Saturday, July 19, 2008

தொடர்நாவல்!
மனக்கண்
- அ. ந. கந்தசாமி-



[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ]

9-ம் அத்தியாயம் அதிகார் அம்பலவாணர்

காதலுக்கு இருக்கும் புதுமையான பண்புகளில் ஒன்று, அது ஆண்களைப் பெண்மை நிறைந்தவர்களாகவும், பெண்களை ஆண்மை நிறைந்தவர்களாகவும் ஆக்கிவிடுவது தான். காதலின் வயப்பட்ட ஆண்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும் சிறு விஷயங்களைப் பற்றிக் கூட அதிகமாக எண்ணி எண்ணிக் கலங்குபவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். பெண்களோ காதலின் உச்சத்திலே சத்தியவானை நேசித்த சாவித்திரியைப் போல் எமனையும் எதிர்த்துப் போராடத் துணிந்து விடுகிறார்கள்.

கல்க்¢சை என்னும் இலங்கையின் மிகப் பிரசித்தி பெற்ற மவுண்ட் வவீனியாக் கடற்கரையில்லே தன் காதற்கிளி பத்மாவைப் படமாக வரைய விரும்பிய ஸ்ரீதர் அடுத்த நாள் முழுவதும் அது பற்றிச் சிந்தப்பதிலேயே செலவிட்டான். அவளை எப்படி உட்கார வைக்க வேண்டும், என்ன உடையை அணியச் செய்ய வேண்டும். அமைதியான உயர்குல யாழ்ப்பாணக் குடும்பப் பெண்ணைப் போலச் சேலையால் உடம்பை நன்கு போர்த்தச் செய்து, தலையில் பூவுடனும், நெற்றியில் செஞ்சாந்துத் திலகத்துடனும் தங்கள் வீட்டிலே மாட்டியிருக்கும் அம்மாவின் படத்தைப் போல எழுதுவோமா, அல்லது அவளது அலையலையாக அவிழும் மேகக் கூந்தலை, ஒரு புறத் தோள் வழியாக அவள் எடுப்பான மார்பில் ஏறி இறங்க வைத்து, சினிமா நடிகை போல சிங்காரமாக எழுதுவோமா என்பது போன்ற பல பிரச்சினைகளை ஆராய்ந்து கொண்டிருந்தான் அவன்.

இளமையில் கனவிலே மிதக்கும் ஓர் ஆடவனுக்குத் தன் காதலி கண்ணகி போல் பத்தினியாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் மாதவி போல் மனதுக்குக் கிளர்ச்சி தரும் மாயக்காரியாகவும் இருக்க வேண்டும். இது இன்றைய நேற்றைய கனவல்ல. முற்காலத்திற் கூட இலட்சிய மாது, அன்னை தயையும், அடியாள் பணியும் கொண்ட பத்தினிப் பெண்ணாக இருந்தால் மட்டும் போதாது. “வள்ள முலை மாது” போல் பஞ்சனையில் இன்பத் துயில் தருபவளாகவும் இருக்க வேண்டுமென்றே கருதப்பட்டது. அதனால் தான் ஸ்ரீதரும் பத்மாவை வெவ்வேறு விதமாகக் கற்பனை செய்து பார்த்தான் அன்று.

பத்மாவைப் பொறுத்த வரையில் கொடி போன்ற பெண்மையும் சித்திரப்பாவை போன்ற கட்டும் கொண்ட அவளது வண்ண உடல் எந்தப் “போசி”ற்கும் பொருத்தமானதே. நீச்சலுடையில் கூட நேர்த்தியாகத் தானிருப்பாள். மேல் நாட்டு நடிகையர் கூட அவளிடம் தோற்கும்படி ஏற்படும். ஆனால் இந்த விதமான செயற்கைப் ‘போஸ்’களை விட்டு விட்டு வேறு விதமாகவும் அவளை எழுதலாம். பல்கலைக் கழக மாணவி என்ற அவளது தினசரி கோலத்தில் கூட அவள் அழகாய்த் தான் இருப்பாள். ஏன் சில சமயம் அவள் வீட்டிலிருப்பது போல் அவள் சிற்றிடையை அழுத்திக் காட்டும் அவளது பெரிய பூவிட்ட ‘கவுனை’யோ, பாவாடை சட்டையையோ அணியச் செய்து, அந்தத் தோற்றத்தில் கூட அவளைத் தீட்டலாம். இன்னும் குற்றமற்ற மலர் போல் அவள் தோன்ற வேண்டுமாயின் தாவணி அணியச் செய்து அந்தத் தோற்றத்தில் நாலைந்து வர்ணங்களில் அவளை வானவில் போல் கூட வரைந்து விடலாம். ஏன், காலோடு காலாக ஜட்டி, உடம்பின் மேடு பள்ளங்களையும், வளவு நெளிவுகளையும் கவினுறக் காட்டும் ‘ஜீன்ஸ்’ என்னும் மெல்லியலார் காற்சட்டையை அணியச் செய்தும் அவளை எழுதலாம். “ஆனால் இவற்றில் எவ்வாறு நான் அவளைத் தீட்டப் போகிறேன்? அவளுக்கு எல்லம் அழகாய்த் தானிருக்கும். என்னால் இதில் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லையே! என்ன செய்வேன்?” என்று சிறிய பிரச்சினைகளை எல்லாம் பெரிதுபடுத்திக் கொண்டு, சிறு பெண் போல் கவலைப் பட்டான் அவன். இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகள் எழும்போது, அவன் கலந்தாலோசிக்கும் அவனது நண்பன் சுரேஷிடம் இதைப் பற்றிக் கலந்தாலோசிக்கலாமென்றாலோ, சில காலமாகச் சுரேஷைச் சந்திப்பதே அரிதாகிவிட்டது. சீமைக்கு மேல் படிப்பிற்காகப் போவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த அவன் விசா கந்தோருக்கும் தானாதிபதி காரியாலயங்களுக்கும் வெள்ளவத்தையிலிருந்த அவனது உறவினர் கடைக்குமிடையே பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருந்தான். அத்துடன் இது போன்ற சின்ன விஷயத்தை அவனிடம் பேச ஸ்ரீதருக்கு முன்னில்லாத வெட்கங் கூட இப்பொழுது பிறந்திருந்தது!

