அன்போடு பார்த்து, "நிச்சயமாக உனக்குத்தான் வெற்றி. உன்னைப் போன்ற அழகி இந்த உலகிலேயே இல்லை. காலையில் காளிதாஸ் கடைக்காரன் சொன்னது ஞாபகமில்லையா?" என்றான். இவ்வார்த்தைகள் அவளுக்கு ஊக்கத்தை அளித்த போதிலும் ஆங்காங்கு காணப்பட்ட மற்ற அழகிகளின் மதர்த்த உடலங்கங்களையும், அழகு முகங்களையும் பார்த்தபோது அவன் மனதில் "நான் தோற்றுக் கடைசியாகக் கூட வந்து விடலாம்" என்ற அச்சம் ஏற்படவே செய்தது.

அப்பொழுதுதான் அவளுக்குத் திடீரென கொழும்பு சுந்தரேஸ்வரர் கோவிலில், காமாட்சி சமேதரராக வீற்றிருக்கும் மணவாள சுந்தரேஸ்வரர் மூர்த்தியின் நினைவு வந்தது. "அப்பனே சுந்தரேசா! நான் வெல்ல வேண்டும். வென்றால் ஸ்ரீதருடன் உன்னை வந்து வணங்குவேன். காணிக்கை தருவேன்" என்று மனதுள் சொல்லிக் கொண்டு ஸ்ரீதரிடம் "ஸ்ரீதர்! நான் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு நேர்த்திக்க்டன் வைத்துவிட்டேன். ஆகவே நிச்சயம் வெல்லுவேன். நான் தான் ‘பேதிஸ் பியூட்டி!’ நீச்சல் ராணி!" என்றாள் முகமலர்ச்சியுடன்.

ஸ்ரீதர் புன்னகையுடன் "என்ன, நீச்சலழகிப் போட்டியில் வெற்றி பெற சுந்தரேஸ்வரருக்கு நேர்த்திக் கடனா? பார்ப்போம். சுந்தரேஸ்வரர் கோவில் எங்கள் பரம்பரைக் கோவில். அப்பாவுக்குப் பின்னால் அது என்னுடைய கோவில் என்பது உனக்குத் தெரியுமல்லவா?" என்று கேட்டான்.

"தெரியும், நன்றாய்த் தெரியும்" என்று தலையை ஆட்டினாள் பத்மா.

"எனக்கென்னவோ சுந்தரேஸ்வரரிலும் பார்க்க, கொட்டாஞ்சேனையில் சிறிய முடுக்குக் கோவிலில் இருக்கும் மாரியம்மன் மீதுதான் நம்பிக்கை. அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள்" என்றான் ஸ்ரீதர்.

பத்மா, "உங்களுக்குத் தெரியாது. சுந்தரேஸ்வரர் தான் சக்தி வாய்ந்தவர். நான் பல்கலைகழக 'என்ரன்ஸ்' பரீட்சையில் வெற்றி பெற்றதற்கும் நான் அங்கு உடைத்த தேங்காய்களே காரணம். அடுத்த வீட்டு அன்னம்மா அக்காவைக் கேட்டால் தெரியும் சுந்தரேஸ்வரரின் பெருமை!" என்று சொல்லிக் கொண்டே போனாள்.

ஸ்ரீதர் "யார், நீ சொல்வாயே, ஒரு திராவிடதாசனைப் பற்றி. அவனுடைய தாய் அன்னம்மாதானே!" என்றான்.

பத்மா "ஆம். திராவிடதாசன் நாஸ்திகன்." அவள் கூறிக் கொண்டிருக்க, ஒலிபெருக்கியில் வாத்திய சங்கீதம் முழக்க ஆரம்பித்தது. திடீரென அது நிற்க, ‘டைகர் கிளப்’ தலைவர் பேசத் தொடங்கினார்.

"சகோதர டைகர்களே, அன்பர்களே, நீச்சலழகிகளே, நீச்சல் போட்டி நீதிபதிகள்! வாழ்த்துகள். இப்பொழுது நீங்கள் எதிர்பார்த்திருக்கும் நீச்சல் ராணிப் போட்டி நடைபெறப் போகிறது. நீச்சல் ராணிகள் உடனே மேடைக்கருகில் வீற்றிருக்கும் அழகுப் போட்டி அமைப்பாளர் ஸ்ரீமதி சீதா ஜயசிங்காவை வந்து காணும்படி கோரப்படுகிறார்கள். நீச்சலுக்கு நீதிபதிகள் மேடைக்கு முன்னாலுள்ள நாற்காலிகளில் வந்து அமரும்படி அழைக்கப்படுகிறார்கள் எங்கே கைதட்டுங்கள் பார்க்கலாம்!"