இவ்வாறு ஸ்ரீதர் கலங்கிக் கொண்டிருக்க, பத்மாவோ தான் அண்மையில் சில விஷயங்களில் எவ்வளவு துணிவாக நடந்து கொண்டாள் என்பதை நினைந்து நினைந்து வியந்து கொண்டிருந்தள். பெண்களுக்கு இயல்பாயில்லாத ஆண்மையுணர்ச்சியுடன் தான் காரியங்களைச் செய்து வருவதாக அவளுக்குப்பட்டது. உதாரணமாக அவள் ஸ்ரீதருடன் இரண்டு தடவைகள் தந்தைக்குத் தெரியாமல் கள்ளமாக வெளியே போய்விட்டு வந்தமை அவளுக்கே அளவிட முடியாத ஆச்சரியத்தைத் தந்திருந்தது. ஒன்று ஐஸ்கிறீம் பார்லருக்குப் போய் வந்தமை, மற்றது தெகிவளை மிருக வனத்துக்குப் போய் வந்தமை. “அதுவும் சும்மா போய் விட்டு வந்தேனா? பார்ப்பவர்கள் புதிதாக மண முடித்த இளம் ஜோடிகள் என்று எண்ணும்படி உடலோடு உடல் உராய, மிருக வனத்தில் என்னென்னவெல்லாம் செய்து, எதை எதை எல்லாம் பேசி, எப்படி எப்படி எல்லம் நடந்துகொண்டோம்!” என்று சிந்திந்தாள் அவள். “ஆனால் நான் இப்படி அப்பாவுக்குத் தெரியாமல் நடந்தது சரியா? அது அவரை ஏமாற்றியது போலத்தானே? என்றாலும் காதல் விஷயங்களைப் பெற்றோரறியும்படியாகச் செய்ய முடியுமா? இந்தச் சிக்கலால் தான் பல பெண்களும் ஆண்களும் காதல் புரிவதற்கே அஞ்சிக் காதல் புரியாமலே இருந்து விடுகிறார்கள். ஆனால் அதுவும் தப்புத்தான். வாழ்க்கையின் முக்கியமான அனுபவமொன்றைப் பெறாவிட்டால் அந்த வாழ்க்கையின் பயன் தான் என்ன? அதனால் தான் அந்தக் காலத்திலிருந்தே காதலருக்குக் களவு முறைகளை அனுமதித்துள்ளார்கள் நமது ம்ன்னோர்கள். பழைய காலத்திலும் களவு காதலில் ஈடுபட்ட தலைவி தன் பெற்றோரை ஏமாற்றத் தானே செய்தாள்? இன்று நான் அப்பாவை ஏமாற்றுகிறேன். நிச்சயம் எனக்குப் பிறக்கும் மகனும் மகளும் கூட எனக்குத் தெரியாமலே இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யத்தான் செய்வார்கள். அவர்கள் என்னை ஏமாற்றுவார்கள். இதுதான் உலக நியதி போலும்” என்று கூட நினைத்தாள் அவள்.

ஆனால் ஸ்ரீதருடன் படமெழுதுவதற்காகக் கடற்கரைக்கு மேற்கொள்ளவிருந்த பிரயாணத்தையும் மிருகவனத்துக்குச் சென்றது போலவே கள்ளத்தனமாகத் தந்தைக்குத் தெரியாமல் செய்வது சரியா? - தற்செயலாக அப்பாவுக்குத் தெரிந்த யாராவது தன்னை ஸ்ரீதருடன் அங்கே கண்டுவிட்டு, அதை அப்பாவிடம் வந்து சொன்னால் நிலைமை என்ன? விஷயங்கள் எவ்வளவு குளறுபடியாகி விடும்? உண்மையில் அப்பா நான் ஸ்ரீதருடன் அளவாக ஊர் சுற்றுவதையோ, நெருங்கிப் பழகுவதையோ ஆட்சேபிக்கா மாட்டாரென்றாலும், இன்னும் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் படிப்பென்ன ஆகும் அன்று அஞ்சமாட்டாரா? மேலும் மண முடிக்காது ஆணோடு நெருங்கிப் பழகும் பெண் தன்னைப் பெரிய ஆபத்துகளுக்கு ஆளாக்கிக் கொள்ளவும் கூடும். நெருங்கிப் பழகும் ஆண் பெண்கள் எவ்வளவு நாட்களுக்குக் களவொழுக்கத்தில் ஈடுபடாமல் இருக்க முடியும்? அவ்வித விஷப் பரீட்சைகளினால் முடிவில் பெண் தாய்மை நிலையை அடைந்து விட்டால், அதனால் ஏற்படும் சமுதாய அபவாதத்தையும் சிறுமையும் எப்படிச் சமாளிப்பதென்ற கவலையும் பொறுப்புள்ள தந்தை என்ற முறையில் அப்பாவுக்கு இருக்குமல்லவா? - இவ்விதம் பலவாறு சிந்தித்த பத்மாவுக்கு நிலைமையைச் சமாளிக்க ஒரே ஒரு வழிதான் தென்பட்டது. அடுத்த வீட்டு அன்னம்மாவைத் துணைக் கொண்டு பிரச்சினையைத் தீர்க்க முயல வேண்டுமென்பதே அது.

அன்னம்மா அடுத்த வீட்டு அன்னம்மா என்றே பரமானந்தர் வீட்டிலும், அன்னம்மா வீட்டுக்கு அந்தப் புறமிருந்த அவிஸ் நோனா வீட்டிலும் அழைக்கப்பட்ட போதிலும் பரமானந்தர் வீட்டைப் பொறுத்த வரையில் அவள் உண்மையில் ஓர் உள் வீட்டு உறவுக்காரியாகவே இருந்தாள். நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் பத்துத் தடவைகளாவது பின்புற வாயில் வழியாகப் பரமானந்தர் வீட்டுக்கு வந்து போகும் பழக்கத்தையுடைய அன்னம்மா புருஷனை இழந்து விதவையான காலம் தொட்டு, அந்த முழுத் தோட்டத்துக்கும் கொலீஜ் ரோட் தபால் கந்தோருக்குப் பக்கத்தேயிருந்த அந்தோணியார் போசன சாலைக்கும் உருசியான தோசைகளைச் சுட்டுக் கொடுத்துத் தனக்கென்று பெரும் புகழ் சம்பாதித்துக் கொண்டவள். அது மட்டு மல்ல, பரமானந்தர் வீட்டுக்கும், 48/33ம் இலக்க வீட்டிலிருந்த பாட சாலை வாத்தியார் மூவருக்கும் வெற்றிலைக் கடை வேலாயுதக் கிழவனுக்கும் அவள் தான் மத்தியான உணவு கொடுத்துக் கொண்டிருந்தாள். இவற்றால் கிடைக்கும் வருமானத்தை வைத்தே அவளது செலவுகளும், அவளது வேலையில்லாத் ஒரே மகனான ‘திராவிடதாசன்’ என்று தன் பெயரை ‘ரிப்பெயர்’ செய்திருந்த சிங்கார வேலுவின் சினிமாச் செலவுகளும் தடங்கலில்லாமல் நடைபெறக் கூடியதாயிருந்தன.

பத்மா அன்னம்மா வீட்டுக்குப் பின்புற வாசல் வழியாகப் போன போது அன்னம்மா அடுப்பு வெக்கையில் உட்கார்ந்து தோசைகளைத் தடவைக்கு இவ்விரண்டாகச் சுட்டு அடுக்கிக் கொண்டிருந்தாள். புகைக்கும் நல்லெண்ணெய்த் துணியால் தோசைக் கல்லை அழுத்தித் துடைத்து, அகப்பையால் அதில் தோசை மாவை ஊற்றிச் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த போதிலும், வாய்க்கு ஓய்வு கொடுக்காமல் அடுப்புக்குப் பக்கத்தில் ஒரு பலகையில் உட்கார்ந்திருந்த அவிஸ் நோனாவுடன் ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தான் அவள். அந்தோணியார் போசன சலைக்கு அனுப்ப வேண்டியதை நன்றாக விடியு முன்னரே அவள் சுட்டு அனுப்பி விடுவது வழக்கம். இப்போது அவள் சுட்டுக் கொண்டிருந்தது தோட்டத்து “ஓடர்”களுக்காகவும் மகன் திராவிடதாசன் உண்பதற்காகவும் தான். தோசைக் கல்லில் ‘சொய்’யென்று சுடுபட்டுக் கொண்டிருந்த அன்னம்மாவின் இரட்டைத் தோசைகளின் வாசம் தோட்டத்திற் பாதி தூரமாவது வியாபித்துக் கொண்டிருக்க, அரட்டைக் கார அவிஸ், தோட்டத்துப் புதினங்களைப் பற்றித் தனது காலை விமர்சனத்தை அப்பொழுது நடத்திக் கொண்டிருந்தாள்.