‘டைகர் கிளப்’ தலைவரின் இப்பேச்சு நின்றதும் சீன வெடி போல் கைதட்டல் நாலா திசையிலிருந்து வெடித்துக் கிளம்பியது. மெல்லிய வாத்திய இசை பின்னால் இசைந்துக் கொண்டிருக்க, அழகிகளின் மேடைப் பவனி ஆரம்பித்தது. தேவகன்னிகைகள் போல் அவர்கள் இரத்தினக் கம்பளத்தில் நடந்து செல்லத் தொடங்கினார்கள். போட்டியில் மொத்தம் பதினோரு அழகிகள் பங்குபற்றினார்கள். ஒவ்வோர் அழகியும் மேடை மீதேறித் தனியாக அதன் எல்லை வரை மெல்ல நடந்து சென்று, பின்னர் திரும்பி வர வேண்டும். இது நடுவர்களுக்கு அழகிகளைப் பல் கோணங்களிலிருந்தும் அவதானிப்பதற்கு வாய்ப்பளித்தது. இவ்வாறு ஒவ்வொருவராக அழகிகள் மேடையில் ஏறி இறங்கிய பின்னர் எல்லோரும் ஒரு தடவை வரிசையாக மேடையில் கூட்டாகக் காட்சியளிப்பர். அதன்பின் அவர்கள் மேடையில் நின்று கொண்டிருக்கும் பொழுதே நடுவர்களின் தீர்ப்பு ஒலி பெருக்கிகள் மூலம் ஒலிபரப்பப்பட, நீச்சல் ராணிக்கு முடி சூட்டு விழா நடைபெறும். மற்ற அழகிகள் பின்னணியில் நிற்க முதலாம் இடம் பெற்ற நீச்சல் ராணியும் இரண்டாம் மூன்றாம் இடம் பெற்ற அழகிகளும் முன்னணியில் காட்சியளிப்பர். இவைதாம் ஏற்பாடுகள்.

அதிகார் அம்பலவாணர் முன் வரிசை ஆசனத்தில் தமது வெள்ளி மூக்குக் கண்ணாடியை நன்றாகத் துடைத்து மாட்டிக் கொண்டு நடுவர்களுக்கு நாயகமாக வீற்றிருந்தார். ஒவ்வோர் அழகியும் தனியாகப் பவனி வந்த காட்சியைப் பார்த்து, தம்மிடம் கொடுக்கப்பட்ட காகிதத்தில் புள்ளி போட்டுக் கொண்டிருந்த அவர் ஐந்தாவது அழகி பத்மாவைக் கண்டதும் "ஓஹோ! ஸ்ரீதரின் சரக்கு! இவள்தான் மிக அழகாயிருக்கிறாள்" என்று புள்ளிகளை மிகவும் அதிகமாகவே அவளுக்குக் கொடுத்துவிட்டார். உண்மையில் கடற்கரையில் பார்த்ததை விட இப்பொழுது அவளது எழில் இன்னும் பல மடங்காகவே அவருக்குத் தெரிந்தது.

அரை மணி நேரத்தில் வைபவங்கள் முடிந்தன. நடுவர்களின் நாயகமான அதிகார் அம்பலவாணர் ஒலி பெருக்கியில் தீர்ப்பை அறிவிக்கலானார். களியாட்ட விநோதர்களிடையே ஒரே ஆரவாரம். அதிகாரின் தலைப்பாகை அவர்களுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஒரே கைதட்டல், ஒரே கூச்சல், சிலர் சீழ்க்கை அடித்தார்கள். அதிகாரைப் பற்றித் திரு. ஜயசிங்கா மூலம் தெரிந்து கொண்ட ஒருவர் "கம் ஓன் அதிகார்!" என்று சப்தமிட்டார். அதிகாருக்கு ஒரே ஆனந்தம். வள்ளியாச்சிக்கும் அப்படியே. அவளுக்குப் பெருமை தாங்க முடியவில்லை. ஆனால் ஒரே ஓர் அபசுரம். யாரோ ஒருவன் ‘பனங்கொட்டை’ என்று சப்தமிட்டான். அதிகாரின் தலைப்பாகை அவனுக்கு யாழ்ப்பாணத்தின் பனை வடலிகளை ஞாபகப்படுத்திவிட்டது. ஆனால் இந்த அவமரியாதைப் பேச்சு அதிகாரை ஒன்றும் செய்துவிடவில்லை. அவர் ஒலி பெருக்கியில் கம்பீரமாய் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.

"இந்த நீச்சல் ராணித் தெரிவுக்கு என்னை நீதிபதியாகத் தெரிந்தெடுத்த பிரபல டைகர் திரு. ஜயசிங்காவுக்கு எனது நன்றி உரியது. நான் ஒரு கடலாடு விழாவில் பங்குபற்றுவது இதுவல்ல முதற் தடவை. பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து சென்றிருந்த போது அங்குள்ள பிரைட்டன் கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் கடற்கரைக் கார்னிவலில் நான் கலந்து கொண்டுள்ளேன் .

இப்பொழுது பெண்கள் நீச்சலுடை அணியலாமா கூடாதா என்பது பற்றி இங்கு பேசப்படுகிறது. சுமார் இருபத்தைந்து வருடங்களின் முன்னர் நான் என்னுடன் இங்கு வந்திருக்கும் எனது மனைவியுடன் பிரைட்டன் கடற்கரை விழாவில் கலந்து கொண்ட பொழுது என் மனைவியார் உண்மையில் நீச்சலுடை அணிந்து கொண்டார் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் இதோ, இங்கே இருக்கும் அவர் அதற்குச் சாட்சி சொல்லுவார்."

இவ்வாறு அவர் கூறியதும் எல்லார் கண்களும் ஸ்ரீமதி வள்ளியாச்சி அமர்ந்திருந்த திக்கை நோக்கின. அழகிகள் உட்பட யாவரும் பழைய நீச்சலழகியின் இன்றைய உருவைக் கண்டதும் கலகலவென்று சிரித்துவிட்டார்கள். வள்ளியாச்சியோ இளம் பெண் போல் வெட்கப்பட ஆரம்பித்தாள்! சபையோரின் சிரிப்போசை அடங்கியதும் அதிகார் தமது பேச்சை மேலும் தொடர்ந்தார்.

"இதிலிருந்து அந்தக் காலத்திலிருந்தே நீச்சலழகிகளின் மேல் எனக்கு எவ்வளவு அக்கறை இருந்ததென்பதையும், அவர்களோடு எத்தகைய தொடர்பு எனக்கு இருந்தது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்விர்கள் என்று நினைக்கிறேன். அந்த அக்கறைதான் இன்று என்னை இக்கடற்கரை விழாவுக்கு எனது அன்புக்குரிய மாஜி பிரைட்டன் நீச்சலழகியோடு வரும்படி செய்தது. துரதிர்ஷ்டவசமாக பிரைட்டன் கடற்கரை மாஜி நீச்சலழகி இங்கு தனது நீச்சலுடையைக் கொண்டு வராததாலும் இவ்விடத்தில் அவரது ஜீவாதாரப் புள்ளிகளுக்குத் தக்க நீச்சலுடை கிடையாததாலும் அவர் இந்தப் போட்டியில் பங்குபற்ற முடியாது போய்விட்டது. அவரது ஜீவாதாரப் புள்ளிகள் உண்மையில் உங்களைத் திகைக்க வைக்கவே செய்யும். 55-42-33 என்பனவே அவை. பிரபல சினிமா நடிகையான சா-சா-கபோர் என்பவர் தமது மேலிடப் புள்ளி 40-க்கு மேல் என்று பெருமையுடன் கூறியுள்ளதாக நான் பத்திரிகைகளில் வாசித்திருக்கிறென். நீங்களே சொல்லுங்கள்! ஸ்ரீமதி வள்ளியாச்சியின் 55க்கு முன் சா-சா-கபோரின் 40 எம்மாத்திரம்!"