அன்னம்மாவின் சூடான தோசைகளின் உருசிக்கு எவ்விதத்திலும் அவிசின் சூடான விமர்சனக் குறிப்புகளின் உருசி குறைந்ததென்று சொல்ல முடியாது. அவள் தனக்குத் தெரிந்த சிங்களத் தமிழில் தனது பேச்சுகளை நிகத்திக் கொண்டிருக்க, அன்னம்மாவும் தனக்குத் தெரிந்த தமிழ்ச் சிங்களத்தில் தன் கருத்துகளை இடையிடையே கூறிக் கொண்டிருந்தாள். அவர்கள் உண்மையில் அங்கே ஒருவர் மொழியை ஒருவர் கொலை செய்து கொண்டிருந்தார்கள். ஒருத்தியின் மொழிக் கொலையை மற்றவள் பழிவாங்குவது போல இருந்தது அவர்கள் பேசிக் கொண்டிருந்த தோரணை. அன்னம்மா தனக்குச் சிங்களம் தெரியுமென்பதைப் பிரகடனம் செய்யவும், அவிஸ் தனக்குத் தமிழ் தெரியும் என்பதை அறிவிக்கவும் அவ்வாறு ஒருத்தி மொழியில் மற்றவள் பேசிக் கொண்டாள் போலும்!

குசுமா வீட்டுக்கு எதிர் வீட்டிற்குப் புதிதாக வந்திருக்கும் ஓர் இ. போ. ச. பஸ்கண்டக்டர் குசுமாவுக்கு வலை வீசுவதாகக் கூறிய அவிஸ், “பாவம், அவனுக்குக் குசுமாவுக்கு ஒரு கள்ளப் பிள்ளை இருப்பது இன்னும் தெரியாது போல” என்று குறிப்பிட்டாள். “ஆனால் அந்த இளந்தாரி தான் என்ன செய்வான்? குசுமா தங்கள் வீட்டு வாசலிலே எந்த நேரமும் நின்று கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தால் ஆண் பிள்ளையால் சும்மா இருக்க முடியுமா?” என்று கேட்டாள் அவிஸ். அன்னம்மா அவிஸ் காதில் குனிந்து “குசுமாவுக்குச் சரியான மோகினிப் பிசாசுதான் பிடித்திருக்கிறது. முந்தா நாள் சிங்காரம் குளிக்காம்பரைக்குக் குளிக்கப் போன போது, வழியிலே இரண்டு பேரும் ஏதோ சிரித்துச் சிரித்துப் பேசுவதை நான் இங்கே வாசலிலே இருந்தே பார்த்து விட்டேன். அவர் குளிச்சிட்டு வந்ததும் “உனக்கென்னாடா குசுமாவோடு பேச்சு! மற்றவன் பிள்ளையை வளர்க்கப் போகிறாயா?” என்று சரியாகக் கொடுத்தேன். “ஆள் இப்போது பயந்து போய் விட்டார். அடங்கிப் போயிருக்கிறார்” என்று இரகசியமாகக் குசுகுசுத்தாள்.

பத்மா அன்னம்மாவின் வீட்டின் உட்புறத்தில் திராவிட தாசன் இருக்கிறானா என்று பார்த்த போது முன்னாள் இரவு எம்.ஜி.ஆர். படம் இரண்டாம் காட்சி பார்த்த களைப்பால் அவன் அங்கே இருந்த ஒரு சாக்குக் கட்டிலில் இன்னும் நீண்டு படுத்துக் குறட்டை விட்டுக் கொண்டிருந்ததைக் கண்டாள். இதற்கிடையில் அவிஸ் பிற்காளில் தோசையோடு புறப்படத் தயாராகிவிட்டாள். அவன் அங்கிருந்து போகு முன்னர் பத்மாவின் கன்னத்தைத் தன் கைகளால் கிள்ளி, “பெம்ப்பிளை பெரிய பெம்பிளையா வளர்ந்திட்டா, எப்போ கலியாணம்” என்று வேடிக்கையாகக் கூறி விட்டுப் போனாள். பத்மா பதிலுக்கு அவளைத் தன் கைகளால் குட்ட்ப் போவது போல் பாசாங்கு செய்தாள்.

அன்னம்மாவுடன் தனிமையில் விடப்பட்டதும் பத்மா “அன்னம்மாக்கா நீங்கள் ஒரு பெரிய உதவி எனக்குச் செய்ய வேண்டும். செய்வீர்கலா?” என்றாள்.

“என்ன உதவி தங்கச்சி! சொல்லு, செய்கிறேன்.” என்றாள்.

“எனக்குச் சொல்ல வெட்கமாயிருக்கிறது!”

"அப்படியானால் எனக்கு விஷயம் என்னவென்று தெரியும். ஸ்ரீதரைப் பற்றி அப்படித்தானே?”

“முற்றிலும் சரி. உங்களுக்குச் சாஸ்திரம் கூடத் தெரியும் போல்!”

“தெரியும். தோசைச் சாஸ்திரம். தோசை ‘சொய்’யென்று சப்தம் போட்டால் அது ஸ்ரீதரைப் பற்றி என்று அர்த்தம்.”

தோட்டத்திலே அன்னம்மா ஒருத்திக்குத் தான் ஸ்ரீதர்-பத்மா பற்றிய விஷயங்கள் முற்றிலும் தெரியும். பரமானந்தரும் பத்மாவும் அவற்றை அவளுக்கு மறைக்க முயற்சி செய்யாமல், எல்லாவற்றையும் கூறியிருந்தார்கள். ஒரு நாள் அன்னம்மா ஸ்ரீதரைப் பார்த்துவிட்டு “மாப்பிள்ளை என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும்! சினிமா நடிகன் தோற்றுப் போவான் உன் ஸ்ரீதரிடம்.” என்று கூடக் கூறியிருக்கிறாள். அன்று தொடக்கம் பத்மாவுக்கு அன்னம்மா மீதுள்ள அன்பும் மதிப்பும் பல நூறு மடங்கு அதிகரித்துவிட்டன!

பத்மா அன்னம்மாவிடம் “அக்கா! நாளை என்னைத் தன்னோடு கடற்கரைக்குப் ‘பிக்னிக்’ போக அழைத்திருக்கிறார் ஸ்ரீதர். எப்படியும் போக வேண்டும். நான் நினைத்தால் அப்பாவுக்குத் தெரியாமல் போய் விடலாம். ஆனால் அது சரியில்லை. அப்பாவைக் கேட்டால் நிச்சயம் மறுக்க மாட்டார். ஆனால் எப்படியக்கா வெட்கமில்லாமல் நான் இது பற்றி அப்பாவிடம் பேசுவேன்? நீ சொல்லி விடுகிறாயா?” என்றாள்.

“ஆ, இது தானா? நீ போ. தோசை சுட்டு முடித்ததும் நான் வந்து பேசுகிறேன். எப்படியாவது நாளைக்கு ஸ்ரீதரோடு உன்னை ஊர் சுற்ற அனுப்பினால் சரிதானே?”

பத்மா திருப்தியோடு புன்னகை செய்து “ஆம்” என்று தலை அசைத்தாள்.

“ஆனால் ஒன்று. குசுமா போல் தெரியாத்தனமாக நடந்து கொள்ளாதே. கல்யாணம் ஆகும் வரை ஆண் பிள்ளைகளோடு பழகுவதே ஆபத்து. ஆனால் இப்போதெல்லாம் புது மாதிரி. என்றாலும் புத்திசாலித் தனமாக நடந்து கொள்.” என்றாள் அன்னம்மா.

பத்மா அங்கிருந்த சூடான தோசை ஒன்றில் ஒரு துண்டைப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு “வருகிறேன்” என்று புறப்பட்டாள்.

அன்று மத்தியானம் வழக்கம் போல் பத்மா வீட்டுக்கு உணவு கொண்டு வந்த அன்னம்மா சுருட்டுப் பிடித்துப் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த பரமானந்தரிடம் விஷயத்தை மெல்ல ஆரம்பித்தாள்.

“ஸ்ரீதர் பத்மாவை நாளைக்கு எங்கோ ‘பிக்னிக்’ போக அழைத்திருக்கிறானாம். அதை உங்களிடம் பேச பத்மாவுக்கு வெட்கம். தாயில்லாத பிள்ளை. என்ன செய்யும்.? என்னிடம் வந்து சொல்லிற்று. நான் உங்களிடம் பேசி நாளைக்கு எப்படியும் அவளை ஸ்ரீதருடன் அனுப்பி வைப்பதாகச் சொன்னேன்.”

“ஓ, அப்படியா? தாயில்லாத பிள்ளைக்கு நீதான் அப்போ தாய். சரி, போகச் சொல்லு. ஆனால் ஓர் ஆண் பிள்ளையோடு எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று புத்தி சொல்லிக் கொடுக்க மட்டும் மறக்க வேண்டாம். ஸ்ரீதர் யோக்கியமான பையன். ஆகவே இதில் நாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்றார் பரமானந்தர்.

அன்னம்மா “நான் பத்மாவுக்கு இந்த விஷயங்களை பற்றி எவ்வளவோ புத்திமதிகள் முன்னரே சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அத்துடன் நல்ல பெண். இல்லாவிட்டால் உங்களுக்குத் தெரியாமலே பள்ளிக்குப் போவது போல் கள்ளத்தனமாகப் போயிருக்கலாமல்லவா? அப்படித்தானே இந்தக் காலத்தில் ஆணென்ன, பெணென்ன, பிள்ளைகள் செய்கின்றன?” என்றாள்.

பரமானந்தர் “அது எனக்குத் தெரியும் அன்னமா. இல்லாவிட்டால் நான் ஒரு பெரிய குழந்தைக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்திருப்பேனா என்ன? பத்மாவுக்கு மிகவும் நிதான புத்தி” என்றார்.

அன்னம்மா போனதும் பரமானந்தர் பத்மாவின் புத்திசாலித்தனத்தையும் களவின்மையையும் வியந்து கொண்டார். மற்றப் பெண்கள் போல் சுதந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, ஊர் சுற்றாமல் பத்மா எவ்வளவு அடக்கமாக நடந்து கொள்கிறாள் என்று அவர் மெச்சினார்! பாவம் பரமானந்தர், இளமையின் சூழ்ச்சிகள் அவருக்கு என்ன தெரியும்? ஐஸ்கிறீம் பார்லரிலும், மிருக வனத்திலும் பத்மாவும் ஸ்ரீதரும் செய்து கொண்ட காதற் செய்கைகளை அவர் கண்டிருந்தால், அவர் அப்படி நினைத்திருப்பாரா, என்ன?

அடுத்த நாட் காலை பத்மா குளித்து முழுகி அரம்பை போல் அலங்காரம் செய்து கொண்டு அப்பாவிடம் வந்து “அப்பா! நான் போய் வருகிறேன். மூன்று மணிக்கு வந்து விடுவேன்” என்ற பொழுது அவர் தாராளமான மனதோடு “இருட்டு முன் வந்தால் போதும். ஸ்ரீதரிடம் நேரமிருக்கும்போது இங்கு வரச் சொல்” என்று குறிப்பிட்டார்.

பத்மா துள்ளூம் நெஞ்சுடன் வீதியின் இறங்கி நடக்க, மலர்ந்து மணம் வீசும் சிவந்த ரோஜா போல் விளங்கும் தன் பருவ மகளின் இன்றைய நிலையைக் காண அவளது அன்புத் தாய் இப்பொழுது தன் அருகில் இருக்க, தான் கொடுத்து வைக்கவில்லையே என்று கவலையடைந்த பரமானந்தர், ஈரமாகி வந்த தன் கண்களிரண்டையும் தனது விரல்களால் கசக்கிக் கொண்டார்.

ஸ்ரீதரும் பத்மாவும் ஏறக்குறையப் பத்து மணிக்குச் சூரிய ஒளியில் பளிச்சென்று விளங்கிய கல்கிசைக் கடற்கரையை அடைந்த போது, ஸ்ரீதர் அங்கே காணப்பட்ட திரளான ஜனங்களைக் கண்டு திகைத்து விட்டாள். அவனுக்கு அங்குள்ள ஹோட்டல் நன்கு பழக்கப்பட்ட இடமாதலால், நேரே காரை ஹோட்டல் வளவுக்குள் கொண்டு போய் அங்கு நின்ற பெருந் தொகையான கார்களுக்கு நடுவே எப்படியோ ஓரிடத்தைப் பிடித்து நிறுத்தி விட்டு, பத்மாவைத் தன் ஒரு கரத்தால் அணைத்த வன்ணம், ஹோட்டல் நந்தவனத்தில் மெத்தென்ற மரகதப் புற்றரையில் தென்னை மரங்களுக்கு இடையே இடப்பட்டிருந்த மேசைகளை நோக்கி நடந்தான். கடலில் நீந்துவதில் பிரியமுள்ள ஸ்ரீதர் வாரத்துக்கு ஒரு தடவையோ, இரு தடவையோ ஹோட்டலிலிருந்த ஸ்நான மண்டபத்துக்கு வருவது வழக்கமானதால், அங்குள்ள ஊழியர் பலருக்கு அவனை நன்கு தெரிந்திருந்தது. ஸ்ரீதரையும் பத்மாவையும் கண்டதும் அவர்களிலே மிகவும் வயோதியனான அல்பேர்ட் ஸ்ரீதரை நோக்கி வந்து, பெரிய பூக்குடை ஒன்று பொருத்தப்பட்டிருந்த ஒரு மேசைக்கு அவனை வழிகாட்டிச் சென்றான். பத்மாவுக்கோ இவை எல்லாம் புதிய அனுபவங்கள். உண்மையில் இப்படிப்பட்ட பெரிய ஹோட்டலுக்கு அவள் போனது இதுவே முதல் தடவை. இருந்த போதிலும், எந்த இடத்துக்கும் ஏற்பப் புத்திசாலித்தனமாகவும் சலனமில்லாமலும் நடக்கும் நாகரிகப் பண்பு என்றுமே அவளுக்கு இயற்கையாக அமைந்திருந்ததால், அவள் மிக நாசுக்காகவே நடந்து கொண்டாள். இன்னும் அவளது பேரெழில் அவள் நாகரிகமாக நடக்காவிட்டால் கூட நாகரிகமாக நடப்பது போன்ற பிரமையை யாருக்கும் ஏற்படுத்தவே செய்யும். இந்த வகையில் தேக வனப்பு ஆணுக்கென்ன பெண்ணுக்கென்ன, பல இடங்களில் பல செளகரியங்களைத் தரத் தான் செய்கிறது.