(சபையில் ஒரே ஆரவாரம்! சிரிப்பு! ‘டைகர் கிளப்’ தலைவர் தலைப்பாகையாரைத் தான் நீதிபதியாகத் தெரிந்தெடுத்ததற்காகத் தன்னைத் தானே மெச்சிக் கொள்கிறார்.)

"சரி. இப்பொழுது இன்றைய விஷயத்துக்கு வருவோம். நீச்சல் ராணியாக நீதிபதிகளால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டவர் ஐந்தாம் இலக்க அழகி பத்மா பரமானந்த். (இவ்வாறு அவர் சொல்ல, பத்மா பதைபதைத்து அழகிகள் வரிசையை விட்டுப் பிரிந்து தனியாக முன்னால் வந்து சபையைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். ஒரே கைதட்டல்.)

"இரண்டாவது இடம் மூன்றாம் இலக்க அழகி விமலா ஹேட்டியாராச்சிக்கு அளிக்கப்படுகிறது. மூன்றாம் இடம் நாலாம் இலக்க அழகி நந்தனி ஸ்ரீ நிசங்காவுக்கு அளிக்கப்படுகிறது. (அவர்கள் இருவரும் பத்மாவின் இருபுறமும் வந்து நிற்கிறார்கள். கைதட்டல் கடல் முழக்கத்தையும் மீறி ஒலிக்கிறது.)

களியாட்ட விநோதர்களுக்கு முக்கியமாக அங்கிருந்த ஆண்களுக்கு ஒரே உல்லாசம். பதினொரு பேரழகிகளின் பூரித்த எழிலுடங்களை ஒன்றாகக் காண யாருக்குத் தான் உல்லாசமாக இருக்காது?

சுரேசும் ஸ்ரீதரும் ஒருவருக்கொருவர் சமீபமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். "பத்மா வெற்றி பெற்றுவிட்டாள். பலே" என்று சொல்லி சுரேஷ் ஸ்ரீதரின் கையைப் பிடித்துக் குலுக்கினான். முதுகில் தட்டினான். ஸ்ரீதரோ வாயைப் பிளந்து கொண்டு நின்றான்!

"நீச்சலுடை எவ்வளவு அழகென்றாலும் அதற்குள் இடப்படும் பொருளின் அழகுதான் அதன் உண்மையழகை நிர்ணயிக்கிறது. அதிகார் அம்பலவாணர் மனைவியைப் பத்மாவின் நீச்சலுடைக்குள் போட்டால் எப்படியிருக்கும்?" என்று சொல்லிச் சிரித்தான் சுரேஷ்.

சுரேஷின் நகைச்சுவையை அப்போது ஸ்ரீதர் இரசிக்கவில்லை. அவனுள்ளத்தில் ஒரே பரபரப்பு! மேடையில் நின்றவாறு பத்மா அவனை நோக்க, ஸ்ரீதரும் அவளை நோக்கினான். இருவர் கண்களும் ஒன்றையொன்று தழுவ உள்ளங்களும் இறுகத் தழுவிக் கொண்டன.

போட்டியைத் தொடர்ந்து பரிசளிப்பு வைபவம் ஆரம்பித்தது. பலர் மேடை மீது பாய்ந்து அழகிகளின் கைகளைக் குலுக்க ஆரம்பித்தனர். அவர்களைக் கீழே இறக்குவது அழகுப் போட்டி அமைப்பாளர் திருமதி ஜயசிங்காவுக்குப் பெரிய பாடாய்ப் போய்விட்டது!

பத்மாவுக்குத் திருமதி ஜயசிங்கா நீச்சல் ராணிக்குரிய முடியைச் சூட்டிக் கையில் ஒரு செங்கோலையும் கொடுத்தார். ‘டைகர் கிளப்’ தலைவர் ஆயிரம் ரூபா ‘செக்’கையளித்தார். அதன் பின் சப்பாத்துக் கம்பெனிகள், சோப்புக் கம்பெனிகள், நகை வியாபாரிகள், உடுதுணி வியாபாரிகள் என்போர் பாதரட்சைகளையும், வாசனைப் பொருளகளையும் நகைகளையும் சேலைகளையும் பரிசாக அளித்தார்கள். சபை முழுவதும் ஒரே கரகோஷம்! ஆரவாரம்! அதைத் தொடர்ந்து ஆட்டம், பாட்டு, வாத்திய சங்கீதம் எழுந்தது. பைலா நடனம், டுவிஸ்ட், ரொக் அண்ட் ரோல் எல்லாம் அல்லோலகல்லோலப்பட்டன. களியாட்டக்காரர்கள் தம்மை மறந்து வெறியாட்டம் போட்டார்கள். உலகமே இன்பமயமாகிவிட்டது. பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் அங்குமிங்கும் நின்றிருந்த அழகு மோகினிகளை முக்கியமாகப் பத்மாவைப் படம் பிடித்துக் கொண்டு நின்றார்கள். பத்மா, யாரோ அவள் கையில் கொண்டு வந்து திணித்த சொக்கலேட்டுகளைச் சுவைத்துக் கொண்டு நின்றாள். வாழ்க்கையே கரும்பாகச் சுவைத்தது அவளுக்கு!