பத்மா கம்பீரமாக உயர்ந்து தோன்றிய ஹோட்டலையும் , அதைச் சுற்றியிருந்த தென்னைகள் நிறைந்த சோலையையும், சிமெந்தினால் அழகுற அமைக்கப்பட்டு, நிலத்துக்குத் தக்கபடி உயர்ந்தும் தாழ்ந்தும் சில இடங்களில் படிக்கட்டுகளுடனும் விளங்கிய நடைபாதைகளையும், அவற்றின் ஓரங்களை அலங்கரித்த மலர்ப் பாத்திகளையும் ஹோட்டலுக்குப் பின்னே மல்லிகை மலர் போன்ற நுரையோடு கரை நோக்கித் திரண்டு வந்து வெடித்துக் குமுறிய அலைகளினால் உயிரோட்டம் கொண்டு விளங்கிய நீலக் கடற் படுதாவையும் பார்த்துப் பார்த்துப் புளங்காகிதமடைந்தாள். போதாதற்குக் கடற்காற்று வேகமாக வீசி வந்து உடல் முழுவதையும் தழுவி, தலை மயிரை முன்னும் பின்னும் அலைய வைத்து, உள்ளத்துக்கும் உடம்புக்கும் தென்பையும் இன்பச் சிலிர்ப்பையும் அளித்து இது பூலோகமோ அன்றிச் சுவர்க்க பூமியோ என்ற ஐயப்பட்டை அவளுக்கு ஏற்படுத்தியது.

ஆனால் இயற்கையும் செயற்கையுமான இந்தக் காட்சிகளை விட அந்த ஹோட்டலில் அப்பொழுது காணப்பட்ட மனிதர்களும் அவர்களது நவ நாகரிகப் போக்கும் தான் அவளை அதிகமாக கவர்ந்து ஒருவித மயக்கத்தை அவளுக்குக் கொடுத்தன. பல நூற்றுக் கணக்கான கவலையேயற்ற கந்தர்வர், கின்னர்கள், கிம்புருடர் போல் அங்கு திரிந்து கொண்டிருந்தார்கள். பல ஆண்களும் பெண்களும் குறுகிய நீச்சலுடைகளை அணிந்து சிரித்துப் பேசிக் குறும்புகள் செய்து குதூகலித்த காட்சி, தான் இருப்பது இலங்கையா அல்லது ‘மியாமி’ அல்லது ‘பிரைட்டன்’ கடற்கரையா என்று அவளை எண்ண வைத்தது. உண்மையில் இப்படிப்பட்ட காட்சிகளை மேற்சொன்ன கடற்கரைகள் பறிய ஆங்கில சினிமாப் படங்களில் தான் அவள் இதுவரை கண்டிருக்கிறாள். இலங்கையிலேயே அவை போன்ற இடங்கள் இருக்கின்றன என்பது அவளுக்கு இது வரை தெரியாது. பார்க்கப் போனால் கொட்டாஞ்சேனைக்கும் கல்கிசைக்கும் வெகு தொலைவில்லை. இருந்த போதிலும் இவற்றை எல்லாம் இது வரை அறியாது, கொழும்பிலேயே ஓர் அசல் பட்டிக்காடு மாதிரித் தானே நான் இருந்திருக்கிறேன் என்று வெட்கமும் அதிசயமும் அடைந்தாள் அவள். ஸ்ரீதரிடம் “இந்த இடம் எந்த நாளும் இப்படிக் கோலாகலமாகத்தான் இருக்குமோ?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் அவள். ஸ்ரீதர் புன்னகையோடு, “இல்லை, இன்று இங்கே ஒரு கார்னிவல் அல்லது களியாட்டு நடக்கிறது. கடற்கரைக் களியாட்டு எனது அதற்குப் பெயர். அதனால் தான் இவ்வளவு ஜனங்கள். இல்லாவிட்டால் குறைவுதான்” என்றான்.

பத்மா இப்பொழுது கண்களை நாலு புறமும் செதுக்கி நீச்சலுடையிற் சென்ற ஆண்களையும் பெண்களையும் அவர்களறியாமலே நன்கு அவதானிக்கலானாள். அவர்களில் சிலர் ஐரோப்பியர், சிலர் பறங்கியர், சிலர் சிங்களவர்கள், சிலர் மலாயர்கள். தமிழர்கள், தென்னிந்தியரும் சரி, இலங்கையரும் சரி அங்கு இருக்கிறார்களா என்பதை அவள் ஆவலுடன் அவதானித்தபோது ஒரு சிலர் மட்டும் அங்குமிங்கும் காணப்படவே செய்தார்கள். ஓர் இளம் ஜோடி அவளுக்கும் சமீபமாகச் சென்ற போது அவர்கள் தமிழர்கள் என்பதை எப்படியோ தெரிந்து கொண்டு அவர்களை மிகவும் கவனமாக அவதானித்தாள் பத்மா. அவர்களில் ஆண் கம்பீரமாகவும் மா நிறமாகவும் காணப்பட்டான் என்றாலும் அவனால் ஸ்ரீதருக்குக் கிட்ட வர முடியாது. பகட்டான பச்சை நிற ஸ்நான உடையும், கண்களில் கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருந்தால் அவனுக்குப் பக்கத்திற் சென்ற பெண்ணோ மிகவும் கறுப்பு. ஓரளவு பத்மாவின் தோழி தங்கமணியைப் போலத் தோன்றிய அவளது விட்டுப் போன்ற உடலை ஒரு மஞ்சள் நிற நீச்சலுடை இறுகப் பற்றியிருந்தது. அது அவளுக்கு ஒரு சொகுசான தோற்றத்தைத் தந்த போதிலும் அவள் மட்டும் சிவப்பாகவும் அழகாகவும் இருந்திருந்தால், எவ்வளவு நன்றாயிருக்கும் என்று யோசித்தாள் பத்மா.

அந்த யோசனையைத் தொடர்ந்து தானும் தனது கட்டழகன் ஸ்ரீதரும் நீச்சலுடை அணிந்து கடல் மண்ணில் துள்ளி விளையாடித் திரிவது போன்ற கவின் மிக்க கனவொன்றும் அவள் மனதில் மிதந்து வந்தது!

ஹோட்டல் நந்தவனத்தில் பல இடங்களில் ‘டைகர் கிளப் பீச் கார்னிவல்’ என்ற சிவப்புக் கொட்டை எழுத்துகளில் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக் கொடிச் சீலைகள் மரங்களுக்கு இடையே உயரமான இடங்களில் இறுக இழுத்துப் பாதைகளின் குறுக்கே கட்டப்பட்டிருந்தன. அவற்றையும் கவனித்தாள் பத்மா. சில சோப்புக் கம்பெனிகளும், குளிர்பானக் கம்பெனிகளும் அங்குமிங்கும் தமது விளம்பரங்களையும் கொடிச் சீலைகளிலே பொறித்துக் கட்டியிருந்தன.

பத்மாவுக்கு அவள் கண்ட காட்சிகள் பெரிய கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தன. அவளது மறைந்த கிடந்த ஆசைக் கனவுகள் பல உயிர்க் கொண்டு மனதில் கூத்தாடத் தொடங்கியிருந்தன! ஆனால் ஸ்ரீதருக்கோ அவ்வித அனுபவம் ஏற்படவில்லை. அவன் அடிக்கடி இப்படிப்பட்ட களியாட்டுகளில் கலந்து அனுபவப்பட்டவனாதலால், அவன் உணர்ச்சிகள் கட்டுக்குள்ளேயே இருந்தன. அவனுக்கு அப்போதிருந்த கவலை ஒன்றே ஒன்றுதான். இந்தச் சந்தடியில் எப்படிப் பத்மாவைப் படம் எழுதும் தனது திட்டத்தை நிறைவேற்றுவது என்பதே அது. கிழவன் அல்பேர்டிடம் உண்பதற்குச் சில காரமான சிற்றுண்டிகள். ஐஸ்கிறீம், கொக்கோக் கோலா ஆகியவற்றைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டு, பத்மாவின் செங்காந்தள் விரல்களைத் தன் விரல்களால் வருடியவாறு “பத்மா! என்ன கனவு காண்கிறாய்” என்றான் புன்னகையோடு.