சரியாக நாலு மணிக்கு ஸ்ரீதரும் பத்மாவும் தங்கள் நீச்சலுடைகளைக் களைந்து சாதாரண உடைகளை உடுத்துக் கொண்டு ஜன சந்தடியற்ற ஹோட்டல் மேல்மாடி நிலா முற்றமொன்றில் டாக்டர் சுரேசுடன் தேநீர் அருந்த உட்கார்ந்தார்கள். அல்பேர்ட் கிழவன் சிற்றுண்டி பரிமாறி விட்டு, பத்மாவுக்குக் கிடைத்த பரிசுகளை ஸ்ரீதரின் காரில் கொண்டு போய் ஏற்றினாள்.

அவ்வேளையில் அங்கு அழையா விருந்தாக வந்து சேர்ந்தனர் அதிகார் அம்பலவாணரும் மாஜி பிரைட்டன் நீச்சலழகி வள்ளியாச்சியும்.

அதிகார், "தம்பி ஸ்ரீதர்! பத்மாவுக்கு எப்படியும் முதலிடம் கொடுக்க வேண்டுமென்று அவளைப் பார்த்ததும் நான் தீர்மானித்துவிட்டேன் . அப்படியே கொடுத்தும் விட்டேன். பார்த்தாயா?" என்றார் பெருமையோடு.
"அவள் தானே எல்லோரிலும் அழகி. ஆகவே நீர் அப்படிச் செய்ததில் தப்பில்லை. உங்களது அழகுச் சுவையை யாரும் குறைத்துக் கூற முடியாது." என்றான் சுரேஷ் சிறிது விஷமமாக.

அதிகார் சுரேஷைப் பார்த்து "நீர் யார்?" என்று கேட்டு விட்டு "ஸ்ரீதருக்காக நான் செய்தது இது!" என்றார்.

"இல்லவே இல்லை. பத்மாவைத் தெரிந்தெடுக்காமல் நீங்கள் வேறு யாரையாவது தெரிந்திருந்தால் எல்லோரும் உங்களைப் பரிகாசம் செய்திருப்பார்கள். "உங்கள் கண் பொட்டையா?" என்று கூடக் கேட்டிருப்பார்கள். நீங்கள் முறையாக நடந்து உங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொண்டீர்கள்," என்றான் ஸ்ரீதர். பக்கத்திலிருந்த பத்மாவுக்கு இவற்றைக் கேட்கக் கேட்கப் பெருமையாக இருந்த போதிலும் சிறிது வெட்கமாகவும் இருந்தது.

அதிகாரால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை. பத்மா, ஸ்ரீதர் கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டு அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு வள்ளியாச்சியுடன் வெளியேறினார்.

ஏறக்குறைய நாலரை மணியளவில் பத்மாவும் ஸ்ரீதரும் நண்பன் சுரேசுடன் தங்கள் காரை நோக்கிச் சென்றார்கள். களியாட்ட விநோதர்களின் கூட்டம் பெரிதும் கலைந்து போய் விட்டதென்றாலும் ஒரு சிலர் மட்டும் அங்குமிங்கும் இன்னும் நீச்சலுடைகளில் திரிந்து கொண்டே இருந்தார்கள்.

சுரேஷ் அப்பொழுது திடீரென்று, "பத்மா இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு நான் தான் காரணம். பூவா தலையா போட்டுப் பார்த்தபோது தலை விழுந்திருக்காவிட்டால், பத்மா போட்டியில் கலந்து கொண்டிருக்கா மாட்டாளல்லவா?" என்றான்.