ஸ்ரீதரும் பத்மாவும் வீற்றிருந்த மேசை மேட்டுப் பாங்கான ஓர் இடத்தில் இருந்தது. அங்கிருந்தவாறு அவர்களால் மக்கள் திரண்டு குதூகலித்துக் கும்மாளமடித்துக் கொண்டிருந்த கடல் ஓரத்தை நன்கு கவனிக்கக் கூடியதாயிருந்தது. ஸ்ரீதர் நீலக் கல் போல் வீசிய கடலைப் பத்மாவுக்குச் சுட்டிக் காட்டினான். அங்கே பெரிய ஒலிபரப்பிகள் ஆங்கில படப் பாப் பாட்டுகளை முழங்கிக் கொண்டிருந்தன. அதில் திருப்தியுறாதவர்கள் போன்று சில இளைஞர்கள் கையில் வாத்தியங்கள் ஏந்திப் பாட்டுகள் பாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் ஸ்நான உடைகளிலும் மற்றும் சிலர் அழகான புஷ் ஷேர்ட்டுகளிலும் காணப்பட்டார்கள். ஒரு யெளவனப் பெண் ‘ஜீன்ஸ்’ அணிந்து கொண்டு ஓர் ஆடவனுடன் ஜோடியாக ‘டுவிஸ்ட்’ என்னும் நடனத்தை ஆடிக் கொண்டிருந்தாள். சிலர் கடலில் குளித்து விட்டு ‘பாத்’ கவுன் அல்லது பெரிய வர்ணக் கோடுகளிட்ட துவாய்களால் உடல்களைப் போர்த்திக் கொண்டு ஸ்நான மண்டபத்துப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள். நீச்சலுடை அணிந்த ஒரு சில ஆண்களும் பெண்களும் வெண்மணலில் நீண்ட வர்ணத் துவாய்களை விரித்துக் கண்களைக் கறுப்புக் கண்ணாடியாலோ, கைக் குட்டைகளாலோ மறைந்துக் கொண்டு சூரிய ஸ்நானம் செய்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் சிவப்பு, பச்சை, மஞ்சள் என்ற வர்ணங்களுடன் கூடிய பெரிய குடைகளை விரித்து, அவற்றின் கீழே நிழலில் படுத்துக் கிடந்தார்கள். பிஞ்சுக் குழந்தைகளும் சிறு பிள்ளைகளும் கடற்கரை மணலில் வீடு கட்டியும் வண்ண வண்ண வாளிகளில் மணலையும் கடல் நீரையும் அள்ளித் தெளித்தும் விளையாடிக் கொண்டிருக்க, ஏராளமான ஆண், பெண்கள், குமிறி நிமிர்ந்து குதிரைகள் போல் வந்து கொண்டிருந்த அலைகளுக்கிடையே துள்ளி எழுவதும் நீந்துவதும் நீந்த முயல்வதுமாகக் காணப்பட்டார்கள்.

பத்மா தன் முன் விரிந்து கிடந்த இவ்வின்ப உலகத்தின் மாயையில் தன்னை மறந்து சொக்கிக் கிடந்தாளாயினும், அவள் முன்னே நடந்து சென்ற பெண்களும் ஆண்களும் அணிந்திருந்த நீச்சலுடைகளின் ரகங்களை கவனிக்கத் தவறவில்லை. ஒரு சில பெண்கள் ‘உவன் பீஸ்’ - ஒற்றை ஆடை நீச்சலுடைகளை அணிந்திருந்தார்கள். மற்றவர்களோ மார்புக்கு வேறு, இடைக்கு வேறென்று ‘டூ பீஸ்’ - இரட்டை ஆடை நீச்சலுடைகளை அணிந்திருந்தார்கள். இந்த இரட்டை ஆடை நீச்சலுடைகளில் சில மிகவும் குறுகியனவாகவும் சிறியனவாகவும், இறுக்கமாகவும் காணப்பட்டன. இவற்றை அவள் பத்திரிகைகளில் வெளியிடப்படும் பெண்களின் கவர்ச்சிப் படங்களில் தான் முன்னர் பார்த்திருக்கிறாள். அவற்றின் பெயர் கூட அவளுக்கு நன்கு தெரியும். மூன்று நான்கங்குல அகலமே கொண்டன போல் காட்சி தரும் அவற்றின் பெயர் ‘பிக்கினி’- அவ்வித உடையணிந்து ஈரக் கடல் மண்ணில் உற்சாகமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பருவப் பெண்ணை அவள் ஸ்ரீதருக்குச் சுட்டிக் காட்டி “அதோ ஒரு பிக்கினி அணிந்த பெண்” என்றாள், சிரிப்போடு. ஸ்ரீதருக்கு அவளது குறிப்பு வேடிக்கையாயிருந்தது. அவன் புன்னகையோடு “இன்று உன்னை ஒரு பிக்கினி நீச்சலுடையில் தான் நான் படமெழுதப் போகிறேன்” என்றான் அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு.

பத்மா திடுக்கிட்டு விட்டாள். “என்ன நீச்சலுடையா? என்னால் முடியாது. நான் ஒரு போதும் அணியாத உடையை அணிய எனக்கு வெட்கமாயிருக்காதா? அத்துடன், நீச்சலுடை எங்கேயிருக்கிறது?” என்றாள் வியப்போடு.

இதற்கிடையில் அல்பேர்ட் உணவு வகைகளை மேசையில் கொண்டு வந்து வைக்க இருவரும் அவற்றை உண்டு கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்கள்.

“உடை கிடைக்குமா என்ற கவலை உனக்கு வேண்டாம். அவசிய்மானால் இங்கேயே எனது பத்மாவுக்கு நான் ஒரு நீச்சலுடையை தைத்துக் கொடுக்க மாட்டேனா, என்ன?” என்றான் ஸ்ரீதர் குறும்பாக.

பத்மா அவனது பகடி தனக்குப் பிடிக்கவில்லை என்பது போல் தன் முகத்தால் அழகு காட்டினாள். ஸ்ரீதரோ ஹோட்டலில் தங்களுக்கு வேண்டிய நீச்சலுடைகளை விலைக்கோ வாடகைக்கோ பெறலான் என்று விளக்கினான். பத்மா ஆச்சர்யத்தோடு “அப்படியா!” என்று வினவினாளானாலும், “நான் அவற்றை அணிய மாட்டேன்” என்று அடம் பிடித்தாள். வாய் தான் அடம் பிடித்தது. மனமோ தனக்கு முன்னே விரிந்து வரும் சந்தர்ப்பத்தை வரவேற்கவே செய்தது. என்றாலும் நீச்சலுடையை அணிந்து கொண்டு எவ்வாறு நாணமின்றி இவ்வளவு ஆட்களிடையே நடமாடுவது என்ற அச்சமும் அவளுக்கு இருக்கவே செய்தது. இருந்த போதிலும் நீச்சலுடையை அணிய ஆசை இருந்தால் எப்போதோ ஒரு நாள் நாணத்தைக் கட்டுப்படுத்தி அதை அணிந்து பார்க்கத்தானே வேண்டும்? அதற்கு இன்று ஒரு நல்ல ஆரம்ப நாளாகவே அவளுக்குத் தோன்றியது. இவ்வளவு பேர் அணிந்திருக்கும் ஓர் உடையைத் தானே நாம் அணியப் போகிறோம் என்ற எண்ணம் ஒரு புறமும், தனக்கு முன்னே பல பெண்கள் தங்கள் பெற்றோர் அண்ணன் தம்பிமார் முன்னிலேயிலேயே அணிந்து கொண்டு நடமாடுகின்ற ஓர் உடையாக அது காட்சியளித்ததும், அவளுக்கு தனது இயற்கையான நாணத்தைத் தான் வென்று விடலாமென்ற தைரியத்தைக் கொடுத்தது. இன்னும் இவ்வளவு கூட்டத்தில் நான் நீச்சலுடையில் செல்வதை மட்டும் யார் விசேஷமாகக் கவனிக்கப் போகிறார்கள் என்ற எண்ணமும், அப்படிக் கவனிப்பவர்களும் அதை அங்கீகரிப்பவர்களே அல்லாமல் வெறுத்துக் கண்டிப்பவர்களல்லவே என்ற நினைவும் அவளது அச்சத்தைப் படிப்படியாகப் போக்கின. மேலும் ஸ்ரீதர் போன்று ஓர் ஆள் பக்கத்திலிருந்து வற்புறுத்தினாலொழியத் தான் ஆசையோடு விரும்பிய காரியந்தான் என்றாலும் நீச்சலுடையைத் தானே அணியும் தைரியம் தனக்கு ஒரு போதும் வராது என்பதும் அவளுக்குத் தெரியும். ஆகவே ஸ்ரீதர் இன்னும் இரண்டோர் தடவை வற்புறுத்தியதும் சந்தர்ப்பத்தை நழுவ விடாது நீச்சலுடையை அணியச் சம்மதிப்பதென்று தனக்குள்ளே தான் தீர்மானித்துக் கொண்டாள் அவள்.

இதற்கிடையில் ஸ்ரீதர் “பத்மா! இந்தச் சந்தை இரைச்சலில் வைத்து உன்னைப் படமெழுதுவது முடியாத காரியம். நாங்கள் கடற்கரை ஓரமாக நடந்து சென்றால் ரெயில் பாதைக்கருகில் ஒரு தென்னை மரக் கூட்டத்துக்குப் போகலாம். ஸ்நான உடை வாங்கிக் கொண்டு அங்கு புறப்படுவோமா?” என்றாள்.

பத்மா ஒரு பதிலும் சொல்லாமல் பேசாமலிருந்தாள். அது சம்மதத்தின் அறிகுறியே என்பது ஸ்ரீதருக்கு நன்கு தெரியும். ஆகவே அல்பேர்டிடம் ‘பில்’ பணத்தையும் மேலதிகமாக ரூபா ஐந்தைப் பரிசாகவும் வழங்கி விட்டு, ஹோட்டலில் இருந்த காளிதாஸ் துணிக் கடைக்குப் பத்மாவை இழுத்துக் கொண்டு சென்றான் அவன்.

துணிக் கடையிலிருந்த வட இந்திய விற்பனையாளன் ஸ்ரீதர்-பத்மா ஜோடியை மிகவும் மரியாதையுடன் வரவேற்று “என்ன வேண்டும் சார்” என்று விநயமாகக் கேட்டான்.

“இதோ என் பெண்மணிக்கு ஒரு நீச்சலுடை வேண்டுமாம்” என்றான் ஸ்ரீதர்.

பத்மாவுக்கு அவன் பேச்சு வெட்கத்தை உண்டு பண்ணியதாயினும், ஒருவாறு சமாளித்துக் கொண்டாள்.

விற்பனையாளன் உடனே கடையிலிருந்த பல ரகமான நீச்சலுடைகளையும் காட்சிப் பெட்டிக் கண்ணாடி மீது பரப்பினான். பல நாகரிகமான ஒற்றை ஆடை, இரட்டை ஆடை நீச்சலுடைகளை எடுத்ததுப் பத்மா முன்னர் போடுவிட்டுக் குறும்பாக “மற்ற ஆடைகளைப் போலல்ல நீச்சலுடை விஷயம். அவை எவ்வளவுக்குச் சிறிதாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அவற்றின் விலை அதிகம்” என்று குறிப்பிட்டான்.

ஸ்ரீதர் சிரித்தான்.

விற்பனையாளன் மேலும் தொடர்ந்து பேசினான்: “இதோ இது மொத்தம் இரண்டவுன்ஸ் எடைதான். விலை ரூபா எழுபத்தைந்து. இதோ இது ஆறு அவுன்ஸ் எடை, விலை ரூபா இருபது..”

“அப்படியானால் இது ஒன்றுமே நமக்குச் சரிப்படாது. அரை அவுன்ஸ், முக்கால் அவுன்சில் ஏதாவது இல்லையா? ரூபா நூற்றைம்பது என்றாலும் பரவாயில்லை” என்றான் ஸ்ரீதர்.

விற்பனையாளனுக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. சிரித்துக் கொண்டே பத்மாவைப் பார்த்தான். அவள் முகம் இரத்தமேறி ரோஜா மலர் போல் குப்பென்று சிவந்து கிடந்தது. “எனக்கு எதுவும் வேண்டாம்” என்று ஸ்ரீதரைப் பார்த்துச் சிணுங்கினாள் அவள். ஆண்களின் இந்த நகைச்சுவை அவளுக்கு உண்மையாகவே பிடிக்கவில்லை. விவேகமான விற்பனையாளனுக்கு நிலைமை தெரிந்து விட்டது. ஆகவே மிகுந்த பணிவோடு “இதோ இந்தத் தங்க நிற ‘உவன் பீஸ்’ நீச்சலுடைதான் இங்குள்ளவற்றிலேயே ஆக உயர்ந்தது” என்று கூறிக்கொண்ட்டு அசகைக் காட்சிப் பெட்டியின் கண்ணாடி மீறிட்டான்.

பின்னர் ஏதோ நினைத்துக் கொண்டவன் போல் “சரியான ‘வைட்டல் ஸ்டாட்டிக்ஸ்டிக்ஸ்’களைக் கூறினால் அளவும் பொருத்தத்தில் எவ்வித குறைபாடுமில்லாத உடையை உடனேயே எடுத்துத் தந்து விடுவேன்” என்றான் அவன்.

பெண்களைப் பொறுத்தவரையில் ‘வைட்டல் ஸ்டாட்டிக்ஸ்டிக்ஸ்’ அல்லது ‘ஜீவாதாரப் புள்ளிகள்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு மேல்-இடை-கீழ் உடலளவுகள் என்று அர்த்தம்.

பத்மாவுக்கு இவ்வார்த்தைகளின் பொருள் நன்கு தெரியும். ஆகவே பளிச்சென்று “எனது அளவுப் புள்ளிகள் 36:24:38” என்று பதிலளித்தாள்.

விற்பனையாளன் அதைக் கேட்டதும் அசந்து போய்விட்டால், அவனால் தன் காதுகளை நம்ப முடியவில்லை. “உண்மையாகவா சொல்லுகிறீர்கள்? இவை இந்த ஆண்டு உலக அழகியின் புள்ளிகளல்லவா?” என்றான் ஆச்சரியத்துடன்.

பத்மாவுக்கோ பெருமை தாங்க முடியவில்லை. ஸ்ரீதருக்கோ அதை விட மேலே.

விற்பனையாளன் பணிவோடு “நான் சொன்னால் தப்பர்த்தம் செய்ய மாட்டீர்களென்றால் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்,” என்றான்.