ஸ்ரீதர் "தலை விழுந்ததற்கு நீ எப்படிக் காரணம்? அதிர்ஷ்ட நிலையின் படி அது விழுந்தது." என்றான்.

சுரேஷ் "அது தான் இல்லை. இதோ பார் நான் நினைத்த நேரமெல்லாம் தலையையே விழச் செய்கிறேன்." என்று சொல்லிவிட்டுத் தன்னிடமிருந்த காசை மேலே சுண்டினான். கீழே புல்லில் அது விழுந்தது. தலையே வீழ்ந்திருந்தது. சுரேஷ் அதை எடுத்து மீண்டும் மேலே சுண்டினான். தலையே மீண்டும் விழுந்தது.

"இது என்ன ஆச்சரியம். உங்கள் நண்பர் சுரேஷ் மிகவும் கெட்டிக்காரர்!" என்றாள் பத்மா.

சுரேஷ் "அதுதான் இல்லை. இதோ காசைக் கையிலெடுத்துப் பாருங்கள்." என்று சொல்லிக் காசைப் பத்மாவின் கையில் கொடுத்தான். காசின் இரண்டு பக்கமும் தலை! அவள் "ஓ! அப்படியா சங்கதி" என்று சொல்வதற்கிடையில் மற்றொரு காசை எடுத்து ஸ்ரீதரின் கையில் கொடுத்தான் சுரேஷ். அதன் இரண்டு புறமும் பூ! ஸ்ரீதருக்கு ஒரே வியப்பு.

"இவை இரண்டையும் நீங்கள் என் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள். நான் இப்பொழுது எனது ஓய்வு நேரத்தில் மந்திர விந்தை படிக்கிறேன். ஜயசேகர் மாயாஜாலப் பள்ளியில். அங்கு நான் கற்ற வித்தைகளில் இது ஒன்று" என்றான் சுரேஷ். பிற்பகல் முழுதும் சுரேஷ் ஏன் சிரித்துக் கொண்டேயிருந்தான் என்று இப்பொழுதுதான் ஸ்ரீதருக்குப் புரிந்தது.

ஸ்ரீதரின் கார் காலி ரோட்டில் ஏறிக் கொட்டாஞ்சேனையை நோக்கிப் பிய்த்துக் கொண்டு போக ஆரம்பித்த போது பத்மாவின் மனதில் புதிய பயங்கள் பிறந்தன. அப்பாவுக்கு நீச்சலழகிப் போட்டியைப் பற்றி எப்படி விளக்கம் தருவது என்பதே அது. ஸ்ரீதரிடம் " நீங்கள் இன்று என்னுடன் வீட்டுக்கு வர வேண்டும். இந்தப் போட்டி பற்றி நீங்கள் தான் அப்பாவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னை கோபித்துக் கொள்வார்" என்றாள் பத்மா. "ஆகட்டும்" என்றான் ஸ்ரீதர். சுரேஷை கூடவே தங்கள் வீட்டுக்கு வர வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள் அவள். அதன் பின் அன்றைய நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட உடற் களைப்புத் தீர "அம்மாடி" என்று கார் ஜன்னலோடு சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் அவள்.

அதே நேரத்தில் பம்பலம்பிட்டிக்குத் தாம் தங்கியிருந்த தமது மருமகள் வீட்டுக்கு ‘டாக்சி’யில் போய்க் கொண்டிருந்த அதிகார் அம்பலவாணர், வள்ளியாச்சியிடம் "டார்லிங் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் சிவநேசரைக் கண்டு இந்த ஸ்ரீதரின் விஷயத்தை அவரோடு பேச வேண்டும். அவன் இங்கே பெண் பிள்ளைகளுக்குப் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறான் போல் தெரிகிறது." என்றார்.

"பணக்கார ஆண்பிள்ளை. கொழும்பிலே எடுபட்ட பெட்டைகளுக்கும் குறைவில்லை பொலிருக்கிறது. உங்களுக்கேன் இந்த வம்பு! பேசாமலிருங்கள்" என்றாள் வள்ளியாச்சி.

அதிகார் அதற்குப் பதிலொன்றும் சொல்லவில்லை.


[தொடரும்]