ஸ்ரீதர் “சொல்லு” என்றான். பத்மா “அவன் என்ன சொல்லப் போகிறான்” என்று ஆவலுடன் காத்து நின்றாள். “அடுத்த வருடம் உலக அழகிப் போட்டியில் நீங்கள் கட்டாயம் பங்குபற்ற வேண்டும். நிச்சயம் முதலிடம் கிடைத்தே தீரும்” என்றான் அவன். ஸ்ரீதரும் பத்மாவும் சிரித்தார்கள்.

முடிவாக எழுபத்தைந்து ரூபாவுக்கு இளம் பச்சை வர்ணத்தில் ஓர் ஒற்றை ஆடை நீச்சலுடையைத் தெரிந்தெடுத்துக் கொண்டாள் பத்மா. எடுத்த எடுப்பில் ‘பிக்கினி’யை அணிய அவளுக்குத் துணிவு பிறக்கவில்லை!

சரியாகப் பதினொன்றே கால் மணியளவில் ஸ்ரீதர் கடற்கரை ஓரத்தில் தென்னை மர நிழலில் பத்மாவைப் படத் தீட்ட ஆரம்பித்தான். அதற்கென உள்ள ஒரு ‘ஸ்டாண்டி’ல் பெரிய சித்திரக் காகிதத்தை விரித்து வண்ண மைகளால் படத்தைத் தீட்ட தொடங்கினான் அவன். பத்மா நீலத்தில் விழ்ந்து கிடந்த ஒரு தென்னங் குற்றியில் தன் நீச்சலுடையில் ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தாள்.

பத்மாவுக்கோ இந்தப் படம் எழுதும் விஷயமே பெரும் வேடிக்கை போலிருந்தது. மெளனமாக ஓர் இடத்தில் பொம்மை போல் ஆடாது அசையாது வீற்றிருப்பது அவ்வளவு இலேசாகவோ இன்பமாகவோ தோன்றவில்லை அவளுக்கு. ஒரு சில நிமிடங்கள் கழிவதற்குள்ளேயே “ஸ்ரீதர்! முடிந்துவிட்டதா?” “இது என்ன கரைச்சல்” இப்போது முடியாதா?” “எப்போது முடியும்?” “கடலிலே போய்க் குளிப்போம். நீங்களும் ஸ்நான உடையை அணிந்து கொண்டு கிளம்புங்கள்.” “ஐயோ தென்னங் குற்றியில் எறும்பிருக்கிறது” “ஆ... கடித்துவிட்டது!” என்று ஏதாவது பேசிக் கொண்டேயிருந்தாள் அவள். ஸ்ரீதர் வாயில் கையை வைத்து, “பேசாதே!” என்று கூறிக் கூறிப் பத்மாவை நன்கு அவதானித்து, படத்தை வரைந்து கொண்டிருந்தான்.

இவ்வாறு அவர்கள் படம் வரைவதில் ஒத்துழைப்பதும் போராடுவதுமாக இருந்த போது தான், அங்கு வந்து சேர்ந்தார் அதிகார் அம்பலவாணர். தலையில் வெள்ளைத் தலைப்பகை, வெள்ளைக் குளோஸ் கோட், நீண்ட வெள்ளைக் காற்சட்டை ஆகியவற்றுடன் அதிக பருமனும் உயரமும் இல்லாமல் காட்சியளித்த அவர், இப்பொழுது யாழ்ப்பாணத்தில் முற்றாக மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையின் கடைசிப் பிரதிநிதிகளில் ஒருவராக விளங்கினார். நெற்றியில் சந்தனப் பொட்டு ஒளி வீசக் கம்பீரமாக நடந்து வந்த அவரது பக்கத்தில் அவரது தர்ம பத்தினி வள்ளியாச்சி பின் கொப்பகம் வைத்த சேலையுடனும் நீண்ட கை வைந்த இரவிக்கையுடனும், நெஞ்சினிலே பெரிய பதக்கம், கழுத்தை நெரித்தாற் போன்ற தங்க அட்டிகை, கையில் பெரிய தங்க கொலுசுகள் ஆகியவற்றுடனும் வந்து கொண்டிருந்தாள். சேவலின் வாலைப் போன்று அவளுக்குப் பின்னால் துள்ளி எழுந்த காட்சியளித்த அவளது சேலையின் முகதலை இன்றைய பரம்பரையினருக்கு விநோதப் பொருளாகத் தோன்றினாலும், அதிலும் ஓர் அழகும் கம்பீரமும் இருக்கத்தான் செய்தன!

தற்செயலாகக் கடலோரத்தைப் பார்த்த ஸ்ரீதர் அதிகார் அம்பலவாணரையும் அவர் மனைவியையும் கண்டதும் அதிர்ச்சியடைந்து விட்டான். உண்மையில் அவர்கள் ஸ்ரீதர் இருக்கும் திசையை நோக்கியே வந்து கொண்டிருந்தார்கள். ஸ்நான உடையில் ஒரு பெண் தென்னங்குற்றியில் வீற்றிருப்பதும் அவளை ஓர் ஓவியன் படமாகத் தீட்டிக் கொண்டிருப்பதும்தான் அவர்களைஅங்கே அழைத்து வந்தன. அதிகார் முக மலர்ச்சியோடு மனைவியிடம் ஏதோ பகடியாகச் சொல்ல அவள் **** தனது ஸ்தூல சரீரத்தை இழுக்க முடியாமல் கால்களால் இழுத்து வந்த காட்சி வேறு நேரங்களில் என்றால் ஸ்ரீதருக்கு நல்ல வேடிக்கையாய்த் தோன்றிருக்கும். ஆனால் இப்போது அவ்வாறு தோன்ற வில்லை. தனது தந்தை சிவநேசருக்கு மிகவும் நெருங்கிய நண்பரான அதிகாரை எவ்வாறு சமாளிப்பதென்ற நினைவு ஒன்றே அவன் மனதில் விஸ்வரூபம் எடுத்தது. என்றாலும் அதை வெளிக்காட்டாது படம் தீட்டுவதில் தன்னை முற்றாக மறந்தவன் போல் நடிக்க ஆரம்பித்தான் அவன்.

பத்மாவோ அதிகார் மனைவி வள்ளியாச்சி வால் வைத்த சேலைக் கட்டைச் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இதற்கிடையில் ஓர் எறும்பு அவள் காலில் ஏறி விட்டதால், “எறும்பு, எறும்பு” என்றும் சப்தமிட்டாள் அவள். பின்னர், “ஸ்ரீதர், அதோ பாருங்கள்! எங்களை நோக்கி வால் முளைத்த பெண்பிள்ளை ஒன்று வந்துக் கொண்டிருக்கிறது” என்றும் சிரிப்பு முழக்கத்தோடு கும்மாளம் போட்டாள். பத்மா கடற் காற்றும் நீச்சலுடையுமாக அவளுக்கு ஒரு வெறியி¢ன்பத்தைத் தந்திருந்ததே, அவளது அசாதாரண கலகலப்புக்குக் காரணம். இன்னும் கொழும்பிலேயே பிறந்து வளர்ந்திருந்த பத்மாவுக்கு, பின் கொப்பகம் வைத்த அந்த யாழ்ப்பாணச் சேலைக்கட்டு உண்மையில் புதுமையாகத்தான் தோன்றியது. ஸ்ரீதரோ வாயில் வைத்து, “பேசாதே” என்று சைகை செய்தான் பத்மாவைப் பார்த்து. அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

[தொடரும்]

No comments: